விவசாயத்தில் குறிப்பிட்ட வகை பயிர்களுக்கு தீங்கு செய்யும் பூச்சிகளின் மரபணுவைத் தூண்டியோ, கட்டுப்படுத்தியோ, சில நுண்ணிய மாற்றங்களைச் செய்தோ அவை பயிர்களுக்கு தீங்கு செய்யாதபடி மாற்றலாம். அது கடினமாக இருக்கும்பட்சத்தில் பயிரின் மரபணுவில் மாற்றம் செய்து அக்குறிப்பிட்ட வகை பூச்சி தன்னிடம் வராமல் செய்யலாம்.

 

கேயாஸ் கோட்பாடு கேள்விப்பட்டி ருப்போம். ஏறத்தாழ அப்படியான ஓர் கோட்பாட்டை உருவாக்கியிருக்கிறார் இளம் ஆராய்ச்சியாளரும் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை முனைவருமான வடிவழகன். வண்ணத்துப் பூச்சிகளின் மரபணுக்கள் தொடர்பாக இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற ஆச்சர்ய விடைகள் நமது விவசாயத் துறையை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்லும் என்கின்ற நம்பிக்கையை விதைத்துள்ளது. 



"எங்கள் கல்லூரியின் விலங்கியல் துறைப் பேராசிரியர் குணசேகரனின் வழிகாட்டுதலில் உருவான ஆய்வு இது. உயிரினங்களும் தாவரங்களும் நெருங்கியத் தொடர்புடையவை. அந்தத் தொடர்பே பல்லுயிர் சமநிலையை உறுதிப்படுத்துகின்றன. உலகம் முழுவதும் 2 லட்சம் வண்ணத்துப்பூச்சி இனங்கள் இருக்கின்றன. அவற்றில் 1,439 இனங்கள் இந்தியாவில் இருக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்குறுத்தி தேசிய பூங்காவில் இருக்கும் வண்ணத்துப் பூச்சிகளை ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டேன். குறிப்பிட்ட சில வகை வண்ணத்துப்பூச்சிகள் எதிரிகளிடம் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள தங்கள் இறகுகளின் நிறத்தை விதவிதமாக மாற்றியும், வினோதமாக மடித்தும், இயல்பாக பறக்காமல் வினோதமாக நடித்தும் எதிரிகளை குழப்பமடைய செய்கின்றன. வண்ணத்துப் பூச்சிகளின் சிறப்பு மரபணு பண்பால் விளைந்த விலங்கியல் உண்மை இது. 



ஆனால், ‘நிம்பாலிடே' (Nymphalide) குடும்பத்தைச் சேர்ந்த ‘டெனாய்னே’ (Danainae) துணை குடும்பத்து வண்ணத்துப் பூச்சிகளுக்கு மேற்கண்ட யுக்தி தேவைப்படுவதில்லை. மாறாக, எதிரிகள் இவைகளைக் கண்டால் விலகி ஓடிவிடுகின்றன. இதற்கான விடையை தேடியபோது இவ்வகை வண்ணத்துப் பூச்சிகள் குறிப்பிட்ட வகைத் தாவரங்களின் பூக்களை (Calotropis gigantea, Chromolaena odorata, Crotalaria retusa) மட்டுமே மகரந்தச் சேர்க்கை செய்வது தெரிந்தது. அது ஏன் என்று ஆய்வு செய்ததில் அவ்வண்ணத்துப் பூச்சிகள் தங்களது லார்வா எனும் புழுப் பருவத்தில் மேற்கண்ட தாவரங்களை மட்டுமே உணவாக எடுத்துக்கொண்டது தெரியவந்தது. 



இதில் ஆச்சர்யம் என்னவெனில் அத்தாவரங்களில் இருந்த விஷத்தையே அந்தப் புழுக்கள் உணவாக எடுத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், அந்த விஷம் புழுக்களை ஒன்றும் செய்யவில்லை. விஷத்தை உட்கொள்ளும் புழுக்கள் எப்படி உயிரோடு இருக்கின்றன என்கிற கேள்விக்கான விடைக்காக புழுவின் மரபணு மற்றும் தாவரத்தின் மூலக்கூறுகளை உயிரியல் தொழில்நுட்பம் மற்றும் உயிர்த் தகவியல் ஆய்வுக்கு உட்படுத்தினேன். அப்போதுதான் அப்புழுவிடம் விஷத்தை முறியடிக்கச் செய்யும் அல்லது விஷத்தை ஏற்றுக்கொள்ளும் விஷ எதிர்ப்பு மரபணுக்கள் (Taxin resistance gene) இருப்பது தெரியவந்தது. 



மேலும் அக்குறிப்பிட்ட தாவரத்தின் மரபணுவும் புழுவின் மரபணுவும் ஒன்றுக்கொன்று நெருங்கியத் தொடர்பையும் ஒற்றுமைகளையும் கொண்டிருந்தன. ‘டெனாய்னே’ வகை வண்ணத்துப் பூச்சிகள் மட்டும் அல்ல... Tirumala limniace, Danaus genutia, Euploea core, Danaus chrysippus வகை வண்ணத்துப் பூச்சிகளும் இதே பாணியைப் பின்பற்றுகின்றன. 



சரி, இந்த ஆராய்ச்சியின் பலன் என்ன? இதன் மூலம் விவசாயத்தில் குறிப்பிட்ட வகை பயிர்களுக்கு தீங்கு செய்யும் பூச்சிகளின் மரபணுவைத் தூண்டியோ, கட்டுப்படுத்தியோ, சில நுண்ணிய மாற்றங்களைச் செய்தோ அவை பயிர்களுக்கு தீங்கு செய்யாதபடி மாற்றலாம். அது கடினமாக இருக்கும்பட்சத்தில் பயிரின் மரபணுவில் மாற்றம் செய்து அக்குறிப்பிட்ட வகை பூச்சி தன்னிடம் வராமல் செய்யலாம். அப்படியே வந்தாலும் தாக்குதலை முறியடிக்கவோ அல்லது தற்காத்துக் கொள்ளவோ செய்யலாம்.
இன்னும் எளிமையாக புரிய வேண்டுமெனில், ‘ஏழாம் அறிவு’ படத்தின் கான்செப்ட் போலத்தான் இது. ஒவ்வொரு உயிரினத்துக்குள்ளேயும் பல்வேறு தலைமுறைகளுக்கு முன்பு இருந்த மரபணு செயல்பாடற்ற நிலையில் உறங்கிக்கிடக்கும். அதை சில தூண்டல்கள் மூலம் மாற்றங்கள் செய்வதும் உயிர்ப்பிப்பதும்தான் இந்த தொழில்நுட்பம். ஒரு பூச்சி ஏன் குறிப்பிட்ட வகை பயிரை மட்டும் தாக்குகிறது என்று மரபணு ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்து, மரபணு மாற்றத்தின் மூலம் அதைத் தடுக்கிறோம். 



இந்த ஆராய்ச்சியும் கிடைத்த விடைகளும் ஆரம்பக் கட்டம் மட்டுமே. அதில் பல்வேறு குழப்பங்கள், கேள்விகள் இருக்கின்றன. இதில் படிப்படியாக நூல் பிடித்து மேலும் மேலும் கேள்விகளுக்கு விடைதேடி ஆய்வுகளை விரிவுப்படுத்தும்போது உலகம் வியக்கும் உயிரியல் உண்மைகள் புலப்படும். விவசாயத் துறையில் மட்டுமின்றி வனங்களின் வளர்ச்சிக்கும் இதே தொழில்நுட்பம் உபயோகமாக இருக்கும்" என்றார்.