.......................................................................... ....................................................................... ......................................................................

Friday 1 November 2013

விண்டோஸ் 8.1 அப்கிரேட் அவசியமா?

 

விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வர்த்தக ரீதியாக வெளியாகியுள்ள நிலையில், புதிய இன்டர்பேஸ் கூடுதல் வசதிகளையும், சங்கடங்களையும் தரும் நிலையில், கம்ப்யூட்டர் பயனாளர்களில் பலர், நாம் விண்டோஸ் 8.1க்கு மாறத்தான் வேண்டுமா என எண்ணத் தொடங்கி உள்ளனர்.

1. நீங்கள் ஏற்கனவே, விண்டோஸ் 8 உள்ள பெர்சனல் கம்ப்யூட்டர் வாங்கிப் பயன்படுத்திக் கொண்டு இருந்தால், அது உங்களுக்குப் பிடித்ததாக இருந்தால், விண்டோஸ் 8.1க்கு அவசியம் மாறிக் கொள்ளுங்கள். இலவசமாகவே மைக்ரோசாப்ட் இதனைத் தருகிறது.

2. நீங்கள் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி வருகிறீர்களா? அது உங்களுக்கு சகல விதத்திலும் பயனுள்ளதாக, சிரமம் தராததாக உள்ளதா? அப்படியானால், புதியதாக ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் வாங்கும் வரை இதனையே பயன்படுத்தவும். மேலும், உங்கள் விண்டோஸ் 7 உள்ள பெர்சனல் கம்ப்யூட்டரில் டச் ஸ்கிரீன் இருக்காது. விண்டோஸ் 8 மற்றும் 8.1 சிஸ்டங்கள், டச் ஸ்கிரீன் இல்லாமல் இயங்கினாலும், பல வசதிகள் உங்களுக்குக் கிடைக்காது. எனவே, விண்டோஸ் 7 உடன் உங்கள் பயணம் சில காலத்திற்குத் தொடரட்டும்.
 
3. விண்டோஸ் 8 சோதனை சிஸ்டம் பயன்படுத்தி, அதன் செயல்பாடுகள், உங்களிடம் இருந்து எதிர்பார்க்கும் மாற்றங்கள் உங்களுக்குப் பிடிக்க வில்லையா? அதனால், புதிய கம்ப்யூட்டர் வாங்கும் முடிவைச் சிறிது காலம் தள்ளி வைத்திருக்கிறீர்களா? இந்த முடிவை ஒதுக்கித் தள்ளுங்கள். உடனே, விண்டோஸ் 8 சிஸ்டம் தரும் வசதிகளைப் பயன்படுத்த முயற்சிக்கவும். புதிய கம்ப்யூட்டர் இனி விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் தான் கிடைக்கும். எனவே, அதற்குப் பழக்கிக் கொள்ளுங்கள்.
Click Here

பத்து லட்சம் ஆண்டு டேட்டா பாதுகாக்கும் டிஸ்க்!



காந்த சக்தியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஹார்ட் டிஸ்க்குகள், அதிக பட்சம் பத்து ஆண்டு காலம் நல்லபடியாக இயங்கும். பல்லாண்டுகள் தகவல்களைச் சேர்த்துப் பாதுகாக்க விரும்பு பவர்கள், இதனாலேயே மேக்னடிக் டேப்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தேவைக்குப் பதில் கொடுக்கும் வகையில், பத்து லட்சம் ஆண்டுகள் கூடப் பாதுகாப்பாக தகவல்களைப் பதிந்து வைக்கக் கூடிய டிஸ்க்குகளை நானோ தொழில் நுப்ட வல்லுநர்கள் உருவாக்கியுள்ளனர்.

1956 ஆம் ஆண்டில், ஐ.பி.எம். நிறுவனம் முதன் முதலாக, காந்த சக்தியின் அடிப்படையில் இயங்கும் ஸ்டோரேஜ் டிஸ்க்கினை, வர்த்தக ரீதியாக அறிமுகப்படுத்தியது. IBM 305 RAMAC என அழைக்கப்பட்ட இந்த டிஸ்க், 24 அங்குல டிஸ்க்காக இருந்தது. 5 எம்பி டேட்டாவினை (அந்த காலத்தில் இது ரொம்ப அதிகம்) அதில் பதிந்து பாதுகாக்கலாம். இப்போது, 3.5 அங்குல அளவிலான டிஸ்க்குகளில் 1 டெரா பைட் அளவு கொள்ளும் ஹார்ட் டிஸ்க்குகள் எளிதாக, விலை மலிவாகக் கிடைக்கின்றன. மின் சக்தி பயன்பாடும் முன்னேறிய நிலையில் உள்ளது. இது நவீன தொழில் நுட்பத்தினால் சாத்தியப்பட்டது என்றாலும், எத்தனை ஆண்டுகள், இதில் பதியப்படும் தகவல்கள் சேதமடையாமல் இருக்கும் என்பதில், நாம் இன்னும் முன்னேற்றம் காண இயலவில்லை. அதிக பட்சம் பத்து ஆண்டுகள் என்ற கால எல்லையிலே தான் இருக்கிறோம்.

அப்படியானால், நம் கலாச்சாரம், சமுதாயக் கூறுகள் ஆகியவற்றை வெகு காலம் பாதுகாத்து வைக்க என்ன செய்திடலாம்? என்ற கேள்வி எழுந்தது. இதற்கான விடையாக, இப்போதைய நானோ தொழில் நுட்பத்தில் டிஸ்க் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. Jeroen de Vries என்னும் வல்லுநர் தலைமையிலான குழுவினர், நெதர்லாந்தில் உள்ள ட்வெண்டி பல்கலைக் கழகத்தின் (University of Twente) சோதனைச் சாலையில் இதனை உருவாக்கியுள்ளனர். இந்த டிஸ்க்கில் பதியப்படும் தகவல்கள், பத்து லட்சம் ஆண்டுகள் மட்டுமின்றி, அதற்கும் மேலாகவும் பாதுகாத்து வைக்கும் என, அதன் மீது நடத்தப்பட்ட சோதனைகள் தெரிவித்துள்ளன.

இவர்களின் நிபுணத்துவம், டிஸ்க் உருவாக்குவதனை முக்கியமானதாக எடுத்துக் கொள்ளவில்லை. அநேக ஆண்டுகள் தொடர்கையில், ஒரு பொருள் நிலைத்து இருக்க வேண்டுமாயின், காலத்தின் அழிப்பு தன்மையை எதிர்த்து நிற்க என்ன வேண்டும் என ஆய்வு செய்து வழிகளைக் கண்டறிந்துள்ளனர். அறிவியலில் இதனை Arrhenius law என அழைப்பார்கள். அந்தச் சோதனையில் கிடைத்த முடிவுகளை, டிஸ்க் தயாரிப்பில் பயன்படுத்தி உள்ளனர்.

மிக மெல்லிய உலோகமான டங்க்ஸ்டன் இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால், இதனை உருக்க வேண்டும் என்றால் 3,422 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவை. எனவே, பாதுகாப்பானது என இதனைத் தேர்ந்தெடுத்துள்ளனர். டேட்டா, இதில் உள்ள வரிகளில் பதியப்படுகிறது. அதன் மேலாக பாதுகாப்பிற்கான ஒரு அடுக்கு அமைக்கப்படுகிறது. இதனை அமைக்க சிலிகான் நைட்ரைட் (Silicon nitride (Si3N4)) பயன்படுத்தப்படுகிறது. இந்த உலோகம் எந்த பாதிப்பிலும் சேதம் அடையாது. இவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட டிஸ்க்கில் டேட்டா எழுதப்பட்டு சோதனை நடத்தப்பட்டு, இறுதியில் வெற்றி பெற்றுள்ளனர்.

மேலும் இது குறித்து தகவல்கள் தேவைப்படுவோர் arxiv.org/abs/1310.2961என்ற முகவரியில் உள்ள இணையதளம் செல்லலாம்.

மொபைல் மற்றும் டிஜிட்டல் வியாதிகள்!

 
 
இன்றைய உலகம் மொபைல் போன்களால், கையளவில் சுருங்கி விட்டது. இதனால், நாம் பல வசதிகளை அனுபவிக்க முடிகிறது. யாருமே அணுக முடியாத இடத்தில், நிலையில் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. எதனையும், உலகின் எந்த மூலைக்கும் அனுப்ப முடியும் என்ற வசதி நம் பைகளில் வந்து அமர்ந்துள்ளது.

அதே நேரத்தில், இதே மொபைல் போன் பயன்பாட்டினால், நாம் பல்வேறு மன, உடல் நோய்களுக்கு ஆளாகி உள்ளோம். மேற்கு நாடுகளில், இது குறித்து பல மருத்துவ ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு உடல் ரீதியான, மன ரீதியான பிரச்னைகளை க் கண்டறிந்துள்ளனர். அவற்றை இங்கு காணலாம்.

1.நோமோ போபியா (Nomophobia): 

நோமோபியா என்பது ஸ்மார்ட் போன்களால் பெற்றுள்ள, எங்கும் காணப்படுகிற ஒரு மன வியாதியாகும். இந்த சொல், மொபைல் போன் பயன்படுத்தும் பலவகையான பயனாளர்களை ஆய்வு செய்த மேலை நாட்டு அமைப்பு ஒன்று உருவாக்கியுள்ளது. இந்த சொல் "nomobile phobia” என்பதன் சுருக்கமாகும். மொபைல் போன் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுகையில் இந்த மன வியாதிக்கு நாம் ஆளாகிறோம். ஒரு விமானம் தரை இறங்கியவுடன், அதில் பயணம் செய்தவர்களைப் பாருங்கள்.மிக வேகமாகத் தங்கள் மொபைல் போனை ஸ்விட்ச் ஆன் செய்து, ""அப்பாடா'' என்று பெருமூச்சு விடுவார்கள். அதுவரை பல மணி நேரம் மொபைல் போன் மூலம் யாரையும் தொடர்புகொள்ள முடியாததால், ஒருவகை விரக்திக்கு ஆளாகின்றனர். இதுவே நோமோ போபியா ஆகும்.

பல தலைமை நிர்வாகிகள், மருத்துவர்களை ஆய்வு செய்த போது, தாங்கள் காலையில் தூக்கத்திலிருந்து விழித்தவுடன், முதலில் செய்திடும் காரியம், மொபைல் போனை ஸ்விட்ச் ஆன் செய்து, அழைப்புகள் உள்ளனவா என்று பார்ப்பதுதான். அதுவரை, மொபைல் போனைப் பயன்படுத்தாமல் இருந்தது அவர்களிடம் இந்த போபியாவினை உண்டாக்கி உள்ளது.

ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில், இதே நோமோ போபியா என்ற பெயரில் ஓர் அப்ளிகேஷன் உருவாக்கப்படுள்ளது. இந்த அப்ளிகேஷன் நாம் எந்த வகைகளில், மொபைல் போன் ஒன்றை மிக அதிக உணர்ச்சிப் பூர்வமாக அதிகமாகப் பயன்படுத்துகிறோம் என்பதனை அளக்கிறது.

2. ஸ்மார்ட் போன் அடிமை:
 


நோமோபோபியா மன நிலை தீவிரமாக மாறுகையில், அந்த பயனாளர், ஸ்மார்ட் போன் பழக்கத்திற்கு அடிமையாகிறார். ஸ்மார்ட் போனுடன் ஒருவரின் அதீத இணைப்பு, உறவுகளைக் கெடுக்கிறது. பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகத்தில் நம் பண்பை மாற்றுகிறது. திருமணத்தின் போது கூட ஒரு மணப்பெண், தன் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்திக் கொண்டிருந்ததாக, ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. உளவியல் நிபுணர் ஒருவர் கூறுகையில், சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்ள வந்தவர்கள் கூட, மனிதர்களிடமிருந்து விலகி இருக்க, மொபைல் போனை ஒரு கருவியாகப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர் என்று கூறியுள்ளார். எந்த அளவுக்கு ஒரு மொபைல் போன் அதி நவீன வசதி கொண்டதாக உள்ளதோ, அந்த அளவிற்கு, அது ஒருவரை போன் பைத்தியமாக மாற்றுகிறது. தென் கொரியாவில், 20 சதவீத மாணவர்கள், ஸ்மார்ட் போனுக்கு அடிமைகளாக உள்ளனர் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதிலிருந்து விடுபடக் கூடிய வழிகளும் இப்போதைக்கு உறுதியாகப் புலப்படவில்லை.

3. தூக்கத்தில் மெசேஜ் டெக்ஸ்ட்:  


அமெரிக்காவில் ஐந்தில் நான்கு இளைஞர்கள், தாங்கள் உறங்கும்போதும், படுக்கையில் தங்களின் கைக்கு எட்டும் தூரத்தில் அல்லது தங்கள் மார்பு மேலாக, மொபைல் போனை வைத்து உறங்குகின்றனர். நண்பர்களிடமிருந்து மெசேஜ் வந்தால், உடனே அதனைப் பார்த்து பதில் அளிக்க இந்த ஏற்பாடு. இதனால், அவர்களின் உறக்கம், பாதி விழித்த நிலையிலேயே (“junk sleep” syndrome) நிலை கொள்ளாமல் தொடர்கிறது. இப்போது பலர், தங்கள் ஸ்மார்ட் போனில், தூங்கி வழிந்தவாறே, டெக்ஸ்ட் அமைக்கின்றனர். டெக்ஸ்ட் அமைப்பதில் பல எளிய வழிகள் இந்த ஸ்மார்ட் போனில் இருப்பதால் இந்த பழக்கம் தொற்றிக் கொள்கிறது.

4. ஸ்கிரீன் தரும் தூக்கமின்மை:


 மேற் சொன்ன இரு வித பிரச்னைகளுக்குத் (“junk sleep syndrome” and sleep texting) தொடர்பானது இந்த ஸ்கிரீன் தூக்கமின்மை நோய் ஆகும். பொதுவாக, பளிச் என்ற வெளிச்சம் இருந்தால், அது பகல் போலத் தோற்றமளித்து நமக்கு தூக்கத்தினைத் தராது. டேப்ளட் பி.சி. அல்லது ஸ்மார்ட் போனை உங்கள் கண்களுக்கு முன்னால் பிடித்து, திரையில் உள்ளதைப் படிக்க முயற்சி செய்கையில், திரை வெளிச்சம் இந்த பிரச்னையை ஏற்படுத்துகிறது.

நம் உடலுக்குள் ஒரு கடிகாரம் இயங்கிக் கொண்டே இருக்கிறது. இதனை உடல் கடிகாரம் (Body Clock) என்று அழைக்கின்றனர். இதுதான், இரவு நெருங்குகையில், இது தூங்கும் நேரம் என, உடம்பிற்கு அல்லது மூளைக்கு எடுத்துச் சொல்கிறது.இதற்கு உடலில் உள்ள மெலடோனின் (melatonin) என்ற ஹார்மோன் உதவுகிறது. நல்ல வெளிச்சம் இந்த ஹார்மோன் செயல்பாட்டினை அழுத்துகிறது.


 இதனால், நமக்குத் தூங்க வேண்டும் என்ற எண்ணம் அமுங்கிப்போகிறது. எனவே, இதிலிருந்து தப்பிக்க, ஸ்கிரீனின் ஒளி வெளிச்சத்தின் அளவை இரவில் குறைத்து வைத்து, கண்கள் அருகே இல்லாமல், தள்ளிவைத்து போனின் திரையைப் பார்க்க வேண்டும். படுக்கைக்குச் செல்ல இரண்டு மணி நேரம் முன்பாகவே, இந்த போன்களைப் பயன்படுத்துவதனைத் தவிர்க்க வேண்டும். எந்த சாதனத்தின் ஒளித்திரையும், (கம்ப்யூட்டர், லேப்டாப், டிவி) நம் கண்களைப் பாதித்து, உறக்கத்தினைக் கெடுக்கலாம். ஆனால், ஸ்மார்ட் போனால் தூண்டப்படும் இந்த தூக்கமின்மை தொடர்ந்து மக்களிடையே அதிகரித்து வருவதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அச்சிட்ட நூல்களுக்குப் பதிலாக, நூல்களைப் படிக்க, டேப்ளட் பிசிக்கள் அதிக அளவில் பயன்படுத்துவது அதிகரித்து வருவதால், டேப்ளட் பிசியினால் தூக்கமின்மை மிக அதிகமாகவே உருவாகி வருகிறது.

5. ஆமைக் கழுத்து நோய்: 

ஸ்மார்ட் போனை அல்லது எந்த மொபைல் போனையும் ஒழுங்காகப் பிடித்து பேசுவது என்ற பழக்கம், பெரும்பாலானவர்களிடம் இல்லை. நாம் ஏதேனும் வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருப்பதால், கழுத்து அருகே, போனை வைத்து, தலை சாய்த்துப் பிடித்து, போனைப் பயன்படுத்துவதே இப்போது பழக்கமாகி வருகிறது. இது தொடர் கையில், ஆமைக் கழுத்து நோய் வருகிறது. ஆங்கிலத்தில் இதனை turtleneck syndrome என அழைக்கின்றனர். தொடர்ந்து இந்த பழக்கம் உள்ளவர்களுக்கு, கழுத்தில் தீராத வலி உண்டாகிறது. இந்த வலியால் அவதிப்படுவோர் அதிகம் வசிக்கும் நாடு தென் கொரியாவாகும்.

6. வெட்டிப் பந்தா மேடை: 

சமூக தளங்களில் அதிகம் உலா வருவோருக்கு இந்த நோய் அதிகம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தளங்களில் எழுதுபவர்கள், தங்களைப் பற்றி எழுதுகையில், மிக நல்ல விஷயங்களை மட்டுமே வெளிப்படுத்தி, தானே, மிக நல்ல மனிதன் என்ற ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்குகின்றனர். சமூக இணைய தளங்கள், இந்த வெட்டிப் பந்தாவிற்கு மேடை அமைக்கின்றன. இதில் என்ன பிரச்னை என்றால், எல்லாரும் இந்த பொய்த் தோற்றத்தினை அமைக்கையில், மற்றவர்கள், தான் அது போல இல்லையே என்ற மன வருத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதனை பேஸ்புக் மனச்சுமை (Facebook Depression) எனவும் அழைக்கின்றனர்.

7. தன் காதல் மனக் கோளாறு: 

சமூக இணைய தளங்களில், பெரும்பாலானவர்கள், தங்களை விதம் விதமாக அவ்வப்போது போட்டோ எடுத்துப் பதிக்கின்றனர். இது எதற்காக? நோக்கம் என்ன? ஒன்றுமில்லை. ""இதோ ! என்னைப் பார்'' என்று கூறுவதற்காகவே. இது தன்னைத்தானே காதலிக்கும் ஒரு மனச் சுமையை உருவாக்குகிறது. மேலே கூறப்பட்ட கூற்றுகளுக்காக, ஸ்மார்ட் போன் அல்லது மற்ற மொபைல் போன்கள், பிற டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதனை நிறுத்த வேண்டும் என்று சொல்வதற்கில்லை. இவை இல்லாமல், இனி இந்தப் புவியில் வாழ்க்கை இல்லை என்ற நிலைக்கு இவற்றின் பயன்பாடு வந்துவிட்டது. இருப்பினும் மேலே தரப்பட்டுள்ள பிரச்னைகளும் நம்மிடையே தோன்றி உள்ளன. இவற்றை உணர்ந்து திருந்தினால், நமக்கும் நாட்டுக்கும் நல்லது.
Click Here

"ஹிட்' என்றால் என்ன?

இன்டர்நெட் குறித்து பேசுகையில் பலர் இந்த தளத்தின் ஹிட் எண்ணிக்கை என்ன? என்று கேட்கின்றனர். அல்லது சில தளங்களின் முகப்புப் பக்கத்தில் இத்தனை பேராக நீங்கள் இதனைப் பார்க்கிறீர்கள் என்று கணக்குக் காட்டப்படும். பலர் இதுதான் அந்த தளம் பெற்ற ஹிட்களின் எண்ணிக்கை என எண்ணுகின்றனர். இந்த ஹிட்” என்பது என்ன? அது எதனைக் குறிக்கிறது>? அதனை எப்படிக் கணக்கிடுகிறார்கள்? என்று பார்ப்போம்.

சரியாகச் சொல்வதென்றால் இந்த சொல் குறித்து பலரும் தவறாகவே கருத்து கொண்டுள்ளனர் என்று கூறலாம். பலரும் ஹிட் என்றால் ஓர் இணைய தளத்தை எத்தனை பேர் பார்த்தார்கள் என்று குறிப்பிடுவதாக எண்ணிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு முறை ஒருவர் ஓர் இணைய தளத்திற்குச் சென்று பார்த்தால் அதன் ஹிட்களின் எண்ணிக்கை யில் ஒன்று கூடும் என எண்ணுகிறார்கள். இது உண்மை அல்ல. சரியான கணிப்பும் அல்ல. “ஹிட்” என்பது ஒரு வெப் சர்வருக்கு அளிக்கப்படும் வேண்டுகோள் ஆகும்.


எடுத்துக் காட்டாக நீங்கள் தன்னுடைய இணைய முகப்புத் தளத்தில் ஆறு படங்களை உடையதாக ஓர் இணைய தளம் இருப்பதாகக் கொள்வோம். இந்த தளத்தைப் பெற உங்களுடைய பிரவுசர் இந்த ஆறு படங்களுக்கு ஒரு வேண்டுகோளை அனுப்பும். அத்துடன் அத்தளத்தின் எச்.டி.எம்.எல் க்காகவும் ஒரு வேண்டுகோளை அனுப்பும். எனவே இந்த வேண்டு கோள்கள் எல்லாம் சேர்ந்தால் மொத்தம் ஏழு “ஹிட்” கள் இந்த தளத்திற்கு அனுப்பப் படுகின்றன.

நீங்கள் கூகுள் தேடுதளத்தில் (அல்லது நீங்கள் விரும்பும் எந்த தேடு தளத்திலும்) உங்கள் தேடுதலை அனுப்பி அதற்கான முடிவுகள் உங்களுக்குத் தெரிவிக்கப் பட்டால் அவை ஒவ்வொன்றும் ஒரு ஹிட்” ஆகக் கருதப்படும். எனவே உங்கள் தேடுதல் சார்ந்து 423 தளங்களின் முகவரிகள் பட்டியலிடப்பட்டால் உங்களுக்கு 423 ஹிட்கள் திரும்ப வந்துள்ளன என்று பொருள். இதுதான் “ஹிட்” என்பதின் உண்மையான பொருள்.

நேரம் பொன்னானது!

சிலர் இணைய தளத்தில் நேரம் போவது தெரியாமல் மூழ்கி விடுவார்கள். சிலர் ஒவ்வொரு முறையும் மணிபார்க்க கடிகாரத்தை தேடுவார்கள். இப்படிப்பட்ட மணி அறியா மகான்களுக்கு உதவும் இணையதளம் இது.

இந்த இணைய தளத்திற்கு சென்றால் டிஜிட்டல் கடிகாரம் நம்மை வரவேற்கும். அந்த கடிகாரத்தில் நாம் விரும்பும் நேரத்தை தேர்வு செய்தால் போதும். அந்த நேரம் வந்தவுடன் அலாரம் சத்தமிடும். இதனால் சரியான நேரத்தில் எழுந்து கொள்ளலாம்.

நேரத்தை துல்லியமாக கணக்கிடும் `ஸ்டாப் வாட்ச்' கடிகாரமும் உண்டு. அதனைப் பயன்படுத்தி நாம் வேலைகளை எத்தனை நிமிடத்தில் முடிக்கிறோம் என்பதையும் கணக்கிடலாம்.

`காலம் பொன் போன்றது' என்ற கருத்துப்படி வாழ் பவர்களுக்கு உபயோகமான இணையதளம்.

http://onlineclock.net/

அமெரிக்காவின் ரகசியத்தை அம்பலப்படுத்திய ஸ்னோடெனுக்கு இணையதளத்தில் வேலை!

அமெரிக்கா மற்ற நாடுகளை உளவுப் பார்க்கும் ரகசியத்தை கசிய விட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் எட்வர்ட் ஸ்னோடென்.


உயிருக்கு பயந்து அவர் மற்ற நாடுகளில் புகலிடம் தேடி அலைந்து இறுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவில் தற்காலிக அனுமதி பெற்று அந்நாட்டின் உள்ளே நுழைந்தார்.

தற்போது மூன்று மாதங்கள் கழிந்த நிலையில் ஸ்னோடெனுக்கு இணையதள நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்துள்ளதாக அவரது வக்கீல் அறிவித்துள்ளார்.

மேலும், இன்று முதல் பெரிய ரஷ்யன் நிறுவனம் ஒன்றில் ஸ்னோடென் வேலை செய்ய இருப்பதாகவும், பிரதானமாக உள்ள ரஷ்யன் வலைத்தளம் ஒன்றினை மேம்படுத்தும் பணியில் அவர் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பாதுகாப்புக் காரணம் கருதி அவர் நிறுவனத்தின் பெயரை வெளியிடவில்லை. இத்தகவலை அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் பேஸ்புக்கிற்கு இணையாகக் கருதப்படும் கோன்டக்டே நிறுவனத்தின் தலைவரான பவெல் டுரோவ் கடந்த ஆகஸ்ட் மாதமே ஸ்னோடெனுக்கு வேலை தருவதாக பகிரங்கமாக அறிவித்தார்.

அதனால் இந்த நிறுவனமே தற்போது ஸ்னோடெனை பணியில் அமர்த்தியிருக்கக்கூடும் என்ற யூகங்கள் எழுந்துள்ளன. எனினும் இந்த நிறுவனத்தின் பத்திரிகைத் தொடர்பாளரான ஜார்ஜி லோபுஷ்கின் இதுகுறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை

சந்தானத்திற்கு மற்றொரு அடி!

பெண்களை இழிவுபடுத்துவது போல் அமைந்த சந்தானத்தின் வசனத்தை என்றென்றும் புன்னகை படத்திலிருந்து நீக்கியுள்ளனர்.


நகைச்சுவை நடிகர்களுக்கு மத்தியில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து தனி ஹீரோயின், பாடல் என கலக்கிக் கொண்டிருந்தார் சந்தானம்.


ஆனால் சமீபகாலமாகவே தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.


அந்த வகையில் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் புகையிலை எதிர்ப்பு விளம்பரத்தை கலாய்க்கிறார் என எதிர்ப்புக் கிளம்பியது.


பலத்த எதிர்ப்புகளுக்குப் பின்னர் உடனடியாக அந்தக் காட்சியை படத்திலிருந்து நீக்கினார் அப்படத்தின் இயக்குநர் ராஜேஷ்.


இந்நிலையில் என்றென்றும் புன்னகை டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.


அதில், ஒரு காட்சியில் சந்தானம் ஒரு துணை நடிகையுடன் பேசும் போது, ஐந்து பத்துக்கு போறேன்ணு சொல்லிறியே அழகா தானே இருக்க ஆயிரம் ஐநூறுக்கு போனால் என்ன என்று பேசிய வசனம் சர்ச்சையை கிளப்பியது.
இந்த வசனத்திற்கு பெண்கள் அமைப்புகளும், சமூக அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து சந்தானம் பேசிய சர்ச்சைக்குரிய வசனம் என்றென்றும் புன்னகை டிரெய்லரில் இருந்தும், படத்தில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது.

ஜில்லாவின் முதல் தோற்றம் வெளியானது!

விஜய்யின் அடுத்த மெகா படமான ஜில்லாவின் முதல் தோற்றம் இன்று வெளியானது.   


தலைவா பட தலைவலியிலிருந்து வெளிவந்துள்ள விஜய், ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாய சூழலில் நடித்து வரும் படம் ஜில்லா.


இந்தப் படத்தில் விஜய்யுடன் மோகன் லால் நடித்துள்ளார்.


குடும்பப் பாங்கான அதேநேரம் ஆக்ஷன்- நகைச்சுவை கலந்த படமாக ஜில்லா உருவாகியுள்ளது.


ஆர்.டி.நேசன் இயக்கத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
டி இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசையை டிசம்பரில் ஸ்டார் மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது.


பொங்கல் ஸ்பெஷலாக வரும் ஜில்லாவின் முதல் தோற்ற வடிவமைப்பு இன்று வெளியாகியுள்ளது.


இதில் கழுத்து நிறைய மலர் மாலைகளுடன், கூடவே ரூபாய் நோட்டுகளையும் அணிந்து அட்டகாச சிரிப்புடன் போஸ் தருகிறார் விஜய்.

ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு!

இன்றைய உலகில் பேஸ்புக் என்பது மனிதனின் அன்றாட தேவையாகவே மாறி வருகிறது எனலாம், அந்த அளவுக்கு உலகத்தையே கவர்ந்து வருகிறது.
பெரும்பாலோனோர் இணையத்துக்கு வருவதே பேஸ்புக்கை பயன்படுத்த தான் என்ற அளவுக்கு பரந்து விரிந்துள்ளது.

நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் பல பேஸ்புக்கில் உள்ளது, இந்த நிலையில் நமது அக்கௌன்ட்டை யாரேனும் ஹாக் செய்து விட்டால்? உங்களுக்கு பெரிய அதிர்ச்சியான செய்தி.

அது ஹாக்கர் உங்கள் Account மூலம் நிறைய விசயங்களை செய்து விட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்பப் பெறலாம்.

முதலில் உங்கள் அட்ரஸ் பாரில் டைப் செய்து பேஸ்புக்கை ஓபன் செய்யவும். ஒரு முறை உங்கள் தகவல்களை கொடுத்து லாக்-இன் செய்ய முயற்சி செய்யவும்.

லாக்-இன் ஆகாவிட்டால் இந்த இணைப்புக்கு சென்று "My Account Is Compromised" என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு வரவும்.

அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களில் ஏதேனும் ஒன்றை தரவும். இதில் முதல் பகுதியை பயன்படுத்தி மீட்க தான் பெரும்பாலும் வாய்ப்பு அதிகம்.
Email -sign in செய்ய பயன்படுத்தும் மின்னஞ்சல் Phone - நீங்கள் பேஸ்புக்கில் கொடுத்துள்ள போன் நம்பர் Facebook username: உங்கள் Profile பக்கத்தில் நீங்கள் பார்க்கலாம்.

உங்கள் User Name உங்களுக்கு தெரியாவிட்டால் நண்பர்களிடம் சொல்லி கேட்கலாம். அவர் உங்கள் Profile-ஐ பார்த்தால் தெரியும்.

நண்பர் பெயர் கொடுத்து தேடுவது கொஞ்சம் கடினமான தேடல். இப்போது நீங்கள் கொடுத்த தகவல்படி உங்கள் பேஸ்புக் கணக்கு காட்டப்படும்.

உங்கள் இப்போதைய பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே செல்லலாம், அல்லது பழைய பாஸ்வேர்ட் கொடுத்து Password Reset செய்ய முயற்சி செய்யலாம்.
பழைய பாஸ்வேர்ட் என்றால் உங்கள் ஈமெயில் கணக்கை நீங்கள் ஓபன் செய்யும் நிலையில் இருக்க வேண்டும். அதில் உங்களுக்கு ஒரு code வரும், அதை நீங்கள் கொடுத்தால் உங்கள் பேஸ்புக் கணக்கை ஓபன் செய்ய முடியும்.
இதில் மீட்க முடியவில்லை என்றால் I can't identify my account என்ற பக்கத்தில் நீங்கள் தகவல்களை கொடுக்க வேண்டும். இதில் உங்கள் தகவல்களின் படி பேஸ்புக் உங்களை விரைவில் தொடர்பு கொள்ளும்.

குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பால் பொருட்கள்!

குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியில் பால் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதனால் அவர்களுக்கு கால்சியம், புரோட்டீன் மற்றும் கொழுப்புக்கள் போன்றவை கிடைக்கும்.

கொழுப்புக்கள் என்றதும் பயப்பட வேண்டாம். ஏனெனில் இதில் உள்ள கொழுப்புக்கள் குழந்தைகளின் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

வைட்டமின்களில் பி மற்றும் பி12 ஆகியவையும் நிறைந்துள்ளன.
அதுவும் குறைந்த கொழுப்புள்ள பாலைத் தான் தேர்ந்தெடுத்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

குறிப்பாக பால் பொருட்களைக் கொடுக்கும் போது, அது சுத்தமான பால் பொருட்களாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் அதுவே அவர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.
அதே சமயம் அளவுக்கு அதிகமாகவும் பால் பொருட்களைக் கொடுக்கக்கூடாது.

குறைந்த கொழுப்புள்ள பால்

பால் கொடுக்கும் போது குறைந்த கொழுப்புள்ள பாலைக் கொடுக்க வேண்டும்.

சீஸ்

பால் பொருட்களில் ஒன்று தான் சீஸ். பொதுவாக சீஸ் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

ஆகவே இதனை உணவுகளில் சேர்த்துக் கொடுக்கலாம். ஆனால் அதிகப்படியான உப்பு உள்ள சீஸைக் கொடுக்க வேண்டாம்.

வெண்ணெய்

வெண்ணெயில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

ஆகவே கடைகளில் விற்கப்படும் வெண்ணெயை குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு பதிலாக, வீட்டிலேயே செய்து கொடுப்பது சிறந்தது.

தயிர்

குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களில் ஒன்று தான் தயிர்.

மேலும் தயிரில் கால்சியம் மற்றும் ப்ரோ-பயோடிக் பாக்டீரியா உள்ளது. ஆகவே இதனைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால், உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

நெய்

நெய் பிடிக்காதோர் யாரும் இருக்கமாட்டார்கள். அதிலும் குழந்தைகளுக்கு நெயின் சுவை பிடிக்கும்.

ஆகவே அவர்களது உணவில், அவ்வப்போது நெய் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிலும் வீட்டில் செய்த நெய் என்றால் இன்னும் சிறந்தது.

லஸ்ஸி

தயிரால் செய்யப்படும் ஒரு உணவுப் பொருள் தான் லஸ்ஸி.
ஆகவே தயிரை சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு தயிரை லஸ்ஸியாக செய்து கொடுக்கலாம்.

ஐஸ்க்ரீம்

கடைகளில் விற்கப்படும் ஐஸ்க்ரீமில் சுவைக்காக நிறைய செயற்கை பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.
ஆகவே குழந்தைகளுக்கு கடைகளில் விற்கப்படும் ஐஸ்க்ரீமை வாங்கிக் கொடுக்காமல், வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செய்து கொடுங்கள்.

நீர் உட்புகாத தொழில்நுட்பத்தினைக் கொண்ட கமெரா அறிமுகம்!

Ion எனும் நிறுவனமானது Air Pro 3 எனும் நீர் உட்புகாத தொழில்நுட்பத்தினைக் கொண்ட கமெராவினை வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளது.


நீரினுள் 49 அடிகள் ஆழம் வரை கொண்டு சென்று பயன்படுத்தக்கூடியதாக காணப்படும் இக்கமெராவானது 60 fps வேகத்தில் வீடியோ பதிவு செய்யக்கூடியதாக உள்ளது. 


மேலும் இதில் 12 Megapixel Sony IMX117 CMOS சென்சார் காணப்படுகின்றது.
வயர்லெஸ் தொழில்நுட்பமான Wi-Fi இனையும் கொண்டுள்ள இக்கமெரா மூலம் 160 டிகிரியில் காட்சிப்பதிவு செய்ய முடியும்.


இதன் விலையானது 350 டாலர்களாகும்.


இணைய எலும்புக்கூடுகளை உருவாக்க!

text-mirror 

ஒரு இணையதளத்தை எந்த விதமான வடிவமைப்பு அலங்காரங்களும் இல்லாமல் அதன் வரி வடிவிலான தகவல்களை மட்டும் பார்க்க விரும்பினால்,டெக்ஸ்ட்மிரர் இணையதளம் அவ்வாறு அந்த தளத்தை மாற்றி தருகிறது.


எந்த இணையதளத்தை மாற்ற வேன்டுமோ அதை இந்த தளத்தில் சமர்பித்தால், அதில் உள்ள இணைப்புகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் நீக்கிவிட்டு வெறுமையாக தருகிறது.அப்போது வெறும் வரி வடிவிலான தகவல்கள் மட்டுமே இருக்கும்.மற்றபடி, புகைப்படங்களோ,விளம்பரங்களோ வேறு எந்த அம்சமும் இருக்காது.
எதோ கம்ப்யூட்டர் புரோகிராமிங் எழுதப்பட்டது போல அந்த பக்கம் காட்சி அளிக்கும்.சரி, இப்படி இணையதளங்களை அவற்றின் வடிவமைப்பு மற்றும் எச்டிஎமெல் சார்ந்த அம்சங்களை நீக்கி விட்டு வெறும் எலும்புக்கூடு போல பார்க்க வேண்டியதன் அவசியம் என்ன?


பல பிரவுசர்களில் வரி வடிவில் மட்டும் சேமிப்பதற்கான வசதி இருக்கிற‌தே என்று கேட்கலாம். உண்மைதான் பிரவுசர்கள் மூலமே ஒரு தளத்தின் வரி வடிவத்தை மட்டும் சேமிக்கலாம் தான்,ஆனால் டெக்ஸ்ட்மிரர் பயன்படுத்தும் போது தளத்தின் மூல வடிவமைப்பு அப்படியே பாதிக்காமல் இருக்கிறது.அதாவது இடது புறம் இருந்த தகவல்கள் அங்கேயே மாறாமல் இருக்கும் . இது ஒரு அணுகூலம்.


மற்றபடி அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட பேஸ்புக் போன்ற பக்கங்களை இப்படி வடி வடிவில் பார்க்கலாம்.


வரி வடிவம் என்பதால் குறிப்பிட்ட இணையதளம் துரிதமாக வந்து நிற்க வாய்ப்புள்ளது.


எது எப்படியோ, இணைய கட்டுரைகளை விளம்ப தொல்லை இல்லாமல் படிக்க விடும்பினால் அதற்கு இன்ஸ்டபேப்பர் போன்ற அருமையான தளங்கள் இருக்கின்றன.


இணையதள முகவ‌ரி; http://textmirror.net/

சரியான பரிசுப்பொருளை தேர்வு செய்வது எப்படி?


Wishpicker 

என்ன பொருள் வாங்குவது என்பது? பரிசுப்பொருள் வாங்க முற்ப‌டும் போது எல்லோருக்கும் ஏற்படகூடிய குழப்பம் தான். வாங்கித்தரும் பரிசுப்பொருள் வழக்கமானதாக இல்லாமல் வித்தியாசமானதாக இருக்க வேண்டும் என் நினைப்போம்.அதே நேரத்தில் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும்! அது மட்டுமா?

பரிசளிப்பது என்பது வெறும் சம்பரதாயம் மட்டுமா என்ன? அது அன்பின் வெளிப்பட்டும் அல்லவா? அதனால் தான், பரிசுப்பொருள் தேர்வு செய்யும் போது பலரும் அதற்காக மெனக்கெட விரும்புகின்றனர்.பரிசுப்பொருளை  பிரித்து பார்க்கும் போதே அதை பெறுபவரின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கின்றனர்.

இது போன்ற நேரங்களில் நண்பர்களிடமும் தெரிந்தவர்களிடமும் விசாரித்து,கடை கடையாக ஏறி இறங்க வேண்டியிருக்கும்.இந்த சுமையை குறைத்து பரிசுப்பொருளுக்கான தேடலுக்கு விடையாகும் வகையில் விஷ்பிக்கர் தளம் உருவாக்கப்ப‌ட்டுள்ளது.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல விஷ்பிக்கர் பரிசுப்பொருள் தேடலில் எதிர்படக்கூடிய இரண்டு கேள்விகளுக்கும் விடையாக அமைகிறது.அதாவது என்ன பொருள் வாங்குவது? எங்கே வாங்குவது? ஆகிய இரண்டு கேள்விகளுக்கும் இந்த தளம் தீர்வாகிறது.

பொருத்தமான பரிசுப்பொருளை தேர்வு செய்ய விரும்புகிற‌வர்களுக்கு அழகான அருமையான வாய்ப்புகளை இந்த தளம் முன் வைக்கிறது.இதற்காகவே முகப்பு பக்கத்தில் மூன்று கட்டங்கள் இருக்கின்றன. அவற்றில் பரிசுப்பொருள் யாருக்கு, அவரது வயது வரம்பு என்ன? பரிசளிப்பதற்கான நிகழ்வு என்ன? போன்ற  விவரங்களை இந்த கட்டங்களில் குறிப்பிட வேண்டும். உடனே இந்த தளம் பொருத்தமான பரிசுப்பொருட்களை பட்டியலிடுகிறது.அந்த பட்டியலில் இருந்து விருப்பமானதை தேர்வு செய்யலாம்.

முதல் கட்டத்தில் பரிசு அப்பாவுக்கா,அம்மாவுக்கா, மனைவிக்கா அல்லது நண்பருக்கா என குறிப்பிடலாம்.இரண்டாவது கட்டத்தில் அவர்களின் வயதை குறிப்பிட்டு விட்டு மூன்றாவது இடத்தில் பரிசளிப்பதற்கான காரணம் என்ன என குறிப்பிடலாம்.

பரிசுப்பொருட்கள் அனுபவமாகவோ அல்லது பொருட்களாக இருக்க வேண்டுமா என்றும் தீர்மானித்துகொள்ளலாம். இந்த தேர்வில் பரிசுக்கூப்பன்களும் உள்ளன.

பரிசளிக்கும் சூழலுக்கேற்ப விதமவிதமான பரிசுகளை பட்டியில் இருந்து சுலபமாக தேர்வு செய்தவுடன் இந்த தளத்தி இருந்தே வாங்கி கொள்ளும் வசதியும் இருக்கிறது. எனவே எங்கு வாங்குவது என்ற கவலையும் இல்லை.

இணையம் முழுவதும் கிடைக்கும் பொருட்களில் இருந்து சிற‌ந்தவற்றை தேர்வு செய்து பட்டியலிட்டு பரிந்துரைக்கிறது இந்த தளம்.

ஒவ்வொரு பிரிவிலும் பட்டியலிடப்ப‌ட்டுள்ள பரிசுகளை பார்த்தும் சரியானதை தேர்வு செய்து கொள்ளலாம்.அழகான புகைப்படங்களோடு இந்த பரிசுகளை அலசிப்பார்ப்பதே ஆனந்தமாக இருக்கலாம்.

பரிசுப்பொருள் தேடலுக்கான ஓரிடச்சேவை என சொல்லக்கூடிய இந்த தளத்தை தில்லியை சேர்ந்த அபூர்வ் பன்சல் என்னும் இளைஞர உருவாக்கியுள்ளார். தனது காதலிக்க பரிசளிக்க விரும்பிய போது பொருத்தமான பரிசை தேர்வு செய்ய வழி இல்லாமல் திண்டாடியிருக்கிறார். இதற்கான தீர்வை தானே உருவாக்க தீர்மானித்து நண்பருடன் சேர்ந்து விஷ்பிக்கர் தளத்தை உருவாக்கினார்.

இது தொடர்பாக தனது அனுபவத்தை யுவர்ஸ்டோரி தளத்தில் அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில் ஒரு சுவாரஸ்யமான விஷ‌யமும் இருக்கிறது.அதாவது காதலிக்கு பரிசாக நட்சத்திர ஓட்டலில் விருந்துக்கு அழைத்து சென்றிருக்கிறார்.ஆனால் இதனிடையே வேலையை விட்டுவிட்டு விஷ்பிக்கர் இணையநிறுவனத்தை துவக்கியதால் விருந்துக்கான பில்லை காதலி தான் கொடுக்க வேண்டியிருந்தது.

இணையதள முகவ‌ரி;http://www.wishpicker.com/

என் முன்னிலையில் பள்ளம் தோண்டுங்க::தங்கம் நிச்சயம் கிடைக்கும்”

“புதையல் இருப்பது உறுதி. ஆனால் புதையல் எடுப்பதற்காக தோண்டும் இடத்திற்கு என்னை அனுமதிக்காமல் அதனை கண்டு பிடிக்க முடியாது அதிலும் ராணுவத்தால் தோண்டும் பணி நடத்த வேண்டும். அத்துடன் மீடியாக்கள் சம்பவ இடத்திற்கு அனுமதிக்கப் பட வேண்டும்.” சாமியார் சோபன் சர்க்கார் மறுபடியும் கூறியுள்ளார்.



nov 1 - gold temple



உ.பி. மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பழங்கால கோட்டையின் இடிபாடுகளுக்கு அடியில் 1,000 டன் தங்கம் புதைத்து வைத்திருப்பதாக, சோபன் சர்க்கார் என்ற பிரபல சாமியார் கனவு கண்டார். அவர் கொடுத்த தகவலை தொடர்ந்து, தங்கப்புதையலை எடுப்பதற்காக அந்த பகுதியில் தோண்டும் பணி, கடந்த 18-ந்தேதி தொடங்கியது. மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை சார்பில் இந்த பணி நடைபெற்று வந்தது.


மத்திய தொல் பொருள் ஆய்வு துறை சார்பில், கடந்த 12 நாட்களாக தொடர்ந்து தோண்டியும், புதையல் எதுவும் சிக்கவில்லை. பூமிக்கு அடியில் புதைந்திருந்த செங்கல் சுவரின் சிதைந்த பகுதிகள் மட்டுமே காணப்பட்டன. தங்கப்புதையல் வேட்டை தோல்வியில் முடிந்ததால், அந்த பகுதியில் தோண்டும் பணியை தொல் பொருள் ஆய்வுத்துறை திடீரென்று நிறுத்திவிட்டது. சாமியார் சோபன் சர்க்கார் கூறியபடி, புதையல் எதுவும் இல்லாததால், தோண்டும் பணி கைவிடப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் கனவு கண்ட சாமியார் சோபன் சர்க்கார் பேசுகையில், புதையல் எடுப்பதற்காக தோண்டும் இடத்திற்கு என்னை அனுமதிக்காமல் அதனை கண்டு பிடிக்க முடியாது என்று கூறியுள்ளார். தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகள் புதையல் இருப்பது தெரியவந்த பின்னர் உண்மையை அறிவார்கள். புதையல் இருப்பது உறுதி. ராணுவத்தால் தோண்டும் பணி நடத்த வேண்டும். ஏன் மீடியாக்கள் சம்பவ இடத்திற்கு அனுமதிக்கப்படவில்லை என்று சாக்கார் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அங்கு ந

ஒற்றை தலைவலிக்கான காரணிகளும்:தீர்வுகளும்!

காலையில் எழுந்தவுடனே நமக்கு ஒரு சுறுசுறுப்பு இருந்தாதான் அன்றைய வேலைகள் எல்லாம் சிறப்பா முடியும். அப்படி இல்லாமால் ஒரு அயர்ச்சியுடன் எழுந்திருக்கணுமான்னு நினைச்சோம்னா அன்றைக்கு முழுக்கவே மந்தமா தான் இருக்கும். பொதுவா சிலர்கிட்ட ஏன் டல்லா இருக்கன்னு கேட்டா ஒரே தலைவலின்னு சொல்வாங்க.ஆன காலம் மாறிட்டு வருது அதனால இப்பல்லாம் தலைவலின்னு சொல்லமாட்டாங்க. ஒற்றைத் தலைவலின்னுதான் சொல்வாங்க. ஏன் அப்படி?

nov 1 - health slider-bim

பொதுவா டாக்டர்கள் சொல்வது தீய பழக்கங்கள் இல்லாமல் இருந்தாலே 90 சதவீதம் நோய்கள் வராது. அதோட 6 மணி நேர தூக்கம் மற்றும் வேளைக்கு உணவு மற்றும் மனசு விட்டு பேசுதல், கொஞ்சம் உடற்பயிற்சி செஞ்சாலே பல வியாதிகளை தவிர்க்கலாம்னு தீர்வு சொல்றாங்க.

சரி இந்த ஒற்றைத் தலைவலிக்கு தீர்வு என்ன என்று பார்ப்போம்.

ஒற்றைத் தலைவலி (Migraine) :

உலகில் 70 சதவீதம் பெண்கள் ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். முறையான வழிகாட்டுதல்களும் சிகிச்சைகளும் இல்லாததால், அல்லது இருந்தும் எடுத்துக் கொள்ளாததால் பலர் தலைவலியை முற்றவிட்டு, பக்கவாதம் உட்பட வேறு சில ஆபத்தான நோய்களுக்கும் ஆட்படுகிறார்கள். சிலருக்குக் கண்பார்வை கூட மங்கிப் போகும் வாய்ப்பு இதனால்தான் உருவாகிறது.




அறிகுறிகள்:

ஒற்றை தலைவலி என்று சொல்லப்படும் மைக்ரேன் ஒரே பக்கமாக வலிக்கக் கூடிய தலைவலி என்றாலும், தலை முழுவதும் வலி தெரியும். தலையின் மேல் பகுதியிலோ, பக்கவாட்டிலோ துடிப்பது போலவும் அடித்துக் கொள்வது மாதிரியும் லேசாக வலி ஆரம்பிக்கும்.

படிக்கட்டில் ஏறும்போது, வீட்டு வேலைகளைச் செய்யும் போது வலி கூடும். ஒலியைக் கேட்கவோ, ஒளியைப் பார்க்கவோ கூச்சமாக இருக்கும். கூடவே குமட்டலும் வாந்தியும் வரும்.

1. கிளாசிக் மைக்ரேன்: (Classic Migraine)

தலைவலியின்போது நரம்பு தொடர்பான அறிகுறிகள் தென்படுவதை (avra) இது குறிக்கும். அதாவது தலைவலி வருவதற்கான அறிகுறிகள் இல்லாமல், நோய் வருவது போன்ற உணர்வு மட்டும் எழுவது.

தலையில் நெற்றிப்பொட்டில், பொட்டெலும்பு, பின்பக்கத் தலை போன்ற இடங்களில் இதன் வலி தெரியும். கண்களிலும், தாடையிலும், முதுகிலும்கூட வலி தெரியலாம். பேச்சு குழறுதல், கவனமின்மை, மனநோய் போன்றவை இதனால் வர வாய்ப்புண்டு. தற்காலிகமாக பார்வையில் கோளாறு, உணர்வில் கோளாறு, கண்களுக்குள் மின்னல் போன்ற ஒளிக்கீற்று வந்து மறைதல் போன்றவை ஏற்படும்.

நெற்றிப் பொட்டிலும், கண்ணிலும் வலி ஏற்பட்டு, வலி அதிகரிப்பதால் சிலர் தாங்க முடியாமல் தவிப்பார்கள். சிலர் எதிலாவது தலையை முட்டிக்கொண்டு அழுவது கூட உண்டு.

கை, கால்களைப் பலவீனப்படுத்தும் இந்த வலி இரண்டு நாட்களுக்கு ஒருமுறைகூட வரலாம்.

2. பொதுவான மைக்ரேன்: (Common migraine)

மனநிலையில் பாதிப்பு, அடிக்கடி மூடு மாறுதல், சோர்வுறுதல், மனப்பதட்டம் ஆகியவற்றால் இத்தலைவலி ஏற்படும். இது தொடர்ந்து மூன்று நான்கு நாட்களுக்கு இருந்தால் குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு, சிறுநீர் அதிகரித்தல் ஆகியன உண்டாகும்.

ஒற்றைத் தலைவலி எதனால் வருகிறது?

migraine-headaches

மூளை இயங்குவதற்குத் தேவைப்படும் செரடோனின் என்ற வேதியியல் திரவத்தின் அளவு குறையும் போதுதான் இந்த ஒற்றைத் தலைவலிகள் ஏற்படுகின்றன. பல ஆண்டுகளாக, தலைக்குச் செல்லும் நரம்புகள் சுருங்கி இரத்த ஓட்டம் தடைப்படுவதால்தான் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் நம்பினார்கள். புதிய கண்டு பிடிப்புகளின்படி, மூளையைச் சேர்ந்த சில செல்களில் ஏற்பட்டுள்ள பரம்பரைக் குறைபாடுகள் தான் காரணம் (gentic disorder) என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படும்போது, மூளைக்குச் செல்லும் செல்கள் அழிந்துபோக வாய்ப்புகள் உண்டு. அதனால் தலைவலி ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

பரம்பரை நோயா?

ஒற்றைத் தலைவலி பரம்பரையாக வரக்கூடியது என்று சொல்லப்படுகிறது என்றாலும், இது மரபில் உள்ள கோளாறால்தான் என்று திட்டவட்டமாகக் கூற முடியவில்லை. கணவன்- மனைவி இருவருக்கும் ஒற்றைத் தலைவலி இருந்தால் பிள்ளைகளுக்கு 75 சதவிகித வாய்ப்பு உண்டு. இருவரில் ஒருவருக்கு மட்டும் இருந்தால் 50 சதவிகித வாய்ப்புகள் உண்டு. அவ்வளவுதான். மற்றபடி, கட்டாயம் வரும் என்று சொல்லமுடியாது.
அறிகுறிகளை வைத்தே ஒற்றைத் தலைவலியை நெருங்க விடாமல் செய்ய முடியும். இதற்கு சில வழிகள்.

1. உணவுமுறையில் மாற்றம்:

சரியாக உணவு உண்ணாததும், ஒத்துக்கொள்ளாத சில உணவுவகைகளை உண்பதும், அளவுக்கு அதிகமாக உண்பதும் ஒற்றைத் தலைவலிக்கு முக்கியக் காரணங்களாகும். இதனால் நல்ல ஆரோக்கியமான உணவை, வேளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். பால், காய்கறி வகைகள் நல்லது. இறைச்சி வகைகளைத் தவிர்த்தல் மிக நல்லது.
 
2. முறையான தூக்கம்:

தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் காலையில் எழுந்ததும் தலைவலிப்பதாகச் சொல்வது வாடிக்கையாகிவிட்டது. அதனால் நல்ல தூக்கம் வரச்செய்யும் வழி முறைகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக தூக்கம் வரும்வரை படிப்பது.

walking_exercise

3. உடற்பயிற்சி:

உடற்பயிற்சிதான் உடலில் உள்ள வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. இதனால் மூளை நன்கு செயல்படத் தொடங்கும். முறையான தொடர் உடற்பயிற்சி இருந்தாலே ஒற்றைத் தலைவலி அண்டாது.

4. சுற்றுச்சூழலில் கவனம்:

அதிக சூரிய வெப்பம் படுதல், வானிலை மாற்றங்கள், காற்றோட்டமில்லாத புழுக்கமாக சூழலில் வாழ்தல் ஆகிய சுற்றுச்சுழல்களாலும் சிலருக்கு தலைவலி வரும். அதனால் இவற்றைத் தவிர்த்தல் வேண்டும். காற்றோட்டமுள்ள இடத்தில் தூங்குவதும், மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வதும் மிக அவசியம்.

5. மது, புகை, காபி தவிர்த்தல் :

மது அருந்துதல், புகை பிடித்தல், காபி குடித்தல் சிலருக்கு தலைவலியை உண்டாக்கும். இவை முற்றிலும் நிறுத்தப்படல் வேண்டும். சிலருக்குக் காப்பி சாப்பிட்டால் தலைவலி நிற்பது போல் தெரியும். ஆனால் அது நிரந்தரமற்றதாகும்.

6. கவலை, சோர்வு, மனஅழுத்தம் வேண்டாம் :

அதிகமாகக் கவலைப்படுபவர்கள், அடிக்கடி சோர்வு அடைபவர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி ஒற்றைத் தலைவலி வரும். இவற்றில் இருந்து விடுபட, மற்றவர்களுடன் நட்பாகப் பேசிப் பழக வேண்டும். மனம் விட்டுப் பேசி குறைகளைக் களைய வேண்டும்.

7. தடுப்புமுறைகள்:

ஒற்றைத் தலைவலி எதனால் வந்தது என்பதை அறிந்துகொண்டு அவற்றைத் தவிர்த்தலே மிக நல்லது. உதாரணமாக, ஒரு நிகழ்ச்சிக்குப் போனால் தலைவலி வந்திருக்கும். திரும்பவும் அந்த நிகழ்ச்சியைக் காணாது தவிர்த்தல். சில பொருட்கள் அலர்ஜியாகி தலைவலி கொடுத்திருக்கும். அவற்றைத் தவிர்த்து முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளலாம்.

8. மருந்துகள்:

இது போன்று ஒற்றைத் தலைவலி அல்லது பொதுவான தலைவலி அடிக்கடி வரும் போது, டாக்டர்களை அணுகித்தான் மருந்துக்களை சாப்பிட வேண்டும். தங்களுக்கு தெரிந்த மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதும் அல்லது தலைவலிக்கு மருந்துக் கடைகளில் தரும் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதும் முறையானது அல்ல.

அதிக அளவில் மருந்து எடுத்துக் கொள்வதும் சிலருக்குத் தலைவலி வரக் காரணமாக இருக்கும். இதனால் மருத்துவர் ஆலோசனைப்படி மட்டுமே மருந்து எடுத்துக்கொள்ளவேண்டும்

இசைப்பிரியா கொலை : சானல் 4 வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்!



இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை ராணுவத்தினரால் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டு கிடக்கும் காட்சிகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. ஆனால் இசைப் பிரியா போரின் போதே கொல்லப்பட்டார் என்று இலங்கை அரசு கூறி வருகிறது.


இந்நிலையில் இலங்கை போர்குற்றம் தொடர்பாக சானல் -4 தொலைக்காட்சி ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் இசைபிரியாவை இலங்கை ராணுவத்தினர் அழைத்துச் செல்லும் காட்சியுடன் அவரை மிரட்டும் காட்சிகளும் உள்ளதால் பெரும் அதிர்ச்சி அலை கிளம்பியுள்ளது.



விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் மிகவும் கொடூரமான முறையில் கொன்றது தொடர்பான புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. மனதை பதைபதைக்கச் செய்யும் இந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை பிரிட்டனைச் சேர்ந்த சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.


வயல்வெளி ஒன்றின் வழியாக தப்ப முயன்ற இசைப்பிரியாவை மிகவும் கொடூரமான முறையில் இலங்கை ராணுவ வீரர்கள் இழுத்துச் சென்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த ஒருவரே அந்த காட்சியை படம் பிடித்திருப்பதும் தெளிவாக தெரிகிறது.
அப்போது பிரபாகரனின் மகள் என சிலர் கூறுவதும், அதை இசைப்பிரியா மறுப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.இதுதவிர மேலும் பல பெண்கள், ஆண்களை இலங்கை ராணுவத்தினர் சுட்டுக்கொல்லும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.


nov 1 - isaipriya











விடுதலைப் புலிகளுடன் நடந்த போரில் இசைப்பிரியா கொல்லப்பட்டதாக அதிபர் ராஜபக்சே தலைமையிலான அரசு இதுவரை கூறிவந்த நிலையில் உயிருடன் இருந்த இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் பிடித்துச் சென்று அவரை கொடுமைப்படுத்தி கொன்றிருப்பது தற்போது வெளியான வீடியோ மூலம் உறுதியாகிறது.


இதற்கிடையில் இசைப் பிரியாவை இலங்கை ராணுவ வீரர்கள் கொன்றது குறித்த வீடியோ உண்மை என்று தெரிய வந்தால், நிச்சயமாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார்.

படேல் பாஜக-வின் சொத்தும இல்லை..காங்கிரஸின் எதிரியும் அல்ல!.

இப்போது சர்தார் வல்லபபாய் படேல் தலை உருளுகிறது.”படேல் பிரதமராக பதவியேற்றிருந்தால், நேருவைவிட சிறப்பாக செயல்பட்டிருப்பார்’ என்று மோடி பேசியிருப்பது இன்றைய அரசியல் சூட்டில் புதிதாக மிளிர்கிறதே தவிர, இது 1950 களிலேயே, அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், தொழிலதிபர் ஜே.ஆர்.டி. டாடா உள்பட பலர் கூறிய கருத்துதான். அதேயே இப்போது நரேந்திர மோடியும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்றைய அரசியல் மேடையில் அது மதிப்பூட்டல் பெறுகிறது.


nov 1 - patel


இந்த வார்த்தைகளை நரேந்திர மோடி வேறு ஏதேனும் ஒரு மேடையில் கூறியிருந்தால் அதை அவர் அரசியலாக்கியதாக குறை கூறலாம். ஆனால் சர்தார் வல்லபபாய் படேல் குறித்த அருங்காட்சியகத்தை திறந்து வைக்கும் விழாவில், அவரது ஆளுமையைப் பாராட்டிப் பேசும்வேளையில், அவர் இதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.


அதற்காக காங்கிரஸ்காரர்கள், “படேல் எங்களுக்குத்தான் சொந்தம், பாஜக களவாடப் பார்க்கிறது’ என்று பேசுவது அர்த்தமற்றது. ஒருநாளும் படேல், மதவாத அரசியலுக்கு தன்னை ஆட்படுத்திக்கொண்டதில்லை. இந்து-முஸ்லிம் பிரச்னையிலும் பாகிஸ்தான் பிரிவினையின்போதும் விஷயங்களை வெளிப்படையாக பேசியவர். அதனாலேயே அவர் இந்து மதத்தினருக்கு ஆதரவாக இருந்தார் என்று முத்திரை குத்துவது பேதைமை.
பிரிட்டிஷ் அரசில் பஞ்சாப், வங்கம் ஆகிய இரு மாநிலங்களிலும் இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். இந்த இரு மாநிலங்களையும் அப்படியே பாகிஸ்தானுக்கு கொடுப்பது இயலாது என்று வாதிட்டவர்களில் முக்கியமானவர் படேல். இரு மாநிலங்களிலும் இந்துக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளை தனியாகப் பிரித்துவிட்டு, முஸ்லிம்கள் அதிகமாக இருந்த பகுதிகளை பாகிஸ்தானுடன் இணைக்கச் செய்தவர். இதனாலேயே அவர் இந்துக்களுக்கு ஆதரவானவர் என்ற பேச்சு அப்போது எழுந்தது.


பாகிஸ்தானிலிருந்து வெளியேறிய இந்துக்கள் தில்லியில் முஸ்லிம்களின் கைவிடப்பட்ட வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் புகுந்து ஆக்கிரமித்தபோது, “அங்கிருந்து இந்துக்கள் வெளியேற வேண்டும், அதை அரசு உறுதி செய்ய வேண்டும்’ என்று கூறி காந்தி உண்ணாவிரதம் இருந்தார். காந்தியின் கட்டளையை நிறைவேற்றியவர் படேல்.


படேலும் நேருவும் ஒரே அமைச்சரவையில் செயல்படுவது இயலாது என்ற நிலைமை உருவானபோது, படேல் பதவியிலிருந்து விலகக்கூடாது என்பதில் மகாத்மா காந்தி அதிக கவனமாக இருந்தார். காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய லூயி ஃபிஷர் குறிப்பிடுகிறார்:


“” ………இருவரில் எவரையும் தியாகம் செய்ய முடியாது என்று இறுதியிலே காந்தி தீர்மானித்தார். அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதும் அவசியம் என்று நிச்சயித்தார். இருவரில் எவர் விலகினாலும் அரசாங்கம் பலவீனமடைந்துவிடும். எனவே ஆங்கிலத்தில் நேருவுக்கு ஒரு சீட்டு எழுதி அனுப்பினார். “நீங்களும் படேலும் எப்படியாவது ஒற்றுமையாகவே இருக்க வேண்டும்’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார். ஜனவரி 30-ஆம் தேதி மாலை நாலு மணிக்கு பிர்லா மாளிகையில் காந்தியைக் காண படேல் வந்தார். காந்தியின் வாயிலிருந்து இதே செய்தியைத்தான் அவரும் கேட்டுக்கொண்டார்….”


காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட சில நிமிடங்களுக்கு முன்புவரை உடன் இருந்தவர் படேல். உள்துறை பொறுப்பு வகித்த படேல், காந்தியைக் காக்கத் தவறினார் என்று அப்போது பரவலாக எழுந்த குற்றச்சாட்டு அவரை மீளாத்துயரில் தள்ளியது.


அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு, படேல் இருவருக்கும் இடையே பிணக்கு இருந்தது வெளிப்படையானது. அது ஒன்றும் உட்பூசல் அல்ல. இருப்பினும் அது மதச்சார்பு, மதச்சார்பின்மை என்ற பாகுபாட்டால் ஏற்பட்ட பிணக்கு அல்ல.


“அமைச்சர்களின் ஒப்புதல் இல்லாமல் நேரு தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கின்றார்’ என்பதுதான் படேலுக்கு நேருவிடம் பிணக்கு ஏற்படக் காரணமாக இருந்தது. தான் மட்டுமே காங்கிரஸ் என்று நேரு நினைப்பது தவறு என்று படேல் வலியுறுத்தினார். “எல்லாவற்றையும் பேசிவிட்டு முடிவெடுக்க நான் எதற்கு’ என்பது நேருவின் எதிர்வாதமாக இருந்தது.
அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு படேல் கொண்ட பிணக்கை யோசித்துப் பார்த்தால், நேருவின் அத்தகைய எண்ணம்தான் – படேல் விமர்சித்ததைப்போல, தான் மட்டுமே காங்கிரஸ் என்று செயல்பட்ட நேருவின் செய்கைதான் – இன்றைய காங்கிரஸின் வாரிசு அரசியலுக்கு வித்திட்டது என்பதை எவரும் உணர முடியும்.


இன்று நரேந்திர மோடி தொட்டதொல்லாம் காவி நிறமாகிவிடுகிறது என்பதற்காக, படேல் பாஜக-வின் சொத்து ஆகிவிட மாட்டார். அவர் காங்கிரஸின் எதிரியும் அல்ல.அவரது பிணக்கு நேருவுடன் மட்டுமே.

குமரி மாவட்டத்திற்கு இன்று ஹேப்பி பர்த் டே!

தமிழ்நாடு எல்லைப் போராட்டம்’ என்பதும், பெயர் சூட்டுகின்ற வரலாறு என்பதும் சட்டமன்ற பதிவேடுகளோடு அடங்கிவிடவில்லை. அதற்கப்பாலும் அதுபற்றிய சில உண்மைகள் உண்டு.வடவேங்கடம் முதல் குமரி வரையில் தமிழ் பேசப்பட்டது. அதுதான் தமிழ்நாடு என்று தொல்காப்பியர் காலம் முதல் நிறைய ஆதாரங்கள் உண்டு.தமிழகத்தின் வரலாறு என்பது, மொழி வழியாக மாநிலம் அமைந்தது என்பது மிகப்பெரிய பின்னணியைக் கொண்டது.

nov 1 - kanyakumari district

எல்லைப்போராட்டம் நடந்தபோது அன்றைக்கு ம.பொ.சி மட்டுமே குரல் கொடுத்தார். வடக்கெல்லைப் போராட்டத்தை அவருடைய தமிழரசுக் கழகம் முன்னின்று நடத்தியது. அவருடன், தளபதி விநாயகம், மங்களம்கிழார், ரஷத் போன்றவர்களெல்லாம் வெகுண்டெழுந்து போராடினார்கள். ஏராளமான தமிழரசுக் கழகத் தோழர்கள் சிறைப்பட்டார்கள். இரண்டு பேர் உயிர் இழந்தார்கள். அது ஒரு நெடிய வரலாறு.

“யானை வாயில் போன கரும்பு திரும்பி வருமா…?” என்றால், “வராது” என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் வந்தது.

திருத்தணியும் சேர்ந்து ஆந்திராவிற்கு போய்விட்டது. மொழி வாரி ஆணையம், சர்தார் கே.எம்.பனிக்கர் தலைமையிலே மத்திய அரசு அமைத்த ஆணையம், சித்தூர் மாவட்டம் முழுவதையுமே ஆந்திராவிற்கு கொடுத்துவிட்டது. வேறு வழியில்லாமல் எல்லாக் கட்சிகளும் ஏற்றுக்கொண்ட காலகட்டத்தில் ம.பொ.சி மட்டும் அதை ஏற்கவில்லை.

அவர் சொன்னார், “மாலவன் குன்றம் போனால் என்ன..? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டுமென்று”. அதற்காக போராடினார். பெரும் போராட்டம் நடைபெற்றது. அதன் விளைவாக படாஸ்கர் கமிஷன் அமைக்கப்பட்டு அது கடைசியாக திருத்தணி தாலுகாவை தமிழ்நாட்டிற்குத் திருப்பிக்கொடுத்தது. யானைவாயில் போன கரும்பை மீட்டு வந்தவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி என்றால் அது மிகையாகாது. அவர் பேராடியிருக்காவிட்டால் திருத்தணி இன்று நம்மோடு இல்லை.ஆந்திராவோடுதான் இருந்திருக்கும்.

அதே போல், தெற்கெல்லையில் நடந்த போராட்டமென்பது மிகவும் சோகவடிவமானது. நேசமணி, நத்தானியல் பி.எல்.மணி, காந்திராமன் போன்றவர்கள் ஒன்று சேர்ந்து போராடினார்கள்.

“திருவிதாங்கூர்” சமஸ்தானத்தில் இருந்த நாஞ்சில் நாட்டுப் பகுதிகளை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டுமென்று அவர்கள் போராடினார்களே தவிர, தமிழ் நாட்டுத் தலைவர்கள் யாரும் அதற்காக போராடவில்லை. ஏறத்தாழ 12 பேருக்கும் மேலே அன்றைக்கு சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் முதலமைச்சராக இருந்த பட்டம் தாணுப்பிள்ளை, பிரஜா சோசலிசக் கட்சியைச் சேர்ந்தவர். அவரும் காங்கிரசும் சேர்ந்து அங்கே ஆட்சியமைத்தார்கள். குமரி மாவட்டத் தமிழர்கள், நாங்கள் தமிழ்நாட்டோடுதான் இருப்போம் என்று போராடிய போது, பட்டம் தாணுப் பிள்ளை போராடியவர்களை சுட்டுத் தள்ளச் சொல்லி வெறித்தனமாக உத்தரவிட்டார். ஆனால் அந்தக் கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்த டாக்டர் லோகியா கொதித்தெழுந்து அறிக்கை வெளியிட்டார்.

ஒரு சோசலிஸ்ட்டு ஆட்சியில், ஜனநாயக முறையில் போராடிய மக்களை ஒடுக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிக் குறித்து நான் வெட்கப்படுகிறேன். அதைவிட மோசம், கொடுமை அங்கே 12 உயிர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது. அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இதற்காக பட்டம் தாணுப் பிள்ளை தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். இவ்வாறு டாக்டர் லோகியா அறிக்கை வெளியிட்டார். இதெல்லாம் வரலாறு.


நேசமணி போன்றவர்கள் போராடியதன் விளைவாக குமரி மாவட்டத்தின் ஒரு பகுதியாவது நம்மோடு சேர்ந்தது. தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை ஆகியன எல்லாம் பறிபோனாலும் குமரி மாவட்டம் நம்மோடு சேர்ந்தது. இதற்கு குமரி மாவட்ட மக்களின் போராட்டமும், தியாகமும்தான் காரணம். அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நேசமணி, ம.பொ.சி போன்றவர்களுக்கு ஆதரவு கொடுத்திருந்தால் இந்த பகுதிகளை எல்லாம் இழந்திருக்கமாட்டோம்.
இதற்கிடையில் தான் ‘மதராஸ் மனதே’ என்று ஆந்திரர்கள் போராடினார்கள். ஆந்திரர்களின் ஒற்றுமைக்குக் காரணம் என்ன?


ஆந்திராவைச் சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள் எந்தக் கட்சியாக இருந்தாலும், அதாவது காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பிரஜா, சோசலிஸ்ட் என எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர்கள் “ஆந்திர மகாசபை” என்ற குடையின் கீழ் ஒன்றாக நிற்கிறார்கள். விசால ஆந்திராவில் எந்தெந்தப் பகுதிகள் இருக்கவேண்டும் என்பதை அவர்கள் கட்சி சார்பில் போராடவில்லை. ஆந்திரர் என்ற ஒரே உணர்வுடன் ஆந்திர மகாசபையை அமைத்துப் போராடினார்கள். ஆனால், தமிழகத்தில் அப்படி ஒரு குடையின் கீழ் இணைந்து போராடவில்லை என்று ம.பொ.சி தனது நூலில் மிகவும் துயரத்துடன் எழுதியுள்ளார்.


ஆந்திரர்கள் எந்த அளவிற்கு ஒன்றுபட்டிருந்தனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக, இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், நாடாளுமன்றத்தில் அவைத் தலைவராக இருந்த அனந்த சயனம் ஐயங்காரும் விசால ஆந்திராவிற்கு ஆதரவு கொடுத்ததை கூறலாம். இவர்களின் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்ட பதவிகள். ஆனால், ராதாகிருஷ்ணனும், அனந்த சயனமும் மத்திய அரசியலில் அங்கம் வகித்த ஆந்திரர்களுடன் ஒன்று சேர்ந்து விசால ஆந்திரத்தில் சித்தூரும், சென்னையும் சேர்க்கப்படவேண்டும் என்று பிரதமர் நேருவுக்கு மிகப்பெரிய நெருக்கடி கொடுத்தனர்.


இந்தக் காலகட்டத்தில் ம.பொ.சி சென்னை நகரசபையில் ஆல்டர் மேனாக இருக்கிறார். சென்னை மேயராக இருந்தவர் செல்வராயன். அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். ம.பொ.சியும், செல்வராயனும் சேர்ந்து, உறுப்பினர்களின் ஆதரவையெல்லாம் ஒன்று திரட்டி, சென்னை நகரம் தமிழர்களுக்கே சொந்தமென்று சென்னை மாநகராட்சியில் தீர்மானம் கொண்டுவந்தார்கள். மிகப் பெரும்பான்மையான ஆதரவுடன் தீர்மானத்தை கொண்டுவந்தார்கள் அந்தத் தீர்மானம்தான் அன்றைக்கு நேரு மனதை மாற்றியது.


அதற்குமுன் நேரு என்ன செய்தார்… ? ஆந்திரர்கள் ‘மதராஸ் மனதே’ என்கிறார்கள், டாக்டர் ராதாகிருஷ்ணன், அனந்த சயனம் ஐயங்கார் போன்றவர்களும் வற்புறுத்துகிறார்கள், ஆகவே நேரு ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டத்திற்கு ஆளாகி, அவர் என்ன சொன்னார் என்றால்… இரண்டு மாநிலங்களுக்கும் சேர்ந்து சென்னை பொதுத் தலைநகரமாக இருக்கும் என்று சொன்னார். பஞ்சாப்பிற்கும், ஹரியானாவிற்கும் பொதுத் தலைநகரமாக சட்டீஸ்கர் இருப்பதைப் போல். சட்டீஸ்கர் யாருக்கு சொந்தமென்று அன்றைக்கு முடிவு செய்யாத காரணத்தால் இன்றைக்கும் சண்டை நடக்கிறது. இதைப்போல நேரு ஒரு முடிவு சொன்னார். அப்போது ம.பொ.சி வெகுண்டெழுந்து செல்வராயன் துணையுடன் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.


அதுமட்டுமல்ல, அன்றைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழு, காமராசர் தலைமையில் கூடி சென்னை நகரம் தமிழர்களுக்கே சொந்தமானது என்று தீர்மானம் போட்டு டெல்லிக்கு அனுப்பியது. அப்போது முதலமைச்சராக இருந்த ராஜாஜி நேருவுக்கு கடிதம் எழுதினார்.
சென்னை நகரம், தமிழர்களுக்கு சொந்தமானது. ஆந்திரர்கள் தனி மாநிலம் வேண்டுமென்று கேட்டப்பிறகு அவர்கள் பிரிந்துபோய் தனித் தலைநகரத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டுமே அல்லாமல், சென்னை நகரத்தை உரிமைக்கொண்டாட அவர்களுக்கு உரிமை கிடையாது. சென்னை நகரம் தமிழர்களுக்கு சொந்தமானது. ஆனால் சென்னை இரண்டு மாநிலங்களுக்கும் பொதுத் தலைநகரமாக இருக்க வேண்டுமென்று நீங்கள் முடிவு சொல்வீர்களேயானால், இந்தக் கடித்தத்தையே எனது ராஜினாமாவாக எடுத்துக்கொள்ளலாம் என்று எழுதியிருந்தார். அப்படி எழுதுவதற்கான துணிவு அன்றைக்கு முதலமைச்சராக இருந்த ராஜாஜிக்கு இருந்தது. அதன் பின்னணியில் சிலம்புச்செல்வர் ம.பொ.சி இருந்தார் என்பது மறுக்கமுடியாத வரலாறு.


அதேபோல், ஐக்கிய கேரளம் வேண்டுமென்று கேரளர்கள் போராடிக்கொண்டிருந்த போது, கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஏ.கே.கோபாலன் தேவி குளம், பீர்மேடு எங்களுக்குதான் சொந்தமென்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அப்போது தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்த ஜீவானந்தம் கொதித்தெழுந்தார்.


உண்மையான கம்யூனிஸ்ட்டு இப்படி பேசமாட்டான். ஏ.கே.கோபாலனின் இந்த அறிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். தேவிகுளம், பீர்மேடு சர்ச்சைக்குரிய பகுதி. எங்களுக்கும் அதிலே உரிமையிருக்கிறது ஆகவே, ஏ.கே.கோபாலன் கருத்தை தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொள்ளாது என்று சொல்லும் துணிவு ஜீவானந்தத்திற்கு இருந்தது. அதன் காரணமாக அவர் கட்சிக்குள்ளே பிரச்சனைகள் எல்லாம் வந்தன. ஜீவானந்தம் அதையெல்லாம் சந்தித்தார்.


இப்படி தமிழ் நாட்டு எல்லைப் பகுதிக்காக இவர்கள் எல்லோரும் போராடினார்கள்.

-பழ.நெடுமாறன்,

இந்திய விஞ்ஞானியின் புது கண்டுபிடிப்பு!

India 
 
 
விண்ணில் ‘இறந்த’ நட்சத்திரங்களால் உருவாகும் கருங்குழிகள் பற்றி நீடிக்கும் மர்மத்தை உடைக்க மேற்கொண்ட ஆராய்ச்சியில் பெங்களூர் விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார். அண்டவெளியில் பூமி உட்பட பல கோள்கள் உள்ளன. பல லட்சம் சூரியன்கள், நிலாக்கள், நட்சத்திரங்கள் என்று பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பே உருவாகி இருக்கின்றன. இந்த நட்சத்திரங்கள் எல்லாம் அதன் அணுசக்தியை இழக்கும் போது ‘இறந்த’ நட்சத்திரங்களாகி விடுகின்றன.


விண்ணின் பால்வெளி மண்டலத்தில் இப்படி சூரியன், நட்சத்திரங்கள் எல்லாம் பரவி கிடக்கும் நிலையில், இந்த ‘இறந்த’ நட்சத்திரங்கள் எல்லாம் கருங்குழியாகி விடுகின்றன. இந்த கருங்குழி, பல சூரியன்களின் ஒளியை தன்னுள் பெற்றுள்ளதாக கருதப்படுகிறது. ஆல்பர்ட் ஈன்ஸ்டின் புவிஈர்ப்பு கோட்பாட்டுக்கும் இந்த கருங்குழிகளுக்கும் ஒரு வகையில் இயற்பியல் ரீதியாக ஒரு ஒற்றுமை இருக்கிறது என்று இந்தியா உட்பட பல நாட்டு விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.


கருங்குழி பற்றி முதன் முதலில் உண்மைகளை கண்டுபிடித்து சொன்னவரே, நம் நாட்டு தமிழ் விஞ்ஞானி சந்திரசேகர் தான். அதற்காகவே அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. இறந்த நட்சத்திரம் நியூட்ரான் நட்சத்திரமாகவோ, கருங்குழியாகவோ ஆகி விடும் என்று முதன் முதலில் கண்டுபிடித்தவர் இவர். இதனால் இந்த கண்டுபிடிப்புக்கு சந்திரசேகர் லிமிட் என்றும் பெயர் வைக்கப்பட்டது. இந்த நிலையில், கருங்குழி பற்றிய மர்மம் நீடித்து வருகிறது.


இந்த குழிகள் சிறியது தானா, அதன் ஆழம் என்ன, அதன் ஈர்ப்பு சக்தி என்ன? ஒலி, ஒளியை தன்னுள் விழுங்கும் போது நடப்பது என்ன? பல சூரியன்கள் ஒளியை கொண்டது என்பது சரியா? என்பது பற்றி எல்லாம் மர்மம் நீடிக்கிறது. சாதாரண கண்களுக்கு இந்த கருங்குழி தெரியாது. டெலஸ்கோப் மூலமும் கண்டுபிடிப்பது சிரமம் தான். நுணுக்கமாக ஆராய்ந்தால் பால்வெளியில் ஏதோ கரும்புள்ளி போல தான் தெரியுமாம். பெங்களூர் நகரில் உள்ள இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக உள்ள பானிப்ரத்தா முகோபாத்யை இந்த கருங்குழி ஆய்வில் புதிய உண்மையை கண்டுபிடித்துள்ளார்.


இரண்டு ஆண்டாக மேற்கொண்ட ஆய்வில், அண்டவெளியில் உருவாகும் கருங்குழி தன்னை சுற்றிய ஒலி, ஒளி மற்றும் நட்சத்திர துகள்கள் எல்லாவற்றையும் தன்னுள் ஈர்த்துக்கொள்ளும் சக்தி படைத்தது. இது மட்டுமின்றி, இதை சுற்றிய சுழற்சி, நட்சத்திர எரி துகள்கள் போன்ற பொருட்கள் ஆகியவற்றை வைத்து குழியின் ஆழம், சுழற்சி வேகத்தை கணக்கிடலாம். மேலும், குழியை சுற்றிய சுழற்சி வலை மற்றும் பொருட்கள் தனியாக இயங்குவதில்லை.


ஒன்றுக்கொன்று பிணைந்தது என்பது தான் பானிப்ரத்தாவின் கண்டுபிடிப்பு. இந்த கண்டுபிடிப்பு மூலம், கருங்குழி பற்றிய ஆராய்ச்சிகளில் புதிய தெளிவு கிடைத்துள்ளதாக அமெரிக்க, பிரிட்டன் இயற்பியல் விஞ்ஞானிகள் பாராட்டியுள்ளனர். ‘நட்சத்திரங்கள் எப்படி நொறுங்கி அழிகின்றன, கருங்குழியாகின்றன என்பதற்கு இந்த ஆராய்ச்சி உதவும்’ என்று விஞ்ஞானி பானிப்ரத்தாவுக்கு உதவியாக இருந்த ஆராய்ச்சி மாணவி இந்திராணி பானர்ஜி கூறினார்.

 
அதென்ன கருங்குழி?

* பூமி, சூரியன், நட்சத்திரங்கள் எல்லாம் சேர்ந்தது தான் இந்த அண்டவெளி.

* விண்ணில் பரந்து கிடக்கும் பால்வெளியில் உள்ளது தான் சூரியன், நிலா, நட்சத்திரங்கள்.

*இந்த நட்சத்திரங்கள் தன்னுள் உள்ள அணு எரிசக்தியை இழக்கும் போது ‘இறந்ததாக’ கருதப்படுகின்றன.

* அப்படி இறந்த பின் அவை என்னவாகின்றன என்பது மர்மமாக இருந்தது.

* அவை, கருங்குழியாகிவிடுகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டது.

* கருங்குழி ஈர்ப்பு சக்தி கொண்டது. தன்னை சுற்றிய பொருட்களை ஈர்த்துக்கொள்ளும்.

* சுழலும் அணு துகள்கள், பொருட்கள் வேகம் பற்றிய ஆய்வு தொடர்ந்து மர்மமானது.

* கருங்குழி மர்ம முடிச்சுகள் தொடர்ந்து அவிழ்ந்த வண்ணம் உள்ளது.

' பெருக்கத்து வேண்டும் பணிவு ' (நீதிக்கதை)



மோகன் நன்கு படிக்கும் மாணவன்.

அவன் வகுப்பில் அனைத்து தேர்வுகளிலும் First Rank வாங்கி வந்தான்.அதனால் அவனுக்கு சற்று கர்வம் இருந்து வந்தது.
சக மாணவர்களிடம் பழகும்போதும் கர்வத்துடனேயே பழகி வந்தான்.

அரையாண்டு தேர்வு வர இருந்தது...
மோகனின் பள்ளி ஆசிரியர் மற்ற மாணவர்களிடம் 'எல்லோரும் நன்கு படித்து ......மோகனைப்போல முதல் மதிப்பெண் எடுக்க முயற்சிக்க வேண்டும் என்றார்.

அதனால் மோகனுக்கு தலைக்கனம் அதிகமாகியது.

கர்வமும் ...தலைக்கனமும் சேர அவன் தேர்வுகளுக்கு சரியாக படிக்கவில்லை.

தேர்வுகள் முடிந்து மதிப்பெண்கள் வந்தபோது ....அவனது ரேங்க் 20 ஐ தாண்டியது.

ஆசிரியர் ...அவனிடம் அதற்கான காரணத்தைக் கேட்டபோது.....இந்த தடவை முதல் ரேங்க் எடுத்த சீனு சொன்னான்.
'சார்...நீங்கள் எப்போதும் மோகனைப் புகழ்வதால் ...அவனைப்போல வரவேண்டும் என நாங்கள் கஷ்டப்பட்டு படித்தோம்.ஆனால் அந்தப் புகழ்ச்சியால் கர்வம் அதிகமாக
மோகன் கவனம் படிப்பில் செல்லவில்லை' என்றான்.

சீனு கூறியதில் இருந்த உண்மையை உண்ர்ந்த ஆசிரியர் ...'மோகன் நாம் எந்த நிலையிலும் கர்வம் கொள்ளக்கூடாது...புகழ்ச்சி ஒருவனை மேலும் முன்னேறவிடாமல் தடுக்கும்...'என்றார் .மேலும் 'நான் உன்னை புகழ்ந்ததை உன்னை மேலும் ஊக்கிவிக்கத்தான் என்பதை உணர்ந்து கொள்' ' என்றார்.

ஆசிரியர் கூறியதை மோகனும் உணர்ந்து கொண்டான்.

நாமும் எப்போதும் நமக்கு ஈடு யாருமில்லையென்று கர்வமோ அகம்பாவமோ கொள்ளக்கூடாது.நம்மை விட வல்லவர்கள் எல்லா துறையிலும் உண்டு என்று எண்ணவேண்டும்.

மழைக்காலத்தில் வெள்ளிப் பொருட்களை பாதுகாக்க!

கௌரவப் பொருட்களாக கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளிகளின் மேல் ஆசை கொள்ளாதவர்களே இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் தான் வசதிகேற்ப தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை வாங்கி சேர்ப்பார்கள். முக்கியமாக சிலர் வெள்ளி பொருட்களை அன்றாடம் பயன்படுத்தக் கூட செய்கிறார்கள். தகதகவென்று மின்னும் வெள்ளி பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் மீது தீராத காதல் உண்டா? அதனால் வீட்டில் பல வெள்ளி பொருட்களை வாங்கி குவித்திருக்கிறீர்களா? அப்படியானால் மழைக்காலத்தில் ஈரப்பதத்தினால் அவைகள் பாதிப்புக்குள்ளாகும் என்ற கவலை இருக்கிறதா? முதலில் அதை விட்டொழியுங்கள்.

விலை உயர்ந்த பொருட்களுக்கு எந்த ஒரு தேய்மானமும் வந்துவிடாது. மழைக்காலத்தில் எப்போதும் இருப்பதை விட காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால், வெள்ளி பொருட்கள் ஜொலிப்பு நீங்கி, பாதுகாப்பதற்கு சிரமமாக இருக்கும். ஆனால் உரிய நடவடிக்கை மேற்கொண்டால், மழைக்காலத்தில் கூட வெள்ளி பொருட்களை மின்னச் செய்யலாம். பிரஷாந்த் சரவ்கி என்ற வல்லுநர், வெள்ளி பொருட்களின் மீது ஏற்படும் பழுதை தடுக்க சில டிப்ஸ்களை அளித்துள்ளார். மேலும் மழைக்காலத்தில் வெள்ளி பொருட்களை பாதுகாக்கவும் வழிமுறைகளை கூறியுள்ளார்.
 
 
கறை படியாமல் பாதுகாப்பது:


காற்றில் உள்ள சல்ஃபர் வெள்ளிப் பொருட்களோடு கலக்கும் போது, அந்த பொருட்கள் மீது கண்டிப்பாக கறை படியும். ஆகவே வெள்ளிப் பொருட்களை பத்திரமாக உள்ளே வைத்து பாதுகாக்காமல், அன்றாட தேவைகளுக்காக உபயோகப்படுத்த ஆரம்பித்தால், அதன் மேல் சல்ஃபர் சல்பேட் கண்டிப்பாக பதிந்திருக்கும். வெள்ளியில் அலங்கார பொருட்கள் இருந்தால், அதனை ஒரு மெல்லிய துணியை கொண்டு மறக்காமல் தினமும் துடைத்து எடுத்தால், விரைவில் கறை படிவதை தடுக்கும்.

வெள்ளி பொருட்களை துடைப்பது:

அதிக கறை படிந்த வெள்ளி பொருட்களை நுரை, தெளிப்பான்கள் அல்லது திரவ பேஸ்ட் வடிவில் உள்ள வெள்ளி பாலிஷ்கள் ஆகிவைகளை பயன்படுத்தி துடைக்கலாம். சில்வர் டிப்பும் நல்ல பலனை கொடுக்கும். அடர்த்தியான் கறை படிந்த வெள்ளி பாத்திரங்களை சிறிதளவு வாஷிங் சோடாவில் தண்ணீர் கலந்து கழுவலாம்.

துளைகள் கொண்ட வெள்ளிப் பொருட்களை துணிகளை கொண்டு துடைக்கக்கூடாது. அப்படி துடைத்தால் நுனியில் துணி மாட்டி கொண்டு கிழிந்துவிடும். எனவே மெதுவான ஒரு பிரஷை பயன்படுத்தியும் வெள்ளிப் பொருட்களை துடைக்கலாம். வெள்ளி பொருட்களை கழுவ டிஷ் வாஷர்யும் பயன்படுத்தலாம். ஆனால் அப்படி செய்யும் போது, அதிக கவனம் தேவை. மேலும் மற்ற ஸ்டைன்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களோடு சேர்த்து, இதனை டிஷ் வாஷரில் போட கூடாது.

குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள்!


 1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8. தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10. உந்தூழ்
11. கூவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95. நாகப்பூ
96. நள்ளிருணாறி
97. குருந்தம்
98. வேங்கை
99. புழகு

‘தெண்டுல்கரின் சாதனையை கோலி முறியடிப்பார்’–கவாஸ்கர்














இந்திய கிரிக்கெட் அணியில் ரன் குவிக்கும் எந்திரமாக ஜொலித்து வரும் துணை கேப்டன் விராட் கோலி, நாக்பூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 6–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 66 பந்துகளில் 115 ரன்கள் விளாசி, பிரமாதப்படுத்தினார். ஒரு நாள் போட்டியில் அவரது 17–வது சதம் இதுவாகும். இதன் மூலம் அதிவேகமாக 17 சதங்களை (112 இன்னிங்ஸ்) எடுத்தவர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்பு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி (170–வது இன்னிங்சில் 17–வது சதம்) இந்த பெருமையை தக்க வைத்திருந்தார். மேலும் இலக்கை துரத்திப்பிடிப்பதற்கான (சேசிங்) ஆட்டத்தில் (2–வது பேட்டிங்) கோலியின் 11–வது சதமாக அமைந்தது. இவை அனைத்தும் வெற்றியிலேயே முடிந்திருக்கிறது. இந்த வகையில் சச்சின் தெண்டுல்கர் (14 சதம்) மட்டுமே அவரை விட முன்னிலையில் இருக்கிறார்.


இந்த நிலையில் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை 24 வயதான விராட் கோலியால் முறியடிக்க முடியும் என்று இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஆரூடம் கூறியுள்ளார். இதுவரை 118 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி அதில் 112 இன்னிங்சில் களம் இறங்கி 17 சதங்களுடன் 4919 ரன்கள் எடுத்துள்ளார். இதே எண்ணிக்கையிலான ஆட்டத்தில் தெண்டுல்கர் 8 சதத்துடன் 4001 ரன்களே எடுத்திருந்தார்.


இது பற்றி கவாஸ்கர் கூறுகையில், ‘சாதனைகள் என்பதே முறியடிக்கப்படக்கூடியது தான். ஆனால் தெண்டுல்கரின் சில சாதனைகளை அதாவது 200 டெஸ்டில் பங்கேற்றவர், 51 டெஸ்ட் சதம் ஆகியவற்றை யாராலும் முறியடிக்க முடியாது என்பதை நாம் அறிவோம். ஆனால் விராட் கோலி விளையாடி வரும் விதத்தை பார்க்கும் போது, ஒரு நாள் போட்டியில் தெண்டுல்கரின் அதிக சதங்கள் (49 சதம்) சாதனையை முறியடிக்க ‘வாய்ப்புள்ளது. அதற்கு இன்னும் 32 சதங்கள் தான் கோலிக்கு தேவைப்படுகிறது. நிறைய ஒரு நாள் போட்டிகளில் இந்தியா விளையாடும் போது, கோலியால் இந்த சாதனையை செய்ய முடியும். இந்த கிரிக்கெட் சீசனில் கோலி 20 அல்லது 22 சதங்களை எட்டி விடுவார்’ என்றார்.

கமல்! பட வசூலை நேர்மையாக யாரும் சொல்வதில்லை!

சூப்பர் ஹிட் படங்களின் வசூலை சொல்வதில் நேர்மை வேண்டும் என்றார் கமல்ஹாசன்.பெங்களூரில் பேட்டி அளித்தபோது கமல் கூறியது:சினிமாவை பொறுத்தவரை அதன் வசூல் விவரத்தை சொல்வதில் வெளிப்படையான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். அப்படி இல்லாவிட்டால்  எவ்வளவு பெரிய தொழில் நுட்பமோ அல்லது வெற்றியோ சினிமாவின் வளர்ச்சிக்கு உதவாது. ஒரு நடிகரும் சரி அல்லது தயாரிப்பாளரும் சரி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் வசூல் என்ன என்பதை வெளிப்படையாகவே சொல்ல வேண்டும்.

அந்தவகையில் பார்த்தால் ஹாலிவுட் பட வசூலைவிட நமது படங்களின் வசூல்தான் அதிகமாக இருக்கும். நம் நாட்டில் 100 கோடி சினிமா ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 10 சதவீதம்பேர் சூப்பர் ஹிட் படம் பார்த்தால்கூட இன்றைய விலை நிலவரத்தில் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் இருக்கும். ஆனாலும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் வசூலை யாருமே சொல்வதில்லை.இவ்வாறு கமல் கூறி உள்ளார்.

வோல்க்ஸ்வேகன் ரூ.13.7 லட்சம் விலையில் புதிய ஜெட்டா அறிமுகம்

                                        



ஜெர்மன் கார் தயாரிப்பாளரான வோக்ஸ்வேகன் இன்று இந்தியாவில் பிரீமியம் சேடன் ஜெட்டாவின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை ரூ.13.70-19.43 லட்சம் விலை வரம்பில் தொடங்கப்பட்டது.

ஜெட்டாவின் மேம்படுத்தப்பட்ட பதிப்பில் ஹேட்லேம்ப் வாஷர்ஸ் கொண்ட செனான் ஹேட்லேம்ப், எல்ஈடி பகல்நேர ஓடும் விளக்குகள் மற்றும் புதிய 16 இன்ச் அலாய் சக்கரங்கள் உள்ளிட்ட பல்வேறு புதிய அம்சங்களுடன் வருகின்றது.

வாகனத்தின் மற்ற அம்சங்கள் டூயல் ஜோன் கிளிமேட்ரானிக் ஏர் கண்டிஷனிங், 12 வழி மின் அனுசரிப்பு ஓட்டுநர் இருக்கை மற்றும் 60:40 மடிப்பு பின் இடங்கள் உள்ளிட்டவை அடங்கும்.

பண்டிகை காலத்தில் இந்திய சந்தையில் வோல்க்ஸ்வேகன் வரிசையில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட கார்களான போலோ, கிராஸ் போலோ, போலோ ஜிடி TSI மற்றும் போலோ ஜிடி TDI, வெண்டோ TSI மற்றும் புதிய ஜெட்டா உள்ளன என்று திரு.சக்சேனா தெரிவித்துள்ளார். 

சன் டைரக்ட் தீபாவளி சிறப்பு சலுகை!


டிடீஹெச் சேவை பிரிவில் முதன்மை நிறுவனமாக திகழும் சன் டைரக்ட், பண்டிகை காலத்துக்காக சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. புதிய இணைப்புகளை பெறுபவர்களுக்கும் கவர்ச்சிகரமான சலுகைகளின் தொகுப்பையும் சன் டைரக்ட் வழங்குகிறது.
சிறப்பு சலுகைகள்:

* சினிமா ப்ளஸ் ஸ்போர்ட் பேக் , கட்டணம் ரூ.1890 செலுத்தும்போது 2 மாத சந்தா இலவசம், ரூ.2,290 செலுத்தும் போது 5 மாத சந்தா இலவசம்.
* வேர்ல்டு பேக் , கட்டணம் ரூ.2,090க்கு 2 மாத சந்தா இலவசம், ரூ.3,190க்கு 7 மாத சந்தா இலவசம்.
* மெகா பேக் , கட்டணம் ரூ.2,090க்கு 2 மாத சந்தா இலவசம், ரூ.3,490க்கு 7 மாத சந்தா இலவசம்.
ரூ.155ல் தொடங்கி ரூ.300 வரையிலான திட்டங்களை கொண்டிருப்பதால் ஒவ்வொருவருக்கும் ஏற்ற திட்டத்தை சன் டைரக்ட் தருகிறது.

இதன்படி, சன் டைரக்டில் சவுத் வேல்யு பேக் ரூ.155க்கும் (போட்டியாளர்களின் கட்டணம் ரூ.170), சவுத் சினிமா ப்ளஸ் ஸ்போர்ட்ஸ் ரூ.185க்கும் (போட்டியாளர் கட்டணம் ரூ.190,ரூ.200), வேர்ல்டு பேக் ரூ.220க்கும் (போட்டியாளர் கட்டணம் ரூ.300,ரூ.340), மெகா பேக் ரூ.300க்கும் (போட்டியாளர் கட்டணம் ரூ.400 முதல் ரூ.430) கிடைக்கிறது.
சினிமா ப்ளஸ் ஸ்போர்ட்ஸ் தொகுப்பில், ஸ்டார் கிரிக்கெட், ஈஎஸ்பிஎன், ஸ்டார் ஸ்போர் ட்ஸ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 என 4 புதிய பிரபல ஸ்போர்ட்ஸ் சேனல்களையும், விளம்பரங்கள் இல்லாத 8 திரைப்பட சேனல்களையும் வழங்குகிறது.

ஆங்கில திரைப் படங்கள், தகவல், பொழுதுபோக்கு மற்றும் செய்திகள் ஆகியவற்றின் மிக நேர்த்தியான கலவையை வேர்ல்டு பேக் வழங்குகிறது. சன் டைரக்ட் தளத்தின் கீழ் அனைத்து பிரிவுகளிலும் கிடைக்கக்கூடிய 190க்கும் மேற்பட்ட சேனல்கள்  மெகா பேக் வழங்குகிறது.

சலுகை திட்டங்களை அறிவித்து சன் டைரக்ட் நிறுவனத் தின் மேலாண்மை இயக்குநர் மகேஷ்குமார் பேசுகையில், ‘‘இந்த பண்டிகை காலத்தில் இத்தகைய மதிப்புமிக்க சலுகை திட்டங்களின் மூலம், வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியில் பங்குகொள்ள எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது’’ என்றார்.

மங்கள்யான் செயற்கைக்கோள் : ஒத்திகை துவங்கியது!

31 - tec Mission-Mars.j 

 
செவ்வாய் கிரகத்தரையின் மேற்பரப்பு குறித்தும், அங்கு மீத்தேன் வாயு உற்பத்தி ஆகும் இடம் குறித்தும் ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதிஸ்தவான் ராக்கெட் தளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி– சி25 ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலத்தை வருகிற 5–ந் தேதி பிற்பகல் 2.36 மணிக்கு ஏவுகிறது.அப்போது அனுப்புவதற்கான ஒத்திகைகள் ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று துவங்கியுள்ளன.



சத்தீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்று வரும் இந்த ஒத்திகையில் ஏராளமான விஞ்ஞானிகள் பங்கேற்றுள்ளனர். அங்குள்ள முதலாவது ஏவுதளத்தில் பிஎஸ்எல்வி சி&25 ராக்கெட் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதனை விண்வெளியில் செலுத்-துவதற்கான பொத்தானை அமுக்குவதை தவிர மற்ற பணிகள் அனைத்தும் சோதித்து பார்க்கப்பட்டு வருவதாக ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


வரும் 3ம் தேதி காலை 6 மணி 8 நிமிடத்திற்கு ராக்கெட்டை அனுப்புவதற்கான கவுன்டவுன் துவங்க உள்ளன. பின்னர் 5ம் தேதி பிற்பகல் 2 மணி 39 நிமிடத்தில் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. 300 நாட்கள் பயணத்திற்கு பிறகு 2014ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி மங்கல்யாண் செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்தை சென்றடையும். அங்கு மீத்தேன் வாயு உள்ளது தொடர்பான பல்வேறு ஆய்வுகளை மங்கள்யாண் செயற்கைக்கோள் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top