.......................................................................... ....................................................................... ......................................................................

Monday 11 November 2013

பழமொழிகள் பல நம் புழக்கத்திலிருந்து மறைந்து விட்டன, அவற்றை நினைவுக்கூர்வோம்.!

பழமொழிகள்

பழமொழி = பழமை+மொழி. பழமையான மொழி, நம் பண்டைய மக்கள் ஒரு பொருளை சுருக்கமாகவும், தெளிவாகவும், புறிதலுமாய் விளங்க பழமொழிகளை பேசி பயன்படுத்தி வந்தனர். பழமொழிகள் நம் மக்களின் அறிவுக்கூர்மையை வெளிப்படுத்துகிறது. பழமொழிகள் "ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவ குறிப்புகள்" என்று கூறுகின்றனர். இவை "நாட்டுப்புறவியலின்" ஒரு கூறாகவும் அமைகின்றன.

நாட்டுப்புறவியல் என்பது நாட்டுப்புற மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடு, நம்பிக்கைகள், இலக்கியங்கள், கதைகள், பழமொழிகள், வாய்மொழி வரலாறு, விடுகதைகள், வாய்மொழி பாடல்கள் போன்றவற்றை சேகரித்து, வகைப்படுத்தி, தொகுத்து, ஆராய்ந்து அவற்றை ஆவணப்படுத்தும் துறையாகும். இத்தகைய வழக்குகள் பற்றி நாட்டுப்புறவியல் அறிவியல் முறைப்படி ஆய்வு செய்கின்றது. 1846 ஆம் ஆண்டிலேயே நாட்டுப்புறவியல் பற்றித் தற்காலக் கருத்தமைவில் முறையான ஆய்வுகள் தொடங்கின. வில்லியம் ஜான் தாமஸ் என்பவரே இத்துறையில் முன்னோடியாவார்.

பழமொழிகளை  நினைவுக்கூர்வோம்:

* அறுக்க மாட்டாதவன் கையில் ஐம்பத்தெட்டு அறிவாள்.
* அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்.
* அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
* அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்.
* அப்பன் எவ்வழியோ பிள்ளை அவ்வழி.
* அடியாத மாடு படியாது.
* அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
* அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
* அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
* அவனே! அவனே! என்பதைவிடச் சிவனே! சிவனே! என்பது மேல்.
* அற்பனுக்கு வாழ்க்கை வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.


* ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
* ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
* ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
* ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
* ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
* ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
* ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
* ஆழம் தெரியாமல் காலை விடாதே.
* ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணா இரு.
* ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
* ஆசை காட்டி மோசம் செய்தல்.
* ஆக்கப் பொறுத்தது ஆறப் பொறுக்கவில்லை.
* ஆடு பகை குட்டி உறவு.
* ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை.

* ஆனைக்கும் அடிசறுக்கும்.
* ஆகாத பொண்டாட்டி கால் பாட்டாலும் குத்தம் கைப்பட்டாலும் குத்தம்.

* இக்கரைக்கு அக்கரை பச்சை.
* இருக்க இடம் கொடுத்தால் படுக்கப் பாய் கேட்பான்.
* இருதலைக் கொள்ளியின் ஓர் உயிர் போல.
* இரக்கமற்றவன் இதயம் இரும்பினும் கொடியது.
* இளமையில் கல்.
* இளங்கன்று பயமறியாது.
* இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து.
* இளமையில் கல். முதுமையில் காக்கும்.
* இன்பத்திற்குத் தேன்; அன்புக்கு மனைவி.
* இரவல் சேலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்.
* இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
* இதயம் ஏற்கிறது; தலை மறுக்கிறது.
* இன்று செய்யும் நன்மை நாளைய இன்பம்.
* இரவில் குறைந்த உணவு நீண்ட வாழ்வு.
* இருட்டுக்குடி வாழ்க்கை திருட்டுக்கு அடையாளம்.
* இறங்கு பொழுதில் மருந்து குடி.
* இந்த உலகில் மூன்று நண்பர்கள் துணிவு, புத்தி, நுண்ணறிவு.
* இறந்த சிங்கத்தைவிட உயிருள்ள சுண்டெலி மேல்.
* இன்று இலை அறுத்தவன் நாளை குலை அறுக்க மாட்டானா?
* இளமையில் நல்லறிவு முதுமையில் ஞானம்.
* இதயம் இருக்கும் இடம்தான் உன் வீடு.
* இன்பம் சிறகடித்துப் பறக்கும் பறவை.
* இலக்கியம் இல்லாத வாழ்வு சாவு.
* இன்பம் - துன்பம் மாறி மாறி வரும்.
* இளமையில் தெரியாது; முதுமையில் நினைவிருக்காது.
* இரவும் பகலும் யாருக்கும் காத்திராது.

* ஈகைக்கு எல்லை எதுவமே இல்லை.
* ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
* ஈயான் தோட்ட வாழ இரண்டு குலை தள்ளும்.
* ஈட்டி எட்டிய வரையில் பாயும்.
* ஈகைக்கும் வெகுளித்தனம் உண்டு.


* உதைப்பானுக்கு வெளுப்பான் சலவைக்காரன்.
* உழுத நிலத்தில் பயிரிடு.
* உடனடி சிகிச்சையே நோய்க்கு மருந்து.
* உண்டு சுவை கண்டவன் ஊரைவிட்டப் போகமாட்டான்.
* உணவுக்கு நெருக்கம், நட்புக்குத் தூரம்.
* உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு.
* உப்பைத் தின்னவன் தண்ணீர் குடித்தாக வேண்டும்.
* உழுகிறவர்கள் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது.
* உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
* உப்பு அறியாதவன் துப்புக்கெட்டவன்.
* உனக்குத் தெரியாத தேவதையைவிட தெரிந்தபிசாசே மேல்.

* உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.

* உழைப்பால் விலகும் தீமைகள் மூன்று - துன்பம், தீயொழுக்கம், வறுமை.
* உழைத்து உண்பதே உணவு.
* உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
* உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
* உப்பிட்டவரை உள்ளவும் நினை.
* உனக்குக் கொஞ்சம், எனக்கு கொஞ்சம், இதுதான் நட்பு.

* ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும்.
* ஊசியைப் பார்த்து சல்லடை சொல்கிறது; உன்னுடைய வாயில் ஒரு                  ஓட்டை இருக்கிறது.
* ஊதுகிற சங்கை ஊதினாலும் விடிகிறபோதுதான் விடியும்.
* ஊத அறிந்தான் வாதி, உப்பு அறிந்தான் யோகி.
* ஊமை ஊரைக் கெடுக்கும்; பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.
* ஊரில் கல்யாணம்; மார்பில் சந்தனம்.
* ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.

* எரியும் கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
* எண்ணெய் குடித்த நாயை விட்டுவிட்டு, எதிர்க்க வந்த நாயை அடிச்சானாம்.
* எண்ணி எண்ணிச் சுட்டவனுக்கு ஒன்றுமில்லை. எட்டி எட்டிப் பார்த்தவனுகு எட்டுப் பணியாரம்.
* எல்லாப் புண்களுக்கும் காலம்தான் களிம்பு.
* எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
* எட்டுத் திப்பிலி, ஈரைந்து சீரகம், சுட்டுத் தேனில் கலந்து கொடுக்க விட்டுப் போகுமே விக்கல்.
* எந்த விரலைக் கடித்தாலும் வலி இருக்கும்.
* எறும்புக்கு பனித் துளியே வெள்ளம்.
* எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் புத்திசாலியின் பார்வை இலக்கை நோக்கியே இருக்கும்.
* எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள்; ஆனால், அன்போடு பரிமாறுங்கள்.
* எளிதில் நம்புகிறவன் எளிதில் ஏமாற்றப்படுவான்.
* எலி வேட்டைக்குத் தவில் வேண்டுமா?
* எண்ணம்போல் வாழ்வு.
* எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
* எறும்பூரக் கல்லும் தேயும்.
* எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?

* ஏழையின் பேச்சு அம்பலம் ஏறாது.
* ஏணியைச் செங்குத்தாக வைப்பவன் எளிதில் பின்பக்கம் விழுவான்.

* ஏழைக்கு ஒரு வியாதி; பணக்காரனுக்கு நூறு.
* ஏகாந்தம் என்பது இறைவனுக்கே பொருந்தும்.
* ஏழைக்கு ஒருபோதும் வாக்குக் கொடுக்காதே; பணக்காரனுக்கு ஒருபோதும் கடன் படாதே!
* ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது.

* ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி.
* ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

* ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்
* ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில் நுழைந்தானாம்.
* ஒரு மிளகு ஒரு வண்டி வாழ்த்துக்குச் சமம்.
* ஒரு கையால் இறைத்து இரு கைகளால் வார வேண்டும்.
* ஒட்டகத்தின் மேல் உள்ளவனுக்கு முதுகு கூன் இல்லை.
* ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
* ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
* ஒரு கை தட்டினால் ஓசை எழாது.
* ஒழுக்கம் விழுப்பம் தரும்.
* ஒவ்வொரு நாளையும் உனது சிறந்த நாளாய் எண்ணு.
* ஓரே குஞ்சு உள்ள கோழி ஓயாமல் கொக்கரிக்கும்.
* ஒத்தடம் அரை வைத்தியம்.
* ஒரு சொல் கோபத்தைக் கிளறுகிறது அல்லது அன்பைக் கிளறுகிறது.
* ஒருவர் பொறுமை இருவர் நட்பு.
* ஒரே குட்டையில் ஊறிய மட்டைபோல.

*  ஓட்டச் சட்டியினாலும் கொழுக்கட்டை வெந்தா சரி.
* ஓநாயிடம் அன்பு செலுத்தாதே! அது ஆட்டிற்குச் செய்யும் கேடு.
* ஓடைகளை நிரப்புவது மழைதான். பனித்துளிகள் அல்ல.
* ஓடிப் பழகிய கால் நிற்காது.
* ஓநாயுடன் நீ வசித்தால் ஊளையிடத்தான் வேண்டும்.


* கண்ணுக்கு இமை பகையா?
* கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.
* கண்டதே காட்சி, கொண்டதே கோலம்.
* கனமழை பெய்தாலும் கருங்கல் கரையுமா?
* கவலைகள் குறைந்தால் கனவுகள் குறையும்.கனவுகள் குறைந்தால் பேச்சுக்கள் குறையும்.பேச்சுக்கள் குறைந்தால் குற்றங்கள் குறையும்.
* கடவுளுக்கு பயந்து வாழ்க்கை நடத்து.
* கடுக்காய் நூறு தாய்க்குச் சமம்.
* கடுங்காற்று மழைக்கூட்டும்.கடுஞ்சிநேகம் பகை கூட்டும்.
* கண்ணீரை விட விரைவில் காய்வது எதுவும் இல்லை.
* கல்யாணம் பண்ணிப் பார். வீட்டைக் கட்டிப்பார்.
* கசிந்து வந்தவன் கண்ணைத் துடை.
* கஞ்சி கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம்.
* கஞ்சித் தண்ணிக்குக் காற்றாய்ப் பறக்கிறான்.
* கஞ்சன் ஒற்றைக் கண்ணன்; பேராசைக்காரன் குருடன்.
* கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்.
* கஞ்சி வார்க்க ஆள் இல்லை என்றாலும் கச்சை கட்ட ஆள் இருக்கிறது.
* கரி விற்ற பணம் கருப்பாய் இருக்குமா?
* கல்வி விரும்பு.
* கலைகளுக்கெல்லாம் அடிப்படை கலப்பை.
* கனவில் குடிக்கும் பாலை தகரக் குவளையில் குடித்தால் என்ன தங்கக்கோப்பையில் குடித்தாலென்ன?
* கணக்கு எழுதாதன் நிலைமை.கழுதை புரண்ட இடம் மாதிரி.
* கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
* கடன் இல்லாச் சோறு கவளமாயினும் போதும்.
* கடலில் கரைத்த பெருங்காயம் போல.
* கடல் தாண்ட மனமுண்டு; கால்வாயைத் தாண்ட மனமில்லை.
* கடல் திடலாகும்; திடல் கடலாகும்.
* கடல் நீர் இருந்தென்ன? காஞ்சிரை பழுத்தென்ன?
* கடல் மீனுக்கு நீந்தவா கற்றுத்தர வேண்டும்.
* கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணமாகியும் பிரம்மச்சாரி.
* கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்.
* கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
* கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
* கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
* கழுதை அறியுமா கற்பூர வாசனை?


* காலம் போகும் வார்த்தை நிற்கும்.
* கால் அடிப்பட்ட நாயும், காது அறுந்த செருப்பும் கவைக்கு உதவாது.
* கால் இல்லாதவன் கடலைத் தாண்டுவானா?
* கார்த்திகை கன மழை.
* கார்த்திகை நண்டுக்கு கரண்டி நெய்.
* கார்த்திகை கண்டு களம் இடு.
* கார்த்திகைப் பிறையைக் கண்டவுடன் கைப்பிடி நாற்றைப் போட்டுக் கரை ஏறு.
* காணிச் சோம்பல் கோடி நட்டம்.
* காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல.
* காற்றுக்குச் சாய்கிற நாணல் தான் காலத்துக்கும் நிலைக்கும்.
* காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு.
* காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
* காலிப் பெட்டிகளைப் பூட்ட வேண்டியதில்லை.
* காலைச் சுற்றிய பாம்பு கடியாமல் விடாது.
* காலடி வைக்கும்போதே நீரானால் கடலைத் தாண்டுவது எப்படி?
* காரியம் ஆகுமட்டும் காலைப்பிடி.
* கார்த்திகை கார் கடை விலை; தை சம்பா தலை விலை.
* கார்த்திகைப் பனியைப் பாராதே. கட்டி ஓட்டடா ஏர் மாட்டை.
* கார்த்திகை அகத்தி காம்பெல்லாம் நெய் வழியும்.

* காகம் திட்டி மாடு சாகாது.
* காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
* காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.

கிராமப்புறங்களில் பேச்சு வழக்கில் உள்ள பழமொழிகள்:

* பருவத்தே பயிர் செய்தல் வேண்டும்.
* விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு.
* மாமியார் உடைத்தால் மண்சட்டி; மருமகள் உடைத்தால் பொன்சட்டி.
* நல்ல மாடு உள்ளுரில் விலைபோகும்.
* பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாண்டானாம்.
* நித்தம் நித்தம் வந்தால் நெய்யும் புளிக்கும் பலநாளும் வந்தால் பாலும்  புளிக்கும்.
* கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
* குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
* குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவது போல்.
* குரைக்கிற நாய் கடிக்காது.
* கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
* கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.
* கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
* கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
* சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
* சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.
* சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
* தடியெடுத்தவன் தண்டக்காரன்.
* தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.
* தன் வினை தன்னைச் சுடும்.
* தனிமரம் தோப்பாகாது.
* தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.
* தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
* தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.
* நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
* நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.
* நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
* நிறைகுடம் தளும்பாது.
* பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
* பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
* பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
* பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
* பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
* பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
* புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.
* புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.
* பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.
* பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
* போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
* மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
* மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
* முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.
* முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
* மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
* யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
* யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
* விரலுக்குத் தக்கதே வீக்கம்.
* விளையும் பயிரை முளையிலே தெரியும்.
* வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
* வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
* வெளுத்ததெல்லாம் பாலல்ல.
* பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
* பூவிற்றகாசு மணக்குமா?
* பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.
* பேராசை பெருநட்டம்.
* பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது
* வேலிக்கு ஓணான் சாட்சி.
* ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.
* கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.
* சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில்விழுவது மேல்.
* தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.
* சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?
* பொருள் ஒரு பக்கம் போக பொல்லாப்பு ஒரு பக்கம் வரும்.
* பெட்டியிலே பூட்டினாலும் போட்ட விதி தப்பாது.
* தாயாக இருந்தாலும் பிள்ளையாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு.

உவமையாக வரும் பழமொழிகள் 



*  கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட முடவன் போல.
* பார்த்தால் பசுப்போல், பாய்ந்தால் புலிபோல்.
* எருமை மாட்டில் மழை பெய்தது போல.
* தேன் எடுப்பவன் வீரல் சூப்புவது போல.
* குப்பைமேடு கோபுரமானது போல.
* குறைகுடம் கூத்தாடுவது போல."


இவை போன்று வரும் பழமொழிகள் உறவுகள் பற்றியும், உறவுகளால் வரும் துன்பங்கள் பற்றியும் கூறுவதாக அமைந்துள்ளன:


* நாற்றில் வளையாதது மரத்தில் வளையாது.
* நம்பினவனை நட்டாத்தில் விடுதல்.
* சாமிவரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டான்.
* தன் முதுகு தனக்குத் தெரியாது.
* எலி வளையானாலும் தனிவளை வேண்டும்.
* வல்லவனையும் வழுக்கும் வழுக்குப் பாறை.
* குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சாப் போச்சு.
* கோடி கோடியா வாழ்ந்தாலும் இறுதியில் ஒரு கோடிதான் மிச்சம்.
* குவளையைக் கழுவினாலும் கவலையைக் கழுவ முடியாது.
* கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி.
* மடியில கனம் இருந்தால் தான் விழியல பயம்.
* சிறு துரும்பும் பல்குத்த உதவும்.
* வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுதல்.
* பணம் பாதாளம் வரையும் பாயும்.
* பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
* பேராசை பெரும் நட்டம்.
* முழு பூசணிக்காயை சோத்துல மறைத்தல்.
* தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு.
* கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம்.
* தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்.
* தன் வினை தன்னைச் சுடும்.

* குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான்.
* காஞ்சிபுரம் போனால் காலாட்டி சாப்பிடலாம்.
* விலை மோரில் வெண்ணெய் எடுப்பவன்.
* முடி சான்ற மன்னரும் முடிவில் பிடி சாம்பலாவர்.
* குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.
* தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை.
* தந்தை சொல்மிக்க மந்திரமில்லை.
* வரவு எட்டணா செலவு பத்தணா.
* கிட்டாதாயின் வெட்டென மற.
* சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் மட்டு.


             மேலே கண்ட பழமொழிகள் பல நம் புழக்கத்திலிருந்து மறைந்து விட்டன, அவற்றை நினைவுக்கூர்வோம்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top