.......................................................................... ....................................................................... ......................................................................

Monday 9 December 2013

மனைவிக்கு முக்கியமாக தெரிய வேண்டியது!


கணவனுடைய சுபாவங்கள், அவனுடைய ஆசைகள், விருப்பங்கள் ஆகியவை குறித்து மனைவிக்கு திட்டமான கருத்து இருக்க வேண்டும். உணவு வகைகளில் மட்டுமல்ல எந்த விஷயத்திலுமே கணவனுக்கு எது பிடிக்கும். அவனுடைய ஆழ்ந்த விருப்பம் என்ன? எதைச் செய்தால் அவன் மகிழ்ச்சி அடைவான். என்றெல்லாம் தெரிந்து வைத்திருப்பது போதாது. அவனுக்கு எது பிடிக்காது, எந்த மாதிரி விஷயங்களை வெறுக்கிறான், எதைச் செய்யும் போது அவனுடைய மகிழ்ச்சி குறைகிறது என்ற விஷயந்தான் ஒரு மனைவி முக்கியமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


கணவன் தவறு செய்தால்...


சில விஷயங்களை ஜீரணிக்க வேண்டும். சில விஷயங்களை அலட்சியப்படுத்த வேண்டும். பெற்ற பிள்ளையோ, கணவனோ தவறு செய்து விட்டால் அதை ஜீரணித்து அவர்களை திருத்த வேண்டும். அடுத்தவர்கள் உங்களைப்பற்றி அவதூறு பேசினால் அலட்சியப்படுத்துங்கள். கத்தரிக்காயை ஜீரணியுங்கள் அதன் காம்பை அலட்சியப்படுத்துங்கள்.


குற்றங்குறைகள் இருந்தால்...


உண்மையாக இருந்தாலும், பிறர் உள்ளம் வருந்துமாறு எதையும் சொல்லாதீர்கள். ஒரு முடவனைப் பார்த்து நீ ஏன் முடவன் ஆனாய் என்று கேட்காதீர்கள். எவரும் தம் குற்றங்குறைகளை மற்றவர்கள் சுட்டிக் காட்டுவதை விரும்புவதில்லை. உடற்பயிற்சி செய்யும் போது இதயம் நிதானமாய் துடிக்கிறது. இதனால் உடம்பின் எல்லா பாகங்களுக்கும் அதிக இரத்தம் கிடைக்கிறது. அதிக அளவு பிராணவாயு கிடைக்கிறது. ஞாபக சக்தி அதிகரிக்கும். சுறுசுறுப்பு ஏற்படும். உங்கள் குழந்தைகளை உடற்பயிற்சியை தினசரி செய்ய பழக்குங்கள். சிறுமிகள் கீழ்கண்டவற்றை செய்யலாம்.


தசைகள் இயக்கும் பயிற்சி...


சம தரையில் கைகளை பின்னால் நீட்டி மல்லாந்து படுத்துக் கொள்ளவும். பின்பு தலையையும், கைகளையும் உயர்த்தி, உட்காரும் நிலைக்கு வந்து கால் விரல்களை கை விரல்களால் தொட வேண்டும். இவ்வாறு 5 தடவை செய்யலாம்.


தோள் பயிற்சி...


கால்களை அகல வைத்தபடி கைகளால் கால்களுக்கு இடையில் தரையைத் தொட வேண்டும். இடது கை கீழே இருக்கும் போது வலது கையையும் உயர்த்தி பயிற்சியை செய்ய வேண்டும்.


மார்பகப் பயிற்சி...


மல்லாந்து படுத்துக் கொண்டு இரண்டு கைகளையும் உயர்த்தி மார்புக்கு நேராக கொண்டுவர வேண்டும். பின்பு கைகளை தாழ்த்தும்போது உள்மூச்சு வாங்க வேண்டும். கைகளை பழையபடி மார்புக்கு மேலே வருமளவும் மூச்சிவிடக் கூடாது. நான்கு தடவைகள் செய்யவும் மார்பகம் நன்றாக வளர்ச்சி பெறும்.


கால்கள் மெல்லியதாக இருக்க பயிற்சி...


ஒரு வாசற்படியின் மேலே ஏறி ஏறி இறங்க வேண்டும். ஒரு காலை மேலே வைத்து இன்னொரு காலை கீழே வைத்து மாறி மாறி ஏறி இறங்க வேண்டும். சைக்கிள் கூட விடலாம்.


இருதயநோய் ஆபத்தை தடுக்க...


ஒரு நாளைக்கு 30 முதல் 60 நிமிடங்கள் வரை சாதாரணமாக நடந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் இருதய நோய், மற்றும் புற்று நோய் அபாயத்தை தடுக்கலாம் என அமெரிக்க ஆராய்ச்சி நிலையத்தில் கண்டு பிடித்துள்ளார்கள். நடை பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் பயன் படுகிறது.


உடலழகையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க...


உடலழகையும், ஆரோக்கியத்தையும் பாதுகாப்பது மிக எளிது. இதற்காக பத்து நிமிடம் ஒதுக்கினால் போதும். அன்றாட வேலைகளில் ஒன்றாக உடற் பயிற்சியை கருதினால் நாம் வாழ்வில் வளமாக வாழலாம். நோய்கள் நிச்சயம் நம்மை நெருங்காது.


தோள்கள் வலிமை பெற...


கைகளை மாற்றி, மாற்றி மேலே உயரத் தூக்கி பயிற்சி செய்ய வேண்டும். இப்பயிற்சி செய்தாள் தோள்கள் வலிமை பெறும்.


வயிற்றுப் பகுதியில் உள்ள சதைகள் மறைய...


மல்லாந்து படுத்துக் கொண்டு வலது காலையும் இடது காலையும் மாற்றி மாற்றி மேலே உயர்த்தி இறக்கி பயிற்சி செய்ய வேண்டும். சைக்கிள் ஓட்டுவது போலவும் கால்களை இயக்கலாம். இப்படிச் செய்வதால் வயிற்றுப் பகுதியில் உள்ள சதைகள் குறைந்து அழகிய தோற்றம் ஏற்படும்.


கழுத்து வலிமை பெற...


தலைப்பகுதியை மட்டும் பக்கவாட்டில் அசைக்க வேண்டும். இப்படிச் செய்தால் கழுத்துப்புறம் வலிமை பெறும்.

இதுக்கு கொடுக்கலாம் மானியம்!



நான் சமீபத்தில், சி.எப்.எல்., பல்பு வாங்க, கடைக்குச் சென்றேன். 5 வாட்ஸ் பல்பு விலை கேட்டேன், ரூபாய் 110 என்று சொன்னார் கடைக்காரர். தூக்கி வாரிப் போட்டது. மேலும், 15 வாட்ஸ் பல்ப்பின் விலை ரூபாய் 175; 20 வாட்ஸ், ரூபய் 225; 30 வாட்ஸ், ரூபாய் 370; 40 வாட்ஸ், ரூபாய் 450 என்று, கடைக்காரர் கூறியதும் தலைசுற்றி விட்டது.


மின்சாரத்தை மிச்சப்படுத்த சி.எப்.எல்., விளக்கை பயன்படுத்த அரசு சொல்கிறது. ஆனால், அதன் விலை, ஏழை மக்கள் வாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அரசு, சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்க மானியம் கொடுக்கிறது. இது ஏழை மக்களை சென்றடைய பல காலம் ஆகும். ஆகவே, சி.எப்.எல்., தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கி, மலிவு விலையில், மக்களுக்கு கிடைக்குமாறு அரசு செய்தால், மக்கள் குண்டு பல்பை விட்டு, சி.எப்.எல்., பல்புக்கு மாறுவர்.


ஆந்திராவில், அரசே வீட்டுக்கு வீடு குண்டு பல்பை கழட்டி விட்டு, சி.எப்.எல்., பல்பை, இலவசமாக போட்டுச் கொடுக்கின்றனர். தமிழ்நாட்டில் அப்படி செய்ய வாய்ப்பே இல்லை. அதனால், எது எதற்கோ மானியம் வழங்கும் அரசு, மின்சார சிக்கனத்திற்காக சி.எப்.எல்., பல்புக்கு, மானி யம் அளிப்பது காலத்தின் கட்டாயம்.

இவர்கள் தேவையா?



"வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் செய்துப்பார்' என, ஒரு பழமொழி உண்டு. அதுவும், இன்று மண்டபம், சாப்பாடு மற்ற செலவுகள் என, லட்சக்கணக்கில் பணம் செலவாவதால், பெற்றோர் விழிபிதுங்கிப் போகின்றனர். இந்த நிலையில், சில பண முதலைகளோ... தங்களுடைய டாம்பீகத்தை காட்ட, கல்யாண விழாவில் கலந்து கொள்ள, சினிமா நட்சத்திரங்களை அழைக்கின்றனர்.


இதற்கு, பல லட்ச ரூபாய் செலவு செய்கின்றனர்.


பிரபல இந்தி நடிகர் ஒருவர், கல்யாணங்களில் கலந்து கொள்ள, ஐந்து கோடி ரூபாய் கேட்கிறார். இவர்கள், ஒரு மணி நேர சிறப்பு நிகழ்ச்சி நடத்துவர் அல்லது முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு, அளவளாவுவர். இப்படி, இவர்களுக்கு கொட்டிக் கொடுக்கும் பணத்தை, ஏழை, எளிய மக்களை வாழ வைக்கும் சேவை நிறுவனங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் கொடுத்தால், அந்த உள்ளங்களாவது மகிழ்ந்து, ஆசீர்வாதம் செய்யும். நாம் செய்த, பெரிய செலவுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும்.


சமீபகாலமாக, தமிழ் சினிமா நட்சத்திரங்களையும் அழைக்கத் துவங்கியுள்ளனர். அதிர்ஷ்டம் என்ற ஏணியின் மூலம், புகழின் உச்சியை தொட்ட இவர்களை அழைத்து, காசை வீணாக்குவதை விட, நல்ல செயல்களுக்கு உதவி செய்து, மனத்திருப்தி அடையலாமே!

முல்லாவை அறிந்து கொள்ளுங்கள்!



இன்றும் உலகம் முழுக்க முல்லாவைப் பற்றிய நூற்றுக்கணக்கான கதைகள் படித்து ரசிக்கப்படுகின்றன. முல்லா நஸ்ருதீன் என்னும் நகைச்சுவை ஞானியை துருக்கியர்களும் கிரேக்கர்களும் ஹோஜா நஸ்ருதீன் என்றழைக்கின்றனர். கஸாக்கியர்களால் அவர் கோஜா நஸ்ரெதீன் என்றழைக்கப்படுகிறார். சிலர், முல்லா நஸ்ருதீன் ஒரு கற்பனை கதாபாத்திரம் எனவும் சொல்கின்றனர். முல்லா நஸ்ருதீன் 1208_ம் ஆண்டு துருக்கிய கிராமத்தில் பிறந்து 1284_ம் ஆண்டுவாக்கில் இறந்துபோனார் என்பது பொதுவான நம்பிக்கை. துருக்கியில் முல்லாவைப் புதைத்த நகரத்தில், ஜூலை 5 முதல் 10 வரை எழுத்தாளர்களும் கலைஞர்களும் தங்கள் படைப்புகளை நிகழ்த்தியும் திரையிட்டும் முல்லாவின் நினைவைக் கொண்டாடும் நிகழ்வு இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அஸர்பைஜானில் முல்லா நஸ்ருதீனின் குட்டிக் கதைகள் இப்போதும் அங்கு நடக்கும் விருந்துகளிலும் குடும்ப நிகழ்ச்சிகளிலும் இயற்கையாகவே பேச்சினூடாக இடம் பெறுகின்றன. சில முக்கியமான அனுபவங்கள் நிகழும்போது சரியான நேரத்தில் முல்லா கதைகளைப் பொருத்திப் பார்க்கும் பழக்கமும் அவர்களிடம் நிலவுகிறது.


முல்லாவின் கதைகள் எல்லாக் காலத்திற்குமானவை. மனிதனின் அடிப்படை இயல்புகளில் உருவாகும் முரண்கள், சமூக நீதியின்மை, வகுப்புப் பிரிவு, சுயநலம், கோழைத்தனம், சோம்பேறித்தனம், அறியாமை, குறுகிய புத்தி இவை எல்லாவற்றையும் முல்லாவின் கதைகள் பரிசீலனை செய்கின்றன. 13_ம் நூற்றாண்டின் பின்னணியில் தேநீரகங்களிலும் பொதுக்குளியலறைகளிலும் சந்தைகளிலும் இக்கதைகள் பொதுவாய் நிகழ்கின்றன. இக்கதைகளிலுள்ள மனித இயல்பைப் பற்றிய முல்லாவின் அவதானிப்புகள் தரிசனத் தன்மையுடையவை. நூற்றாண்டுகள் கழிந்தபின்னும் நம்மைப் பற்றி ஈர்க்கும் காந்தத் தன்மை கொண்டவையாக அவை இருக்கின்றன.


வாழ்க்கையின் எல்லா நிலைகளிலுமுள்ள மனிதர்களும் முல்லாவின் கதைகளில் இடம்பெறுகிறார்கள். யாசகர், மன்னர், அரசியல்வாதி, குமாஸ்தா, அறிஞர், வியாபாரி... முல்லாவின் மனைவியும் கழுதையும் அவருடைய நிரந்தரமான உதவியாளர்கள். முல்லா கதைகளில் முல்லா முட்டாள்போல் தோற்றமளித்தாலும் அவை தந்திரமாக மற்றவர்களின் முட்டாள்தனத்தை அவிழ்த்து விடுவதாகவே இருக்கின்றன. வாய்மொழியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு பரப்பப்பட்ட முல்லாவின் கதைகள் கீழைத்தேய நாட்டுப்புறவியல் கதை மரபில் மிகப் புகழ்பெற்ற அங்கத நகைச்சுவைக் கதைகள். முல்லா நஸ்ருதீன் தன் சமாதியிலிருந்து கூட நகைச்சுவையை எழுப்புபவர்.


முல்லா தனது உயிலில் தன் சமாதி மீது பூட்டிய கதவு ஒன்றைத் தவிர வேறெதுவும் இடம்பெறக் கூடாதென்றும், பூட்டிய பின்பு சாவிகளை சமுத்திரத்தில் எறிந்து விட வேண்டுமென்றும் விருப்பப்பட்டார். ஏன் அவர் அப்படிச் சொன்னார்? இன்னமும் மக்கள் அவர் சமாதியைப் பார்க்கின்றனர். கதவைச் சுற்றிச் சுற்றி வருகின்றனர். அங்கே சுவர்கள் இல்லாமல் ஒரு கதவு மட்டும் பூட்டப்பட்டு நிற்கிறது. முல்லா நஸ்ருதீன் சமாதிக்குள், நிச்சயமாய் சிரித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும்.


இந்த பிரபஞ்சத்தில் ஒரு சிறிய காலகட்டத்திற்குள் வாழ்ந்து மடிந்து போகும் மனிதன், தன் வாழ்வை நகர்த்த எத்தனை எத்தனை அல்பமான காரியங்களில் ஈடுபடுகிறான் என்பதை தெரிவிப்பவை முல்லாவின் கதைகள். முல்லாவின் கதைகளில் முல்லாவும் எல்லா மனிதர்களைப் போல்தான் தன் கதைகளில் நகையாடப்படுகிறார். சில அபத்தத் தருணங்கள், முரண்களில் எளிய உண்மைகளை சத்தமின்றி சொல்லிப் போகிறது முல்லாவின் கதைகள்.


முல்லாவின் நவீன தொடர்ச்சியெனப் பார்த்தால் வைக்கம் முகம்மது பஷீரிடம் அந்த இயல்புகளைக் காணமுடியும். பஷீரின் கதை சொல்லி உடலும், எல்லா மனிதர்களின் அல்பத் தனங்களோடும், சிறிய எண்ணற்ற தந்திரங்கள், மனத்தடைகளில் திளைப்பவையே. ஆனால் கதைக்குப் பின்னால் உள்ள பஷீரின் கண்கள், உடல் ஏந்தியிருக்கும் களங்கம் எதையும் ஏற்காதவை. எக்காலத்திலும் நடந்து கொண்டிருக்கும் மனித நாடகத்தை ரசிப்பவை. அதன் மேல் ஒரு புன்னகையை பரவவிடுவதன் மூலம் உலகை எல்லா களங்கங்களோடும் ஏற்றுக்கொண்டு, ஆற்றுப்படுத்தும் வல்லமை கொண்டவை. பஷீரின் இப்புன்னகைதான் அவரின் விமர்சனமும். அவரது ‘பாத்துமாவின் ஆடு’ கதையில் கதை சொல்லி எல்லோரையும் ஏமாற்ற முயல்கிறார். ஏமாற்றப்படுகிறார். நடுவில் உலவும் ஆடு எல்லாவற்றையும் சமன் செய்யும் உயிரியாக வீடு முழுவதும் அலைந்து கொண்டிருக்கிறது. அது அபோதத்தில் பஷீரின் சில புத்தகங்களையும் தின்றுவிடுகிறது. பஷீரின் புன்னகை எல்லாவற்றின் மீதும் படர்ந்திருக்கிறது. உடலின் மரணத்திற்குப் பின்னும் இமை திறந்தால் உயிர்த்திருக்கும் விழிகள் போன்றது பஷீரின் அப்புன்னகை.


ஓஷோ, முல்லாவின் கதைகளில் சிறந்தவற்றைத் தொகுத்து ஒரு முன்னுரையும் எழுதியிருக்கிறார். அதில் சில கதைகளும் வண்ணமயமான சித்திரங்களும், ஓஷோவின் குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளன. ‘‘முல்லா நஸ்ருதீனின் மேல் எனக்கிருக்கும் விருப்பம், இந்த உலகின் யார் மீதும் இல்லை’’ என்கிறார் ஓஷோ. அவரது எல்லா பேச்சுகளிலும் முல்லா நஸ்ருதீன் இடம் பெறுகிறார். ஓஷோ முல்லாவைப் பற்றி பேசும்போது, ‘‘மதத்தையும், சிரிப்பையும் ஒருங்கிணைத்தவர் முல்லா நஸ்ருதீன். அதுவரை மதமும், நகைச்சுவையும் ஒன்றுக்கு எதிரான ஒன்றாகவே இருந்தன. அதன் பழைய பகைமை மறந்து மதத்தையும், நகைச்சுவையையும் சேர்த்து நண்பர்களாக்கிய சூஃபி முல்லா நஸ்ருதீன். மதமும் சிரிப்பும் சந்திக்கும் போது, தியானம் சிரிக்கும்போது, சிரிப்பு தியானமாகும் போது அற்புதங்களுக்கு மேலான அற்புதம் ஒன்று நிகழ்கிறது. இந்தியர்கள், கடவுள் மற்றும் பிற விஷயங்களில் மிகத்தீவிரமாக இருப்பவர்கள். அங்கு சிரிக்கும் கௌதம புத்தாவைப் பற்றி யோசிக்க இயலாது. சங்கராச்சாரியார் சிரிப்பதோ, மகாவீரர் சிரிப்பதோ அசாத்தியமான காரியம்’’ என்கிறார்.


கள்ளமற்ற சிரிப்பு என்பது வித்தியாசமானதொரு அனுபவம். அது களைப்பாற்றும் எந்திரவியல் மட்டும் அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. இந்தியர்களின் நகைச்சுவை பற்றிப் பேசும் குஷ்வந்த் சிங், ‘‘இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் மற்றவர்களைப் பார்த்து நன்கு சிரிக்கத் தெரிந்தவர்கள். ஒரு சிலர் மட்டுமே தன்னையே பார்த்து சிரிக்கத் தெரிந்தவர்கள். இதனாலேயே இந்தியர்களிடமிருந்து மகத்தான நகைச்சுவையாளர்கள் யாரும் உருவாகவில்லை. உலகத்தின் மிகச் சிறந்த நகைச்சுவையாளர்கள் என்றால் யூதர்களைத் தான் சொல்வேன். ஹிட்லரும் நாஜிகளும் அவர்களை விஷவாயுக் கிடங்குகளில் அடைத்த கொடுமையான நிலைகளில்கூட ஹிட்லருக்கு எதிரான நகைச்சுவைக் கதைகளை உருவாக்க அவர்களால் முடிந்திருக்கிறது. தத்துவவியலாளர்களில் ஓஷோவுக்கு நல்ல நகைச்சுவைத்திறன் உண்டு. ஓஷோவுக்கு வசீகரமானவராக முல்லா நஸ்ருதீன் ஏன் இருக்கிறார் எனப் பலமுறை யோசித்துள்ளேன். முல்லா தன் கதைகளில் தன்னையே பகடிக்கு உட்படுத்திக்கொள்வதுதான், முல்லா கதைகளின் பிரத்யேக அழகு எனத் தோன்றுகிறது’’ என்கிறார்.


வாழ்க்கையைக் கவனித்துப் பார்த்தால், அது அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்றல்ல என்று நமக்குத் தெரியும். சிரிப்பதற்காகவே எஞ்சியிருப்பது. எதையும் வெற்றிகொள்ளவில்லையே என்ற கேள்வியை உங்களிடம் எழுப்பலாம். ஆனால், வெற்றி என்பதன் அர்த்தம் என்ன? ஒருவன் வெற்றி பெற்றவனாகி விட்டாலும் எதை அவன் அடைகிறான்? ஓஷோவின் கேள்வியிலும் புன்னகையே மிஞ்சி நிற்கிறது.

எல்லார் மனதையும் ஜெயித்துவிட்டார்!



கென்யா நாட்டு வீராங்கனை ஓட்டப்பந்தயத்தில் தன்னுடன் ஓடி வந்த சீனா நாட்டு மாற்று திறனாளி தாகத்தால் தவிப்பதை பார்த்து அவருக்கு தண்ணீர் குடிக்க உதவி செய்து விட்டு ஓடினார்.



இதனால் அவருக்கு இரண்டாம் இடமே கிடைத்தது அது மட்டும் இல்லாமல் US $ 10,000 பணத்தையும்  இழந்தார்.போட்டியில் ஜெயிப்பது மட்டுமே வெற்றி இல்லை.



தங்கம் மட்டுமே ஆப்ரிக்காவில் கிடைப்பதில்லை.சில தங்கமான மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை நிருபித்து விட்டார் இந்த பெண். இவர் போட்டியில் ஜெயிக்கவில்லை ஆனார் எல்லார் மனதையும் ஜெயித்துவிட்டார்.

6 "ஆறு' தகவல்கள்!



 * வாலிபால் விளையாட்டில் ஓர் அணியில் 6 பேர் இடம் பெற்றிருப்பர்.


 * யானைக்கு பற்கள் 6 முறை விழுந்து முளைக்கும்.
ரத்தம் தண்ணீரைவிட 6 மடங்கு கனமானது.


 * மத்திய அமெரிக்க நாடுகளான ருவாண்டா, புருண்டியில் உள்ளவர்கள்தான் உலகின் மிக உயரமான மனிதர்கள். இவர்களின் சராசரி உயரமே 6 அடி இருக்கும்.


 * புளூட்டோ கோளிலிருந்து புறப்படும் ஒளி பூமியை அடைய 6 மணி நேரமாகும்.


 * சராசரியாக 6 விநாடிகளுக்கு ஒருமுறை நாம் கண்களை இமைக்கிறோம்.


 * நயாகரா நீர்வீழ்ச்சியில் நிமிடத்துக்கு 6 மில்லியன் கன அடி நீர் பாய்கிறது.


 * யானையின் காலடித் தடத்தின் குறுக்களவை 6-ஆல் பெருக்கினால் அந்த யானையின் உயரம் தெரிந்துவிடும்...

விவசாயி ; படிச்சவன் - நகைச்சுவை!


படிச்ச ஒருத்தன் கிராமத்துக்கு போறான்.., அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கு..


அவனுக்கு ஆச்சரியமா இருக்கு.., பக்கத்தில ஒரு குடிசைக்குள்ள ஒரு விவசாயி சாப்பிட்டுட்டு இருந்தாரு.. அவர்கிட்ட கேட்டான்…


படிச்சவன்: மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..?


விவசாயி : அது பழகின மாடு தம்பி.., அதுவே சுத்திக்கும்..,


படிச்சவன் : நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா…! எப்படி கண்டுபிடிப்பீங்க..?


விவசாயி : அது கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி.., சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம்வராது.. அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்..


படிச்சவன் : அது சுத்தறதை நிறுத்திட்டு., ஒரே இடத்துல நின்னு.., தலைய மட்டும் ஆட்டினா..! அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..?


விவசாயி : இதுக்குதான் தம்பி., நான் என் மாட்டை காலேஜூக்கெல்லாம் படிக்க அனுப்பலை..!


படிச்சவன்: ? ? ? ? ?

சமையலின் போது செய்யும் 5 மோசமான தவறுகள்..!




சமையலில் உப்பை அதிகமாக சேர்த்து விடுவதோ, காரத்தை அளவு தெரியாமல் போட்டுவிடுவதோ தவறு அல்ல. அது அப்போதைய சமையல் ருசியை மட்டுமே கெடுக்கும்.


ஆனால்.. அதையும் விட நமக்கு தவறு என்று தெரியாமல் வெறும் ருசிக்காகவும், அழகுக்காகவும் சில தவறுகளை செய்து விடுகிறோம். அதனால் நமது உடல் ஆரோக்கியமும் பாதிக்கிறது.


1. எந்த உணவு பொருளையும் கழுவாமல் பயன்படுத்தவே கூடாது. உதாரணத்துக்கு சிலர் புளியை தண்ணீர் ஊற்றி கரைப்பார்கள். ஆனால், அதையும் ஒரு முறை தண்ணீர் சேர்த்து அலசி கீழே ஊற்றிவிட்டு, அடுத்து நீர் ஊற்றி கரைத்துக் கொள்ளலாம். இதே போல, முட்டைகளை நன்கு கழுவிவிட்டு வேக வைக்க வேண்டும். கீரையை 2 முறையாவது கழுவ வேண்டும்.


2. கோழிக்கறியை சமைக்கும் முன்பு அலசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதாவது, கோழிக்கறியில் தண்ணீரை ஊற்றும் போது அதில் இருந்து தெளிக்கும் தண்ணீர் படும் இடங்களில் எல்லாம் பாக்டீரியாக்கள் பரவும் என்பதை மறக்கக் கூடாது. மேலும், கோழிக்கறியை அலசி கீழே விடும் தண்ணீர் நேராக வெளியேற்றப்பட வேண்டும். அதில் ஏராளமான பாக்டீரியாக்கள் இருக்கும் என்பதால் கவனமாக அந்த நீரை வெளியேற்ற வேண்டும்.


3. எந்த உணவு பொருளையும் அதிக நேரம் வதக்கவோ, கருக வைக்கவோ கூடாது. எல்லோருக்குமே உணவு பொருள் என்பது நன்கு சிவந்து இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால், அது உடல் நலனுக்கு தீமையை ஏற்படுத்தும். எனவே, எந்த உணவையும் அதிகமாக வதக்கி கருக வைக்க வேண்டாம். கருகிய அல்லது தீய்ந்த உணவு பொருள் புற்றுநோயை ஏற்படுத்தும்.


4. காலையில் வேகமாக சமைக்க வேண்டும் என்பதால் பலரும் வெங்காயத்தை இரவே நறுக்கி வைத்துக் கொள்வார்கள். அது மிகப்பெரிய தவறாகும். வெங்காயத்துக்கு கிருமிகளை கவர்ந்திழுக்கும் குணம் உள்ளது. அதனால், வெங்காயத்தை நறுக்கியதும், அது காற்றில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் கவர்ந்திழுத்து வைத்துக் கொள்ளும். கிருமிகள் நிறைந்த வெங்காயத்தைத் தான் நாம் மறுநாள் உணவுக்குப் பயன்படுத்துகிறோம் என்பதை மறவாதீர்.


5. மேலும், இஞ்சியை தோலோடு சமைக்கக் கூடாது. கீரையோடு புளி சேர்க்கக் கூடாது. கோழிக்கறியை எடுத்து வைத்து மறு நாள் சாப்பிடக் கூடாது. நான்ஸ்டிக் தவாவை இரும்பு தேய்ப்பானைப் பயன்படுத்தி தேய்த்துக் கழுவக் கூடாது. விரத நாட்களை தவிர்த்து, சமைத்து ருசி பார்த்துவிட்டுத்தான் சமையலை முடிக்க வேண்டும்.

கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வு!







கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வான நீர்த்தாரை எனப்படும் ‘டோர்னடோ'வை தனது செல்போன் உதவியுடன் புகைப்படம் எடுத்துள்ளார் தமிழக மீனவர் ஒருவர்.


கடலூர் சிங்காரத்தோப்பைச் சேர்ந்த மீனவர்களான மதியழகனும் அவரது தம்பியும் மரக்காணம் அருகே ஆலம்பாறை என்ற இடத்தில் இருந்து கடலுக்குள் 5 கிலோ மீட்டர் தொலைவில் பெரிய விசைப்படகில் தங்கியிருந்து மீன் பிடித்துக்கொண்டு இருந்துள்ளனர்.


அப்போது, திடீரென மேகங்கள் வானில் இருந்து தாழ்வாக கடல் அருகே இறங்கியும், கடல் நீர் சுழல் போல் மேலெழுந்து மேகங்களுக்குள் இழுக்கப்படும் அதிசய காட்சியை அவர்கள் கண்டுள்ளனர்.


சுமார் அரை மணிநேரம் நீடித்த இந்த அதிசய நிகழ்வை உடனடியாக தனது செல்போனில் படம் எடுத்துள்ளார் மதியழகன். மதியழகனின் படகிற்கு மிக அருகில் இந்த நிகழ்வு நடந்ததாக தெரிவித்துள்ளார் அவர்.


மீனவர்கள் மொழியில் இந்த நிகழ்வை ‘யானை தும்பிக்கையை இறக்கி இருக்கிறது' எனச் சொல்வார்களாம்.ஆனால், அறிவியல் மொழியில் இதனை ‘டோர்னடோ' என பெயரிட்டு அழைக்கிறார்கள். அதாவது தமிழில் நீர்த்தாரை.


மீனவர்கள் கண்ட இந்த டோர்னடோ குறித்து, கடலூர் துறைமுக அதிகாரி கேப்டன் அன்பரசன் கூறுகையில், ‘கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், கடலின் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால், கடலில் நீர்த்தாரைகள் எனப்படும் அதிசய நிகழ்வு ஏற்படும்.


பொதுவாக பருவநிலை மாற்றம் ஏற்படும் போது இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும். மீண்டும் இரண்டு காற்றுகளின் வெப்பநிலையும் சமமாக மாறும் போது, நீர்த்தாரைகள் மறைந்து விடும். இந்த விநோத நிகழ்வின் போது கடலின் நீர் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறி விடும். இதன் வேகம் பல கிலோ மீட்டராக இருக்கும்.


இதற்கு ஆங்கிலத்தில் "டோர்னடோ" என்று பெயர். இவைகள் ஐரோப்பா போன்ற பகுதிகளில் அதிகம் காணப்படும். இவை அனைத்தும் பருவகாலம் மாறும் போது நடைபெறும் நிகழ்வுகள்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் வாழ்வியல் இலக்கணம்!




தமிழர் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்திருந்தனர்என்பதை சங்க இலக்கியங்கள் உணர்த்துகின்றன.மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள் மனித வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர்.


தமிழர் வாழ்வை அகவாழ்வு, புறவாழ்வு என இரண்டாக இலக்கணம் வகுத்து வாழ்ந்தமை பண்பாட்டின் சிகரமாகக் கருதப்படுகிறது..தான் தோன்றிய கால மக்களின் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, அரசு, அமைச்சுர், ஆட்சிமுறை, போர், வீரம், காதல் போன்றவற்றை நமக்குக் காட்டி நிற்கின்றன. நமக்குக் கிடைத்திருக்கும் சங்க இலக்கியங்களிலிருந்து தமிழர் பண்பாட்டை நன்கு அறிகிறோம். பண்பாட்டின் கூறுகள் சிலவற்றைப் பற்றி இங்கு காண்போம்.

வீரம்:

பண்டைய தமிழர்கள் வீரத்தைத் தொல்காப்பியப் புறத்திணை இயல் எடுத்துக் கூறுகின்றது. பெரும்பாலும் தற்காப்பு முறையில் தான் போர் நடைபெற்றது. தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்ற நால்வகைப் படைகளும் போரில் ஈடுபட்டன. வெட்சி, வஞ்சி, உழிகை, தும்பை என்ற நான்கு புறத்திணை பகுதிகளிலும் தமிழர்களின் போர்முறைகள் தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன. மேலும் வீரர் அல்லாதவர்கள், புறங்காட்ட ஓடுவார், புண்பட்டார், முதியோர், இளையோர், இவர்கள் மீது படைக்கலம் செலுத்தலாகாது என்பதும் புறநானூற்றால் அறிய முடிகிறது.


காதல்:


தமிழர் காதலை அன்பின் ஐந்திணை என்றனர். இஃது ஒருவனும் ஒருத்தியும் கொண்ட உளமொத்தத் தூயகாதல் வாழ்க்கையாகும்.இது களவு, கற்பு என இரண்டாக அமையும். ஐந்திணை ஒழுக்கத்தில் தலைமக்களாக விளங்குபவர்கள்.அறிவும், செல்வமும் உடைய நல்லகுலத்தில் பிறந்தவர்கள். இக்காதல் நாடகத்தில் தலைவன், தலைவி நற்றாய், செவிலித்தாய், தோழி, பாணன், பாடினி போன்றோரும் ஊர் மக்களும் பாத்திரங்களாக வருவர். இக்காதல் வாழ்வு அறத்திலிருந்து மாறுபடாமல் அன்பின் வழிப்பாட்டாக அமையும்.



மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
 நன்கலம் நன்மக்கட் பேறு





 என்று வள்ளுவரும் காதல்வழிவந்த மனை மாட்சியைச் சிறப்பிக்கின்றார்.

நட்பு:

சங்ககாலத் தமிழர் நட்பினை பெரிதும் மதித்து வாழ்ந்தனர். திருவள்ளுவரும் உண்மையான நட்புக்கு இலக்கணம் கூறியுள்ளார்.




முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
 அகநக நட்பது நட்பு



 உள்ளன்புடன் மனம் மகிழ்ந்து நட்பு கொள்வதே உண்மையான நட்பாகுமென்றார்.


விருந்தோம்பல்:

‘விருந்து’ என்ற சொல்லுக்குப் ‘புதுமை’ என்பது பொருள். உறவினரும் நண்பரும் அல்லாதவராய் புதியராக நம்மிடம் வரும் மக்களை ‘விருந்து’ என்றனர் தமிழர். அறியாதவர்களையும் அழைத்து உணவளித்து இடமளித்து உபசரித்து மகிழ்ந்தனர் தமிழர்.


செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
 நல்விருந்து வானத் தவர்க்கு



” என்கிறார் திருவள்ளுவர். விருந்தினர்களை வெளியில் இருக்கச் செய்து தான் மட்டும் வீட்டின் உள்ளே உண்ணுதல் சாவாமைக்கு மருந்தாகிய அமிர்தமாக இருந்தாலும் வேண்டப்படுவதில்லை என்பதை வள்ளுவர்,


விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
 மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று



” என்று கூறுவதிலிருந்துவிருந்தோம்பல் சங்க கால மக்களின் பண்பாக இருந்தமை அறிய முடிகிறது.


இவை மட்டுமன்றி ஈகை,கொடை,கற்புடைமை,உலக ஒருமைப்பாடு ஆகியவற்றையும் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளாகக் கொள்ளலாம்.

2013ல் அதிகம் பேசப்பட்ட ஹீரோயின்கள்!




2013ல் புதுமுக நடிகைகள் அதிகம் கவர்ந்தனர். நயன்தாரா, காஜல் அகர்வால், த்ரிஷா, அனுஷ்கா, ஹன்சிகா, அமலாபால் போன்றோர் மார்க்கெட்டை நிலையாக தக்க வைத்துக் கொண்டனர்.


நயன்தாரா இந்த வருடமும் தமிழ், தெலுங்கில் நம்பர் ஒன் ஹீரோயினாக இருக்கிறார். காதல் சர்ச்சைகளால் ஒரு வருடம் இடைவெளி விட்டு வந்தாலும் நயனுக்கு அதே கிரேஸ் இருந்தது ஆச்சர்யம்.


ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்த ‘ராஜா ராணி’ படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. அஜீத்துடன் நடித்த ‘ஆரம்பம்’ படமும் ஹிட்டானது.


தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘அனாமிகா’ படத்தில் கர்ப்பிணி வேடத்தில் நடிக்கிறார். இது இந்தியில் வித்யாபாலன் நடித்து பரபரப்பாக ஓடிய ‘கஹானி’ படத்தின் ‘ரீமேக்’ . இதில் நயன்தாராவுக்கு விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உதயநிதி ஜோடியாக ‘இது கதிர்வேலன் காதல்’ படத்திலும் நடிக்கிறார். சிம்பு படம் உள்பட மேலும் மூன்று படங்களில் நடிக்கும் அளவுக்கு பிஸியாக இருக்கிறார்.


காஜல் அகர்வாலை கடந்த வருடம் ரிலீசான ‘துப்பாக்கி’ படம் முன்னணி நடிகையாக்கியது. ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ படத்தில் நடித்தார். தற்போது விஜய்யுடன் மீண்டும் ‘ஜில்லா’ படத்தில் நடித்து வருகிறார்.


அனுஷ்கா நடித்து இந்த வருடம் ‘அலெக்ஸ் பாண்டியன்‘, ‘சிங்கம் 2’, ‘இரண்டாம் உலகம்’ படங்கள் வந்தன. இதில் ‘சிங்கம் 2’ அதிக வசூல் குவித்தது. தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘ருத்ரமாதேவி’, பாஹுபலி ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்டவை.


ஹன்சிகாவுக்கு இந்த வருடம் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘சிங்கம் 2’ படங்கள் கைகொடுத்தன. கார்த்தி நடிக்கும் 'பிரியாணி' படம் டிசம்பர் 20ல் ரிலீஸ் ஆக உள்ளது. 'வாலு', 'அரண்மனை', 'வேட்டை மன்னன்', 'மான் கராத்தே', 'உயிரே உயிரே' என நிறைய படங்கள் ஹன்சிகாவின் கவைசம் உள்ளன.


'தலைவா'வில் விஜய் ஜோடியான அமலாபால், இப்போது ஜெயம் ரவியுடன் ‘நிமிர்ந்து நில்’ தனுஷுடன் ‘வேலையில்லா பட்டதாரி’ படங்களில் நடிக்கிறார்.


த்ரிஷாவுக்கு ‘சமர்’ படம் மட்டும் ரிலீஸ் ஆனது, ஜீவாவுடன் நடித்த 'என்றென்றும் புன்னகை' டிசம்பர் 20ல் ரிலீஸ் ஆகிறது. ஜெயம் ரவியுடன் 'பூலோகம்' படத்திலும் நடித்து வருகிறார்.


'நேரம்' படத்தில் அறிமுகமான நஸ்ரியா, 'ராஜா ராணி' படத்திலும் கவனம் ஈர்த்தார். 'நையாண்டி' படம் சரியாகப் போகாவிட்டாலும் நஸ்ரியா முன்னணி நடிகையாக இருக்கிறார்.


'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் ஊதா கலரு ரிப்பனால் பிரபலமாகிவிட்டார் ஸ்ரீதிவ்யா. இப்போது 'பென்சில்'. 'வீர தீர சூரன்', 'ஈட்டி' எனும் மூன்று படங்களைக் கையில் வைத்திருக்கிறார்.


தமன்னா, ஸ்ருதி, இலியானா, சமந்தா , அஞ்சலி போன்றோருக்கு தமிழில் இந்த வருடம் படங்கள் இல்லை.

அஜித்துடன் இணையும் சிம்பு!



கௌதம் மேனன் சிம்பு, பல்லவி நடிப்பில் புதிய படத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறார். 'சட்டென்று மாறுது வானிலை' என்று முதலில் டைட்டில் வைத்தார்கள்.


இப்போது அந்த டைட்டில் இல்லை. ஏற்கனவே ரவிராஜ் என்பவர் அதே டைட்டிலில் படம் இயக்கி முடித்து 'யு' சான்றிதழ் பெற்றுள்ளார்.


இதனால் வேறு டைட்டில் வைக்கலாம் என்று தீவிர யோசனையில் இருக்கிறார் இயக்குநர் கௌதம்.


இதற்கிடையில், பிப்ரவரியில் தொடங்க இருக்கும் புதிய படம் குறித்து அஜித்திடம் பேச கௌதம் சென்றிருக்கிறார்.


'சிம்புவும் இந்தப் படத்தில் நடிக்கட்டுமே' என்று அஜித்தே முன்வந்து கேட்டதோடு, உடனே சிம்புவுக்குப் போன் போட்டு பேசினாராம்.


சிம்பு, அஜித்துடன் நடிக்க உடனே ஓ.கே.சொல்லிவிட்டாராம். இப்போது சிம்புவுக்கான போர்ஷனை மெருகேற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறார் கௌதம்.


சிம்பு தல பேசிய உற்சாகத்தில் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறார் . ஆர்யா, விதார்த்தைத் தொடர்ந்து இப்போது சிம்புவும் அஜித் படத்தில் நடிக்கிறார்.

ரஜினி பிறந்தநாளில் ஹீரோவாகும் ஜூனியர் விஜயகாந்த்!



விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் 'சகாப்தம்' படத்தின் மூலம் ஹீரோ ஆகிறார்.


விஜயகாந்தின் மூத்த மகன் பிரபாகரன், பி.ஈ. ஆர்க்கிடெக்ட் படித்து வருகிறார். இளைய மகன் சண்முக பாண்டியன் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கிறார்.


பிரபாகரன் ஆரம்பத்தில் சினிமா ஆசையில் இருந்தார். ஆனால், அதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.


இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் கதாநாயகன் ஆக வேண்டும் என்ற ஆசையிலும் ஆர்வத்திலும் இருந்து வருகிறார்.


சண்முக பாண்டியனின் திரையுலக அறிமுகம் அனைத்து தரப்பினரும் வரவேற்கும் வகையில் இருக்க வேண்டும் என்று விஜயகாந்தும், பிரேமலதாவும் விரும்பினார்கள்.


இதற்காக அவர்கள் தனது மைத்துனர் சுதீஷுடன் சேர்ந்து, சண்முக பாண்டியனுக்காக கதை கேட்க ஆரம்பித்தார் விஜயகாந்த்.


நல்ல கதை கிடைத்திருக்கிறதாம். படத்துக்கு 'சகாப்தம்' என டைட்டில் வைத்திருக்கிறார்கள். ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ல் விஜயகாந்த் தன் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்த இருக்கிறார்.

இன்பம் எங்கே?


இன்பமாக வாழவே எல்லாரும் விரும்புகின்றனர். இன்பத்தில் மட்டுமே திளைத்தவர் என்று யாரும் இருக்க முடியாது. அதே போல் துன்பத்திலேயே துவண்டு போனவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. எனவே இன்பத்தின் முடிவில் துன்பமும், துன்பத்தின் எல்லையின் இன்பமும் இருக்கும். இரவு, பகல், மேடு, பள்ளம், உயர்வு தாழ்வு, மேல், கீழ் என்று வருகின்ற இணைகள் இவை.


ஒருவருக்கு இன்பம் தரும் பொருள் இன்னொருவருக்குத் துன்பம் தருகிறது. பாகற்காய் பொதுவாகக் கசக்கிறது. ஆனால் சர்க்கரை நோயாளிக்கு "இனிக்கிறது".


ஒருவருக்கு இன்பம் தரும் பொருள் எல்லாருக்கும் இன்பம் தர வேண்டுமல்லவா? விளையாட்டுப் பொம்மை குழந்தைப் பருவத்தில் மகிழ்ச்சியளிக்கிறது. குமரப் பருவத்தில் விளையாட்டுப் பொம்மை மகிழ்ச்சியளிக்குமா? இன்று மகிழ்ச்சியளிக்கும் பொருள்களோ நாளை துன்பம் தரும் சூழலை உருவாக்கிட வாய்ப்பு உண்டு. எனவே இன்பம் உலகியல் பொருள்களில் இல்லை.


சில நேரங்களில் நமக்குத் துன்பம் உண்டாகிறது. நாம் விரும்பிய பொருள் கிட்டவில்லை. உலகியல் ஆசை நிறைவேறவில்லை. துன்பத்தால் மனம் இடிந்து போய் விடுகிறது. உடல் பிணியாலும், பொருள் இன்மையாலும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவராலும் ஒவ்வொரு பிரச்சினை உண்டாகிறது. பிரச்சினை தொடர் கதையாகிறது.


நாம் இன்பம் அடைய நாமே காரணம் என்று மார்தட்டுகிறோம். ஆனால் துன்பம் வந்தால் எதிரே இருப்பவர் தான் காரணம் என்று கருதுகிறோம்.


"தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்றார் சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார். இதனால் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்குப் பிறர் காரணம் அல்லர். நாமே தான் என்று உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே தான் பாரதியார் "துன்பம் நெருங்கி வந்த போதும் - நாம் சோர்ந்து விடலாகாது பாப்பா" என்று எச்சரிக்கை செய்கிறார்.


பிரச்சினைகள் தாம் இன்ப துன்பத்திற்குக் காரணம், பிரச்சினை ஏதும் இல்லாவிட்டால் வாழ்க்கை ஒளிமயமாகும் என்று பலர் கருதுவர். பிரச்சினை யாருக்குத்தான் இல்லை? சிலர் தமக்கு ஏற்பட்ட பிரச்சினையை எண்ணி எண்ணி பயந்து சிறு விவகாரத்தைப் பூதாகரமாக்கி அலைந்து திரிவர்.


எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு உண்டு என அமைதி அடைய வேண்டும். அடுத்தடுத்து வரும் அலைகள் போல் பிரச்சினை வந்து கொண்டேதான் இருக்கும். சில நேரங்களில் தீவிரமாக இருக்கும். பின்னர் அழுத்தம் குறைந்து போகும். நாம் வருந்தும் வரை பிரச்சினையின் தாக்கம் இருக்கும். புயலுக்குப்பின் அமைதி, என்பது போல் பிரச்சினையின் முடிவில் நிறைவு உண்டாகும்.


ஒரு மனிதனுக்கு பகைவன் இன்னொரு மனிதன் மட்டும் அல்லன், பிரச்சினை, பதற்றம், அச்சம், அருவருப்பு, அவநம்பிக்கை போன்ற தீய பண்புகளும் தாம்.


இப்படிப்பட்ட பகைவர்கள் எப்போதும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். தொடர்ந்து நாமும் போரிட்டு இப்பண்புகளை வெற்றி கொள்ள வேண்டும். இச்செயலிலும் உள்ளார்ந்த மகிழ்ச்சி உண்டு. பிரச்சினை இல்லா வாழ்வு சுவைக்காது. இறந்து விட்ட பிணத்திற்குத்தான் பிரச்சினை ஏதும் இல்லை.


நாம் அனுபவிக்கும் இன்பமும், துன்பமும் நமக்கு அனுபவம் என்ற பாடத்தைப் போதிக்கவே வருகின்றன. சிற்பி தேர்ந்தெடுத்த கல்லில் உளியால் செதுக்குகிறான். தேவையான பகுதியைச் செதுக்கி வைத்துத் தேவையில்லாத பகுதியை நீக்குகிறான். சாதாரண கல் சிற்பியின் சிற்றுளி பட்டுச் சிந்தை கவரும் அழகுச் சிலையாய்ப் பரிணமிக்கிறது. எனவே துன்பங்களால் ஒருவன் பட்டை தீட்டப் பட்ட வைரமாய் - பக்குவமாய் பதப்படுகிறான்.


உலகத்தை இன்பமாகவோ துன்பமாகவோ அமைத்துக் கொள்ள மனிதனுடைய மனப்பக்குவம் காரணமாகிறது.


இரண்டிலும் பாதிக்கப்படாத சமநிலை பெற வேண்டும். உலகியல் வாழ்வில் பொதுநல நாட்டம் கொண்டவன் எப்போதும் இன்பத்தில் இருப்பான். சுயநல நோக்கம் கொண்டவன் பெறுவது துன்பமே. நாம் பிறருடன் உறவு ஏற்படுத்தப் பாலம் அமைப்போம். எனவே துன்பத்தைக் கண்டு கலங்காமல் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று இறுமாப்புடன் எதிர் கொள்வோம்.

இது என்ன?


படத்தை பார்த்ததும், கிளைக்கு, கிளை தாவிக்கிட்டும், உர்... உர்... உர்... என்று உறுமிக் கொண்டு இருக்கும் குரங்குகள் என்றுதானே நினைத்தீர்கள்,


அவை, குரங்குகள் இல்லை.


ஐரோப்பா, ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகளில் வளரும் மிக அபூர்வமான, "மங்கி ஆர்கிட்' எனப்படும் மலர்கள்.


இயற்கையிடம் தான் எத்தனை, ஆச்சரியங்களும், அழகும் கொட்டிக் கிடக்கின்றன!




உங்கள் சந்தோஷம் மற்றவரின் அமைதி!



குடும்பத்தில் தலைமைப் பெண்ணின் ஆரோக்கியமான மனநிலையும், அடிப்படை சந்தோஷமும் மிகவும் முக்கியம்.


"ஒரு குடும்பத்தின் மொத்த ஆரோக்கியம் மிகவும் நல்லபடியாய் அமைய, அந்த வீட்டு தலைமைப் பெண்ணின் ஆரோக்கியமான மனநிலையும், அடிப்படை சந்தோஷமும் மிகவும் முக்கியம்" என்று லக்னோவில் உள்ள மனநல மருத்துவர் கூறியதாக ஒரு ஆங்கில மாத இதழில் வெளியாகி உள்ளது. இந்த மருத்துவரின் கூற்று எந்த அளவு உண்மை என்பது, ஒவ்வொரு வீட்டின் ஆண்களுக்கும், குழந்தைகளுக்கும், மற்ற பெண்களுக்கும் மிக நன்றாகவே தெரியும்.


திருமணத்திற்குத் தயாராகும் பெண்கள், மனதளவில் தங்களை எப்படித் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நினைத்தே "டென்ஷனாகி" விடுகின்றனர். புகுந்த வீட்டில் கணவனின் மனநிலையை அறிந்து கொள்வது முதல் தொடங்கி, அனைவறிடமும் நன்மதிப்பு பெற வேண்டும் என்ற கவலை; தனது எண்ணங்களுக்கு அவர்கள் மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற கவலை; இதில் சிக்கல் ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது என்ற மன உளைச்சல்... இப்படி கவலைப்பட்டே தனது முதல் 10 ஆண்டு மணவாழ்க்கையை பாழடித்து விடும் சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.


இடையே ஒன்றோ, இரண்டோ குழந்தைகளும் பிறந்து விடுகின்றன. அவற்றை சரியான முறையில், நோய் நொடி இல்லாமல் வளர்ப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு, வீட்டில் உள்ள வேலைகளே முழுவதுமாய் ஆக்கிரமித்துக் கொள்ள, வேலைக்குச் செல்லும் பெண்களின் பாடு, "கேட்டுக் கேட்டு அலுத்துப் போச்சு..." என்று மற்றவர் பரிதாபப்படும் நிலைதான்.


தினமும் ஒரே மாதிரியான பிரச்னைகள்; அவற்றை தனி ஒருத்தியாக தீர்க்க முடியாத சூழ்நிலை. தானாகவே முடிவெடுத்துச் செயல்படுத்த முடியாத நிலையில், வேதனைக்கு ஆளாகி, தன் சுய சிந்தனையை இழந்து, வீட்டிலும், அலுவலகத்திலும் தனது முழுத்திறனை வெளிக்காட்ட முடியாமல் தவியாய் தவிக்கிறாள்.


இப்படிப்பட்டவர்களிடம் நல்ல மனநிலையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும் எங்கே எதிர்பார்ப்பது?

ஆனால், அது தான் முக்கியம். வேகமாக ஓடிப் போய்விட்ட 10 ஆண்டு கால இடைவெளியில், அவளையும் அறியாமல், அவளது உடல் ஆரோக்கியத்தை முற்றிலுமாய் தொலைத்து விட்டு, மெதுவாய் தன் நிலைக்கு திரும்ப வரும் நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு, அதற்காகவே கவலைப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். இதிலிருந்தெல்லாம் மீள்வது எப்படி? எப்போதும் சந்தோஷமும், ஆரோக்கியமுமாய் இருப்பது எப்படி? உங்கள் முடிவுகள் மீது மற்றவர் கருத்துக்களைத் திணிக்க இடம் கொடுக்காதீர்கள்.


இந்த அறிவுரையுடன், வேறு சில விஷயங்களை நீங்கள் நனைவில் கொள்ள வேண்டும். பிறந்த வீட்டின் மரியாதையைக் காப்பாற்றுவது, புகுந்த வீட்டின் அன்பைப் பெறுதல், சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை நிலைநிறுத்திக் கொள்ளுதல், சிறந்த நிர்வாகத் திறனுடன் செயல்படுதல், குழந்தைப்பேறு, குழந்தைகளை வளர்த்தல் என்பதுவரை திருமணத்தின் போதே தீர்மானித்து வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் வளரும்போது, மணவாழ்க்கையின் வேறு பரிணாமத்தைப் பார்க்கும் காலம் துவங்கி விடும்.


இந்த கால கட்டத்தில் அதிக பொறுப்புகள் சேரும். அவற்றோடு சேர்ந்து நம் ஆரோக்கியத்தையும் கவனிக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் நாம் ஆரோக்கியத்தைக் கோட்டை விட்டால், மீளவே முடியாத நிலை ஏற்படும்.


ஆரோக்கியமான மனநிலையை வைத்திருக்க நீங்கள் செய்ய வேண்டியது:


* நன்றாக, திருப்தியாகச் சாப்பிடுங்கள். காலை உணவு தொடங்கி, இரவு சாப்பாடு வரை அனைத்தும் திருப்தியாய் அமைவதாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.


* சத்தான உணவு வகைகளைச் சாப்பிடுவது அவசியம்.


* மனதுக்கு தெம்பும், தைரியமும் அளிக்கும் நில்ல புத்தகங்களை, இதிகாசங்களை, பிரச்சனையிலிருந்து உங்களை மீட்டும் தன்னம்பிக்கைத் தொடர்கள் கொண்ட புத்தகங்களைப் படியுங்கள்.


* சுய பச்சாதாபத்தைத் தூக்கி எறிந்து விட்டு, உங்களை நம்பி உங்கள் குடும்பத்தினர் உள்ளனர் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள்.


* உங்கள் உணர்வுக்கு யாரும் மதிப்பு கொடுப்பதில்லை என்ற வீணான கற்பனைகளுக்கெல்லாம் மூட்டை கட்டிவிடுங்கள். ஏனெனில், உங்கள் முகத்தில் ஓடும் சந்தோஷம் தான் உங்களைச் சுற்றியுள்ளவர்களை அமைதியாக வாழ வைக்கிறது என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பிட் காயின் என்றால் என்ன? முழு கட்டுரை!




பிட் காயின் என்பது ஒரு எண்ம நாணயமாகும் (டிஜிட்டல் கரன்சி). இதனை உருவாக்கியவர் சடோஷி நகமோட்டா.

மற்ற நாணயங்கள் அல்லது நாணய முறைகளை ஏதாவது மத்திய அமைப்பு கட்டுப்படுத்தும். ஆனால், இந்த நாணயத்தை எந்த அமைப்பும் கட்டுப்படுத்தாது. இரகசியக் குறியீட்டு முறையைப் பயன்படுத்துவதன் மூலம் இதில் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


ஒரு பிட்காயினை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் மோசடி செய்ய முடியாது. ஒரே பிட் காயினை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியாது.


பெரும்பாலும் பிட் காயினைப் பெறுவதற்குக் கைரேகை போன்ற அடையாளம் அவசியம் என்ற போதும், அடையாளம் காட்டாதவர் கூடப் பிட் காயினைப் பயன்படுத்த முடியும். பிட் காயின்களைத் தனிப்பட்டமுறையில் கணினிகளிலோ அல்லது வலைத்தளங்களிலோ சேமிக்க முடியும். பிட் காயினுக்கு எனத் தனியாகக் கணக்கு வைத்துள்ள யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம்.


எந்த நாடோ அல்லது அரசாங்கமோ பிட் காயினின் மதிப்பை மாற்ற முடியாது. அதிக பிட் காயின்களை உருவாக்க முடியாது என்பதால் பணவீக்கத்தையும் உருவாக்க முடியாது.தற்போது சர்வதேச அளவில் இந்த பிட் காயின்களைப் பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் ஏற்றுக் கொள்கின்றன. சட்டவிரோத வர்த்தகம், போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்டவற்றிலும் இது மிகப்பிரபலமாகப் பயன்படுத்தப் படுகிறது.



உலகின் முதல் 'பிட்காயின்'- டிஜிட்டல் பணம் வழங்கும் ஏடிஎம் திறப்பு

 கனடா வான்கூவர் நகரில் உலகின் எந்த அங்கீகரிக்கப்பட்ட பணத்தாளையும் பிட் காயின்களாக (டிஜிட்டல் கரன்சி- எண்ம நாணயம்) மாற்றிக் கொடுக்கும் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.


பொதுப்பயன்பாட்டுக்காக நிறுவப்பட்ட முதல் பிட் காயின் ஏடிஎம் இயந்திரம் இதுவாகும். இந்த ஏடிஎம் இயந்திரம் வான்கூவரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிட்காயினிகாஸ் நிறுவன மும், நெவேடாவைத் தலைமையிட மாகக் கொண்டு செயல்படும் ரோபோகாயின் நிறுவனமும் இதனைச் செயல்படுத்துகின்றன.


வான்கூவரில் ஒரு காபிக் கடையில் இந்த ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. வான்கூவர் நகரில் 20 வர்த்தக நிறுவனங்கள் பிட்காயின்களை ஏற்றுக் கொள்கின்றன. அதில் இந்தக் காபி கடையும் ஒன்று.


ஒரு வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு 3,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பிட் காயி ன்களைப் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர் தன் உள்ளங்கையை ஏடிஎம் இயந்திரத்தின் முன் காட்டினால் அது ஸ்கேன் செய்து கொள்ளும்.



பிட்காயினை வீசி எரிந்து கோடிகளை இழந்த மனிதர்.


பிரிட்டனை சேர்ந்த ஜேம்ஸ் ஹோவல்ஸ் எனும் அவரது கதையை கேட்டால் நமக்கும் பரிதாபமாக தான் இருக்கும்.


நான்கு ஆண்டுகளுக்கு முன் பிட்காயின் பற்றி கேள்விபட்ட போதே ஹோல்ஸ் , இது தான் எதிர்கால நாணயமாக இருக்கப்போகிறது என உணர்ந்திருந்தார். ஆகவே ஆர்வத்தோடு பிட்காயினை தோண்டி எடுப்பதற்கான செயலிலும் ஈடுபட்டிருந்தார். தோண்டி எடுப்பது என்றால் குழம்ப வேண்டாம். டிஜிட்டல் உலகில் அர்த்தமுள்ள தகவல்களை தேடி எடுப்பதை மைனிங் என்று குறுப்பிடுகின்றனர். எந்த ஒரு மைய அமைப்பாலும் வெளியிடப்படாத பிட்காயினையும் அதன் வலைப்பின்னலில் இப்படி தான் தோண்டி எடுக்க வேண்டும்.


2009 ல் ஹோவல்ஸ் தனது லேப்டாப் மூலம் பிட்காயினை தோண்டி எடுத்துக்கொண்டிருந்தார். சுமார் ஒரு வார கால் தேடலில் அவருக்கு 7,500 பிட்காயின்கள் கிடைத்தன. இது பெரிய அதிர்ஷ்டம் தான். இப்போது பிட்காயினை தோண்டி எடுக்க லேப்டாப் எல்லாம் போதாது. ஏனெனில் பிட்காய்னை தோண்டி எடுப்பது என்றால் கணிதவியல் சமன்பாடு போன்ற புதிர்களுக்கு விடை காண வேண்டும். பிட்காயின் சித்தாந்தப்படி ,இந்த புதிர்கள் சிக்கலாகி கொண்டே வரும். தற்போது பிட்காயின் வலைப்பின்னலின் புதிர்களை விடுவிக்க லேப்டாப்பைவிட பன்மடங்கு சக்திவாய்ந்த கம்ப்யூட்டர்கள் தேவை. இதற்காக என்றே பிரத்யேக் கம்ப்யூட்டர்கள் எல்லாம் இருக்கின்றன. பலர் ஒன்று கூடி கம்ப்யுட்டர் வலைப்பின்னல் அமைத்தும் பிட்காயின் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.


ஆனால், 4 ஆண்டுகளுக்கு முன்னரே ஹோவல்ஸ் 7,500 பிட்காயின்களை சேகரித்து வைத்து விட்டார். பிட்காயின்களுக்கு பெளதீக வடிவம் கிடையாது. அவற்றை குறீயிடுகளாக இணைய பர்சில் போட்டு வைக்கலாம். ஹோவல்ஸ் தனது பிட்காயின்களை லேப்டாப் ஹார்ட்டிரைவில் வைத்திருந்தார். அவரது போதாத நேரம் லேப்டாப் பழுதாகி அதை தனியே மேஜையில் வைத்திருந்தார். சில மாதங்களுக்கு முன் வீட்டை சுத்தமாக்கிய பொது அதை தெரியாமல் தூக்கி வீசி எரிந்து விட்டார் . அதை மறந்தும் விட்டார்.


ஆனால் இடைப்பட்ட காலத்தில் பிட்காயின் ஏற்ற இறக்கங்களுக்கு இலக்கானாலும் சமீபத்தில் அதன் மதிப்பு எகிறத்துவங்கியுள்ளது. கடந்த ஏப்ரலில் ஒரு பிட்காயினின் மதிப்பு 100 டாலரை தொட்டது. இதோ சில தினங்களுக்கு முன் ஒரு பிட்காயின் ஆயிரம் டாலர் எனும் உச்சத்தை தொட்டுள்ளது.


இத்தனைக்கும் நிஜ உலகில் பிட்காயின் பரிவர்த்தனையில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. சட்டபூர்வ கேள்விகளும் உள்ளன. பிட்காயினை கொண்டு சில பொருட்களை மட்டுமே வாங்க முடியும். ஆனாலும் அதன் மதிப்பு ஏறுமுகத்தில் இருக்கிறது. இதனால் கைவசம் பிட்காயினை வைத்திருப்பவர்கள் எல்லாம் லட்சாதிபதிகளாகி கொண்டிருக்கின்றனர்.


இனி ஹோவ்ல்ஸ் கதைக்கு வருவோம். பிட்காயினை மறந்திருந்தவர் சமீபத்திய பரபரப்பால ஈர்க்கப்பட்டு தனது ஹார்ட்டிரைவை தேடிப்பார்த்த போது தான் அதை குப்பை என தூக்கி வீசியது தெரிந்து திடுக்கிட்டு போனார். பிட்காயின் பரிவர்த்தனை மதிப்பு படி அவரிடம் இருந்த 7,500 பிட்காயின்களின் மதிப்பு 75, 00000 டாலர்கள்.


ஹோவ்லஸ் உடனே தனது பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படும் இடத்திற்கு சென்று விசாரித்திருக்கிறார். வேல்ஸ் மாகானத்தின் நியூபோர்ட் பகுதியில் உள்ள குப்பை கொட்டும் இடத்தின் அதிகாரிகள் , அவரிடம் கால்பந்து மைதானம் அளவுக்கு இருந்த குப்பை மலையை காட்டி அதன் அடியில் தான் ஹார்ட்டிரைவ் இருக்க வேண்டும் என கூறினர். அதை கேட்டதுமே ஹோவல்சுக்கு நம்பிக்கை போய்விட்டது. தன்னால் அதை தேட முடியாது என விட்டுவிட்டவர் வேறு யாரேனும் அரும்பாடு பட்டு தேடி எடுத்தால் தனக்கும் ஒரு பங்கு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


பிரிட்டனில் இருந்து வெளியாகும் கார்டியன் இதழில் இது பற்றி தனது சோக கதையை ஹோவல்ஸ் பகிர்ந்து கொண்டுள்ளார்.


இந்த சம்பவம் பிட்காயின் மதிப்பை உணர்த்துவதோடு இன்னொரு பாடத்தையும் சொல்லாமல் சொல்கிறது. கம்ப்யூட்டரில் எதை சேகரித்து வைத்தாலும் அதற்கு பேக் அப் எடுத்து வைக்க வேண்டும் என்பது தான். ஹோவல்ஸ் பேக் அப் எடுத்து வைத்திருந்தால் அவர் சேகரித்திருந்த பிட்காயினை இயக்குவதற்கான இணைய சாவி அவரிடமே இருந்திருக்கும்.

ஆத்திச் சூடி 2014!



ஆத்திச் சூடி போன்று ஒரு பாடல் எழுதலாம் என்று முயன்றிருக்கிறேன். ஓசைகள் சரியாக அமையவில்லை என்றாலும், கூற வரும் கருத்தை கவனிக்கவும்.


    அன்புடன் அனுகு

    ஆணவம் அகற்று

    இரவல் விலக்கு

    ஈதல் ஒதுக்கேல்

    உறுதியே துணை

    ஊனத்தை இகழேல்

    எள்ளி நகையேல்

    ஏளனம் பேசேல்

    ஐம்புலன் அடக்கு

    ஒன்றே இறைவன்

    ஓரம் போகேல்

    ஔவை சொல் கேள்

    அஃதும் இஃதும் மேல்.



அர்த்தங்கள்

படித்ததுமே புரிந்திருக்கும். இருந்தாலும் விளக்கவேண்டியது என் கடமை.


1. அன்புடன் அனுகு - எந்த ஒரு செயலையும் ரசித்து அதனை செய்யவேண்டும். பிறரிடம் பழகும்போது ஒவ்வொரு முறை அவர்களை அனுகும்போது அன்போடும் பாசத்தோடும் அனுகினால் ஊரில் உள்ள அனைவருமே நமக்கு எப்போதும் நண்பர்களாக இருப்பர்.


2. ஆணவம் அகற்று - செருக்கு, அதாவது ஆணவம்தான் ஒருவனுக்கு
அழிவை ஏற்படுத்தும் நோய். அதனை கை விட்டால் நம் பெயர் இந்த உலகம் அழியும் வரை இருக்கும்.


3. இரவல் விலக்கு
– கடன் வாங்கக்கூடாது. ‘கடன் அன்பை முறிக்கும்’ என்பார்கள். மேலும் கடன் வாங்குவதால் பல பிரச்சினைகள் வருகின்றன. உதாரணத்திற்கு ஒரு ஏழைப் பெண்மணி ஒருவளிடம் நகை இரவல் வாங்கி ஒரு திருமணத்திற்கு அணிந்து செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஒருவேளை அதை அவர் தொலைத்துவிட்டால் ஏழையான அவர் எப்படி அதனை நகைக்குச் சொந்தக்காரரிடம் கொடுப்பார்?


4. ஈதல் ஒதுக்கேல் – நாம் செய்யும் தர்மம்தான் நாம் சாகும் வரை நம் கூடவே வரும். எனவே தர்மம் செய்வதை ஒதுக்கவே கூடாது.


5. உறுதியே துணை
– மனதில் உறுதி வேண்டும். உறுதியோடு செய்யும் செயல் ஒவ்வொன்றும் வெற்றியடையும். உறுதிதான் நமது வாழ்க்கைக்குத் துணை.


6. ஊனத்தை இகழேல் – ஒரு ஊனமுற்றவரைப் பார்த்து இகழும்முன் அந்த ஊனம் நமக்கு வந்தால் என்ன ஆகும் என்று யோசித்துப் பார்த்தால் நாம் அவரை இகழமாட்டோம்.


7. எள்ளி நகையேல்
– பிறரை அவரது மனம் புண்படும்படி பேசுவது, அவர்களைப் பார்த்து கேவலமாக சிரிப்பது போன்றவைகளைத் தவிர்க்கவேண்டும்.


8. ஏளனம் பேசேல் – மற்றவர்களை குறைத்து மதிப்பிட்டு பேசுதல், அவதூறு பேசுதல், இவரிடம் அவரைப் பற்றி ஏளனமாக பேசுதல், அவரிடம் இவரைப் பற்றி ஏளனமாக பேசுதல் இவைகளையெல்லாம் தவிர்க்கவேண்டும்.


9. ஐம்புலன் அடக்கு
– நமது ஐம்புலங்களால் வரும் பிரச்சினைகள்தான் அதிகம். எனவே ஐம்புலங்களை அடக்கி ஒழுக்கமாக வாழவேண்டும்.

10. ஒன்றே இறைவன்
– சாதி, மத, இன கலவரங்கள் கூடாது. உலகில் உள்ள அனைவருக்கும் இறைவன் ஒருவனே என்னும் எண்ணம் வேண்டும்.


11. ஓரம் போகேல் – எந்த ஒரு செயலிலும் முடியாது என்ற விளிம்பிற்கு செல்லக் கூடாது. அதாவது ஒரு செயலை செய்யத் தொடங்கிவிட்டு அது முடியாது என்று ஓரம் போகக்கூடாது. விளிம்பில் சென்றால் என்ன நடக்கும்? நிலை தடுமாறி விழுந்து பலத்த அடி வாங்குவோம்.


12. ஔவை சொல் கேள் – இங்கு ஔவை என்பதை அனுபவ அறிவு உடைய வயதானவர்கள் என்னும் அர்த்தத்தில் குறிக்கிறேன். எனவே பெரியவர்கள் சொல்வதை கடைபிடிக்கவேண்டும். அது நமது வாழ்கையின் முன்னேற்றதிற்கு உதவும்.

13. அஃதும் இஃதூம் மேல்
– அன்று ஔவை சொன்ன ஆத்திச் சூடியும் இன்று நான் எழுதியிருக்கும் ஆத்திச் சூடியும் வாழ்கையில் கடைபிடிக்கவேண்டிய மேன்மையான கருத்துக்கள்.

நாம் காணும் கனவுகளுக்கான அர்த்தங்கள்!



நாம் தினமும் பல கனவுகளை காண்கிறோம். சில கனவுகளின் தாக்கத்தால் நாம் திடீரென்று தூக்கத்திலிருந்து விழித்து எழுகிறோம். பல கனவுகளுக்கும் நடக்கப் போவதற்கும் சம்பந்தம் இருப்போது போன்று உணர்கிறோம். சரி, நாம் காணூம் கனவுகளுக்கு அர்த்தம் உண்டா? ஆம், என்கிறார்கள் பெரியவர்கள்.

கனவு எப்படி வருகிறது?


அறிவியல் முறைப்படி:



நரம்புத் தளர்ச்சி இருந்தாலோ அல்லது மனக்குழப்பம் அதிகமாக இருந்தாலோ நமக்கு அடிக்கடி கனவு வரும்.


நினைவுகளே கனவு:



சிலருக்கு தாங்கள் பார்த்த திரைப் படங்கள் அப்படியே கனவாக வரும். நாம் என்ன நினைத்துக்கொண்டு தூங்குகிறோமோ அதுவே கனவாகவும் வரலாம். உதாரணத்திற்கு, ஒரு மாணவன் "நாளைக்கு தேர்வுக்குப் படிக்கவில்லையே, எப்படி எழுத்தப்போகிறோமோ" என்று எண்ணிக்கொண்டு தூங்கினால், அவனுக்கு தேர்வு எழுதுவது போன்றும், அதில் தேர்ச்சி பெறாதது போன்றும் கனவு வரலாம். இந்த மாதிரி கனவுகளுக்கெல்லாம் அர்த்தம் இல்லை.


மத நம்பிக்கையின் படி:



கடவுள், அவரை வேண்டிக்கொள்பவர்களுக்கு கனவு மூலமாக சிலவற்றை தெளிவுபடுத்துவார். பிரியமானவர்களிடம் கனவு மூலம் பேசுவார். பிற்காலத்தில் நடக்கப் போகும் தீங்கை காட்டி எச்சரிப்பார்.
உதாரணமாக, பைபிளில் ஏரோது என்னும் மன்னன் குழந்தை ஏசுவை கொள்ள தேடிக்கொண்டிருந்தபோது, அவரது தந்தை சூசைக்கு கனவில் தேவ தூதன் தோன்றி எச்சரித்து எகிப்துக்குச் தப்பிச் செல்லும்படி கூறினான். அவர்களும் அவ்வாறே செய்தனர். பின் அந்த மன்னன் இறந்த பிறகு மீண்டும் அதே தேவ தூதன் சூசையின் கனவில் வந்து, ஏரோது இறந்துவிட்டான் என்பதையும் அவர்கள் சொந்த ஊருக்குச் செல்லலாம் என்பதையும் கூறினான். அவர்களும் அவ்வாறே செய்தனர்.


சில கனவுகள் மற்றும் அதன் அர்த்தங்கள்:



பெரியவர்கள் சிலர் ஒவ்வொரு கனவுக்கும் அர்த்தம் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். அவற்றை தொகுக்க எடுக்கப்பட முயற்சிதான் இக்கட்டுரை.
சில வயதானவர்களிடம் கேட்டறிந்து பின்வரும் சில கனவுகளையும் அதன் அர்த்தங்களையும் எழுதுகிறேன்.


நல்ல கனவுகள்:


· பால் வாங்குவது போன்று கனவு கண்டால், நமக்கு வரவு, நல்ல சம்பவம், மன மகிழ்ச்சியான நிகழ்ச்சி அல்லது வாழ்கையில் முன்னேற்றம் நடப்போகிறது என்று அர்த்தம்.

· தலையில் பூச்சூடுவது போன்ற கனவு-குடும்பத்தில் அமைதி மற்றும் நிம்மதி.

· பழம் சாப்பிடுவது- ஒரு செயலின் வெற்றியை குறிக்கிறது.

· கனவில் சாவு விழுந்தால் சுப நிகழ்ச்சி (திருமணம் போன்றது) நடக்கப்போகிறது என்று அர்த்தம்.

· நம் கையில் உள்ள பணத்தை யாருக்காவது கொடுத்துவிட்டால், நம்மிடம் உள்ள வியாதிகள் நீங்குகிறது என்று அர்த்தம்.

· நம் தலை முடி நிறைய இருப்பது போன்ற கனவு- நாம் சந்தோஷமாக இருப்பதற்கான சூழ்நிலை இருக்கிறது.

· கனவில் பூ வாங்கினாலும் நல்லது. நமக்கு வரவு இருக்கிறது என்று அர்த்தம்.

· நாம் உயரப் பறப்பது போன்று இருந்தால், நமது வாழ்கையில் பிரச்சினைகளில் இருந்து துரிதமான முன்னேற்றம் அடையப் போகிறோம் என்று பொருள்.

· படிக்கட்டு ஏறினாலோ அல்லது உயரமான பகுதிகளுக்கு ஏறினாலோ, நாம் பிரச்சனைகளில் இருந்து படிப்படியாக முன்னேறி வருகிறோம் என்று அர்த்தம்.

· கனவில் யாரேனும் இறந்தால், அவர்களுக்கு ஆயுள் கெட்டி என்று அர்த்தம்.

· வீட்டில் விளக்கு எறிதல் - குடும்பம் என்ற விளக்கு நன்றாக இருக்கிறது.

· பேருந்தில் அல்லது ஏதேனும் ஒரு வாகனத்தில் பயணம் செய்யும்போது, வழியில் இறங்கிவிட்டதைப் போன்று கனவு வந்தால், நாம் ஏதோ ஒரு பெரிய பிரச்சினையில் இருந்து தப்பித்துவிட்டோம் என்று அர்த்தம்.
கெட்ட கனவுகள்:

· கனவில் பணம் வாங்கினால் துன்பத்திற்கு உள்ளாக நேரிடும் அல்லது நோய் வாய்ப்பட நேரிடும் என்று அர்த்தம்.

· வீட்டில் விறகு அடிக்கியிருப்பது போன்றோ அல்லது விறகு சம்பந்தமான கனவு வந்தால், வீட்டில் அல்லது வெளியில் சண்டை வரும்.

· தண்ணீரில் நீந்துவது போன்ற கனவு - வாழ்கையில் இன்னும் போராட வேண்டியிருக்கிறது அல்லது ஏதோ ஒரு போராட்டத்தில் நாம் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம்.

· பெரிய பள்ளத்தில் அல்லது குழியில் இருப்பது போன்றும் எப்படி வெளியில் வரப்போகிறோம் என்று எண்ணினால், சிக்கலான பிரச்சினையில் இருக்கிறோம் சமாளிப்பது சற்று கடினம் என்று அர்த்தம்.

· மேட்டுப் பகுதியில் இருந்து பள்ளத்தில் விழுந்தால், படு தோல்வியை சந்திக்கப் போகிறோம் என்று அர்த்தம்.

· சாப்பிடுவது போன்ற அல்லது தலை குளிப்பது போன்ற கனவு - நாம் நோய் வாய்ப் பட வாய்ப்பு உள்ளது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

· வாந்தியெடுப்பது அல்லது வாயிலிருந்து ஏதோ எடுத்தல் – அதிகமான துன்பங்களை அனுபவிக்கவேண்டியிருக்கிறது.

· நமக்குத் தெரிந்தவர்கள் அல்லது உறவினர்கள் நமது வீட்டில் சாப்பிடுவது போன்ற கனவு - அவர்களுக்கும் நமக்கும் விரோதம் ஏற்படும்.

· அரிசி வீட்டில் கொட்டிக் கிடத்தல் - கெட்ட செய்தி வரப்போவதற்கான அறிகுறி.

· தேர்வு எழுதுவது போன்ற கனவு - பிரச்சினைகள் மற்றும் போராட்டங்கள் வலுக்கிறது.

· கனவில் திருமணம் நடந்தால்- துயர செய்தி, துயர சம்பவம்.

· கனவில் அடுத்தவர்களுக்கு நமது கையில் உள்ள பாலைக் கொடுத்தால், நமது வீட்டுச் செல்வம் நம்மை விட்டுப் போகிறது என்று அர்த்தம்.

· கனவில் அடுப்பு எறிந்தால், வீட்டில் சண்டை.

· புது வீடு கட்டுதல், மரம் சாய்தல் மற்றும் வீடு இடிதல் - இழப்பிற்கு அறிகுறி.

· கனவில் தலை முடி கொட்டுதல் அல்லது வழுக்கைத் தலை - நமக்கு மிகப்பெரும் அவமானம் மற்றும் நஷ்டம் வரப்போகிறது.

· கனவில் இனிப்பு, வேர்கடலை மற்றும் மீன் சாப்பிடுவது அல்லது இவைகள் கண்ணுக்குத் தென்படல் - நோய்க்கு அறிகுறி.

· தலையில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருள் இருந்தால், கொடிய நோய்கள் வரப்போகிறது என்று அர்த்தம்.

· பல் அடி படுவது, மற்றும் மலம் அல்லது சிறு நீர் கழிப்பது - அவமானங்கள் மற்றும் துன்பங்கள் வருகிறது.

· கனவில் கையெழுத்து போடுவது - பெரிய துன்பம் வரும்.

· இறந்தவர்கள் நம்மை அழைத்து, நாம் வருகிறோம் என்று சொன்னால், நமது உயிருக்கு ஆபத்து.

· வாகனங்களில் ஏறுவது போன்ற கனவு - நோயின் வழியில் பயணம் செய்கிறோம்.

· காட்டில் இருப்பது போன்று கனவு வந்தால், பிரச்சினைகள் மத்தியில் வாழ்கிறோம் என்று அர்த்தம்.

· தேரை அல்லது ஆமை வீட்டில் நுழைதல் - தொடர்ச்சியான கொடுமையான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.


சில உண்மைக் கனவுகளும் அதன் பிறகு நடந்த சம்பவங்களும்:



எனது பாட்டியிடம் இந்த கனவுகளுக்கு அர்த்தம் கூறுவது பற்றி கேட்டதற்கு அவர் கூறியதாவது. “நாம் பல கனவுகளைக் காண்கிறோம். ஆனால் தூங்கி எழுந்தவுடன் அனைத்தும் ஞாபகம் இருப்பதில்லை. ஒரு சிலது மட்டும்தான் ஞாபகம் இருக்கிறது. அதுவும் நமது வாழ்க்கைக்குத் தொடர்புடையதாகவும் இருக்கிறது. அந்த கனவு தொடர்பான சம்பவங்கள் பல வருடங்கள் கழித்து நடந்தாலும் அந்த கனவிற்கான அர்த்தம்தான் அந்த சம்பவம் என்றும் தெரிகிறது. அது போலத்தான் என் தோழி, கனவில் யாரோ ஒருவர் அவளிடம் வீட்டில் எரியும் ராந்தல் விளக்கைக் கேட்டதற்கு தர மறுத்திருக்கிறாள்.


ஆனால் அவர் வலுக்கட்டாயமாக பிடுங்கிக் கொண்டு சென்றிருக்கிறார். அவள் விழித்து எழுந்த பிறகு ‘ஐயோ ! விளக்க கொடுத்திட்டேனே, என்ன நடக்கப் போகப்போகுதோ !‘ என்று புலம்பினாள். நாங்கள் எல்லாரும் அவளிடம் ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னோம்.


ஆனாலும் அவள் பயந்ததுபோலவே நடந்தது. அவர்களது தோட்டத்தில் மோட்டார் திருட வந்தவனை அவளது மகன்கள் அடிக்கபோய் எதிர்பாராத விதமாக அவன் இறந்துவிட்டான்.அதனால் அவளது மகன்கள், சிறை தண்டனை பெற்றனர். அவர்களது குடும்பம் சின்னாபின்னமாகிவிட்டது. இப்போது அவர்கள் விடுதலை பெற்றாலும், அவரவர்கள் வெவ்வேறு இடங்களில் உள்ளனர். கனவில் எரியும் விளக்கைக் கொடுத்தால் குடும்பம் இருட்டாகும். இப்போது அதுதான் நடந்துள்ளது.” என்று ஒரு உண்மைக் கதையைக் கூறினார். மேலும் பல உண்மைச் சம்பவங்களைக் கூறினார்.


எனது அம்மாவும், தான் கண்ட பல கனவுகளுக்கு அர்த்தங்கள் கூறுவார். அது நடந்தும் இருக்கிறது. அவற்றில் ஒன்றை சொல்கிறேன். என் அம்மாவின் உடன் பணியாற்றிய ஒரு ஆசிரியையின் தலையில் இரும்பு கிரீடம் வைத்து இருப்பது போன்று கனவு கண்டார். காலையில் எழுந்தவுடன் என்னிடம் தான் கண்ட கனவைக் கூறி அவர்களுக்கு ஏதோ கொடிய நோய் வரப்போவதாகத் தெரிகிறது, கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார். நான் அதை ஏதோ உளறுகிறார்கள் என்று விளையாட்டாக எடுத்துக் கொண்டேன். ஆனால், சில நாட்களில் அந்த ஆசிரியை மிகுந்த தலைவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோதித்தபோது அவருக்கு மூளைப் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. உடனே அறுவை சிகிச்சை செய்தார்கள். அவர் ஒரளவு குணமடைய ஐந்து வருடம் ஆனது.


ஒரு புறம் சிலருக்கு மறைமுகமாக கனவுகள் வரும்போது, சிலருக்கு நேரடியாக நடக்கப் போகும் நிகழ்வுகள் அப்படியே கனவில் வந்துகொண்டிருக்கிறது. என் அப்பா நான் பத்தாம் வகுப்புத் தேர்வில் 430 மதிப்பெண்கள் எடுப்பதுபோல் கனவு கண்டதாக தேர்வு முடிவுகள் வரும் நாளன்று கூறினார். முடிவுகளைப் பார்த்தப் பிறகு எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. அவர் கண்டது போலவே நானும் 430 மதிப்பெண்கள் பெற்றேன். மேலும் பனிரெண்டாம் வகுப்பிலும் 1090 மதிப்பெண்கள் பெருவதுபோல் கனவு கண்டதாக கூறினார். அதுவும் நடந்தது. இதைப் போல் எனது வாழ்க்கையிலேயே பல கனவுகள் உண்மையாக நடந்துள்ளன.


நான் கூற வருவது:



என்னதான் கனவு கண்டாலும், அதுவே நடக்கும் என்பது நிச்சயமில்லை. அதனால் மோசமான கனவுகள் வந்தால் அதை நினைத்து பயப்படாமல் துணிந்து நின்று வாழ்க்கையை எதிர் கொள்ளவேண்டும். இந்த கட்டுரை இப்படிபட்ட கனவுகளுக்கு, இப்படிப்பட்ட அர்த்தங்களைக் கூறிவருகிறார்கள் என்று சொல்ல எழுதப்பட்டதே தவிர யாரையும் பயமுறுத்துவதற்காக எழுத்தப்பட்டது அல்ல. மேலும் இதில் உள்ள கனவுகள் கண்டால் அதில் உள்ள அர்த்ததைப் போன்றே வாழ்கையில் நடக்கும் என்று கூறி உங்களை அச்சுறுத்தவும் இந்த கட்டுரையை நான் எழுதவில்லை.

பழங்கள் பழுப்பதும் பூக்கள் உதிர்வதும் ஏன்?

வாயுநிலையில் உள்ள தாவர ஊக்கியான எத்திலீன் பழங்களை பழுக்கச்செய்கிறது; பூக்களை உதிரச்செய்கிறது. பழங்கள் மற்றும் பூக்களின் வாழும்காலத்தை விரைவுபடுத்தும் இந்த எத்திலீன் வாயு தாவரசெல்களில் அதற்கான தூண்டுதல்களை ஏற்படுத்துகிறது.


தாவரங்களின் வாழ்க்கைப்பயணம் முழுவதும் எத்திலீன் வாயு உடன்செல்கிறது. தாவரநாற்றுகளின் ஒளிநாட்டம், புவிநாட்டம், வேர்நாட்டம் பண்புகளுக்கு எத்திலீன் காரணமாக இருக்கிறது.


 விதை முளைத்தலைத் தூண்டுகிறது; தடைகளைத்தாண்டி தாவரத்தை வளரச்செய்கிறது; வேர்களின் வளர்ச்சியை ஒழுங்குபடுத்துகிறது; குறிப்பாக வேர்த்தூவிகளை வளரச்செய்கிறது; நைட்ரஜனை வேர்முண்டுகளில் நிலைப்படுத்தும் செயல்களில் துணைநிற்கிறது.


ஒரு பழக்கூடையில் ஒர் அழுகிய பழத்திலிருந்து வெளிப்படும் எத்திலீன் வாயு அருகில் உள்ள பழங்கள் அழுகுவதை விரைவுபடுத்துகிறது. இதனால்தான் பழங்களையும் பூக்களையும் விற்பவர்கள் அன்றாடம் தரம்பிரித்து அழுகிப்போனவற்றை அகற்றிவிடுகின்றனர்.


அதேசமயம் நோய்க்கிருமிகளையும் பாதகமான சுற்றுச்சூழலையும் தாங்கிநிற்கும் வலிமையையும் இந்த எத்திலீன் வாயுதான் தாவரத்திற்கு அளிக்கிறது. அதிகப்படியான எத்திலீன் உற்பத்தி விளைபொருட்களில் நாசத்தை ஏற்படுத்துவதால் எத்திலீன் உற்பத்தியை கட்டுப்படுத்தும் ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொள்கின்றனர்.


தாவரங்களில் காணப்படும் EIN2 என்ற புரதம் எத்திலீனின் முயற்சிகளை முறியடிக்கவல்லது என்று ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன. அழுகுதல் மற்றும் உதிர்தல் காரணமாக ஏற்படும் பயிர் இழப்பைக்குறைப்பதற்கு இந்த ஆய்வுகள் துணைசெய்கின்றன.

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்!



      ஜாதிகள் இருந்தாக வேண்டும் என்று எண்ணுபவர்கள் எவ்வழி உலகம் செல்கிறது என்பதை அறியாத ஏமாளிகள். காலத்தின் தாக்குதலைக் கயவரின் தாக்குதல் என்றும் பகுத்தறிவின் வேகத்தைப் பாப காரியம் என்றும் தவறாகக் கருதிடும் பக்குவமற்றவர்கள்.

    *

      அறிவுப் பண்ணைக்குப் பணியாற்ற முன் வருபவர்களை நாடு வரவேற்பதில்லை. நையாண்டி செய்கிறது. மதிப்பளிப்பதில்லை. தொல்லை தருகிறது. எனினும் அந்த ஒரு சிலரால்தான் நாடு முன்னேறுகிறது.

    *

      புரட்சி என்பது வாலிபத்தின் கூறு; பகுத்தறிவாளர் ஆயுதம். பழைமை விரும்பிகள் - புரட்டர்கள் - எதேச்சதிகாரிகள் ஆகியோருக்கு நஞ்சு. மக்களின் மகத்தான சக்தி. அதைப் பொசுக்கிவிட எவராலும் முடியாது.

    *

      ஏழைகளை வஞ்சிக்க ஓர் ஏற்பாடு. அதற்குப் பெயர் மதம். உழைக்கிறவனை ஒடுக்குவதற்கு ஓர் இயந்திரம் - அதற்குப் பெயர் ஜாதி. பகற் கொள்ளை அடிப்பதற்கு ஒரு திட்டம் - அதற்குப் பெயர் பூசை, சடங்கு, தட்சணை.

    *

      சமத்துவம், சமதர்மம் போன்ற இலட்சியங்களைப் பேசுவது சுலபம். சாதிப்பது கடினம். அந்த இலட்சியத்தின் சாயலை - முழுப்பயனைக்கூட அல்ல - சாயலைப் பெறுவதற்கே பல நாடுகளில் பயங்கரப் புரட்சிகள் நடந்திருக்கின்றன. நினைவிருக்கட்டும்.

    *

      மனித சமுதாயத்தின் அல்லலை, விஞ்ஞானம் எந்த அளவு குறைத்திருக்கிறது என்பது பற்றி எண்ணினால் மக்கள் வீழ்ந்து வணங்கவும் செய்வார்கள் விஞ்ஞானத்தின் முன்பு. மனித சமுதாயத்தின் வேதனையை விஞ்ஞானம் அந்த அளவுக்குக் குறைத்திருக்கிறது.

    *

      ஒருவரை ஒருவர் கண்டதும் முகமலர்ச்சி சிரமமின்றி ஏற்படவேண்டும். பயன் கருதி அல்ல - பாசாங்குக்கு அல்ல - அர்த்தமற்று அல்ல - கண்டதும் களிப்பு - நம்மைப்போல ஒருவன் என்ற நினைப்பிலிருந்து களிப்பு மலர வேண்டும். அந்த அகமலர்ச்சிக்குப் பெயர்தான் தோழமை.

    *

      ஆலமரத்துப் பிள்ளையாருக்குக் கர்ப்பூரம் வாங்கிக் கொளுத்துவதைவிட ஆரஞ்சுப் பழத்தையே கண்டிராத உன் அருமைக் குழந்தைக்கு ஓர் ஆரஞ்சு வாங்கிக் கொடுப்பது மேல் என்று கூறுகிறது திராவிட இயக்கம். கூறக்கூடாதா? கூறுவது குற்றமா?

    *

      ஜாதி முறையை நாம் எதிர்க்கிறோம் என்றால் பொருளாதார பேத நிலையை உண்டாக்கியதும் நிலைத்திருக்கச் செய்வதுமான கொடிய ஏற்பாட்டைத் தகர்க்கிறோம் என்று பொருள். அதாவது சமதர்மத்திற்கான சூழ்நிலையை ஏற்படுத்துகிறோம் என்று அர்த்தம்.

கண்டங்களின் பெயர்ச்சி....

எல்லோரும் உலக வரைப்படத்தைப் பார்த்திருப்பர். அதில் கண்டங்களின் வடிவையும் இடங்களையும் பார்த்திருப்பர். என்றாலும்கூட அவர்கள் இன்று காண்பது போலவே உலகம் என்றும் ஒரே அமைப்பில் காணப்பட்டதில்லை.


எழுபது ஆண்டுகளுக்கு முன்னால், அல்பிரட் வெக்கனர் என்னும் பெயரிய நிலநூல் அறிஞர் ஒருவர், இன்று காணப்படும் கண்டங்கள் இப்போது இருப்பதை விட மிக நெருக்கமாக இருந்ததாகக் கூறுகின்றார். அக்கண்டங்கள் இப்போது இருக்கும் இடங்களுக்கு மெல்ல மெல்ல பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் பெயர்ந்து வந்தன. இங்குக் காணப்படும் வரைப்படங்கள் அவ்வரலாற்றைக் காட்டுகின்றன.


1.முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன் நீங்கள் உலக வரைப்படத்தைப் பார்ப்பீர்கள் என்றால் அது ஏறக்குறைய இவ்வாறுதான் காட்சி அளித்திருக்கும். இக்கண்டங்கள் அனைத்தும் ஒரே மாபெரும் கண்டமாக ஒன்றொடன்று முற்றிலும் இணைந்திருந்தன. அதனைப் பெங்கியா என்றழைக்கின்றனர்.






2.பதினெட்டுக் கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரே கண்டமாக இருந்த பெங்கியா என்னும் இம்மாபெரும் கண்டமானது, வடக்குத் தெற்காக இரு பிரிவாகப் பிரிந்தது. வடக்குப் பிரிவு லோரேசியா என்று அழைக்கப்படுகிறது. தெற்குப் பிரிவு கோண்டுவானா என்றழைக்கப்பெறுகிறது.







3.பதிமூன்றரைக்கோடி ஆண்டுகளுக்கு முன் இன்றைய வட அமெரிக்கா ஐரோப்பாவினின்றும் ஆசியாவினின்றும் பெயரத்தொடங்கியது.






4.ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன் இன்றைய கண்டங்கள் மேலும் தொலைவாகப் பெயர்ந்தன. அவற்றின் தனித் தோற்றங்களை உங்களால் அடையாளம் காண முடிகின்றதா? இக்காலகட்டத்தில் ஆஸ்திரேலியா இன்னமும் தெந்துருவத்துடன்( அண்டார்ட்டிக்கா ) இணைந்திருப்பதைக் கவனியுங்கள்






5.இந்த வரைப்படம் கண்டங்களின் இன்றைய இடங்களைக் காட்டுகின்றது. ஆனால் அவை இன்னமும் தொடர்ந்து பெயர்ந்து கொண்டுதான் இருக்கின்றன எனபதை நினைவில் கொள்ளுங்கள்






வட அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஓர் ஆண்டுக்கு இரண்டு செண்டி மீட்டர் இடைவெளியில் ஒன்றைவிட்டு ஒன்று பெயர்ந்து கொண்டுள்ளன. இன்றிலிருந்து எதிர்வரும் 5 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு கண்டங்களின் தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பதை நீங்களே ஊகித்து ஓர் உலக வரைப்படத்தை வரைந்து பாருங்களேன். இன்னும் 5 கோடி ஆண்டுகாலத்தில் அவை ஆயிரம் கிலோ மீட்டர் இடைவெளியைக் கொண்டிருக்கும்.

காதலைப் பற்றிய கருத்துக்கள்..


 இளம் வயதில் பதின்ம வயதுப் பருவம் காதலுக்கான முதல் பருவம். இந்த வயதில்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல் துவங்குகிறது. காதலிக்க விரும்புபவர்களுக்காக மட்டுமல்ல, காதலைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்காகவும்     காதலைப் பற்றி சிலரின் கருத்துக்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

 
      காதல் - இருமல் - புகை - பணம் ஆகியவைகளை நீண்ட காலம் மறைக்க முடியாது.

- பாரசீகப் பழமொழி


    *

      சாதாரணப் பெண்களுக்குத்தான் காதலைப் பற்றித் தெரியும். அழகான பெண்களுக்குத் தங்கள் அழகைப் பற்றிய சிந்தனைதான் இருக்கும்.

- காத்தரின் ஹெப்பர்ன்

    *

      காதலின் எதிர்ப்பதம் வெறுப்பு அல்ல அறியாமை.

- பிரயன் வாங்

    *

      காதலும், குருட்டுத்தனமும் இரட்டைச் சகோதரிகள்

-ரஷ்யப் பழமொழி

    *

      ஒருவனுக்குக் காதல் என்பது நிராகரிக்கப்பட்டு விட்டால் பணம் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கிறது.

- டி.ஹெச். லாரன்ஸ்

    *

      பெண்ணின் காது வழியாகவும், ஆணின் கண் வழியாகவும் காதல் முதலில் நுழைகிறது.

-போலந்து பழமொழி

    *

      காதல் என்பது ஒருவித தற்காலிக மனநோய். திருமணம் செய்தால் குணமாகிவிடும்.

- ஆம்புரோஸ் பியர்ஸ்

    *

      காதல் மணல் கடிகாரம் போல. நெஞ்சு நிரம்ப நிரம்ப மூளை காலியாகிறது.

- ஜூல் ரெனா

    *

      காதலிக்காமலே இருப்பதை விட காதலித்துத் தோல்வியடைவது மேல்.

- ஆல்ஃப்ரெட் டென்னிசன்

    *

      காதலைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் காதலிக்க மாட்டார்கள்.

- டக்ளஸ் யேட்ஸ்

    *

      காதல் காலத்தை மறக்கச் செய்யும். காலம் காதலை மறக்கச் செய்யும்.

- யாரோ

    *

      காதல் நோய்க்கு மருத்துவன் இல்லை.

-ஆப்பிரிக்கப் பழமொழி

    *

      கடவுள் மனிதனுக்கு நெருப்பைக் கொடுத்தான் மனிதன் தீயணைப்புக் கருவிகளைக் கண்டுபிடித்தான். கடவுள் மனிதனுக்குக் காதலைக் கொடுத்தான் மனிதன் திருமணத்தைக் கண்டுபிடித்தான்.

- யாரோ

    *

      விவேகம் மிக்கவர்களுக்கு அதிபதி காதல்: அதை மீறுபவர்கள் அறிவில்லாதவர்கள்.

-வில்லியம் தாக்கரே.

    *

      இன்பத்தின் இனியதும் துன்பத்தின் கொடியதும் காதலே.

-பெய்லி

    *

      காதலிக்காமலே இருப்பதை விட, காதலித்து தோல்வி காண்பதே மேல்.

-டென்னிசன்

    *

      சூரியன் மறையலாம்; ஆனால், நிலையான காதல் மறைவதில்லை.

-ஊட்

    *

      உண்மை காதல் அனைத்துக்கும் பரஸ்பர மதிப்பே அடிப்படை.

-ஜார்ஜ்

    *

      காதலே, காதலின் வெகுமதி.

-ஜான் டிரைடன்.

    *

      காதல் - தன்னைத் தானே அளிப்பது; விலை கொடுத்து அதை வாங்குவதில்லை.

-லாங்பெல்லோ.

    *

      காதல் பேச முற்பட்டு விட்டால், ஊமை கூட புரிந்து கொள்வான்.

-ஸ்லிப்ட்

    *

      உண்மையான காதல், எண்ணத்திலே மலர்ந்து உள்ளத்திலே இடத்தை தேடிக்கொள்ளும்.

-கர்னிலியஸ் நீல்.

    *

      காதலால் வீரனானோர் சிலர். மூடரானோர் பலர்

-சுவீடன் பழமொழி


    *

      உலகை வலம் வரவும், சுற்றி வரவும் செய்வது காதல்.

-மார்லோ

    *

      ஆணின் காதல், வாழ்க்கையில் ஓர் அங்கம்; பெண்ணின் காதலோ அவளது முழு வாழ்வும்.

-பைரன்

    *

      காதல் ஒரு கண்ணாடி குவளை; இறுக்கமாக பிடித்தால், உடைந்து விடும்; மெதுவாக பிடித்தால், கை நழுவி உடைந்து விடும்.

-ஜெரோம்.

    *

      உண்மையான காதல் ஒரு தணியாத வேட்கை, இனிமையான தொடர்கதை, அணையா தீ.

- ஆபின்டன்

    *

      காதல் என்பது கருகிவிடும் சாதாரண மலர் அல்ல. அதன் விதைகள் சொர்க்கத்தில் இருந்து வருவது; எப்பொழுதுமே வாடாத மலர் அது.

-லோவில்

    *

      யுகமெல்லாமே உழைத்து சாதிக்க இயலாத்தை நொடிப்பொழுதில் அளிக்கிறது காதல்.

-கதே


    *

      அசடனையும் அறிவுக் கூர்மை உள்ளவனாய் மாற்றி விடும் காதல்.

-சார்லஸ் டிப்டின்.

    *

      தெய்வத்தின் தலைசிறந்த அன்பளிப்பே காதல்.

-கேபிள்

    *

      போர் வாளின்றி தன் ராஜ்ஜியத்தை ஆள்வது காதல்.

-ஹெர்பர்ட்.


    *

      காதலிக்கும் போது புத்திசாலிக்கும் முட்டாளுக்கும் இடையில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது.

- யாரோ

வருங்காலத்தில் பெரிய மனிதனாக...



ஏற்ற குறிக்கோள் எது?

ஒவ்வொருவனும் தான் பெரிய கல்விமானாகவும், பெரும் புகழ் பெற்ற சீமானாகவும் விளங்க வேண்டுமென்று விரும்புவது இயற்கை. ஆனால், அவ்விதம் விரும்புகிறானே தவிர, அதற்கு வேண்டிய வழிகளைத் தேடப் பாடுபடுவதே கிடையாது. அவ்வாறு விரும்புகின்றவன் வாழ்க்கையில் ஒப்பாரும் மிக்காரும் இன்றி விளங்க, எவரும் அறியத்தக்கனவும், மேற்கொள்ளத்தக்கனவுமாகிய கொள்கைகள் சில உள்ளன என்பதையும் உணர வேண்டும். தன் அறிவு, ஆற்றல்களுக்கும் ஏற்ற ஒரு குறிக்கோளை ஒவ்வொருவனும் ஆராய்ந்து எடுத்தல் வேண்டும்.

-ராக்பெல்லர்.


செயலாகும் எண்ணங்கள்

ஒரு செயலை உன்னால் செய்ய முடியுமென்று நீ திட்டமாய் எண்ணுவாயானால் அது எவ்வளவு துன்பம் நிரம்பியதாயிருப்பினும் அதை நீ செய்தே முடிப்பாய். ஆனால் அதற்கு மாறாக இவ்வுலகத்தில் மிக எளியதாயிருக்கக் கூடிய செயலையும் உன்னால் செய்ய முடியாது என்று எண்ணுவாயின் அதை உன்னால் ஒருக்காலும் செய்ய முடியாது. சிறு குப்பை மேடுகள் கூட உனக்குக் கடக்க முடியாத பெரும் மலைகளாகத் தோற்றாமளிக்கும்.

-எமலிகோ.


இல்லாத சக்தி

கடற்கரையில் உடைந்து கிடக்கும் மரக்கலங்கள் போன்று காலமென்னும் அலைகளால் சிதறடிக்கப்பட்ட மனிதர்களை நாம் பார்க்கிறோம். அவர்கள் சிறந்த திறமைசாலிகளாகத்தாம் இருந்தார்கள். ஆயினும் துணிவும், தன்னம்பிக்கையும் ஒரு முடிவுக்கு வரும் சக்தியும் இல்லாததனால் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.

-பாஸ்டர்.


திடமான நம்பிக்கை

வருங்காலத்தில் பெரிய மனிதனாகக் கூடிய இன்றையச் சிறியவன், தன் மனதில் இப்பொழுதிலிருந்தே ஆயிரக்கணக்கான் இன்னல்கள் ஏற்படினும் அவ்ற்றை எதிர்த்து நிற்பதோடு மட்டுமில்லாது ஆயிரக்கணக்கான தோல்விகள் ஏற்படினும் வென்றே தீருவது என்ற திடமான நம்பிக்கை கொள்ள வேண்டும்.

-தியோடர் ரூஸ்வெல்ட்.


தைரியத்தைக் கைவிடாதே

ஒரு போதும் எடுத்த காரியத்தைக் கைவிடாதே! எத்தனையோ சந்தர்ப்பங்களும் மாறுதல்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அவை தன்னம்பிக்கை கொண்டவர்களுக்கு நிச்சயம் உதவி செய்யும். பெரிய நெருக்கடிகளுக்கிடையேதான் இறைவன் வெற்றி பெறுவதற்கான வழியையும் வகுக்கின்றான். ஆனால் நீங்கள் மட்டும் மனம் தளராதீர்கள்! ஒரு போதும் தைரியத்தைக் கைவிடாதீர்கள்! ஏனெனில் துன்பமும் இன்பமும் சேர்ந்து வருவதே உலக இயல்பு என்பதை உணர்ந்து எவன், தைரியத்தை இழக்காதிருக்கிறானோ அவனே பெரும் அறிவாளியாவான். எல்லா முதுமொழிகளிலும் மிகவும் முக்கியமானது எதுவென்றால் ஒரு போதும் தைரியத்தைக் கைவிடாதே எனும் எச்சரிக்கைதான்.

-கவிஞர் ஹோம்ஸ்.

எங்கே இருக்கிறது மகிழ்ச்சி?


 மகிழ்ச்சியை வளருங்கள்

        நன்கு மனம் விட்டுப் பலமாகச் சிரியுங்கள். உலகம் உங்களுடைய சிரிப்பில் பங்கு எடுத்துக் கொள்ளும். நீங்கள் அழுது பாருங்கள், உங்களுடைய அழுகையில் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள். நீங்கள் ஒருவர்தான் அழுது கொண்டிருப்பீர்கள். உங்களுடைய அறிவின்மையும், வருத்தமும் இந்த உலகத்திற்குத் தேவையில்லாதவைகள். உங்களுடைய வருத்தத்தின் பளுவைச் சுமக்காமலேயே மற்றவர்கள் தாங்க முடியாத வருத்தத்தில் ஆழ்ந்து போயிருக்கிறார்கள். ஆகையால் மகிழ்ச்சியைப் பற்றிப் பேசி அதை மற்றவர்களிடம் பரப்ப முயற்சி செய்யுங்கள். உலக மக்களின் சந்தோசத்தை வளர்ச்சியில் ஈடுபடுங்கள்.

-வில்காய்


மகிழ்ச்சியைக் கொடுங்கள்

       மகிழ்ச்சியை பற்றி நினையுங்கள். மகிழ்ச்சியாக இருப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியை நம்புங்கள். பழக்கத்தின் மூலம் மகிழ்ச்சியை நிலை நிறுத்துங்கள். அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுங்கள்.

-நார்மன் வின்சென்ட் பீல்



மகிழ்ச்சியை அடைய

      மகிழ்ச்சியை நாடிச் செல்வதில் பாதி மக்கள் தவறான பாதையில் செல்கின்றனர். எதையும் தன் சொந்தமாக்கிக் கொள்வது, பிறர் உழைப்பை அடைவது இவைதான் மகிழ்ச்சி என்று கருதுகின்றனர். மகிழ்ச்சி என்பது பிறருக்குத் தருவதில், பிறருக்காக உழைப்பதில்தான் இருக்கிறது. பெறுவதை விட தருவதுதான் மகிழ்ச்சி அடைவதற்குள்ள ஒரே வழி. அது ஒன்றேதான் அகலமான சீரான வெற்றிப்பாதை.

-ஹென்றி டிரம்மண்ட்


மகிழ்ச்சியை அனுபவிக்க

       பெரிய பணக்காரனாக வரவேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறு கிடையாது. வாழ்க்கையை நன்கு அனுபவித்து வாழவேண்டும் என்று ஆசைப்படுவதிலும் சிறிது கூட தவறு கிடையாது. ஆனால் ஒருவன் சேர்க்கும் செல்வம், அனுபவிக்கும் மகிழ்ச்சி மற்ற யாருக்கும் சிறிது கூட துன்பம் தராமலிருக்கும்படி  பார்த்துக் கொள்ள வேண்டும்.

-ஆண்ட்ரூ கார்னீஜி

 
   வெற்றி என்பது நம்முடைய திறமை, வாய்ப்பு முதலியவற்றைப் பொறுத்து அமைவதல்ல...நாம் எதிர்பார்க்கிறபடி அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும் என்று தொண்ணூறு சதவிகிதம் ஆக்கப்பூர்வமான மனோபாவத்துடன் செயல்படுகிறவர்களுக்கே வெற்றி கிடைக்கும். நல்லதே நடக்கும் என்ற உறுதியான மனோபாவம்தான் உண்மையில் ஒவ்வொருவரும் வெற்றி பெற அடிப்படை ஆதாரமாக இருக்கிறது.

- ஜார்ஜ் வெயின் பர்க்

      சோம்பல் ஒரு வீட்டின் உள்ளே நுழையும்போதே மற்ற எல்லாக் கெட்ட குணங்களுக்கும், துன்பங்களுக்கும் கதவைத் திறந்து வைக்கின்றன.

-அலெக்ஸாண்டர் டூமாஸ்

 
      மிகவும் நம்பிக்கை வாய்ந்தவர்களாக இருங்கள். பிறர் நம்பும்படியாக உண்மையாகவே நடந்து கொள்ளுங்கள்.

 -எஸ்.சர்மா


      தீமைகள் உங்களை அணுகாமலிருக்க, உங்கள் எண்ணங்களில் தீமைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

-சாக்ரடீஸ்

      மற்றவர்களுக்கு கெடுதல் செய்வதை ஒரு பொழுது போக்காக வைத்துக் கொள்ளாதீர்கள்.

 -வாலியா

 

      உங்கள் அம்மாவிடம் சொல்லிப் பெருமைப்பட முடியாத எந்த ஒரு செயலையும் செய்யாதீர்கள்.

-எஸ். சர்மா

      நாம் நினைப்பதை விட நோய்களைக் குணப்படுத்தும் சக்தி நம்மிடம் அதிகமாகவே இருக்கிறது.

-ஸ்டேபிள்ஸ்


      திட்டவட்டமான இலட்சியமில்லாதவர்கள்தான், இலக்குகள் உள்ளவர்களுக்காக என்றென்றும் வேலை செய்பவர்களாக வாழ்கின்றனர்.

- பிரையன் டிரேசி


      நீங்கள் செயல்படுகிறவர்கள் என்றால், அறிவைத் தேடிப் பெற்றுப் பயன்படுத்திக் கொள்கிறவராக இருக்க வேண்டும். ஆர்வமாக வாழ வெண்டும்.

 -ஹெச்.ஹில்


      நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்குத் தொடர்ந்து கெடுதல் செய்வதன் மூலம், மன்ப்பூர்வமான வாழ்க்கை அமையாது. சேவை செய்வதன் மூலம்தான் மனப்பூர்வமான வாழ்க்கை அமைய முடியும்.

-எஸ். சர்மா

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top