.......................................................................... ....................................................................... ......................................................................

Monday 11 November 2013

பழமொழிகள் பல நம் புழக்கத்திலிருந்து மறைந்து விட்டன, அவற்றை நினைவுக்கூர்வோம்.!

பழமொழிகள்

பழமொழி = பழமை+மொழி. பழமையான மொழி, நம் பண்டைய மக்கள் ஒரு பொருளை சுருக்கமாகவும், தெளிவாகவும், புறிதலுமாய் விளங்க பழமொழிகளை பேசி பயன்படுத்தி வந்தனர். பழமொழிகள் நம் மக்களின் அறிவுக்கூர்மையை வெளிப்படுத்துகிறது. பழமொழிகள் "ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவ குறிப்புகள்" என்று கூறுகின்றனர். இவை "நாட்டுப்புறவியலின்" ஒரு கூறாகவும் அமைகின்றன.

நாட்டுப்புறவியல் என்பது நாட்டுப்புற மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடு, நம்பிக்கைகள், இலக்கியங்கள், கதைகள், பழமொழிகள், வாய்மொழி வரலாறு, விடுகதைகள், வாய்மொழி பாடல்கள் போன்றவற்றை சேகரித்து, வகைப்படுத்தி, தொகுத்து, ஆராய்ந்து அவற்றை ஆவணப்படுத்தும் துறையாகும். இத்தகைய வழக்குகள் பற்றி நாட்டுப்புறவியல் அறிவியல் முறைப்படி ஆய்வு செய்கின்றது. 1846 ஆம் ஆண்டிலேயே நாட்டுப்புறவியல் பற்றித் தற்காலக் கருத்தமைவில் முறையான ஆய்வுகள் தொடங்கின. வில்லியம் ஜான் தாமஸ் என்பவரே இத்துறையில் முன்னோடியாவார்.

பழமொழிகளை  நினைவுக்கூர்வோம்:

* அறுக்க மாட்டாதவன் கையில் ஐம்பத்தெட்டு அறிவாள்.
* அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்.
* அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
* அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்.
* அப்பன் எவ்வழியோ பிள்ளை அவ்வழி.
* அடியாத மாடு படியாது.
* அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
* அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
* அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
* அவனே! அவனே! என்பதைவிடச் சிவனே! சிவனே! என்பது மேல்.
* அற்பனுக்கு வாழ்க்கை வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.


* ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
* ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
* ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
* ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
* ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
* ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
* ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
* ஆழம் தெரியாமல் காலை விடாதே.
* ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணா இரு.
* ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
* ஆசை காட்டி மோசம் செய்தல்.
* ஆக்கப் பொறுத்தது ஆறப் பொறுக்கவில்லை.
* ஆடு பகை குட்டி உறவு.
* ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை.

* ஆனைக்கும் அடிசறுக்கும்.
* ஆகாத பொண்டாட்டி கால் பாட்டாலும் குத்தம் கைப்பட்டாலும் குத்தம்.

* இக்கரைக்கு அக்கரை பச்சை.
* இருக்க இடம் கொடுத்தால் படுக்கப் பாய் கேட்பான்.
* இருதலைக் கொள்ளியின் ஓர் உயிர் போல.
* இரக்கமற்றவன் இதயம் இரும்பினும் கொடியது.
* இளமையில் கல்.
* இளங்கன்று பயமறியாது.
* இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து.
* இளமையில் கல். முதுமையில் காக்கும்.
* இன்பத்திற்குத் தேன்; அன்புக்கு மனைவி.
* இரவல் சேலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்.
* இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
* இதயம் ஏற்கிறது; தலை மறுக்கிறது.
* இன்று செய்யும் நன்மை நாளைய இன்பம்.
* இரவில் குறைந்த உணவு நீண்ட வாழ்வு.
* இருட்டுக்குடி வாழ்க்கை திருட்டுக்கு அடையாளம்.
* இறங்கு பொழுதில் மருந்து குடி.
* இந்த உலகில் மூன்று நண்பர்கள் துணிவு, புத்தி, நுண்ணறிவு.
* இறந்த சிங்கத்தைவிட உயிருள்ள சுண்டெலி மேல்.
* இன்று இலை அறுத்தவன் நாளை குலை அறுக்க மாட்டானா?
* இளமையில் நல்லறிவு முதுமையில் ஞானம்.
* இதயம் இருக்கும் இடம்தான் உன் வீடு.
* இன்பம் சிறகடித்துப் பறக்கும் பறவை.
* இலக்கியம் இல்லாத வாழ்வு சாவு.
* இன்பம் - துன்பம் மாறி மாறி வரும்.
* இளமையில் தெரியாது; முதுமையில் நினைவிருக்காது.
* இரவும் பகலும் யாருக்கும் காத்திராது.

* ஈகைக்கு எல்லை எதுவமே இல்லை.
* ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
* ஈயான் தோட்ட வாழ இரண்டு குலை தள்ளும்.
* ஈட்டி எட்டிய வரையில் பாயும்.
* ஈகைக்கும் வெகுளித்தனம் உண்டு.


* உதைப்பானுக்கு வெளுப்பான் சலவைக்காரன்.
* உழுத நிலத்தில் பயிரிடு.
* உடனடி சிகிச்சையே நோய்க்கு மருந்து.
* உண்டு சுவை கண்டவன் ஊரைவிட்டப் போகமாட்டான்.
* உணவுக்கு நெருக்கம், நட்புக்குத் தூரம்.
* உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு.
* உப்பைத் தின்னவன் தண்ணீர் குடித்தாக வேண்டும்.
* உழுகிறவர்கள் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது.
* உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
* உப்பு அறியாதவன் துப்புக்கெட்டவன்.
* உனக்குத் தெரியாத தேவதையைவிட தெரிந்தபிசாசே மேல்.

* உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.

* உழைப்பால் விலகும் தீமைகள் மூன்று - துன்பம், தீயொழுக்கம், வறுமை.
* உழைத்து உண்பதே உணவு.
* உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
* உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
* உப்பிட்டவரை உள்ளவும் நினை.
* உனக்குக் கொஞ்சம், எனக்கு கொஞ்சம், இதுதான் நட்பு.

* ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும்.
* ஊசியைப் பார்த்து சல்லடை சொல்கிறது; உன்னுடைய வாயில் ஒரு                  ஓட்டை இருக்கிறது.
* ஊதுகிற சங்கை ஊதினாலும் விடிகிறபோதுதான் விடியும்.
* ஊத அறிந்தான் வாதி, உப்பு அறிந்தான் யோகி.
* ஊமை ஊரைக் கெடுக்கும்; பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.
* ஊரில் கல்யாணம்; மார்பில் சந்தனம்.
* ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.

* எரியும் கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
* எண்ணெய் குடித்த நாயை விட்டுவிட்டு, எதிர்க்க வந்த நாயை அடிச்சானாம்.
* எண்ணி எண்ணிச் சுட்டவனுக்கு ஒன்றுமில்லை. எட்டி எட்டிப் பார்த்தவனுகு எட்டுப் பணியாரம்.
* எல்லாப் புண்களுக்கும் காலம்தான் களிம்பு.
* எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
* எட்டுத் திப்பிலி, ஈரைந்து சீரகம், சுட்டுத் தேனில் கலந்து கொடுக்க விட்டுப் போகுமே விக்கல்.
* எந்த விரலைக் கடித்தாலும் வலி இருக்கும்.
* எறும்புக்கு பனித் துளியே வெள்ளம்.
* எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் புத்திசாலியின் பார்வை இலக்கை நோக்கியே இருக்கும்.
* எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள்; ஆனால், அன்போடு பரிமாறுங்கள்.
* எளிதில் நம்புகிறவன் எளிதில் ஏமாற்றப்படுவான்.
* எலி வேட்டைக்குத் தவில் வேண்டுமா?
* எண்ணம்போல் வாழ்வு.
* எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
* எறும்பூரக் கல்லும் தேயும்.
* எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?

* ஏழையின் பேச்சு அம்பலம் ஏறாது.
* ஏணியைச் செங்குத்தாக வைப்பவன் எளிதில் பின்பக்கம் விழுவான்.

* ஏழைக்கு ஒரு வியாதி; பணக்காரனுக்கு நூறு.
* ஏகாந்தம் என்பது இறைவனுக்கே பொருந்தும்.
* ஏழைக்கு ஒருபோதும் வாக்குக் கொடுக்காதே; பணக்காரனுக்கு ஒருபோதும் கடன் படாதே!
* ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது.

* ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி.
* ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

* ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்
* ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில் நுழைந்தானாம்.
* ஒரு மிளகு ஒரு வண்டி வாழ்த்துக்குச் சமம்.
* ஒரு கையால் இறைத்து இரு கைகளால் வார வேண்டும்.
* ஒட்டகத்தின் மேல் உள்ளவனுக்கு முதுகு கூன் இல்லை.
* ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
* ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
* ஒரு கை தட்டினால் ஓசை எழாது.
* ஒழுக்கம் விழுப்பம் தரும்.
* ஒவ்வொரு நாளையும் உனது சிறந்த நாளாய் எண்ணு.
* ஓரே குஞ்சு உள்ள கோழி ஓயாமல் கொக்கரிக்கும்.
* ஒத்தடம் அரை வைத்தியம்.
* ஒரு சொல் கோபத்தைக் கிளறுகிறது அல்லது அன்பைக் கிளறுகிறது.
* ஒருவர் பொறுமை இருவர் நட்பு.
* ஒரே குட்டையில் ஊறிய மட்டைபோல.

*  ஓட்டச் சட்டியினாலும் கொழுக்கட்டை வெந்தா சரி.
* ஓநாயிடம் அன்பு செலுத்தாதே! அது ஆட்டிற்குச் செய்யும் கேடு.
* ஓடைகளை நிரப்புவது மழைதான். பனித்துளிகள் அல்ல.
* ஓடிப் பழகிய கால் நிற்காது.
* ஓநாயுடன் நீ வசித்தால் ஊளையிடத்தான் வேண்டும்.


* கண்ணுக்கு இமை பகையா?
* கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.
* கண்டதே காட்சி, கொண்டதே கோலம்.
* கனமழை பெய்தாலும் கருங்கல் கரையுமா?
* கவலைகள் குறைந்தால் கனவுகள் குறையும்.கனவுகள் குறைந்தால் பேச்சுக்கள் குறையும்.பேச்சுக்கள் குறைந்தால் குற்றங்கள் குறையும்.
* கடவுளுக்கு பயந்து வாழ்க்கை நடத்து.
* கடுக்காய் நூறு தாய்க்குச் சமம்.
* கடுங்காற்று மழைக்கூட்டும்.கடுஞ்சிநேகம் பகை கூட்டும்.
* கண்ணீரை விட விரைவில் காய்வது எதுவும் இல்லை.
* கல்யாணம் பண்ணிப் பார். வீட்டைக் கட்டிப்பார்.
* கசிந்து வந்தவன் கண்ணைத் துடை.
* கஞ்சி கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம்.
* கஞ்சித் தண்ணிக்குக் காற்றாய்ப் பறக்கிறான்.
* கஞ்சன் ஒற்றைக் கண்ணன்; பேராசைக்காரன் குருடன்.
* கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்.
* கஞ்சி வார்க்க ஆள் இல்லை என்றாலும் கச்சை கட்ட ஆள் இருக்கிறது.
* கரி விற்ற பணம் கருப்பாய் இருக்குமா?
* கல்வி விரும்பு.
* கலைகளுக்கெல்லாம் அடிப்படை கலப்பை.
* கனவில் குடிக்கும் பாலை தகரக் குவளையில் குடித்தால் என்ன தங்கக்கோப்பையில் குடித்தாலென்ன?
* கணக்கு எழுதாதன் நிலைமை.கழுதை புரண்ட இடம் மாதிரி.
* கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
* கடன் இல்லாச் சோறு கவளமாயினும் போதும்.
* கடலில் கரைத்த பெருங்காயம் போல.
* கடல் தாண்ட மனமுண்டு; கால்வாயைத் தாண்ட மனமில்லை.
* கடல் திடலாகும்; திடல் கடலாகும்.
* கடல் நீர் இருந்தென்ன? காஞ்சிரை பழுத்தென்ன?
* கடல் மீனுக்கு நீந்தவா கற்றுத்தர வேண்டும்.
* கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணமாகியும் பிரம்மச்சாரி.
* கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்.
* கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
* கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
* கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
* கழுதை அறியுமா கற்பூர வாசனை?


* காலம் போகும் வார்த்தை நிற்கும்.
* கால் அடிப்பட்ட நாயும், காது அறுந்த செருப்பும் கவைக்கு உதவாது.
* கால் இல்லாதவன் கடலைத் தாண்டுவானா?
* கார்த்திகை கன மழை.
* கார்த்திகை நண்டுக்கு கரண்டி நெய்.
* கார்த்திகை கண்டு களம் இடு.
* கார்த்திகைப் பிறையைக் கண்டவுடன் கைப்பிடி நாற்றைப் போட்டுக் கரை ஏறு.
* காணிச் சோம்பல் கோடி நட்டம்.
* காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல.
* காற்றுக்குச் சாய்கிற நாணல் தான் காலத்துக்கும் நிலைக்கும்.
* காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு.
* காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
* காலிப் பெட்டிகளைப் பூட்ட வேண்டியதில்லை.
* காலைச் சுற்றிய பாம்பு கடியாமல் விடாது.
* காலடி வைக்கும்போதே நீரானால் கடலைத் தாண்டுவது எப்படி?
* காரியம் ஆகுமட்டும் காலைப்பிடி.
* கார்த்திகை கார் கடை விலை; தை சம்பா தலை விலை.
* கார்த்திகைப் பனியைப் பாராதே. கட்டி ஓட்டடா ஏர் மாட்டை.
* கார்த்திகை அகத்தி காம்பெல்லாம் நெய் வழியும்.

* காகம் திட்டி மாடு சாகாது.
* காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
* காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.

கிராமப்புறங்களில் பேச்சு வழக்கில் உள்ள பழமொழிகள்:

* பருவத்தே பயிர் செய்தல் வேண்டும்.
* விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு.
* மாமியார் உடைத்தால் மண்சட்டி; மருமகள் உடைத்தால் பொன்சட்டி.
* நல்ல மாடு உள்ளுரில் விலைபோகும்.
* பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாண்டானாம்.
* நித்தம் நித்தம் வந்தால் நெய்யும் புளிக்கும் பலநாளும் வந்தால் பாலும்  புளிக்கும்.
* கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
* குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
* குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவது போல்.
* குரைக்கிற நாய் கடிக்காது.
* கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
* கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.
* கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
* கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
* சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
* சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.
* சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
* தடியெடுத்தவன் தண்டக்காரன்.
* தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.
* தன் வினை தன்னைச் சுடும்.
* தனிமரம் தோப்பாகாது.
* தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.
* தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
* தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.
* நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
* நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.
* நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
* நிறைகுடம் தளும்பாது.
* பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
* பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
* பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
* பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
* பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
* பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
* புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.
* புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.
* பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.
* பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
* போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
* மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
* மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
* முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.
* முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
* மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
* யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
* யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
* விரலுக்குத் தக்கதே வீக்கம்.
* விளையும் பயிரை முளையிலே தெரியும்.
* வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
* வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
* வெளுத்ததெல்லாம் பாலல்ல.
* பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
* பூவிற்றகாசு மணக்குமா?
* பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.
* பேராசை பெருநட்டம்.
* பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது
* வேலிக்கு ஓணான் சாட்சி.
* ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.
* கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.
* சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில்விழுவது மேல்.
* தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.
* சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?
* பொருள் ஒரு பக்கம் போக பொல்லாப்பு ஒரு பக்கம் வரும்.
* பெட்டியிலே பூட்டினாலும் போட்ட விதி தப்பாது.
* தாயாக இருந்தாலும் பிள்ளையாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு.

உவமையாக வரும் பழமொழிகள் 



*  கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட முடவன் போல.
* பார்த்தால் பசுப்போல், பாய்ந்தால் புலிபோல்.
* எருமை மாட்டில் மழை பெய்தது போல.
* தேன் எடுப்பவன் வீரல் சூப்புவது போல.
* குப்பைமேடு கோபுரமானது போல.
* குறைகுடம் கூத்தாடுவது போல."


இவை போன்று வரும் பழமொழிகள் உறவுகள் பற்றியும், உறவுகளால் வரும் துன்பங்கள் பற்றியும் கூறுவதாக அமைந்துள்ளன:


* நாற்றில் வளையாதது மரத்தில் வளையாது.
* நம்பினவனை நட்டாத்தில் விடுதல்.
* சாமிவரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டான்.
* தன் முதுகு தனக்குத் தெரியாது.
* எலி வளையானாலும் தனிவளை வேண்டும்.
* வல்லவனையும் வழுக்கும் வழுக்குப் பாறை.
* குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சாப் போச்சு.
* கோடி கோடியா வாழ்ந்தாலும் இறுதியில் ஒரு கோடிதான் மிச்சம்.
* குவளையைக் கழுவினாலும் கவலையைக் கழுவ முடியாது.
* கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி.
* மடியில கனம் இருந்தால் தான் விழியல பயம்.
* சிறு துரும்பும் பல்குத்த உதவும்.
* வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுதல்.
* பணம் பாதாளம் வரையும் பாயும்.
* பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
* பேராசை பெரும் நட்டம்.
* முழு பூசணிக்காயை சோத்துல மறைத்தல்.
* தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு.
* கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம்.
* தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்.
* தன் வினை தன்னைச் சுடும்.

* குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான்.
* காஞ்சிபுரம் போனால் காலாட்டி சாப்பிடலாம்.
* விலை மோரில் வெண்ணெய் எடுப்பவன்.
* முடி சான்ற மன்னரும் முடிவில் பிடி சாம்பலாவர்.
* குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.
* தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை.
* தந்தை சொல்மிக்க மந்திரமில்லை.
* வரவு எட்டணா செலவு பத்தணா.
* கிட்டாதாயின் வெட்டென மற.
* சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் மட்டு.


             மேலே கண்ட பழமொழிகள் பல நம் புழக்கத்திலிருந்து மறைந்து விட்டன, அவற்றை நினைவுக்கூர்வோம்.

விஜயகாந்த் - வாழ்க்கை வரலாறு (Biography)

 Vijayakanth

புரட்சிக் கலைஞர்’ எனவும், ‘கேப்டன்’ எனவும் அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்ப்பெற்ற நடிகர் மட்டுமல்லாமல், சிறந்த அரசியல்வாதியும் ஆவார். 2005 ஆம் ஆண்டு ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம்’ என்னும் கட்சியை ஆரம்பித்து வழிநடத்தி வருகிறார். ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘நூறாவது நாள்’, ‘வைதேகி காத்திருந்தால்’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘ஊமைவிழிகள்’, ‘செந்தூரப் பூவே’, ‘சத்ரியன்’, ‘கேப்டன் பிரபாகரன்’, ‘சின்ன கவுண்டர்’, ‘என்னாசை மச்சான்’, ‘உளவுத்துறை’, ‘வானத்தைப் போல’, ‘ரமணா’, ‘சொக்கத்தங்கம்’ போன்றவை இவர் நடிப்பில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களாகப் போற்றப்படுகின்றன. 2006 ஆம் ஆண்டு, தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், ‘விருத்தாசலம்’ தொகுதியிலும், 2011 ஆம் ஆண்டு ‘ரிஷிவந்தியம்’ தொகுதியிலும் வெற்றிப்பெற்று, தமிழக சட்டப் பேரவை உறுப்பினராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். ஒரு நடிகராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு தமிழ் நாட்டு அரசியலில் தே.மு.தி.க கட்சியை உருவாக்கி, குறுகிய காலத்திற்குள் மாபெரும் வெற்றிக்கண்ட விஜயகாந்த் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சினிமா, அரசியல் பணிகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஆகஸ்ட் 25, 1952

இடம்: மதுரை, தமிழ்நாடு மாநிலம், இந்தியா

பணி: நடிகர் மற்றும் அரசியல்வாதி

நாட்டுரிமை: இந்தியன்



பிறப்பு 

‘விஜயராஜ்’ என்னும் இயற்பெயர்கொண்ட விஜயகாந்த் அவர்கள், 1952  ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25  ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், மதுரை  மாவட்டதிலுள்ள “திருமங்கலம்” என்ற இடத்தில் ‘கே.என். அழகர்சிவாமி நாயிடுக்கும்’ ஆண்டாள் என்பவருக்கும் மகனாக பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தன்னுடைய பள்ளிப்படிப்பை தேவகோட்டையிலுள்ள ‘தி பிரிட்டோ உயர்நிலைப் பள்ளியிலும்’, மதுரையிலுள்ள ‘நாடார் உயர்நிலைப் பள்ளியிலும்’ பயின்றார். இளம் வயதிலேயே சினிமா பார்க்கும் ஆர்வம் அதிகம் இருந்ததால், படிப்பில் அவருக்கு நாட்டம் ஏற்படவில்லை. இதனால் தன்னுடைய படிப்பை, பத்தாம் வகுப்போடு முடித்துக்கொண்டு, அப்பா பார்த்துவந்த அரிசி ஆலை நிர்வாகத்தை சிறிதுகாலம் கவனித்து வந்தார்.

திரைப்படத்துறையில் விஜயகாந்தின் பயணம்

1978 ஆம் ஆண்டு இயக்குனர் ‘காஜா’ அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த, ‘இனிக்கும் இளமை’ என்ற திரைப்படத்தில், முதன் முதலாக ஒரு கௌரவத் தோற்றத்தில் நடித்தார். அதன் பிறகு சினிமாத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சென்னைக்கு வந்து சேர்ந்தார். 1979-ல் ‘ஓம்சக்தி’ மற்றும் 1980-ல் ‘தூரத்து இடிமுழக்கம்’ போன்ற படங்களில் நடித்த அவருக்கு, 1981 ஆம் ஆண்டு எஸ். ஏ. சந்திரசேகர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமல்லாமல், அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய படமாகவும் அமைந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு அதிரடி நாயகனாக தன் பெயரை பதிவு செய்த அவர், ‘மனக்கணக்கு’, ‘சிவப்பு மாலை’, ‘நீதி பிழைத்தது’, ‘பார்வையின் மறுபக்கம்’, ‘ஆட்டோ ராஜா’, ‘சாட்சி’, ‘துரை கல்யாணம்’, ‘நாளை உனது நாள்’, ‘100வது நாள்’, ‘ஊமை விழிகள்’ போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம்வந்தார்.

கேப்டன் எனப் பெயர்வரக் காரணம்

‘வைதேகி காத்திருந்தால்’, ‘அம்மன் கோயில் கிழக்காலே’, ‘சத்ரியன்’, ‘புலன் விசாரணை’ போன்ற திரைப்படங்களில் அற்புதமானக் கதாபத்திரங்களை ஏற்று நடித்து, குறுகிய காலத்துக்குள் 90-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்த அவர், 1991 ஆம் ஆண்டு செல்வமணி இயக்கத்தில் ‘கேப்டன் பிரபாகரன்’ என்ற திரைபடத்தில் நடித்தார். இத்திரைப்படம் அவருக்கு 100வது படமாக மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியையும் பெற்றது. சினிமா ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற படங்களாக அமைந்த இதில், ஒரு காட்டிலாக்கா அதிகாரியாக நடித்து, பேரும் புகழும் பெற்றதால், இவர் மக்களாலும், திரையுலகத்தினராலும் “கேப்டன்” என்று அழைக்கப்பட்டார்.

இவர் நடித்த சிலத் திரைப்படங்கள்

‘இனிக்கும் இளமை’ (1978), ‘ஓம் சக்தி’ (1979), ‘சட்டம் ஒரு இருட்டறை’ (1981), ‘சாட்சி’ (1983), ‘100வது நாள்’ (1984), ‘சத்தியம் நீயே’ (1984), ‘தீர்ப்பு என் கையில்’ (1984), ‘வைதேகி காத்திருந்தால்’ (1984), ‘ஏமாற்றாதே ஏமாற்றாதே’ (1985), ‘நானே ராஜா நானே மந்திரி’ (1985), ‘அம்மன் கோயில் கிழக்காலே’ (1986), ‘ஊமைவிழிகள்’’ (1986), ‘கரிமேட்டுக் கருவாயன்’ (1986), ‘தழுவாத கைகள்’ (1986), ‘சட்டம் ஒரு விளையாட்டு’ (1987), ‘சிறை பறவை’ (1987), ‘செந்தூரப் பூவே’ (1988), ‘தென்பாண்டி சீமையிலே’ (1988), ‘பூந்தோட்ட காவல்காரன்’ (1988), ‘சத்ரியன்’ (1990), ‘சந்தனக் காற்று’ (1990), ‘புலன் விசாரணை’ (1990), ‘கேப்டன்  பிரபாகரன்’ (1991), ‘மாநகர காவல்’ (1991), ‘சின்ன கவுண்டர்’ (1992), ‘ஏழைஜாதி (1993), ‘கோயில் காளை’ (1993), ‘செந்தூரப் பாண்டி’ (1993), ‘ஆனஸ்ட் ராஜ்’ (1994), ‘என் ஆசை மச்சான்’ (1994), ‘சேதுபதி ஐபிஎஸ்’ (1994), ‘அலெக்ஸ்சாண்டர்’ (1996), ‘உளவுத்துறை’ (1998), ‘வானத்தைப்போல’ (2000), ‘ரமணா’ (2002), ‘சொக்கத்தங்கம்’ (2003) போன்றவை இவர் நடிப்பில் வெளிவந்த சிறந்த படங்களாகும்.

இல்லற வாழ்க்கை

1990 ஆம் ஆண்டு பிரேமலதா என்பவரைத் திருமணம் செய்துகொண்ட விஜயகாந்த் அவர்களுக்கு, விஜய் பிரபாகரன் மற்றும் சண்முகப் பாண்டியன் என்ற இரு மகன்கள் பிறந்தனர்.

அரசியல் வாழ்க்கை

தமிழ் சினிமாவில் சுமார் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, ‘புரட்சி கலைஞன்’ என பெயர்பெற்ற அவர், எம்ஜிஆரின் தீவிர ராசிகனாக மட்டுமல்லாமல், 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி மதுரையில் “தேசிய முற்போக்கு திராவிட கழகம்” என்னும் கட்சியை ஆரம்பித்து, அரசியலிலும் கால்பதிக்க துவங்கினார். 2006 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இவரின் தே.மு.தி.க. கட்சி மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் போட்டியிட்டு, ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் கணிசமான வாக்குகளைப் பெற்று, தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளுக்கு அடுத்து தனிபெரும் கட்சியாக உருவெடுத்தது. விருத்தாசலம் தொகுதியில் முதற்களம் கண்ட விஜயகாந்த் அவர்கள், தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை விட சுமார் 13,000 வாக்குகள் அதிகம் பெற்று, சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார். பிறகு 2011 ஆம் ஆண்டு  நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க உடன் கூட்டணி அமைத்து, களம் கண்ட இவருடைய கட்சி 41 இடங்களில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றிப்பெற்று தி.மு.க கட்சியை பின்னுக்குத் தள்ளி பிரதான எதிர்கட்சி அந்தஸ்தினைப் பெற்றது. ஆனால் குறுகிய நாட்களுக்குள் அ.தி.மு.க-வுடன் ஏற்படுத்திக்கொண்ட கூட்டணியை முறித்துகொண்ட விஜயகாந்த் அவர்கள், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

மங்கல்யாண் விண்கலம் செவ்வாய் பாதைக்கு செல்வதில் சிக்கலில் உள்ளது?

 மங்கல்யாண் விண்கலம் செவ்வாய் பாதைக்கு செல்வதில் சிக்கலில் உள்ளது.
செவ்வாய்க்கு செல்லும் மங்கல்யாண் விண்கலம் செவ்வாய் பாதைக்கு செல்வதில் சிக்கலில் உள்ளது.

செவ்வாய்க்கு செல்லும் மங்கல்யாண் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டு பூமியின் சுற்றுபாதையை அடைந்திருந்தது, உடனடியாக அதை செவ்வாய்க்கு செலுத்த முடியாது, கொஞ்சம் கொஞ்சமாக விண்கலத்தின் உயரத்தையும் வேகத்தையும் அதிகரிப்பார்கள், மூன்று முறை இவ்வாறு அதிகரித்து 75,000 கிமீ உயரத்தில் இருந்தது.


இந்நிலையில் நேற்று இரவு மங்கள்யாணின் சுற்றுப் பாதையை 1 லட்சம் கிலோ மீட்டர் உயரத்துக்கு நகர்த்தும் பணி நடந்தது. இதற்காக அதில் உள்ள சிறிய ராக்கெட்டுகள் இயக்கப்பட்டன. ஆனால் இதில் சிக்கல் ஏற்பட்டதால் மங்கள்யான் விண்கலம் திட்டமிட்ட படி 1 லட்சம் கிலோ மீட்டர் தொலைவை எட்ட முடியவில்லை.

ராக்கெட்டுகளில் இருந்த எரிபொருள் தீர்ந்துவிடவில்லை என்பதால் அந்த சிறிய ராக்கெட்டுகளை மீண்டும் இயக்க முடியும் என்றும் நாளை அதிகாலை அதை மீண்டும் இயக்கும் பணி நடைபெற உள்ளது என்றும் அப்போது வெற்றிகரமாக  உயர்த்த முடியும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

கல்லா மனிதன் மனம்?


கல்லா மனிதன் மனம்?

ஏதோ நினைவுடன்

தனியே நடக்கையில்

 ஒரு கல்லில் கண்டேன்,

ஒற்றை இதழுடன் மஞசள் மலர்

குட்டுப் பட்டதாய் உணர்ந்தேன்

யார் ஒப்பிட்டது

மனிதர் மனத்தைக் கல்லோடு………
 

**********

கிரெடிட் கார்டு: புரிந்துகொள்ளுங்கள் லாபம் அள்ளுங்கள்!

கிரெடிட் கார்டு என்றாலே அது ஒரு சூனியத் தகடு என்று நினைத்து பயந்து ஓடுகிறார்கள் நம்மவர்கள். அதை வைத்திருந்தாலே நாம் ஊதாரியாக மாறிவிடுவோம் என்று அஞ்சுகிறார்கள். உள்ளபடி பார்த்தால், கிரெடிட் கார்டு என்பது நம்மை வஞ்சிக்கும் சூனியத்தகடும் அல்ல; நமக்கு நல்லதே செய்யும் அட்சய பாத்திரமும் அல்ல. அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே அது நமக்கு நல்லதா, கெட்டதா என்று முடிவு செய்ய முடியும். கிரெடிட் கார்டை சரியாக, லாபகரமாக பயன்படுத்துவது எப்படி என நிதி ஆலோசகர் யூ.என்.சுபாஷிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர். 

கிரேஸ் பிரீயட்!

''கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் பொருட்களுக்கான பணத்திற்கு சுமார் 45 முதல் 51 நாட்கள் வட்டி கட்ட வேண்டாம் என்பது முக்கிய விஷயம். உதாரணமாக, ஒருவர் கிரெடிட் கார்டு ஸ்டேட்மென்ட் தயார் செய்வதற்கான கட் ஆஃப் தேதியான ஜூலை 5-ம் தேதி ஒரு பொருளை வாங்குகிறார். அதற்கு பணம் கட்ட வேண்டிய தேதி ஜூலை 25. அதாவது, ஜூலை 5-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 20 நாட்கள் வட்டி இல்லாத கடன் கிடைக்கிறது.

ஒருவர் ஜூலை 6-ம் தேதி ஒரு பொருளை வாங்கினால் அதற்கான பணத்தைக் கட்ட வேண்டிய  தேதி ஜூலை 25-ம் தேதி அல்ல,  ஆகஸ்ட் 25-ம் தேதி. அதாவது, அவருக்கு அதிகபட்சம் 50 நாட்கள் வட்டி இல்லாத கடன் கிடைக்கும். இதை கணக்கிட்டு பொருட்களை வாங்கினால், அதிக நாட்களுக்கு வட்டி இல்லாத கடன் கிடைக்கும். 

பில்லிங் சுழற்சி..!

ஒவ்வொரு கிரெடிட் கார்டு கம்பெனியும் ஒவ்வொரு பில்லிங் சுழற்சியை வைத்திருக்கிறது. இதனால் நமக்குக் கிடைக்கும் சலுகை காலத்தை (கிரேஸ் பீரியட்) சரியாகப் பயன்படுத்தினால்  வட்டியே இல்லாமல் ஊரார் வீட்டு பணத்தில் பல விஷயங்களை உங்களால் அனுபவிக்க முடியும். பொதுவாக ஒருவர் இரண்டு கிரெடிட் கார்டு கம்பெனிகளிடம் கார்டுகளை வாங்கி வைத்துக் கொள்ளலாம். இவற்றின் பில்லிங் சுழற்சி மாதத்தில் 15, 30 தேதி என்று இருந்தால் நல்லது.


விழாக் கால ஆஃபர்!

புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கிரெடிட் கார்டு மூலம் வாங்கப்படும் பொருட்களுக்கு 5 முதல் 10% கேஷ் பேக் ஆஃபர் என்கிற சலுகை அளிக்கப்படுகிறது. உங்களுக்கு பெரிய தொகை போனஸாக கிடைத்து, அதை கொண்டு வீட்டு உபயோகப் பொருளை வாங்கப் போகிறீர் கள் என்றால் கிரெடிட் கார்டு மூலம் வாங்கிக் கொள்ள லாம். போனஸ் தொகையை வங்கி சேமிப்புக் கணக்கு அல்லது குறுகிய கால லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் போட்டு வைத்துவிட்டு, கிரெடிட் கார்டு கடனை அடைக்கும்போது எடுத்தால், முதலீடு மூலமும் வட்டி கிடைக்கும். இடைப்பட்ட காலத்தில் நீங்கள் வாங்கிய பொருளுக்கான பணத்திற்கு வட்டியும் தர வேண்டியிருக்காது. 

ஆனால், பின்னால் வரப் போகிற பணத்தை நம்பி  கிரெடிட் கார்டில் பொருட்களை வாங்காதீர்கள். எதிர்பார்க்கும் தொகை சரியான நேரத்தில் கிடைக்க வில்லை என்றால் அதிக வட்டி கட்ட வேண்டியிருக்கும். தவிர, இந்த ஆஃபரில் அத்தியாவசிய மான பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். தேவை யில்லாதப் பொருட்களை வாங்கக் கூடாது.

பல நேரங்களில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் வாங்கினால்தான் ஆஃபர் சலுகை என்பார்கள். 10% கேஷ் பேக் என்று அறிவிப்பார்கள். ஆனால், ஒரு மாதத்தில் அதிகபட்சம் 500 ரூபாய்தான் சலுகை என்பார்கள்.  நீங்கள் 50,000 ரூபாய்க்கு பொருட்களை வாங்கி அதற்கு கேஷ் பேக்காக 500 ரூபாய் கிடைத்தால், தள்ளுபடி 10% அல்ல, வெறும் 1%தான். இதுபோன்ற விஷயத்தைக் கவனிப்பது அவசியம்.

உஷார் டிப்ஸ்கள்..!

கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய பொருளுக்கு செலுத்த வேண்டிய முந்தைய மாதத்தின் தொகை ஏதாவது பாக்கி இருந்தால், அதே கார்டு மூலம் புதிதாக பொருள் வாங்கும்போது சலுகை எதுவும் கிடையாது. எனவே, ஒரு கடனை முழுமையாக அடைத்துவிட்டு அடுத்த பொருளை வாங்க வேண்டும்.

கிரெடிட் கார்டு கடனுக்கான வட்டி வீட்டுக் கடனைப் போல் சுமார் 4 மடங்கும், பெர்சனல் லோனை போல் சுமார் 2 மடங்கும் அதிகம். அதாவது, கிட்டத்தட்ட 35 முதல் 40% என்கிற அளவில் இருக்கும். இலவச சேவை, கட்டணம் இல்லை என்று வாய் வழியாக சொல்வதை மட்டும் நம்பி விடாதீர்கள்.

கிரெடிட் கார்டு கடன்களை ரொக்க பணமாக கட்டினால் சில முன்னணி வங்கிகள் 100 ரூபாய் என்பது போல் அபராதம் விதிக்கின்றன. அவை காசோலை அல்லது டி.டி. மூலமே கட்ட வாடிக்கையாளர்களை வலியுறுத்துகின்றன.

கிரெடிட் கார்டு கடனுக்கு வட்டி போக வேறு பல கட்டணங்களும் இருக்கின்றன. குறிப்பிட்ட தேதியில் பணம் கட்டவில்லை என்றால் தாமதக் கட்டணம் விதிக்கப்படும். இது பாக்கித் தொகையைப் பொறுத்து சுமார் 250 ரூபாயில் தொடங்கி 700 ரூபாய் வரை செல்கிறது.

கிரெடிட் வரம்புக்கு மேல் அதிகமாக பொருட்கள் வாங்கினால், குறைந்தபட்சம் 300 முதல் 500 ரூபாய் அபராதம் இருக்கிறது. பணமில்லாமல் காசோலை திரும்பினால் 200 முதல் 300 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்; கிரெடிட் கார்டை பயன்படுத்தி பெட்ரோல் போட்டால், டிக்கெட் புக் செய்தால் மொத்த தொகையில் சுமார் 2.5% வரை கட்டணம் எடுத்துக் கொள்வார்கள். வெளியூர் காசோலை என்றால் அதற்கு தனியே 100 ரூபாய் கட்டணம் இருக்கிறது.

கிரெடிட் கார்டு கடனை மொத்தமாக கட்ட முடியவில்லை என்றால் அதனை இ.எம்.ஐ. ஆக மாற்றி கட்டும் வசதி இருக்கிறது. கிரெடிட் கார்டு கடனுக்கு ஆண்டு வட்டி 35 முதல் 40 சதவிகிதம் என்கிற நிலையில் இந்த இ.எம்.ஐ. கடனுக்கு ஆண்டு வட்டி 14 முதல் 25%தான்.

  
கிரெடிட் கார்டு கடன்!

கிரெடிட் கார்டு மூலம் அவசரத் தேவைக்கு கடன் வாங்கிக் கொள்ளும் வசதி இருக்கிறது. இது கிட்டத்தட்ட பெர்சனல் லோன் மாதிரிதான். ஒரே ஒரு வித்தியாசம் ஆவணங்கள் எதுவும் தர வேண்டியதில்லை. ஆனால், கடனுக்கான வட்டி, பெர்சனல் லோனைவிட அதிகமாக இருக்கும். இதற்கு பிராசஸிங் கட்டணம் இருக்கிறது. கடனை மாதத் தவணைகளில் திரும்பச் செலுத்த வேண்டும். முன்கூட்டியே அடைக்க வேண்டுமெனில் அபராதம் அதிகமாக இருக்கும்.

அவசர செலவுக்குப் பணம்..!

கிரெடிட் கார்டு மூலம் அவசர செலவுக்குப் பணம் எடுத்துக் கொள்ள முடியும். ஆனால், இதற்கு குறைந்தபட்ச பரிமாற்றக் கட்டணம் 250 முதல் 500 ரூபாயாக இருக்கிறது. உதாரணத்துக்கு, 1,000 ரூபாய் எடுப்பதாக வைத்துக் கொண்டால், அதற்கு 250 ரூபாய் பரிமாற்றக் கட்டணம் என்பது 25%. எடுக்கப்படும் பணத்துக்கு அன்றே  வட்டி போட ஆரம்பித்து விடுவார்கள். நீங்கள் திரும்பக் கட்டும் பணம் அவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படுகிற தேதி வரைக்கும் வட்டி போடப்படும்.



கூடுதல் வசதிகள்!

கிரெடிட் கார்டு மூலம் இன்ஷூரன்ஸ் பிரீமியம், தொலைபேசி கட்டணம், மின்சார கட்டணம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருக்கிறது. இந்த கூடுதல் வசதிக்கு பரிமாற்றக் கட்டணம் இருக்கிறதா என்பதைக் கவனித்த பிறகு களமிறங்குவது நல்லது.

விருது புள்ளிகள்!

கிரெடிட் கார்டை அதிகமாக பயன் படுத்த வேண்டும் என்பதற்காக வங்கிகள், கார்டை பயன்படுத்துபவர்களுக்கு விருது புள்ளிகளை (ஸிமீஷ்ணீக்ஷீபீ றிஷீவீஸீt) அளிக்கின்றன. இந்தப் புள்ளிகள் 100 ரூபாய்க்கு ஒன்று என்கிற விகிதத்தில் கணக்கிடப்படுகிறது. இது வங்கிக்கு வங்கி மாறுபடும். அதிகப் புள்ளிகள் சேர்ந்தால், பொருட்களை வாங்கும்போது விலை குறைப்பு அல்லது பயண டிக்கெட் களை புக் செய்யும்போது குறிப்பிட்ட சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும். கிரெடிட் கார்டு மூலமே பொருட்களை வாங்கி, தொகையை சரியான தேதியில் கட்டி வந்தால், ரிவார்ட் புள்ளிகள் மூலம் கணிசமான தொகை கிடைக்கும்.''

தேவை அறிந்து, அளவாக, சரியாக பயன்படுத்தினால் எதனாலும் நமக்கு தீங்கு வராது என்பது மட்டும் நிச்சயம்!

லோனில் கார் வாங்குவோர் கவனத்திற்கு...

கார் வாங்குவது பலருக்கு பெரிய முதலீடாகவே இருக்கிறது. எனவே, கார் வாங்கும்போது கடன் வாங்குவதும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. மேலும், திடீரென பெரிய முதலீட்டை கையிலிருந்து செய்வதையும் தவிர்த்துக்கொள்ள முடிகிறது.

பல முன்னணி வஙகிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் மற்றும் கார் தயாரிக்கும் நிறுவனங்களே கார் கடன்களை எளிய தவணை முறையில் வழங்குகின்றன. இருப்பினும், கார் கடன் வாங்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். ஏனெனில், சில நிறுவனங்கள் நேர்முக கட்டணங்களை தவிர முடிந்தவரை மறைமுக கட்டணங்களையும் தலையில் கட்டி தாளித்து விடும்.

கார் கடனை கட்டி முடிக்கும்போது காரின் விலையை காட்டிலும் இருமடங்கு தொகையை செலுத்த வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுவிடலாம். எனவே, கார் கடனை தேர்வு செய்யும்போது அதி்க கவனமாக இருக்கவேண்டும். கார் கடன் தேர்வு செய்யும்போது சில எளிய வழிமுறைகளை கடைபிடித்தால் ஓரளவு மறைமுக கட்டடணங்கள் மற்றும் ரேட் ஆப் இன்ட்ரஸ்ட் என்று கூறப்படும் அதிக வட்டி வீதங்களிலிருந்து தப்பிக்க முடியும்.

1.காரை தேர்வு செய்தவுடன் ஷோரூம் சூப்பர்வைசர் கையை நீட்டும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் பிரதிநிதி சடசடவென திட்டத்தை பற்றி கூறும் விபரங்களை கேட்டு தலையாட்டிவிடாதீர்கள். கார் வாங்கும் ஆசையில் கண்ணை மூடிக்கொண்டு கடன் பள்ளத்தாக்கில் போய் விழுந்துவிட வேண்டாம். ஒவ்வொரு வினாடியும் யோசித்து நிதானமாக செயல்படுங்கள்.

2. காருக்கு கடன் கொடுக்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கார் கடன் திட்டங்களை பற்றிய விபரங்களை கேட்டுக்கொள்வதோடு, அதன் விபரங்களை வீட்டிற்கு சென்று நன்கு அலசி ஆராய்ந்து பாருங்கள். எந்த வங்கி குறைந்த வட்டி வீதத்தில் கடன் கொடுக்கிறது; கார் கடனுக்கான பிராசஸிங் கட்டணம் எத்தனை சதவீதம் உள்ளிட்ட விபரங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இதில், எது சிறந்தது என்பதை முதலில் முடிவு செய்துகொள்ளுங்கள்.

3.காருக்கு கடன் வாங்க தீர்மானித்துவிட்டால், குறைந்தது 30 சதவீதத்திற்கு மேலாவது முன்பணத்தை செலுத்த வேண்டும். இதனால், மாதத்தவணை தொகை மற்றும் தவணை காலம் வெகுவாக குறைவதோடு வட்டி வீதத்தை குறைத்துக்கொள்ளுமாறு பேரம் பேச முடியும்.

4.கார் கடன் வழங்கும் வங்கிகளின் சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை நன்கு அறிந்துகொண்டு ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும். தவிர, மறைமுக கட்டணங்கள் ஏதாவது திணிக்கப்படுகிறதா என்பதை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி பார்க்கவேண்டிய நேரம் இது.

5.கார் கடனுக்கு காப்பீடு திட்டங்கள் இருக்கிறது. காருக்கு ஏதாவது சேதாரம் ஏற்பட்டால் கூட காப்பீடு மூலம் தவணை மற்றும் இழப்புகளிலிருந்து தப்பிக்க முடியும்.

6.இவை எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமானது. கடன் வாங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் அலுவலக விபரங்கள் மற்றும் போன் நம்பர்களை விற்பனை பிரதிநிதியிடம் அவசியம் கேட்டு டைரியில் குறி்த்து வையுங்கள். கடன் முடிந்த பிறகு ஆர்சி புக் அல்லது ஆர்சிபுக்கில் உள்ள ஹைப்போதிகேஷனை நீக்குவதற்கு நோ அப்ஜெக்சன் சான்றிதழை(என்ஓசி) கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து பெறும்போது இவை உதவியாக இருக்கும்.

மேற்கண்ட சில எளிய வழிமுறைகளை கவனத்தில்கொண்டால், கார் கடன் நம் கழுத்தை இறுக்காது என்று உறுதியாக கூறலாம்..

உங்களுக்கேற்ற ராசியான செடி இங்க இருக்கு பாருங்க...

செடி, மரம், கொடி போன்றவை இயற்கை நமக்கு தந்த ஒரு வரப்பிரசாதம். இவை உணவு, சுத்தமான காற்று, தங்குவதற்கு இடம் மற்றும் பலவாறு பெரிதும் உதவியாக உள்ளது. இவை இல்லாமல் நம்மால் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழவே முடியாது. இத்தகையவற்றை வீட்டின் வெளியே மட்டும் வளர்க்காமல், வீட்டின் உள்ளே கூட வளர்க்கலாம். அதற்காக அனைத்து செடிகளும் வீட்டினுள் வளரும் என்று நினைத்தால் அது தவறு. ஏனெனில் ஒவ்வொரு செடியும், ஒவ்வொரு தன்மையைக் கொண்டவை.

ஆகவே அவற்றில் ஒருசில செடிகளை மட்டுமே வீட்டின் உள்ளே வளர்க்கலாம். அதுமட்டுமின்றி, அவற்றினுள் வீட்டினுள் வளர்க்கும் சில செடிகள் வீட்டில் சந்தோஷத்தையும், அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் வாரி வழங்கும். மேலும் வீட்டில் உள்ள கெட்ட சக்தியை வெளியேற்றி, நல்ல சக்தியை வீட்டில் நிலைக்க வைத்து, வீட்டில் எப்போதும் நல்லதே நடைபெற வழிவகுக்கும்.

இப்போது அப்படி வீட்டில் சந்தோஷத்தை வாரி வழங்கக்கூடிய சில செடிகளைப் பார்ப்போமா...

 

மூங்கில்

மூங்கிலை வீட்டினுள் வளர்த்தால், அந்த மூங்கிலின் வளர்ச்சிக்கு ஏற்ப வீட்டில் செல்வமும், சந்தோஷமும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. மேலும் அது நம்பிக்கை மட்டுமின்றி, பலர் உணர்ந்ததும் கூட. ஆகவே வீட்டினுள் மூங்கில் வாங்கி வளர்த்து வாருங்கள்.

துளசி

துளசியை வீட்டில் வளர்த்தால், அன்பு, செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வீட்டின் அழகு அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, இந்திய கலாச்சாரத்தின் படி, துளசி செடி கடவுள் போன்று கருதப்படுகிறது. ஆகவே இதனை வீட்டில் வளர்த்து வந்தால், வீட்டின் அதிர்ஷ்டம் அதிகரிப்பதோடு, தீய சக்தியும் வீட்டில் இருந்து அகலும்.

ஹனிசக்கிள் (Honeysuckle)

இந்த செடியை வீட்டினுள் வளர்த்து வந்தால், வீட்டில் செல்வம் கொழிக்கும். அதுமட்டுமின்றி, இதிலிருந்து வெளிவரும் நறுமணத்தால், வீடே நல்ல நறுமணத்துடன் இருக்கும்.


மல்லிகை

மல்லிகையை வளர்த்தால், வீட்டில் அன்பு அதிகரிப்பதோடு, செல்வமும் அதிகரிக்கும். மேலும் இந்த செடியானது மன அழுத்தத்தில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும்.

லாவெண்டர்

லாவெண்டரின் நறுமணத்திற்கு ஈடு இணை எதுவும் இருக்க முடியாது. அந்த அளவில் இதன் நறுமணமானது இருக்கும். அதுவும் இதனை வீட்டினுள் வளர்த்தால், மனம் அமைதி பெறுவதோடு, வீட்டும் நல்ல வாசனையோடு இருக்கும்.

ரோஜா

அன்பின் அடையாளம் தான் ரோஜா. இத்தகைய ரோஜாவை வீட்டில் வளர்க்கும் போது, அது வீட்டின் அழகை அதிகரிக்கும். அதிலும் வெவ்வேறு நிறத்தில் இருக்கும் ரோஜாக்கள் வீட்டில் ரம்மியமாகவும், பேரார்வத்தையும் கொடுக்கும்.


மந்தாரை/ஆர்க்கிட் (Orchid)

வீட்டின் உள்ளே வளர்ப்பதற்கு ஏதுவான செடிகளில் மிகவும் சிறந்தது தான் மந்தாரை என்னும் ஆர்க்கிட். இவற்றை பராமரிப்பது என்பது மிகவும் எளிமையானது. இது அனைவரையும் எளிதில் கவர்வதோடு, மனதை அமைதிப்படுத்துவதிலும் சிறந்தது.

ரோஸ்மேரி

ரோஸ்மேரி மூளையின் சக்தியை அதிகரிப்பதோடு, மனதை ரிலாக்ஸ் அடையச் செய்யும். மேலும் இது வீட்டில் நல்ல பாதுகாப்பையும், தூய்மையையும் கொடுக்கும். எப்படியெனில் இதன் நறுமணத்தால், இது மனதில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்யும்.

சேஜ்

சேஜ் செடி, அதன் பாதுகாப்பு குணங்களால் அனைவருக்கும் நன்கு தெரியும். மேலும் இதனை வளர்த்தால், இது இறப்பின்மை, ஆயுள், ஞானம் போன்றவற்றை பிரதிபலிக்கும்.

மயில் தேசியப்பறவையானது எப்படி?

டோக்கியோவில் 1960-ஆம் ஆண்டு சர்வதேச பறவை பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. அழிந்து வரும் பறவைகள், விலங்குகளைக் காக்க வேண்டும். அதை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து கூட்டத்தில் ஆராயப்பட்டது. அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சிறப்புமிக்க பறவையைத் தேர்வு செய்து அதை தேசியப்பறவை என்று அறிவிக்க முடிவெடுத்தனர்.



 அப்போது இந்தியா சார்பில் வனவிலங்குகள் பாதுகாப்புக் கழகம் "நீல நாரையை' தேசியப் பறவையாக தேர்வு செய்யப் பரிந்துரைத்தது. இப்பறவை அழகானது என்றாலும் இந்தியாவில் பஞ்சாப், தமிழ்நாடு மாநிலங்களில்  மட்டுமே அதிகம் உள்ள பறவையாகும். எனவே, இப்பறவை வேண்டாம் எனத் தீர்மானித்து, கொக்கு, அன்னம் என ஆலோசிக்கப்பட்டது.


 ஆனாலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அப்போதுதான் அழகு ததும்பும் ஆண் மயிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இந்தியாவில் அனைத்து இடங்களிலும் காணப்படும் தோகை மயில், புராணம், இலக்கியம் என அனைத்திலுமே சிறப்பிடம் பெற்றிருக்கிறது என்ற அடிப்படையில் அனைவரும் ஏகோபித்த முடிவு எடுத்தனர். அதிலிருந்து மயில் தேசியப்பறவை என்று அறிவிக்கப்பட்டது.

கூச்சத்தை விரட்ட....

நீங்கள் பிறருடன் பழகக் கூச்சப்படுபவரா?இதோ,கூச்சத்தை விரட்ட உங்களுக்கு ஒன்பது வழிகள்.



1.நம்மைப் பற்றி பிறர் என்ன நினைப்பார்களோ என்ற நினைப்பைக் கை விடுங்கள்.


2.எப்போதும் யாரோ ஒருவர் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று நீங்களாகவே நினைத்து வேதனைப் படாதீர்கள்.அவரவர்களுக்கு அவரவர் வேலைகள்.உங்களைத்தானா கவனித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்?


3.எப்போதும் பிறர் உங்களுக்கு ராஜ மரியாதை தர வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள்.
 
4.தர்ம சங்கடமான நிலைமைகளை தைரியமாக எதிர் கொள்ளுங்கள்
.

5.மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கலாம்.அதனால் மற்றவர்களின் நட்பில் உங்களது கூச்சத்தை மறக்க முயற்சி செய்யுங்கள்.


6.உண்மையில் ஒரு நண்பனுக்கு நீங்கள் ஏங்கும் போது ,'நமக்கு நாமே நண்பன்' என்று உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ளக் கூடாது.


7.ஏதாவது தவறு செய்து விட்டால்,இன்று மிகப் பிரபலமாக இருக்கும் பலரும் தவறு செய்தவர்கள்தான் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.


8.உங்களைப் போல பலரும் கூச்ச சுபாவம் உள்ளவர்களாகத்தான் இருந்திருப்பார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.


9.மற்றவர்களிடம் அதிகமாகப் பழக சந்தர்ப்பம் வரும்போது,தாழ்வு மனப்பான்மை கொள்ளாதீர்கள்.

INDIA தேசிய கீதத்தின் பொருள்....

ஜன கன மன அதிநாயக ஜய ஹே - மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !

பாரத பாக்ய விதாதா – இந்தியத் திருநாட்டுக்கு பெருமையும், மங்கலமும், செல்வங்களும் அருளுபவள் நீயே.

பஞ்சாப சிந்து குஜராத் மராத்தா
திராவிட உத்கல பங்கா

ஐந்து பெரிய நதிகள் ஓடும் நிலம், பெரும் வீரர்கள் தோன்றிய இடம், சமய ஒற்றுமையை வலியுறுத்தும் சீக்கியத்தின் பிறப்பிடம் – பஞ்சாப் மாகாணம் உன்னுடையது.

புராதன பாரதத்தின் தலை வாசல், நான்கு வேதங்களின் பிறப்பிடம் , பழம்பெரும் சிந்து சமவெளிக் கலாச்சாரம் தழைத்தோங்கிய இடம் – சிந்து நதிப்பிரதேசம் உன்னுடையது.

குஜராத் மாநிலம் உன்னுடையது .

வீர மராட்டிய மாநிலம் உன்னுடையது .

பழம்பெரும் திராவிடக் கலாச்சாரத்தின் தொட்டில், செம்மொழியாம் தமிழ்மொழியின் பிறப்பிடம், இந்தியக் கலாச்சாரத்தின் மிக முக்கிய பாகங்களை அளித்த பெருநிலம் – திராவிட பீடபூமி உன்னுடையது.

பூரி ஜெகன்னாதம், கொனாரக் போன்ற சிறந்த கலைச்செல்வங்களாகிய கோவில்கள் இருக்கும் இடம், பழங்காலத்து கலிங்க தேசம் – உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம் உன்னுடையது.

பழம்பெருமை மிக்க வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது .

இந்த பெரும் மாநிலங்களும் அதில் வாழும் மக்களும் உன் பெருமைகளை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றனர்.

விந்தியா ஹிமாச்சல யமுனா கங்கா
வடநாட்டிற்கும் தென்னாட்டிற்கும் நடுவே அமைந்த இயற்கை எல்லை, மிகப் பெரியது என்றும் கடக்க முடியாதது என்றும் ஒரு காலத்தில் எண்ணப்பட்ட மலை, பல புராணக் கதைகளின் இருப்பிடம் – விந்திய மலை உன்னுடையது.

மாபெரும் மலைத்தொடர், அசலம் (அசையாதது) என்னும் சொல்லுக்கு ஒரு மாபெரும் உதாரணம், இந்தியத் தேசத்தின் இயற்கை எல்லை, மகரிஷிகளும் சாதுக்களும் வாழும் இறையாலயம், புராணக்கதைகளின் நாயகன், உலகின் மிகப் பெரிய சிகரத்தைக் கொண்ட மலைத்தொடர் – இமய மலை உன்னுடையது.

இந்தியத் திருநாட்டின் மாபெரும் சமவெளியை தழைத்தோங்கச் செய்யும் இரு நதிகள், இந்தியர்களின் ஆன்மத் தாயார்கள் – கங்கையும் யமுனையும் உன்னுடையவை.

இந்த இயற்கை அற்புதங்கள் உன் புகழை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றன.

உச்சல ஜலதி தரங்கா – மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன.

தவ சுப நாமே ஜாகே – உனது மங்களகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.

தவ சுப ஆஷிஸ மாகே – உனது மங்களகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.

காஹே தவ ஜய காதா – உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்.

ஜன கன மங்கல தாயக ஜய ஹே – இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!

பாரத பாக்ய விதாதா – இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ.

ஜய ஹே! ஜய ஹே! ஜய ஹே! ஜய ஜய ஜய ஜய ஹே! – வெற்றி உனக்கே! வெற்றி உனது நல்வழி செல்லும் மக்களுக்கே! வெற்றி உன் மங்கலகரமான கொள்கைகளுக்கே! வெற்றி உன் ஈடு இணையற்ற தத்துவச் செல்வங்களுக்கே! வெற்றி உன் பன்மைத் தன்மைக்கே! வெற்றி உன் அமைதியை விரும்பும் குணத்திற்கே! வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்திய வீராங்கனை ஹீனா சிந்துக்கு தங்கம்!

 

உலகின் டாப்-10 துப்பாக்கி சுடும் வீரார்கள் பங்கேற்கும் உலகக்கோப்பை துப்பாக்கி சூடுதல் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற தகுதி பெற்ற இந்திய வீராங்கனை ஹீனா சிந்து, மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் கலந்துகொண்டார். நேற்று நடைபெற்ற இறுதி சுற்றில் மொத்தம் 384 புள்ளிகள் எடுத்து தங்கப் பதக்கம் வென்றார்.

நடப்பு சாம்பியன் சோரனா அருணோவிக் (செர்பியா) 2 புள்ளிகள் பின்தங்கி வெள்ளிப் பதக்கமும், 381 புள்ளிகள் பெற்றிருந்த விக்டோரியா சாய்கா (பெலாரஸ்) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

இதன்மூலம், உலகக் கோப்பை இறுதியில் தங்கம் வென்ற இந்திய வீரர்களில் அஞ்சலி பகவத் (2003), ககன் நரங் (2008) ஆகியோருடன் ஹீனா சிந்துவும் இணைந்துள்ளார்.

Indian shooter Heena Sidhu creates history by winning ISSF World Cup gold

****************************************


Woman shooter Heena Sidhu created history by becoming the first pistol exponent from India to win a gold medal at the ISSF World Cup finals in Munich, Germany.Heena won the gold medal yesterday by beating double Olympic Champion Guo Wenjun from China, world champion Arunovic Zorana from Serbia and multiple Olympic medallist Olena Kostevych of Ukraine in a stiff competition.

உடல் சூட்டை குறைக்க அல்லது கூட்ட உதவும் பிரேஸ்லெட் !

 

இந்த நவீன பிரேஸ்லெட்டை அணிந்துகொண்டால் நம் உடம்பே குளிர்ச்சியாக வைத்திருருக்கும் வெப்ப மின்னோட்ட டெக்னாலஜியை அமெரிக்காவின் எம்.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.இது வரை வீடு, கார், அலுவலகம், தியேட்டர் என நாம் போகிற இடங்கள் எல்லாவற்றிலும் ஏ.சி., ஏர்கூலர் வைக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது என்றும் மின் கட்டணம் பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர் அதே சமயம் ஊட்டி, கொடைக்கானல் குளிரிலும் நடுங்கத் தேவையிருக்காது. ரிஸ்டிஃபை கருவியை அணிந்துகொண்டால், தேவைப்படும் நேரத்தில் உடம்பு தானாக சூடாகும் அல்லது குளிர்ச்சியாக மாறும் எனவும் தெரிவித்துள்ளனர்.


அமெரிக்காவின் மசாசூசட்ஸ் மாநிலம் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ளது மசாசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகம். இங்கு படிக்கும் 4 மாணவர்கள் சேர்ந்து ரிஸ்ட்டிஃபை என்ற கருவியை உருவாக்கியிருக்கின்றனர்.தற்போது கருவிக்கு முறைப்படி காப்புரிமை பெற்று வணிக ரீதியாக அதை தயாரிக்கும் முயற்சியிலும் மாணவர்கள் இறங்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி ஆய்வு மாணவரில் ஒருவரான சாம் ஷேம்ஸ் ,”நாங்கள் உருவாக்கியுள்ள ரிஸ்ட்டிஃபை கருவி, வெப்ப மின்னோட்ட தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. இயற்பியலில் பெல்டியர் விளைவு என்று ஒன்று உண்டு. வெவ்வேறு உலோகங்கள் கொண்ட ஒரு சுற்றில் மின்னோட்டம் பாயும்போது உலோகங்களின் ஒரு இணைப்புப் பகுதி வெப்பத்தை வெளியேற்றும், இன்னொரு பகுதி வெப்பத்தை உள்ளிழுக்கும் என்பதை பிரான்ஸ் விஞ்ஞானி பெல்டியர் கண்டறிந்தார். அந்த தத்துவம்தான் எங்கள் கண்டுபிடிப்புக்கு அடிப்படை. ரிஸ்ட்டிஃபை கருவி சற்று பெரிய வாட்ச் அளவில் இருக்கும். வாட்ச் போலவே மணிக்கட்டில் இதை அணிந்துகொள்ள வேண்டும். பெல்டியர் கூலர் எனப்படும் இரண்டு வெவ்வேறான வெப்பக் கடத்திகள் இதில் இருக்கின்றன. தோல் வெப்பநிலை வழக்கமான அளவில் இருக்கும்போது பெல்டியர் கூலருக்கு வேலை இல்லை. தோல் வெப்பநிலை அதிகரித்தால், பெல்டியர் கூலர் வேலை செய்யத் தொடங்கும். தோலில் இருக்கும் வெப்பத்தை உறிஞ்சி, தோலுக்குக் குளிர்ச்சியை வழங்கும்.

உடம்பின் ஏதாவது ஒரு பகுதியைக் குளிரச் செய்தாலே, மற்ற அனைத்து பகுதிகளுக்கும் ஒருசில வினாடிகளில் அந்த குளிர்ச்சி பரவிவிடும்.பனிப் பிரதேசங்களில் அதிக குளிரில் இருப்பவரின் உடல் வெப்பநிலையை அதிகரித்து, உடலுக்கு சூட்டைக் கொடுக்கவும் ரிஸ்டிஃபை கருவியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சிறிய அளவு லித்தியம் பாலிமர் பேட்டரி உதவியுடன் இது செயல்படுகிறது” என்றார் அந்த மாணவர்.

எம்.ஐ.டி. பல்கலைக்கழகம் சார்பில் மெட்டீரியல் சயின்ஸ் டிசைன் போட்டி கடந்த மாதம் நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசை தட்டிச் சென்றிருக்கிறது ரிஸ்டிஃபை. போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், ரிஸ்டிஃபை பற்றிய அடுத்தகட்ட ஆய்வுக்கான நிதியுதவியும் அந்த மாணவர்களுக்குக் கிடைத்திருக்கிறது..

அரசிடம் முனைப்பும், பொதுமக்களிடம் பொறுப்புணர்வும் இருந்தால் போதும் குப்பையும் காசாகும்!

 

இன்னும் பத்து ஆண்டுகளில் இந்தியாவின் நகரவாசிகள் தொகை 600 கோடியாகவும் அவர்கள் ஒரு நாளில் கழிக்கும் குப்பை ஆறு லட்சம் டன்னாகவும் உயரும் என ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. நகரங்களில் நிலத்தின் விலை வானளாவ உயர்ந்து விட்டது. நகராட்சிகளுக்குக் குப்பை கொட்ட இடம் கிடைக்கவில்லை. அடுத்த ஊரில் கொண்டு போய்க் கொட்ட நினைத்தால் அந்த ஊர்க்காரர்கள் ஒன்றுகூடிச் சண்டைக்கு வருகிறார்கள். மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் வேறு அவ்வப்போது ஏதாவது குறை சொல்லிக் கொண்டேயிருக்கின்றன. இதன் காரணமாகப் பல நகராட்சிகள் தம்மூரிலுள்ள குப்பைக் கிடங்குகளில் குப்பை பொறுக்குவோரைத் தாராளமாக நடமாட விட்டு அவர்கள் திரட்டியது போக மிச்சமுள்ளதை எரித்துவிட மறைமுக ஆதரவளிப்பதைப்போலத் தோன்றுகிறது. உலகின் பெரும்பாலான ஊர்களிலும் இதே கதைதான்.


÷சில நகரங்களில் குப்பையிலிருந்து மக்காத பொருட்களைச் சலித்து நீக்கிவிட்டு, மீதமுள்ள கரிமப் பொருளை உலர வைத்துக் கட்டிகளாக்கித் தொழிற்சாலைகளிலும் மின் உற்பத்தி நிலையங்களிலும் எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்கள். மத்திய அரசு இம்முறையில் சுற்றுச்சூழலைக் கெடுக்காமல் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்குக் கூடுதல் விலை தர முன் வந்திருக்கிறது. பசுங்குடில் வாயுக்களை வெளியிடாமல் மின் உற்பத்தி செய்வோருக்கு கார்பன் பற்று-வரவு மூலமும் பணம் கிடைக்கும். தில்லியில் ஒரு தனியார் நிறுவனம் எட்டுக்கும் மேற்பட்ட குப்பை மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ முன் வந்திருக்கிறது. அதற்கு மத்திய அரசின் காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை அனுமதி அளித்திருக்கிறது.

÷ஆனால் இவற்றின் காரணமாகப் பல லட்சம் குப்பை பொறுக்குவோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. குப்பைகளை எரிக்கிறபோது புகைக் கூண்டுகளிலிருந்து வெளிப்படும் புகைத் துகள்கள் நுரையீரல் நோய்களை உண்டாக்கும். அவற்றுடன் வெளிப்படும் டயாக்சின்கள், ஃப்யூரான்கள், நைட்ரஜன் ஆக்சைடுகள், கந்தக ஆக்சைடுகள் ஆகியவை உடலுக்கு ஊறு விளைவிப்பவை. டயாக்சின் குழுவில் நூற்றுக்கும் மேற்பட்ட வேதிகள் உண்டு. அவை மிக நீண்ட ஆயுள் கொண்டவை. அவை நீரில் கரையா. அவை தரையிலும் நீரிலும் படிந்து தாவரங்களால் முழுமையாக உட் கவரப்படும். அத் தாவரங்களை உண்டு வாழும் மீன்கள் மற்றும் விலங்குகளின் மாமிசம், முட்டை, பால் போன்றவற்றின் மூலம் மனித உடலில் அந்த நச்சுகள் புகுகின்றன. அவை உடலில் வளர்சிதை மாற்றமடைவதில்லை. அவை மல-ஜலமாக வெளியேற்றப்படுவதுமில்லை.

பெண்கள் தமது உடலில் சேரும் டயாக்சின்களைக் கருப்பை மூலமாகவும் தாய்ப்பால் மூலமாகவும் சிசுக்களின் உடலுக்குள் செலுத்துகின்றனர். உடலில் அவை அதிக அளவில் சேரும்போது கல்லீரல் செயல்பாடும் நோயெதிர்ப்புத் திறனும் இனப்பெருக்கத் திறனும் குலையும். குப்பை எரிப்பு நிலையங்களில் எவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தாலும் அவை காற்றிலும் மண்ணிலும் கலப்பதைத் தடுக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

குப்பைகளைப் பாதுகாப்பாக அழிப்பதற்கும் அவற்றிலிருந்து பொருளாதார லாபங்களை அடைவதற்கும் “வாயுவாக்கல்’ என்ற தொழில்நுட்பம் மிகச் சிறப்பானது; கரிமப் பொருட்களைக் குறைந்த ஆக்சிஜனுள்ள சூழலில் எரிக்கிறபோது அவை முழுமையாக எரியாமல் கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன் ஆகியவற்றை வெளியிடும். அந்தக் கலவை எரியன் வாயு எனப்படும். அதைப் பயன்படுத்தி மின் உற்பத்திக் கருவிகளை இயக்கவும் விமானம், ரயில், பஸ், கார் போன்ற ஊர்திகளை ஓட்டவும், டை மெதில் ஈதர், சமையல் எரிவாயு போன்ற எரியன்களை உற்பத்தி செய்யவும் முடியும். “வாயுவாக்கல்’ 1,000 முதல் 3,000 செல்சியஸ் டிகிரி வெப்ப நிலையில் நிகழ்வதால் டையாக்சின், ஃப்யூரான் போன்ற வாயுக்கள் சிதைந்து சாதாரண மூலக்கூறுகளாக மாறிவிடும். உலகின் முன்னணி விமான நிறுவனங்கள் தமது எரியன் செலவைக் குறைப்பதற்காக “வாயுவாக்கல்’ முறையில் விமான எரிபொருளை உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகளில் முதலீடு செய்து வருகின்றன. நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் உற்பத்தியாகப் போகிற ஆறு லட்சம் டன் குப்பையிலிருந்து ஆண்டுக்கு 35 மில்லியன் டன்கள் என்ற அளவில் ஊர்திகளுக்கான எரியன்களை உற்பத்தி செய்ய முடியும். அதன்மூலம் நம் நாட்டுக்கு மிகப் பெரிய அளவில் அன்னியச் செலாவணி மிச்சமாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பின் பெட்ரோலுக்கும் டீசலுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டபோது பஸ்களிலும் லாரிகளிலும் விறகு, கரி ஆகியவற்றை எரித்து எரியன் வாயுவை உண்டாக்கும் “வாயுவாக்கிகள்’ பொருத்தப்பட்டன.

மக்கள்தான் குப்பைகளை உண்டாக்குகிறார்கள். ஆனால் அதைக் காணவே அவர்களுக்குப் பிடிப்பதில்லை. ஆகவே தம் வீட்டுக் குப்பைகளை அருகிலுள்ள காலி மனைகளில் கொட்டி விட்டு நிம்மதியடைகிறார்கள்! சுகாதாரப் பணியாளர்கள் தெருவிலோ காலி மனைகளிலோ ஏரி அல்லது குளக்கரைகளிலோ தென்படும் குப்பைக் குவியல்களைக் கண்டும் காணாமல் போய் விடுகிறார்கள். நகராட்சிகளுக்குக் குப்பைகளைத் திரட்டுவதும் அவற்றைக் கிடங்குகளுக்குக் கொண்டு சேர்ப்பதும் உழைப்பும் செலவும் அதிகமாகத் தேவைப்படுகிற பணிகளாயிருக்கின்றன. வீடுகளிலேயே மக்குகிற குப்பைகளையும் மக்காத குப்பைகளையும் தனித்தனியாகப் பிரித்துத் தருமாறு மக்களுக்கு விடுக்கப்படும் வேண்டுகோள்கள் பயனற்றுப் போகின்றன. மருத்துவமனைகளே கூட கிருமிகள் நிறைந்த குப்பைகளைத் தெருவில் வீசி விடுகின்றன.

குப்பைகளை ஜீரணிப்பது, நொதிக்க வைப்பது, வாயுவாக்குவது ஆகிய முறைகள் மூலம் எரிவாயுக்களை உற்பத்தி செய்யலாம். தாவரக் குப்பைகளைக் குறைந்த அளவில் ஆக்சிஜனைச் செலுத்திச் சூடாக்கினால் குறைந்த எரி திறனுள்ள “எரியன் வாயு’ கிடைக்கும். அவற்றை உயர் வெப்பநிலையிலும் உயர் அழுத்தத்திலுமுள்ள நீராவியையும் ஆக்சிஜனையும் செலுத்திச் சூடாக்கினால் நடுத்தரமான எரி திறனுள்ள எரிவாயு கிடைக்கும். அதை நேரடியாக எரியனாகப் பயன்படுத்தலாம் அல்லது அதிலிருந்து எத்தனால், மெத்தனால் போன்ற திரவ எரியன்களை உற்பத்தி செய்யலாம். அதை உயர் எரி திறனுள்ள மீத்தேனாகவும் ஹைட்ரஜனாகவும் மாற்றி விடலாம். தாவரக் குப்பைகளில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை மெத்தனாலாக மாற்ற முடியும்.

÷மரக் குப்பைகளைத் தூளாக்கி அவற்றின் ஊடாக உயர் அழுத்தத்திலும் வெப்பநிலையிலும் உள்ள ஹைட்ரஜன் வாயுவைச் செலுத்தி நேரடியாக மீத்தேனை உற்பத்தி செய்யலாம். அந்தக் கொதிகலத்திற்குள் நீராவியைச் செலுத்தினால் அது கார்பன் மோனாக்சைடாகவும் ஹைட்ரஜனாகவும் மாறும். மீத்தேனை மெத்தனாலாக மாற்றுவதற்குச் சிறப்பான தொழில்நுட்பங்களும் எந்திரங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

÷நூறு முதல் 400 செல்சியஸ் டிகிரி வரையான வெப்பநிலைகளில், நூறு மடங்கான வளியழுத்தத்தில் தாவர செல்லுலோஸ் குப்பைகளில் செலுத்தப்படும். நீராவியும் கார்பன் மோனாக்சைடும் அடர்த்தி மிக்க எண்ணெய்களை வெளிப்படுத்தும். அவற்றைச் சுத்திகரித்து டீசலை ஒத்த எரியன்களை உற்பத்தி செய்யலாம். கால்நடைத் தீவனமாகவும் எரிபொருளாகவும் பயன்படும் வைக்கோலில் கிட்டத்தட்ட 70 சதவீதம் செல்லுலோஸ்தான்.

÷தாவரக் குப்பைகளைக் காற்றுப்படாமல் சூடாக்கும்போது ஹைட்ரஜன், நைட்ரஜன், கார்பன் மோனாக்சைடு, கரியமில வாயு, ஈத்தேன், மீத்தேன், எத்திலீன், டாலுயின் போன்ற மதிப்புமிக்க வேதிகள் வெளியாகின்றன. ஹைட்ரஜன், கார்பன் மோனாக்சைடு ஆகியவற்றை இணைத்து மெத்தனால், பெட்ரோல், டீசல், அம்மோனியா, மருந்துகள், பசைகள், செயற்கை இழைகள் போன்ற பல உபயோகமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. காற்றுப்படாமல் சூடாக்கும் முறை “தீயாற் பகுப்பு’ எனப்படும். எளிய சாதனங்கள், எளிய செயல்முறை, குறைவான கழிவு ஆகியவை இம்முறையின் சிறப்புகளாகும்.

÷சரியான முறையில் மேலாண்மை செய்யப்பட்டால் குப்பையும் செல்வம் தரும். அதற்குப் புதிய கண்டுபிடிப்புகளோ, புதிய வடிவமைப்புகளோ புதுவகை எந்திர சாதனங்களோ தேவையில்லை. அரசிடம் முனைப்பும், அதிகாரிகளிடம் அக்கறையும் பொதுமக்களிடம் பொறுப்புணர்வும் இருந்தால் போதும். குப்பையும் காசாகும்!

‘ஷோலே’ – 3 டி எபெக்டில் வரப் போகுதில்லே!

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் இந்தியில் வெளிவந்து கலக்கிய .‘ஷோலே’ படத்தை பார்க்காத ரசிகர்கள் இருக்க முடியாது. இருந்தாலும் இன்றைய இளைய தலைமுறையினர் அனைவரும் பார்த்து ரசிக்கும் விதமாக தற்போது இந்தப்படத்தை ‘3டி’யில் உருவாக்கியுள்ளார்கள்.இதையடுத்து மும்பையில் நடைபெறவுள்ள இந்த புதிய பதிப்பின் அறிமுக விழாவில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா உள்ளிட்ட நடிகர் – நடிகைகள் பங்கேற்கிறார்கள்.



                  nov 11 - cine sholey

பல வருடங்களுக்கு முன் வெளிவந்த சூப்பர்ஹிட் படங்களை டிஜிட்டலுக்கு மாற்றி வெளியிடுவதும் 3டியில் மாற்றி வெளியிடுவதும் இப்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் இந்தியில் வெளிவந்து ஏகப்பட்ட கலெக்‌ஷனை அள்ளிய ‘ஷோலே’ படமும் 3டியில் வெளியாக இருக்கிறது.

இந்திய திரையுலகில் வெளியான படங்களில் முக்கியமான படங்களை பட்டியலிட்டால், அதில் தவறாமல் இடம்பிடிக்கும் படம் ‘ஷோலே’. ரமேஷ் சிப்பி இயக்கத்தில் தர்மேந்திரா, அமிதாப் பச்சன், ஹேமமாலினி மற்றும் பலர் நடிப்பில் 1975 ஆகஸ்ட் 15ல் வெளியானது ‘ஷோலே’. அமிதாப், தர்மேந்திரா மட்டுமல்ல இந்தப்படத்தின் வில்லனாக நடித்திருந்த அம்ஜத்கானுக்கும் இந்தப்படம் புகழ்மாலை சூட்டியது.

இந்தப்படம் வெளியானபோது முதல் இரண்டு வாரங்களுக்கு வசூல் குறைவாகவே இருந்தது. ஆனால் 3ஆம் வாரத்தில் இருந்து வசூல் மழை கொட்ட ஆரம்பித்தது. அதற்கு முன்பு வெளியான அனைத்து படங்களின் வசூலையும் முறியடித்தது ‘ஷோலே’. அதுமட்டுமன்றி 100 திரையரங்குகளில் 25 வாரங்கள் ஓடியது.

‘3டி’க்கு மாற்ற சுமார் மூன்று ஆண்டுகள் கடுமையாக உழைத்து முடித்துள்ள இந்தப் படத்தை யுடிவி மோஷன் பிக்‌ஷர்ஸ் நிறுவனம் வரும் 2014 ஜனவரி 3ஆம் தேதி வெளியிட தீர்மானித்திருக்கிறது.

அதிமுக இணையதளத்தை பொழுதுபோக்குக்காக முடக்கிய சென்னை இளைஞர் கைது!

அதிமுக இணைய தளத்தை முடக்கிய சென்னை இளைஞர் கைது செய்யப்பட்டார்.இதை ‘விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் செய்தேன்’ என்று விசாரணையில் கூறியிருக்கிறார். இதையடுத்து ஈஸ்வரனை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


              


அதிமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.aiadmkallindia.org. கடந்த 1-ம் தேதி இந்த இணைய தளத்துக்குள் புகுந்த ஒருவர் அதை செயல்படவிடாமல் முடக்கி விட்டார். மேலும், இஸ்லாம் ஜிந்தாபாத், லாங் லிவ் முஸ்லிம்ஸ், பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற வாசகங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. பாகிஸ்தான் கொடியுடன் மனித மண்டை ஓட்டின் உருவமும் அதில் இருந்தன. நாங்கள் பாகிஸ்தான் ஹாக்கர்ஸ் க்ரூ. எங்களுக்கு நீதியும், அமைதியும் தேவை என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தனர்.

இதுகுறித்து அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். ஆணையரின் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் சாப்ட்வேர் நிபுணர்களின் உதவியுடன் நடந்த இந்த தீவிர விசாரணையில் பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜீனியராகப் பணியாற்றி வரும் சென்னையைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர்தான் இந்த வேலையைச் செய்ததாக தெரிய வந்தது.

இது குறித்து இவ்வழக்கை விசாரித்த காவல் துறை அதிகாரிஇடம் பேசிய போது,”அதிமுக இணைய தளத்துக்குள் நுழைந்தவர்களின் பட்டியலை சர்வர் மூலம் முதலில் சேகரித்தோம். அதில் ஒருவர் மட்டும் 300-க்கும் அதிகமான முறை அந்த இணைய தளத்துக்குள் நுழைந்து, அதிக நேரம் இணைப்பில் இருந்தது தெரிந்தது. அவரது முகவரியை சர்வர் மூலம் தேடியபோது, சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஈஸ்வரன் என்பது தெரிந்தது. உடனே சனிக்கிழமை இரவில் அவரை கைதுசெய்து அவரிடம் இருந்த மடிக்கணினியையும் பறிமுதல் செய்தோம்.

இது குறித்து அவரிடம் விசாரித்த போது, ‘விளையாட்டுக்காகவும், பொழுது போக்குக்காகவும் செய்தேன்’ என்று சாதாரணமாக கூறினார். ஈஸ்வரன் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 66-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்து விட்டோம்.

இந்த ஈஸ்வரன் 2011 ம் ஆண்டு கணினி பொறியியல் படிப்பை முடித்து, பெங்களூரில் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் இணைய தளத்துக்குள் நுழைந்து பிரச்சினைக்குரிய வாசகங்களை பதிவு செய்ததுதான் எங்களுக்கு புரியவில்லை. அவருக்கும், அவர் பதிவு செய்திருக்கும் வாசகங்களுக்கும் தொடர்பில்லாததுபோல உள்ளது.

எனவே அவர் மட்டும்தான் இந்த செயலை செய்தாரா அல்லது வேறு யாருடைய தூண்டுதலின் பேரில் இதை செய்தாரா என்பதை மேலும் விசாரிக்க வேண்டியுள்ளது. இதனால் ஈஸ்வரனை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்கிறோம்” என்றார்..

பேஸ்புக் லைக் வசதியில் மாற்றம்!

தற்போது இணையத்தளங்கள் மற்றும் வியாபார நிறுவனங்கள் தம்மை பிரபலப்படுத்திக்கொள்வதற்காக பேஸ்புக் தளத்தினை பயன்படுத்தி வருகின்றமை மறுக்க முடியாத ஒன்றாகும்.


இதற்காக பேஸ்புக் ஆனது லைக் பேஜ் வசதியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வசதியில் இதுவரை காலமும் காணப்பட்ட கைவிரல் அடையாளம் தற்போது நீக்கப்பட்டுள்ளது.


நாள்தோறும் சுமார் 22 பில்லியனிற்கும் மேற்பட்டவர்கள் இந்த கைவிரல் அடைய பொத்தானை கிளிக் செய்து வந்ததோடு, 7.5 மில்லியன் வரையான இணையத்தளங்களில் இவை இணைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


குழந்தைகளுக்கு டயப்பர் அணிவிப்பது எப்படி!

 குழந்தைகளுக்கு டயப்பர் அணிவிப்பது எப்படி

குழந்தைகளை எடுத்துக்கொண்டு பொதுநிகழ்ச்சிகளுக்கு செல்கிறவர்கள், பெரும்பாலும் குழந்தைகளுக்கு `டயப்பர்’ அணிவிக்கிறார்கள். எப்போதாவது அதை பயன்படுத்தினால், தொந்தரவு ஏற்படுவதில்லை. தொடர்ந்து அதனை பயன்படுத்தும்போது குழந்தைகளின் மென்மையான சருமத்தில் அலர்ஜி ஏற்படலாம்.

சருமத்திற்கு பாதிப்பு ஏற்படாத அளவிற்கு டயப்பர் அணிவிப்பது எப்படி? டயப்பர் கட்டுவதற்கு முன்பு, துணியை தண்ணீரில் நனைத்து குழந்தையின் உடலை துடைக்கவேண்டும். கால் பகுதிகள், முன் பகுதி, பின் பகுதி எல்லாம் துடையுங்கள். அடுத்து உலர்ந்த துணியால் ஈரப்பதத்தை துடைத்து சுத்தமாக்குங்கள்.

டயப்பர் கட்டும்போது பசைத்தன்மை கொண்ட பின்பாகம், தொப்புளின் சம அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். குறிப்பிட்ட நேரத்தில் டயப்பரை மாற்றவேண்டும். சிறுநீர், மலம் கழித்திருந்தால் அதிக நேரம் டயப்பரை மாற்றாமல் இருக்கக்கூடாது. சிலவகை டயப்பர்கள் குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.

அதை கட்டியிருக்கும் சருமப் பகுதியில் சிவப்பு திட்டுக்கள் போல் ஏற்பட்டால் அந்த பிராண்டை பயன்படுத்த வேண்டாம்.டயப்பர் இறுகக்கூடாது. இறுக்கமாக இருந்தால், குழந்தையை அது அவஸ்தைக்குள்ளாக்கும்.

கால், இடுப்பு பகுதியில் இறுக்கத்தால் ஏற்படும் பாதிப்பு தென்பட்டால் அதைவிட சற்று பெரிய அளவிலான டயப்பரை பயன்படுத்துங்கள்.சருமத்தில் சிவப்பு திட்டுகள் தென்பட்டால் `ஸிங்க் ஆக்சைடு’ கொண்ட ஆயில்மென்ட் பயன்படுத்தலாம்.

நாள் முழுக்க டயப்பர் பயன்படுத்தக்கூடாது. தினமும் சிறிது நேரமாவது சாதாரண ஆடையுடன் குழந்தையை வைத்திருங்கள். வெளியே குழந்தையை தூக்கி செல்லும்போது காட்டன் துணியை மடக்கி, குழந்தைக்காக பயன்படுத்துவது நல்லது.

குழந்தைகளுக்கான இயற்கை மருத்துவம்!

Natural medicine is growing in recent years. Statistics show that all disciplines of alternative medicine have grown and more people   prefer rather

சமீபத்திய ஆண்டுகளில் இயற்கை மருத்துவம் அதிகரித்து வருகிறது. புள்ளிவிவரத்தை ஆராய்ந்த போது மருந்துகளை விட இயற்கை மருத்துவத்தை  அதிகம் பயன்படுத்தியது தெளிவாகிறது.. அனைவருக்கும் உதவும் இயற்கை மருத்துவம் குழந்தைகளுக்கு மட்டும் விதிவிலக்கல்ல. பல பெற்றோர்கள்  குழந்தைகளுக்கு செய்யப்படும் இயற்கை சிகிச்சைகளை மேற்கொள்வதில்லை. பொதுவாக அனைத்து இயற்கை வைத்தியமும் நான்கு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் இயற்கை வைத்தியம்.

இருமல்

குழந்தையின் பிஞ்சு உடல்களை எளிதில் தாக்கும் இருமல். இருமல், சளி வந்ததும் அலையாத விருந்தாளியாக வந்து விடுவது மூச்சு பிரச்சனையும் இவை குழந்தைகளின் உடல்நலத்தை அடிக்கடி பாதிக்கும் பொதுவான நோய்தொற்றுகளில் ஒன்று.. குழந்தைகளை தாக்கும் இருமல் பிரச்சனையிலிருந்து  விடுபட ஒமவல்லி இலையை நன்கு கழுவி கொதிக்கும் சுடு தண்ணீரில் போட்டு ஒரு கப் வந்ததும் குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்கவும் குடிப்பதற்கு  முன்னர் ஒரு சில நிமிடங்கள் ஒய்வு எடுக்க செய்ய வேண்டும். இந்த மூலிகை தண்ணீர் குடித்து வந்தால் இருமல், சளி பிரச்சனை வராமல்  தடுக்கலாம்.

மேலும் இருமல் பிரச்சனைக்கு பெருந்துத்தி பூக்களைக்கொண்டு குளிர்பானம் தயாரித்து குழந்தைகளுக்கு தரலாம். குளிர்பானத்தை வடிகட்டி ஒரு சிறிய  துணியில் ஈரமாக்கி குழந்தையின்  தொண்டை, மூச்சு குழாய், நுரையீரல் போன்ற பகுதிகளில் தேய்க்க இருமல் குணமாகும்.

டயாபர் ஒவ்வாமை

டயாபர் அதிகம் உபயோகிப்பதனால் குழந்தைகளுக்கு அரிப்பு, அலர்ஜி போன்றவை ஏற்படுகிறது. இந்த அலர்ஜியை தடுக்க குழந்தைகளை குளிக்க  வைப்பதற்கு வைத்துள்ள தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று சொட்டு வெள்ளை வினிகர் கலந்து குழந்தைகளை குளிக்க வைக்கலாம்.

குறட்டையை விரட்டும் சிகிச்சை!

 குறட்டையை விரட்டும் சிகிச்சை

குறட்டை என்பது மற்றவர்களால் கேலி செய்யப்படும் விஷயம் அல்ல. அது ஒரு நோய். தூங்கும் போது மூச்சுப் பாதை சிறிதளவோ அல்லது முழுவதுமாகவோ அடைத்துக் கொள்வதால்தான் குறட்டை தோன்றுகிறது. உடல் எடை அதிகரித்தால், அதிக கொழுப்பு சேரும்.

அப்போது நுரையீரலால் தேவையான அளவுக்கு விரிவடைய இயலாது. அதனால் மூச்சை உள்ளே இழுப்பதிலும், வெளியேற்றுவதிலும் சிக்கல் ஏற்பட்டு குறட்டை என்னும் முரட்டுச் சத்தமாக வெளியேறும். குறட்டையால் அருகில் தூங்குபவர்களுக்கு மட்டும்தான் தொந்தரவு என்பதில்லை.

குறட்டைவிடுபவர்களுக்கு தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்படும். குறட்டையை கட்டுப்படுத்தாவிட்டால் இதய பாதிப்பு, ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற பல நோய்கள் ஏற்படக்கூடும். குறட்டையை கட்டுப்படுத்துவதற்கு குறட்டை விடுபவரை தூக்கத்தில் ஆழ்த்தி, ஆய்வு செய்யவேண்டும்.

அதன் மூலம் தூக்கத்தில் குறட்டை எந்த அளவுக்கு, எந்த நேரத்தில் வருகிறது என்பதை முழுமையாக ஆய்வு செய்யமுடியும். இதற்கென இருக்கும் சிறப்பு ஆய்வுக்கூடத்தில், சிறந்த பரிசோதனை கருவிகளோடு அதை செய்யவேண்டும்.

பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் சிகிச்சை நடக்கும். மேல் தாடை மற்றும் கீழ் தாடைகளை சரியான முறையில் பொருத்துவதன் மூலம் பெரும்பாலான குறட்டை பிரச்சினையை தீர்த்துவிட முடியும்.

குறட்டையை சரிசெய்வதற்காக தாடை, நாக்கு, கன்னப்பகுதிகள், அண்ணப்பகுதிகள் மற்றும் சுவாச பகுதியுடன் இணைத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும். குறட்டை இல்லாத நிம்மதியான தூக்கம்தான் ஆரோக்கியமானது.

குழந்தைக்கு கபவாத காய்ச்சலா இயற்கை மருந்து இருக்கு!

 Curankal child in the harsh curamakum kapavata. It will be higher. Severe breathing and pulse are tensions. In the binary is often dry.

குழந்தைக்கு வரும் சுரங்களில் கடுமையானது கபவாத காய்ச்சல். காய்ச்சல் அதிகமாக இருக்கும். சுவாசம் தீவிரமாகவும், நாடி படபடத்துமிருக்கும். அடிக்கடி வறட்சியான இருமலிருக்கும். கோழையும் வெளிப்படும். இருமும் போதே சில சமயம் இழுப்பும் காணும். ஆரம்பத்திலிருந்தே சிகிச்சை செய்து கவனிக்க வேண்யது. இதற்கு வீட்டிலே இயற்கை மருந்து தயாரிக்கலாம்

என்னென்ன தேவை?


நிலவேம்பு – 15 கிராம்

சீந்தில் தண்டு – 15 கிராம்

சிற்றரத்தை – 15 கிராம்

திப்பிலி – 15 கிராம்

கடுக்காய் – 15 கிராம்

கண்டங்கத்திரி வேர் – 15 கிராம்

பூனைக்காஞ்சொறி – 15 கிராம்

கடுகு ரோகிணி – 15 கிராம்

பற்பாடகம் - 15 கிராம்

கிச்சிலிக் கிழங்கு – 15 கிராம்

கோஷ்டம் – 15 கிராம்

தேவதாரு – 15 கிராம்

சுக்கு – 15 கிராம்

கண்டுபரங்கி – 15 கிராம்

இவற்றை எல்லாம் பொடி செய்து சுத்த நீரில் போட்டு கால் லிட்டராகும் வரை சுண்டைக் காய்ச்சிய கசாயத்தில் வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் கொடுக்க குணமாகும். தினசரி 3 வேளை இதை கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் காய்ச்சல் எளிதில் குணமாகும்.

முதுகு வலியை போக்கும் பயிற்சி!

முதுகு வலியை போக்கும் பயிற்சி


 சிலவகை உடற்பயிற்சிகள் விரைவில் பலன் தரக்கூடியவை. அந்த வகையில் இந்த பிலேட்ஸ் பயிற்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த பயிற்சி செய்ய ஆரம்பத்தில் சற்று கடினமாக இருக்கும். ஆனால் செய்ய செய்ய விரைவில் நல்ல பலன் தரக்கூடியது.

இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் கால்களை நீட்டி மல்லாந்து படுத்துக் கொள்ளவும். பின்னர் இயல்பாக சுவாசத்தில் மெதுவாக கால்களை பாதி வரை மேலே தூக்கவும். அப்போது தலை, உடலை தோள்பட்டை வரை மெதுவாக தூக்கவும்.

கைகளை சற்று மேலே படத்தில் உள்ளபடி தூக்க வேண்டும். இந்த நிலையில் 15 விநாடிகள் இருந்தபின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு இந்த பயிற்சியை 20 முறை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய்து சற்று கடினமாக இருக்கும்.

அதனால் 10 முறை செய்தால் போதுமானது. பின்னர் நன்கு பழகிய பின்னர் 20 முறையும் அதற்கு மேலும் செய்யலாம். இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் முதுகு வலி பிரச்சனைகள் தீரும். மேலும் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் தொப்பை மற்றும் தொடையில் உள்ள அதிகப்படியான சதை குறையும்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top