.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 22 September 2013

சினிமா நூற்றாண்டு 2–ம் நாள் நிகழ்ச்சி: சென்னையில் திரண்ட கன்னட– தெலுங்கு நடிகர், நடிகைகள் !


சினிமா நூற்றாண்டு 2–ம் நாள் நிகழ்ச்சி: சென்னையில் திரண்ட கன்னட– தெலுங்கு நடிகர், நடிகைகள்
 
 
இந்திய சினிமா நூற்றாண்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. முதல்– அமைச்சர் ஜெயலலிதா நேற்று இவ்விழாவை தொடங்கி வைத்தார். முதல் நாள் நிகழ்ச்சியாக தமிழ் திரையுலகினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.


இன்று காலை 2–ம் நாள் நிகழ்ச்சியாக கன்னட திரைப்பட விழா நடந்தது. கர்நாடக மந்திரிகள் கே.ஜே. ஜார்ஜ், ராமலிங்க ரெட்டி, உமாஸ்ரீ ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். பின்னர் கன்னட நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கன்னட மொழி பாடல்களுக்கு நடிகர், நடிகைகள் நடனம் ஆடினார்கள். விழாவில் ஏராளமான கன்னட ரசிகர்கள் கலந்து கொண்டார்கள்.


இன்று மாலை 6 மணிக்கு தெலுங்கு திரைப்பட விழா நடக்கிறது. இதில் ஆந்திர துணை முதல்வர் தாமோதர்ராஜா நரசிம்மா, மத்திய மந்திரி கே.சிரஞ்சீவி, அமைச்சர் டி.கே. அருணா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதில் தெலுங்கு நடிகர்கள், வெங்கடேஷ், நாகார்ஜூனா, டாக்டர் ராஜசேகர், சுமன், மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுனா, நாகசைதன்யா, ராம்சரன் தேஜா உள்ளிடட்ட பலர் பங்கேற்கின்றனர்.


நாளை (23–ந்தேதி) காலை மலையாள நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதில் மம்முட்டி, மோகன்லால், திலீப் பங்கேற்கின்றனர்.
 
 

இந்து மத கலைக்களஞ்சியம் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டது!


11 நூல்கள் கொண்ட தொகுப்பாக இந்த கலைக்களஞ்சியம் அமைந்துள்ளது.


இந்து மத கலைக்களஞ்சியம் (Encylopedia of Hinduism) என்ற புத்தகத் தொகுப்பு ஒன்று திங்களன்று அமெரிக்காவின் தெற்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ரீதியில் வெளியிடப்பட்டுள்ளது.


25 ஆண்டு காலமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் இந்து மதத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் எழுதிய சுமார் ஏழாயிரம் கட்டுரைகளின் 11 நூல்கள் கொண்ட தொகுப்பாக இந்த கலைக்களஞ்சியம் அமைந்துள்ளது.



இந்து மதத்தின் அடிப்படை நம்பிக்கைகள், சித்தாந்தங்கள், வழிபாட்டு முறைகள் போன்றவை குறித்து இந்தக் கலைக்களஞ்சியம் பேசுகிறது.
தவிர இந்து மதம் சார்ந்த இந்திய சரித்திரம், கலாச்சாரம், கலை, இலக்கியம் பற்றிய கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்திய பாரம்பரிய ஆய்வு அறக்கட்டளை என்ற அமைப்பை நடத்துகின்ற சித்தானந்த் சுவாமிகளின் முயற்சியில் இந்த கலைக்களஞ்சிய பணிகள் நடந்துள்ளன.


அமெரிக்காவின் தெற்கு கரோலினா பல்கலைக்கழகம் இந்த திட்டத்துக்கு ஆதரவும் வசதிகளும் செய்துதந்திருந்தது.



இந்த கலைக்களஞ்சியத்தின் சர்வதேச வெளியீட்டு விழாவில் தெற்கு கரோலினா மாகாண ஆளுநர் நிக்கி ஹேலி, அட்லாண்டா நகரிலுள்ள இந்திய தூதர் அஜித் குமார், இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் அன்னா ஹசாரே உட்பட நூற்றுக்கணக்கான மத அறிஞர்களும் கல்வியாளர்களும் பங்குகொண்டிருந்தனர்.



இந்தியாவில் இந்த கலைக்களஞ்சியம் ஏற்கனவே தலாய் லாமா அவர்களால் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 28 ஆம் தேதி மங்கள்யான் ஏவப்படும்!

செவ்வாய் கிரகம்


செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா விடும் முதல் ஆய்வுக் கோள் வரும் அக்டோபர் 28 ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.



செவ்வாய் கிரகத்துக்கு செல்லுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள மங்கள்யான் செயற்கைக்கோள், தற்போது இறுதிகட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்த நிபுணர் குழு, வரும் அக்டோபர் மாதம் 28 ஆம் தேதிக்கும் நவம்பர் மாதம் 19 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தலாம் என்று முடிவெடுத்துள்ளதாக விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தேவிப் பிரசாத் கார்னிக் தமிழோசையிடம் தெரிவித்தார்.
வானிலை சீராக இருந்தால் அக்டோபர் 28 ஆம் தேதி இந்தக் கோள் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து பி எஸ் எல் வி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த திட்டத்திற்கு 450 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. 


நீண்ட தூரம்

செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி
செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி



இதற்கு முன்பு இந்தியா 2008 ஆம் ஆண்டு சந்திர மண்டலத்தை ஆராய சந்திரயானை வெற்றிகரமாக ஏவியது. பூமியில் இருந்து சந்திரன் 4 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சூரியக் குடும்பத்தில் பூமிக்கு அடுத்து இருக்கும் கோளான செவ்வாயோ இதை விட ஆயிரம் மடங்கு தூரத்தில் அதாவது 400 மில்லியன் கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ளது. ஆனால் ஒவ்வொறு 26 மாத கால இடைவெளியிலும் செவ்வாய் பூமிக்கு சற்றே அருகில் அதாவது 56 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் வருகிறது. அப்படி செவ்வாய் கிரகம் அடுத்து நெருங்கி வரும் நேரத்தைக் கணக்கில் கொண்டே இந்த கோளை இந்தியா ஏவுகிறது.


விண்ணில் ஏவப்பட்ட பிறகு, 1350 கிலோ எடையுள்ள மங்கள்யான் செயற்கைக் கோள் செவ்வாய் கிரகதையடைய 10 மாதங்களை எடுத்துக் கொள்ளும். செவ்வாயை சென்றடையும் அளவுக்கு தொழில் நுட்பத் திறன் உள்ளதாக என்பதை உறுதிப்படுத்தவும், செவ்வாய் கிரகத்தில் மீதேன் இருக்கிறதா என்பது உள்ளிட்ட ஆய்வுகளை நடத்துவதுமே மங்கள்யானின் முக்கிய நோக்கங்கள்.


செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்த பல சோதனைகளைச் செய்ய 5 உபகரணங்களை மங்கள்யான் ஏந்திச் செல்கிறது. சுமார் ஆறுமாத காலமே இது செவ்வாய் கிரகத்தை சுற்றிவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதிக பட்சமாக அந்த கிரகத்தை மங்கள்யான் 60 முறை சுற்றிவரும். 



சந்திரயானில் மொத்தமாக 11 கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. அதில் சில வெளிநாட்டு நிறுவனங்களுடையவை. ஆனால் இப்போது எடுத்துச் செல்லப்படும் அனைத்து கருவிகளும் இந்தியாவுடையாதாகவே இருக்கும். அமெரிக்காவும், ரஷ்யாவும் 1960களிலேயே செவ்வாய் கிரகத்துக்கு கோளை அனுப்பியுள்ளன. சமீப ஆண்டுகளில் விண்வெளியில் வேகமாக முன்னேறிவரும சீனா 2011 இல் செவ்வாய் கிரகத்தை ஆராய கோள் அனுப்ப மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

டிசைனர் குஷனில் குஷியான லாபம்!

Profit in the excited designer cushion

சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள மஞ்சுபாஷிணியின் வீட்டுக்குள் நுழைந்தால், திரும்பின பக்கமெல்லாம் அழகழகான குஷன்கள். சதுரமாக,  வட்டமாக, இதய வடிவத்தில், திண்டு மாடலில்.... இன்னும் விதம்விதமான வடிவங்களில் அசத்தும் அத்தனையும் அழகு குஷன்கள்.

கார் வைத்திருப்பவர்களும், வீட்டை ஆடம்பரமாக வைத்திருப்போரும் மட்டும்தான் ஒரு காலத்தில் குஷன் உபயோகிப்பார்கள். இன்று வீட்டுக்கு வீடு  அவற்றின் உபயோகத்தைப் பார்க்க முடிகிறது. ‘‘எம்.ஏ எகனாமிக்ஸ் படிச்சிருக்கேன். அடிப்படையில நான் ஒரு பியூட்டிஷியன். அழகு விஷயத்துல  ஆர்வம் அதிகம். அழகழகான கைவினைப் பொருள்கள் பண்றதுலயும் ஈடுபாடு உண்டு. ஒருமுறை ஒரு கடையில குஷன் பார்த்தேன். அதோட  நேர்த்தியும், டிசைனும் ரொம்பப் பிடிக்கவே, கத்துக்கிட்டு நானும் செய்ய ஆரம்பிச்சேன்.

குஷன்ல பொதுவா வட்டம், சதுரம், இதய வடிவம்னு குறிப்பிட்ட மாடல்கள் பலருக்கும் தெரியும். ஆனா கற்பனை வளம் இருந்தா, பதினஞ்சுக்கும்  மேலான மாடல்கள் பண்ணலாம்’’ என்கிறார் மஞ்சுபாஷிணி. ‘‘சாதாரண தலையணையா உபயோகிக்கலாம். வீட்டுக்குள்ள அலங்காரப் பொருளா  வைக்கலாம். கார் ஓட்டறவங்களுக்குப் பயன்படும். யாருக்கு வேணாலும் அன்பளிப்பா கொடுக்கலாம். சாட்டின், வெல்வெட், சில்க் காட்டன், காட்டன்...  இப்படி எந்தத் துணியிலயும் பண்ணலாம்.

இது தவிர உள்ளே அடைக்க நைலான் பஞ்சும், கலர் நூலும், ஊசியும் மட்டும்தான் தேவை. வேகத்தையும், நேரத்தையும் பொறுத்து ஒரு நாளைக்கு 2  முதல் 3 வரை பண்ணலாம். தலையணைக் கடைகள், ஃபேன்சி ஸ்டோர், இன்டீரியர் டெகரேஷனுக்கான பொருள்கள் விற்கற கடைகள், கார்  அலங்காரப் பொருள்கள் விற்கற கடைகள்ல ஆர்டர் எடுக்கலாம். வட இந்திய மக்கள் இதை அதிகமா பயன்படுத்தறாங்க. அவங்க அதிகம் வசிக்கிற  ஏரியா கடைகள்ல இது நிறைய விற்பனையாகும். குறைஞ்சபட்சம் 200 ரூபாய்லேருந்து, அதிகபட்சமா 700 ரூபாய் வரைக்கும் விற்கலாம். வருஷம்  முழுக்க தொய்வில்லாத பிசினஸ் இது’’ என்கிறார் மஞ்சு.
  •  

கற்பனையும் கைத்திறனும்: வீட்டுக்குள் மரம்!




Imagine Craft: tree house!

என்னென்ன தேவை?

பிவிசி பைப் - 1 (விருப்பமான சைஸில் கட் செய்து வாங்கிக் கொள்ளவும்)
கயிறு - தேவையான அளவு
பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் பவுடர் - 1 கிலோ (செராமிக் பவுடரும் பயன்படுத்தலாம்)
ஃபெவிகால் - 1 பாட்டில்
அக்ரிலிக் பெயின்ட் - (பிடித்த வண்ணங்களைத்
தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளவும்)
பிளாஸ்டிக் இலைகள் - தேவையான அளவு (கடைகளில் கிடைக்கும்)
மண் தொட்டி அல்லது பிளாஸ்டிக் தொட்டி - 1
பிளாஸ்டிக் பூக்கள் - ஒரு கொத்து
கூழாங்கற்கள் - தேவைக்கேற்ப
பிரஷ் - 1.

“மிரட்டும் அலங்காரங்கள் வேண்டாம்... ஆடம்பரமான பொருள்களை அறைக்குள் திணித்து அடைக்க வேண்டாம்... கலைநயம் மிளி ரும் சின்னச்  சின்னப் பொருள்கள் போதும்... கலையழகு வீட்டில் தாண்டவமாடும். அதற்கு நிச்சயம் உதவும் சிறிய செயற்கை மரம்!  எளிய பொருள்களைக் கொண்டு  இதை நீங்களே செய்யலாம்” என்று உற்சாகம் தருகிறார் சென்னையில் வசிக்கும் லதா அருண்கு மார். கூடவே, செயற்கை மரம் தயாரிக்கும்  வழிமுறையை எளிமையாக விவரிக்கிறார் இங்கே... 

எப்படிச் செய்வது?

பிவிசி பைப்பில் ஃபெவிகாலை முழுமையாக தடவிக் கொள்ளவும். அதில் கயிறை வட்டவடிவமாக சுற்றவும். பைப்பின் முக்கால் பாகம் வரை சுற்றினால் போதும்.

ஒரு பாத்திரத்தில் அல்லது பக்கெட்டில் பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் பவுடரை கொட்டி அதில் தேவையான அளவு தண்ணீர் கலந்து  பிசையவும். கரைசல்  தோசை மாவு பதத்துக்கு இருக்க வேண்டும்.

இந்தக் கரைசலை கயிறு சுற்றிய பைப்பில் முழுவதும் தடவவும். கயிறு வெளியே தெரியாத அளவுக்கு அடர்த்தியாக பூச வேண்டும்.  சிறிது நேரம்  உலர வைத்தால் கலவை பைப்புடன் இறுக ஒட்டிக் கொள்ளும்.

பிளாஸ்டிக் தொட்டி யிலும் கரைசலை தேவையான அளவு போட்டு, அதில் பைப்பை நடுவில் வைக்கவும். பைப்பை குச்சியால் கீற வும். இப்படிக்  கீறுவது மரம் போன்ற தோற்றத்தைத் தரும்.

கலவை நன்கு உலர்ந்ததும் உங்களுக்குப் பிடித்த வண்ணங்களைக் கொண்டு பெயின்ட் அடிக்கவும்.

பெயின்ட் உலர்ந்ததும் பைப்பின் மேல் பகுதி யில் செயற்கை மலர் களால் அலங்கரிக்கலாம்.

விரும்பினால் பிளாஸ்டிக் இலைகளை பைப்பின் மீது சுற்றலாம். அவ்வளவுதான்... அழகான செயற்கை மரம் ரெடி! அழகுக்கு அழகு  சேர்க்க  பூத்தொட்டியில் கூழாங்கற்களை போடலாம். இம்மரத்தை வீட்டு வரவேற்பறையில் வைத்தால் பார்ப்பவர்களை சுண்டி இ ழுக்கும். தண்ணீர் படாமல்  பார்த்துக் கொண்டால் போதும். நீண்ட நாட்களுக்கு அப்படியே இருக்கும். பிளாஸ்டிக் பூக்களுக்கு பதி லாக ரோஜா போன்ற நிஜப்பூக்களை வைத்தால்  அழகு அள்ளும்!

பிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.!


புரோகிராம் லாங்குவேஜ் ( Programming Language ) முதல் அனிமேசன் மென்பொருட்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது முதல் ஒவ்வொரு மென்பொருட்களிலும் திறமையானவர்களாக நம்மை மாற்ற இலவசமாக பயிற்சி கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.


கணினியில் ஜாவா மொழி படிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தொகை செலவிட்டால் தான் படிக்க முடியும் என்பதில்லை , நம்மிடம் கணினியும் இணைய இணைப்பும் இருந்தால் ஆன்லைன் மூலம் இன்றைக்கு அதிகமாக காசு வசூலிக்கும் கணினி பயிற்சிகள் அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே இலவசமாக கற்கலாம் அத்தனை பயிற்சிகளையும் தன்னகத்தே கொண்டு ஒரு தளம் உள்ளது.



இணையதள முகவரி :      http://www.good-tutorials.com



CSS, Flash , HTML , Illustrator, JavaJavaScript , Maya ,Photography , Photoshop, PHP , Ruby ,Ruby on Rails , 3ds Max , ஜாவா முதல் பிஎச்பி வரை அனிமேசன் மென்பொருளில் பிஷாஷ்-ல் தொடங்கி மாயா வரை அனைத்து மென்பொருள்களின் பயிற்சியையும் ஆரம்பம் முதல் நம்மை திறமையானவர்களாக மாற்றும் அத்தனை பயிற்சியும் இங்குள்ளது. ஸ்டூடியோ மேக்ஸ் , மாயா போன்ற மென்பொருட்களின் பயிற்சிக்கெல்லாம் சராசரியாக 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை செலவாகிறது , எந்தவிதமான பணச்செலவும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே கற்கலாம், நாம் விரும்பும் நேரத்தில் விரும்பும் மென்பொருளின் பயிற்சியை அளிக்க இந்தத்தளம் பலவிதமான பாடங்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நாம் முறையாக பயிற்சியை மேற்கொண்டால் எந்த மென்பொருளிலும்  திறமையானவர்களாக மாறலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு கணினி படித்தவர்களுக்கும் அனிமேசன் படிக்க விரும்புபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

பால் கொழுக்கட்டை - சமையல்!


 Paccarici flour with salt, hot pudding and mashed scroll to the terms.

என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு - 1/2 கப்,
பொடித்த வெல்லம் - 1/2 கப்,
தேங்காய் - 1/2 மூடி,
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - சிறிது.


எப்படிச் செய்வது?


பச்சரிசி மாவில் உப்பு சேர்த்து, வெந்நீர் விட்டு கொழுக்கட்டை உருட்டும் பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக  உருட்டிக் கொள்ளவும். தேங்காய் துருவி, முதல் இரண்டு பால் தனித்தனியே எடுக்கவும். வெல்லத்தையும் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இரண்டாம்  தேங்காய் பாலில் கரைத்த வெல்லம் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிட்டு அதிலேயே உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு  வேகவிடவும். உருண்டைகள் வெந்ததும் முதல் பால் சேர்த்து ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கி, பின் பறிமாறவும்.

பால் பாயசம்! - சமையல்!









 Cotton-wool in milk and add a little water and cook cooker 3 whistles.


என்னென்ன தேவை? 

பால் - 1 லிட்டர்,
பச்சரிசி நொய் - 1/4 கப்,
சர்க்கரை - 300 கிராம்,
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை,
முந்திரி, திராட்சை - அலங்கரிக்க,
குங்குமப்பூ - சிறிது,
நெய் - சிறிது.



எப்படிச் செய்வது?  

பாலில் சிறிது தண்ணீர் விட்டு நொய் சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு இறக்கவும். பாலில் வெந்த நொய்யில் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து  அடிப்பிடிக்காமல் கிளறவும். நெய்யில் ஏலக்காய், முந்திரி, திராட்சை வறுத்து பாயசத்தில் சேர்க்கவும். குங்குமப்பூ வேண்டுமென்றால் கையால்  நொறுக்கிச் சேர்க்கவும். சுலபமான, சுவையான பால் பாயசம் ரெடி.


தமிழ்வழி பி.இ. படித்தவர்களுக்கு காத்திருக்கிறது அரசு வேலை!




தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் பி.இ. சிவில், மெக்கானிக்கல் இறுதி ஆண்டு படிக்கும் 120 மாணவ-மாணவிகளுக்கும் படிப்பை முடிக்கும்போது கண்டிப்பாக அரசு வேலை உறுதியாக காத்திருக்கும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் இறுதியாண்டு பொறியியல் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு உறுதியாக அரசு வேலை காத்திருக்கிறது. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் 20 சதவீத சிறப்பு ஒதுக்கீடுதான் இந்த அதிர்ஷ்டத்திற்கு காரணம். 


தமிழ்வழியில் கல்வி 

 
தமிழில் படித்தால் வேலையே கிடைக்காது என்ற ஏளனப்பேச்சை சர்வ சாதாரணமாக எங்கும் கேட்கலாம். மழலை கல்வி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை தாய்மொழியில் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள போதும், மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகள் தமிழ்வழியிலா அம்மாடியோவ் என்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் வந்ததுதான் அந்த அதிரடி அரசாணை. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத சிறப்பு ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணைதான் அது. 


20 சதவீத சிறப்பு ஒதுக்கீடு 

 
கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் கோயம்புத்தூர் நகரில் உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்தது. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அறிப்பை அந்த மாநாட்டில் அப்போதைய முதல்வர் கரு ணாநிதி வெளியிட்டார்.அதற்கான அரசாணையும் (எண் 145: பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, தேதி: 30.9.2010 ) வெளியிடப்பட்டது. 


இதையடுத்து 2011-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில், மெக்கானிக்கல் ஆகிய பொறியியல் படிப்புகளில் தமிழ்வழி பி.இ. படிப்பு தொடங்கப்பட்டது. தலா 60 இடங்கள் கொண்ட இந்த படிப்புகளில் கலந்தாய்வின்போது மாணவ-மாணவிகள் கொஞ்சம் யோசித்துத்தான் சேர்ந்தனர். தமிழ்வழியில் பி.இ. படிக்கப் போகிறோமே, அதற்கு மதிப்பு இருக்குமா, வேலை கிடைக்குமா என்று அவர்கள் யோசித்து இருக்கலாம். எனினும் துணிந்து தமிழ்வழிப் படிப்பில் சேர்ந்தனர்.


தமிழ் பாடப்புத்தகங்கள் 

 
பாடப்புத்தகங்கள் தமிழில் உரு வாக்கப்பட்டன. முடிந்தவரைக்கும் அந்த பாடங்களின் தொழில்நுட்ப வார்த்தைகள் தமிழாக்கப்பட்டன. பேராசிரியர்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பாடம் நடத்துவார்கள். 2011-ம் ஆண்டு சேர்ந்த மாணவ-மாணவிகள் நடப்பு கல்வி ஆண்டில் (2013-14) அதாவது அடுத்த ஆண்டு ஜூன் மாதம் படித்து முடித்துவிட்டு வெளியே வருவார்கள். தற்போதும் தமிழக அரசுப் பணிகளில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டுத்தான் வருகிறது. 


நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளிலும், தமிழ்நாடு மின்சார வாரியம், போக்குவரத்துக்கழகங்களிலும் உதவி பொறியாளர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்படுகின்றன. ஆனால் தற்போது தமிழ்வழியில் பொறியியல் படித்தவர்கள் யாரும் இல்லாததால் அந்த பணியிடங்கள் ஆங்கில வழி படித்த பொதுப்பிரினரால் நிரப்பப்பட்டுவிடுகின்றன. தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் பி.இ. சிவில், மெக்கானிக்கல் இறுதி ஆண்டு படிக்கும் 120 மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்று படிப்பை முடிக்கும்போது அரசு வேலை உறுதியாக காத்திருக்கும். 



ஆனால் அவர்களுக்குள் போட்டி போட வேண்டியதிருக்கும். 21 வயதில் அரசுப் பணியில் சேரும் இந்த நாளைய தமிழ் பொறியாளர்களுக்கு பணிக்காலம் 36 ஆண்டு, 37 ஆண்டுக்கும் இருப்பதால் அனைவரும் துறை யின் தலைமை பதவியை நீண்ட காலம் அலங்கரிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். 


வளர்ச்சிக்கு வழிகாட்டிய வண்ணத்துப் பூச்சிகள்!


வடிவழகன் 
வடிவழகன் 
 
 
 
குறிப்பிட்ட வகைப் பூக்களிடம் மகரந்தச் சேர்க்கை
 
 
 
குறிப்பிட்ட வகைப் பூக்களிடம் மகரந்தச் சேர்க்கை
விவசாயத்தில் குறிப்பிட்ட வகை பயிர்களுக்கு தீங்கு செய்யும் பூச்சிகளின் மரபணுவைத் தூண்டியோ, கட்டுப்படுத்தியோ, சில நுண்ணிய மாற்றங்களைச் செய்தோ அவை பயிர்களுக்கு தீங்கு செய்யாதபடி மாற்றலாம். அது கடினமாக இருக்கும்பட்சத்தில் பயிரின் மரபணுவில் மாற்றம் செய்து அக்குறிப்பிட்ட வகை பூச்சி தன்னிடம் வராமல் செய்யலாம்.

 

கேயாஸ் கோட்பாடு கேள்விப்பட்டி ருப்போம். ஏறத்தாழ அப்படியான ஓர் கோட்பாட்டை உருவாக்கியிருக்கிறார் இளம் ஆராய்ச்சியாளரும் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை முனைவருமான வடிவழகன். வண்ணத்துப் பூச்சிகளின் மரபணுக்கள் தொடர்பாக இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற ஆச்சர்ய விடைகள் நமது விவசாயத் துறையை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்லும் என்கின்ற நம்பிக்கையை விதைத்துள்ளது. 



"எங்கள் கல்லூரியின் விலங்கியல் துறைப் பேராசிரியர் குணசேகரனின் வழிகாட்டுதலில் உருவான ஆய்வு இது. உயிரினங்களும் தாவரங்களும் நெருங்கியத் தொடர்புடையவை. அந்தத் தொடர்பே பல்லுயிர் சமநிலையை உறுதிப்படுத்துகின்றன. உலகம் முழுவதும் 2 லட்சம் வண்ணத்துப்பூச்சி இனங்கள் இருக்கின்றன. அவற்றில் 1,439 இனங்கள் இந்தியாவில் இருக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்குறுத்தி தேசிய பூங்காவில் இருக்கும் வண்ணத்துப் பூச்சிகளை ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டேன். குறிப்பிட்ட சில வகை வண்ணத்துப்பூச்சிகள் எதிரிகளிடம் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள தங்கள் இறகுகளின் நிறத்தை விதவிதமாக மாற்றியும், வினோதமாக மடித்தும், இயல்பாக பறக்காமல் வினோதமாக நடித்தும் எதிரிகளை குழப்பமடைய செய்கின்றன. வண்ணத்துப் பூச்சிகளின் சிறப்பு மரபணு பண்பால் விளைந்த விலங்கியல் உண்மை இது. 



ஆனால், ‘நிம்பாலிடே' (Nymphalide) குடும்பத்தைச் சேர்ந்த ‘டெனாய்னே’ (Danainae) துணை குடும்பத்து வண்ணத்துப் பூச்சிகளுக்கு மேற்கண்ட யுக்தி தேவைப்படுவதில்லை. மாறாக, எதிரிகள் இவைகளைக் கண்டால் விலகி ஓடிவிடுகின்றன. இதற்கான விடையை தேடியபோது இவ்வகை வண்ணத்துப் பூச்சிகள் குறிப்பிட்ட வகைத் தாவரங்களின் பூக்களை (Calotropis gigantea, Chromolaena odorata, Crotalaria retusa) மட்டுமே மகரந்தச் சேர்க்கை செய்வது தெரிந்தது. அது ஏன் என்று ஆய்வு செய்ததில் அவ்வண்ணத்துப் பூச்சிகள் தங்களது லார்வா எனும் புழுப் பருவத்தில் மேற்கண்ட தாவரங்களை மட்டுமே உணவாக எடுத்துக்கொண்டது தெரியவந்தது. 



இதில் ஆச்சர்யம் என்னவெனில் அத்தாவரங்களில் இருந்த விஷத்தையே அந்தப் புழுக்கள் உணவாக எடுத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், அந்த விஷம் புழுக்களை ஒன்றும் செய்யவில்லை. விஷத்தை உட்கொள்ளும் புழுக்கள் எப்படி உயிரோடு இருக்கின்றன என்கிற கேள்விக்கான விடைக்காக புழுவின் மரபணு மற்றும் தாவரத்தின் மூலக்கூறுகளை உயிரியல் தொழில்நுட்பம் மற்றும் உயிர்த் தகவியல் ஆய்வுக்கு உட்படுத்தினேன். அப்போதுதான் அப்புழுவிடம் விஷத்தை முறியடிக்கச் செய்யும் அல்லது விஷத்தை ஏற்றுக்கொள்ளும் விஷ எதிர்ப்பு மரபணுக்கள் (Taxin resistance gene) இருப்பது தெரியவந்தது. 



மேலும் அக்குறிப்பிட்ட தாவரத்தின் மரபணுவும் புழுவின் மரபணுவும் ஒன்றுக்கொன்று நெருங்கியத் தொடர்பையும் ஒற்றுமைகளையும் கொண்டிருந்தன. ‘டெனாய்னே’ வகை வண்ணத்துப் பூச்சிகள் மட்டும் அல்ல... Tirumala limniace, Danaus genutia, Euploea core, Danaus chrysippus வகை வண்ணத்துப் பூச்சிகளும் இதே பாணியைப் பின்பற்றுகின்றன. 



சரி, இந்த ஆராய்ச்சியின் பலன் என்ன? இதன் மூலம் விவசாயத்தில் குறிப்பிட்ட வகை பயிர்களுக்கு தீங்கு செய்யும் பூச்சிகளின் மரபணுவைத் தூண்டியோ, கட்டுப்படுத்தியோ, சில நுண்ணிய மாற்றங்களைச் செய்தோ அவை பயிர்களுக்கு தீங்கு செய்யாதபடி மாற்றலாம். அது கடினமாக இருக்கும்பட்சத்தில் பயிரின் மரபணுவில் மாற்றம் செய்து அக்குறிப்பிட்ட வகை பூச்சி தன்னிடம் வராமல் செய்யலாம். அப்படியே வந்தாலும் தாக்குதலை முறியடிக்கவோ அல்லது தற்காத்துக் கொள்ளவோ செய்யலாம்.
இன்னும் எளிமையாக புரிய வேண்டுமெனில், ‘ஏழாம் அறிவு’ படத்தின் கான்செப்ட் போலத்தான் இது. ஒவ்வொரு உயிரினத்துக்குள்ளேயும் பல்வேறு தலைமுறைகளுக்கு முன்பு இருந்த மரபணு செயல்பாடற்ற நிலையில் உறங்கிக்கிடக்கும். அதை சில தூண்டல்கள் மூலம் மாற்றங்கள் செய்வதும் உயிர்ப்பிப்பதும்தான் இந்த தொழில்நுட்பம். ஒரு பூச்சி ஏன் குறிப்பிட்ட வகை பயிரை மட்டும் தாக்குகிறது என்று மரபணு ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்து, மரபணு மாற்றத்தின் மூலம் அதைத் தடுக்கிறோம். 



இந்த ஆராய்ச்சியும் கிடைத்த விடைகளும் ஆரம்பக் கட்டம் மட்டுமே. அதில் பல்வேறு குழப்பங்கள், கேள்விகள் இருக்கின்றன. இதில் படிப்படியாக நூல் பிடித்து மேலும் மேலும் கேள்விகளுக்கு விடைதேடி ஆய்வுகளை விரிவுப்படுத்தும்போது உலகம் வியக்கும் உயிரியல் உண்மைகள் புலப்படும். விவசாயத் துறையில் மட்டுமின்றி வனங்களின் வளர்ச்சிக்கும் இதே தொழில்நுட்பம் உபயோகமாக இருக்கும்" என்றார்.


குளு..குளு..கொடைக்கானல்..! - சுற்றுலாத்தலங்கள்!


 குளு..குளு..கொடைக்கானல்..!
குளு..குளு..கொடைக்கானல்

கொடைக்கானல்-இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இதனால் இங்கு குளுமையான தட்ப வெட்பம் நிலவுகிறது. பொதுவாக இந்த மலைக்கூட்டங்களை பழனி மலைகள் என்று அழைப்பார்கள். தமிழ்நாட்டில் மலைகளில் இளவரசியாக உள்ள கோடை வாசத்தலம் கொடைக்கானல் ஆகும்.பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள் இங்கே பரவலாக வளர்கின்றன. அதனால் இம்மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு குறிஞ்சி ஆண்டவர் கோயில் என்றே பெயருண்டு. கடைசியாக இந்த மலர்கள் 2006-ஆம் ஆண்டு பூத்தன.22 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட இந்த மலை வாழிடம் கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் (6998அடி)உயரத்தில் உள்ளது.கொடைக்கானல் என்னும் சொல், காட்டின் முடிவு, கொடிகளின் காடு, கோடை கால காடு,  காட்டின் அன்பளிப்பு என பல பொருள் தரும். முன்னர் கொடைக்கானலில் மலைவாழ்மக்களே வாழ்ந்து வந்தனர், பின்னர் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது கோடை காலங்களில் இங்கு தங்கியிருந்தனர்.
இனி..சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்
வெள்ளி நீர்வீழ்ச்சி:

கொடைக்கானலில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. கடல் மட்டத்தில் இருந்து 5900 அடி உயரத்தில் இருக்கும் இந்த நீர்விழ்ச்சி பார்ப்பதற்கு வெள்ளியை போன்றே இருக்கும். கொடைக்கானல் ஏரியில் இருந்து வெளிவரும் தண்ணீரே இந்த நீர்வீழ்ச்சியின் பிறப்பிடமாகும். நீர்வீழ்ச்சியின் மொத்த உயரம் 55 மீ.

கொடைக்கானல் ஏரி:

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஏரி சுற்றுலாப் பயணிகள் காணவேண்டிய இடங்களில் முக்கியமானதாகும். 1863ஆம் ஆண்டு முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களால் உருவாக்கப்பட்டது இந்த ஏரி. மொத்தம் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியில் பயணிகள் உல்லாசமாக படகுப் பயணம் செய்ய சுற்றுலாத் துறையின் படகுகள் உள்ளன.கொடைக்கானல் ஏரியின் அழகை ரசித்தவாறு பெரிய அன்னங்களைப் போல வடிவமைத்த வண்ணப் படகுகளில், பெடல்களை மிதித்து இயக்கியவாறு உல்லாசமாகச் செல்லலாம்

ப்ரயண்ட் பூங்கா:

பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீ தொலைவில், கொடைக்கானல் ஏரிக்கு கிழக்கே அமைந்துள்ளது இந்த பூங்கா. மொத்தம் 20.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவை உருவாக்கியவர், எச்.டி.ப்ரயண்ட். இதை அவர் 1908 ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்த பூங்காவில் ஏறக்குறைய 325 வகையான மரங்கள், 740 வகையான ரோஜா மலர்கள் உள்ளன.150 வயதுடைய போதி மரமும், யூகலிப்டஸ் மரமும் இங்கு இருப்பது இந்த பூங்காவின் சிறப்பம்சமாகும். மே மாதம் இங்கு தோட்டக்கலை துறையின் கண்காட்சியும், மலர்க் கண்காட்சியும் நடைபெறும்.

கோக்கர்ஸ் நடைபாதை:

1872 ஆம் ஆண்டு கோக்கர் என்பவர் உருவாக்கியதுதான் இந்த நடைபாதை. 1 கி.மீ நீளமுடைய இந்த நடைபாதை பேருந்து நிலையத்தில் இருந்து 0.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. வானிலை நன்றாக இருந்தால் இங்கிருந்து பெரியகுளம், மதுரை, டால்பின் மூக்கு, பம்பா ஆறு போன்றவற்றை காணலாம். 
வான் ஆலன் மருத்துவமனை அருகே தொடங்கும் இந்த நடைபாதை புனித பீட்டர் தேவாலயத்தின் அருகே முடிகிறது.
டால்பின் மூக்கு:

பாம்பர் பாலத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 8.0 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இங்கு இருந்து பார்த்தால் பெரியபாறை ஒன்று டால்பின் மீனின் மூக்கு போன்று தெரியும். இந்த பாறையின் கீழே 6600 அடி ஆழமுடைய பள்ளம் இருக்கிறது. இதன் அருகே பாம்பர் அருவி உள்ளது.
பசுமை பள்ளத்தாக்கு;

கோல்ப் மைதானத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 5.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பள்ளத்தாக்கு. இந்த பள்ளத்தாக்கின் உயரம் 1500 மீ. வானிலையைப் பொருத்து இங்கிருந்து வைகை அணையை காணலாம்.

தலையர் நீர்வீழ்ச்சி
:
இந்த நீர்வீழ்ச்சி கொடைக்கானல் காட் ரோட்டில் உள்ளது.  இதனை எலி வால் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கின்றனர். இந்தியாவின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. இந்த நீர்வீழ்ச்சியை காட் ரோட்டில் இருந்து காணலாம். அருகில் சென்று காண்பதற்கு வழி கிடையாது.

குணா குகைகள்:

கமல்ஹாசன் நடித்து வெளியான குணா படத்தில் இந்த குகை இடம்பெற்றதால் இதனை குணா குகை என்கின்றனர்.  அதற்கு முன்னர் பிசாசின் சமையலறை
என்றழைக்கப்பட்டது இந்த குகை. சில வருடங்களுக்கு முன்னர் குகைக்கு உள்ளே சென்று வர அனுமதி அளிக்கப்பட்டது ஆனால் தற்பொழுது குகையின் உள்ளே செல்ல முடியாது, மிக தூரத்தில் இருந்து பார்க்கலாம்
.
ஊசியிலை காடு;

இந்த ஊசியிலை காட்டை 1906 ஆம் ஆண்டு பிரயண்ட் என்பவர் உருவாக்கினார்.  கொடைக்கானலை பசுமையாக்கும் முயற்சியில் மலைப்பகுதிகளில் பல ஊசியிலை மரங்களை அவர் நட்டு வளர்த்தார். இப்போது இந்த காடு பிரபலமான சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.

பியர் சோழா அருவி

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ளது இந்த நீர்வீழ்ச்சி. முன்னர் கரடிகள் இங்கு தண்ணீர் குடிக்க வந்ததால் இந்த நீர்வீழ்ச்சிக்கு இந்த பெயர் ஏற்பட்டது.  அடர்ந்த காட்டுப் பகுதியின் உள்ளே இருக்கிறது இந்த நீர்வீழ்ச்சி.
கொடைக்கானல் வானிலை ஆய்வுக்கூடம்

1898 ஆம் ஆண்டு இந்திய வான்கோளவியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து 2343 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து வைகை அணை, பெரியகுளம் மற்றும் சோத்துப்பாறை அணை ஆகியவற்றை காணமுடியும். இந்த ஆய்வுக்கூடத்தின் முன்னாள் இயக்குநரான ஜான் எவர்செட், இங்கு இருக்கும்போது எவர்செட் விளைவை கண்டுபிடித்தார்.
இந்த ஆய்வுக்கூடம் காலை 10 மணி - மதியம் 12.30 மணி மற்றும் மாலை 7 மணி - 9 மணி.
சீசன் நேரங்களில் வெள்ளிக்கிழமை மட்டும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்.

தூண் பாறைகள்:

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் மனதைக் கவரும் இயற்கைக் காட்சிகள் நிறைந்த இடங்கள் பல உள்ளன. அவற்றில் முக்கியமானதும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் ஓர் இடம் உண்டு என்றால், அது தூண் பாறைதான். கொடைக்கானல் பஸ் நிலையத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த தூண் பாறை. இது மேகங்கள் தொட்டுச் செல்லும் அளவில் உயர்ந்துள்ளது. இரு பிரிவுகளாகப் பிரிந்து வான் உயரக் கம்பீரமாக நிற்கும் இப்பாறைகள் அதன் அமைப்பினால் "தூண் பாறைகள்' என அழைக்கப்படுகின்றன.
இப்பகுதிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இந்தப் பாறையின் அமைப்பைக் கண்டு வியப்பில் ஆழ்ந்து விடுவர். மாலைப் பொழுதில் அடிக்கும் வெயில் இப்பாறையின் மீதுவிழும்போது பொன் நிறமாகக் காட்சியளிப்பது ஓர் அரிய காட்சியாகும்.
பாம்பர் அருவி:

இந்த அருவி கொடைக்கானலில் இருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது
குறிஞ்சி ஆண்டவர் கோவில்:

1934 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் இருந்து இங்கு வந்த லீலாவதி என்பவரால் கட்டப்பட்டது இந்தக் கோவில். இந்தக் கோவிலின் முக்கிய கடவுள் குறிஞ்சி ஆண்டவர் என்றழைக்கப்படும் முருகன். தற்போது பழநி தண்டாயுதபாணி திருக்கோவிலின் கட்டுப்பாட்டில் உள்ளது இந்தக் கோவில். 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூவை இங்கு பார்க்கலாம்.

செண்பகனூர் அருங்காட்சியகம்:

இந்த அருங்காட்சியகம் 1895 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு ஐந்நூறுக்கும் மேற்பட்ட விலங்குகள், பூக்கள், பூச்சிகள் ஆகியவை உள்ளன. இந்த அருங்காட்சியகம் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியின் உதவியுடன் பராமரிக்கப்பட்டு இயங்குகிறது.  கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது இந்த அருங்காட்சியகம். செவ்வாய்க்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் இயங்கும்.
அமைதியான சூழல், அருகே அழகிய ஓடை, சில்லென்ற காற்று வீசுவதால் இந்த இயற்கைக் காட்சியை கண்டு ரசிக்கவும் இயற்கையின் கொடையை அனுபவிக்கவும்
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மனதில் தோன்றும் ஓர் எண்ணம் எதுவென்றால் அடுத்த முறையும் இங்கு வரவேண்டும் என்பது. மேலும் இப் பகுதிகளில் உள்ள மலைத் தோட்டங்கள் இயற்கைக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. இப் பகுதியில் காலை முதல் மாலை வரையில் சுற்றுலாப் பயணிகள் வருகை எப்போதும் அதிகம் இருக்கும்.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலை, இந்த கோடை விடுமுறையில் நீங்களும் கண்டு மகிழுங்கள்
விழாக்கள் - வருடந்தோறும் மே மாதம் இங்கு கோடை விழா நடத்தப்படுகிறது.
செல்ல உகந்த நேரம் - ஏப்ரல் முதல் ஜூன் வரை
கொடைக்கானலுக்கு திண்டுக்கல், பெரியகுளம், மதுரை, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் இருந்து பேருந்து வசதி உண்டு.
அருகில் உள்ள ரயில் நிலையம் - கொடை ரோடு, 80 கி.மீ தொலைவில் உள்ளது
அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை, 121 கி.மீ தொலைவில்.உள்ளது

மானும்..ஓநாயும் (நீதிக்கதை)!


 
 
 
ஒரு ஊரில் மான் கூட்டம் ஒன்று வசித்து வந்தன.அவற்றுள் ஒரு சின்ன மான் மிகவும் புத்திசாலியாய் இருந்தது.
 


அதே நேரம் தன் புத்திசாலித்தனத்தைக் கண்டு மற்ற மான்களிடம் சற்று கர்வமாகவே நடந்துவந்தது.
 


ஒரு நாள் எல்லா மான்களும் மேய்ச்சல் முடிந்து திரும்புகையில் இருட்ட ஆரம்பித்தது..ஆனால் அப்போதும் அந்த 


சின்ன மான் திரும்ப வரவில்லை..


'இருட்டில் எந்தமிருகமாவது வந்து உன்னை அடித்து உண்டு விடும்'என்று வயதான மான் ஒன்று அறிவுரை கூறியும்


சின்ன மான் கேட்கவில்லை..'சரி' என மற்ற அனைத்து மான்களும் திரும்பின..


அந்த நேரம் அங்கு வந்த ஒரு ஓநாய் ஒன்று சின்ன மான் தனியாய் இருப்பதைப் பார்த்து ...அதை கொன்று உண்ண விரும்பியது..


உடன் சின்ன மான் புத்திசாலித்தனமாக' என்னை நீ உண்பதில் எனக்கு ஆட்சேபணையில்லை..ஆனால் அதற்கு முன் உன் இனிய குரலில்


பாட்டு ஒன்று கேட்க ஆசை'என்றது.


ஓநாயும் சின்ன மானின் கடைசி விருப்பத்தை கேட்டுவிட்டு போகட்டும் என்ற எண்ணத்தில் தன் கொடூரக்குரலால் பாட ஆரம்பித்தது.


அதன் குரல் கேட்ட வேட்டைக்காரர்கள் சிலர் அங்கு ஓடி வந்து ஓநாயை கொன்றனர்.


சின்ன மான் உயிர் தப்பியது.


கர்வம் இல்லாமல் ...மூத்த மான் சொன்ன அறிவுரையை கேட்டிருந்தால் சின்ன மானுக்கு இந்த நெருக்கடி வந்திருக்காது.


ஓநாயும் தன் கொடூரக்குரலை பற்றி புரிந்துகொண்டு பாடாமல் இருந்திருந்தால் இறந்திருக்காது.

ஓவியப் போட்டி: ரூ.1 லட்சம் பரிசு!!




மத்திய மின்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் பீரோ ஆஃப் எனர்ஜி எபிசியின்சி (BEE) நிறுவனம், 4 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்காக இந்திய அளவில் ஓவியப்போட்டியை நடத்துகிறது. இப்போட்டி இருபிரிவாக நடத்தப்பட இருக்கிறது. இருபிரிவிலும் முதலிடம் பிடிக்கும் மாணவருக்கு ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.

ஏ - பிரிவுக்கான (4, 5, 6-ஆம் வகுப்பு) தலைப்பு: 1. Save money - Practice energy conservation, 2. Save electricity, illuminate every home, 3. Save one unit a day, keep power cut away.

பி - பிரிவுக்கான (7,8,9-ஆம் வகுப்பு) தலைப்பு: 1. Energy conservation - A vision of the future,  2. Energy conservation is the foundation of energy security, 3. Energy efficiency is a journey not destination.

இப்போட்டிகள் மூன்று கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டமாக, பள்ளி மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் இந்த ஓவியப்போட்டி நடைபெறும். இப்போட்டியை ஒவ்வொரு பள்ளியின் தலைமையாசிரியரோ அல்லது முதல்வரோ நடத்துவார். இந்தப் போட்டிகள் அக்டோபர் 7-ஆம் தேதிக்கு முன்பாகவே அப்பள்ளிகளில் நடத்தி முடிக்கப்படும். பள்ளிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பவர்கள், மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். மாநிலத் தலைநகரில் இந்த இரண்டாம் கட்டப் போட்டி நடைபெறும். இப்போட்டி நவம்பர் 12-ஆம் தேதி இரண்டு பிரிவினருக்கும் தனித்தனியே நடைபெறும்.

மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் அனைவரும் அகில இந்திய அளவில் நடைபெறும் ஓவியப் போட்டிக்குத் தகுதி பெற்றவர்கள் ஆவர். இவர்கள் அனைவருக்கும் வரும் டிசம்பர் மாதம்  12-ஆம் தேதி, தில்லியில் இறுதிப்போட்டி நடைபெறும்.

தேசிய மின்சக்தி சேமிப்பு தினமான டிசம்பர் 14-ஆம் தேதி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகையையும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்குவார்.

பள்ளி அளவிலான போட்டியில் தேர்ச்சி பெற்று மாநில அளவில் போட்டியில் கலந்துகொள்பவர்கள் அனைவருக்கும் பங்கேற்புப் சான்றிதழ் கிடைக்கும். இரண்டு பிரிவுகளிலும், மாநில அளவில் முதலிடம் பிடிப்பவருக்கு ரூ.10 ஆயிரமும், இரண்டாமிடம் பிடிப்பவருக்கு ரூ.8 ஆயிரமும், மூன்றாமிடம் பிடிப்பவருக்கு ரூ.5 ஆயிரமும், ஆறுதல் பரிசாக 10 பேருக்கு தலா ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

ஏ பிரிவில், தேசிய அளவில் முதலிடம் பிடிப்பவருக்கு ரூ.1 லட்சமும், இரண்டாமிடம் பிடிக்கும் 4 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாமிடம் பிடிக்கும் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரமும், ஆறுதல் பரிசாக 20 பேருக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

பி பிரிவில், தேசிய அளவில் முதலிடம் பிடிப்பவருக்கு ரூ. 1 லட்சமும், இரண்டாமிடம் பிடிக்கும் 2 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரமும், மூன்றாமிடம் பிடிக்கும் 3 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரமும், ஆறுதல் பரிசாக 6 பேருக்கு தலா ரூ. 10 ஆயிரமும் வழங்கப்படும்.

தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் பேக், கைக் கடிகாரம், பங்கேற்புச் சான்றிதழ்களும் வழங்கப்படும். மாநில அளவிலான போட்டிகளுக்கு வந்து செல்லும் மாணவர்களுக்கும், அவருடன் வரும் பெற்றோர்களுக்கும் போக்குவரத்துச் செலவு வழங்கப்படும்.

விவரங்களுக்கு:www.emt-india.net/ncec2013/NCEC2013.htm
 

தமிழ் திரையுலகம் பயணிக்கும் பாதை சரியில்லையே!


ஒரு படைப்பாளி கவிஞனாக இருந்தால் – அவனது கவிதைகள் அறவயப் பட்டவையாக, ஆளுமை மிக்கவையாக, அறச்சீற்றம் கொண்டவையாக, அழகியல் உள்ளவையாக, சமூக அக்கறை நிறைந்தவையாக இருக்கும்பட்சத்தில் அவை வரவேற்கப்படுகின்றன; பின்பற்றப்படுவதற்கும், மேற்கோள்கள் காட்டப்படுவதற்கும் உரியவையாகி, நினைவுகளிலும் நூலகங்களிலும் பாதுகாக்கப்படுகின்றன.


ஒரு படைப்பாளி சிற்பியாக இருந்தால் – அவனது சிற்பங்கள் செய்நேர்த்தி மிக்கவையாக, செய்திகளைச் சொல்பவையாக, படைத்தவனின் கடுமையான உழைப்பாற்றலைப் பிரதிபலிப்பவையாக இருக்கும்பட்சத்தில் அவை ரசிக்கப்படுகின்றன, விலைகொடுத்து வாங்கப்படுகின்றன, கோயில்களில் நிலை நிறுத்தப்பட்டு வணங்கப்படுகின்றன.


ஒரு படைப்பாளி பெருங்கதை புனைபவனாக இருந்தால் – அவனது கதாபாத்திரங்கள் அறம் உரைப்பவையாக, மானுட வாழ்வியலை உணர்த்துபவையாக இருந்தால், அவை உயிருள்ள பாத்திரங்களாகவே உணரப்பட்டு உதாரணபுருஷர்களாக்கப்படுகின்றன. அவ்வகையில்தான் என்றைக்கோ எழுதப்பட்ட பல்வேறு வகையான இதிகாசங்களின் கதாபாத்திரங்கள் இன்றைக்கும் நம்முடன் உணர்வுபூர்வமாக உறவாடிக் கொண்டிருக்கின்றன.


sep 22 - cinema


நாவல் இலக்கிய உலகில் கதை மாந்தர்களாக வார்க்கப்பட்ட குறிஞ்சி மலர் “அரவிந்தன்’, பொன்னியின் செல்வன் “வந்தியத்தேவன்’, புத்துயிர்ப்பு “நெஹ்லூதவ்’ போன்ற பல உன்னத கதாபாத்திரங்களை நாம் பட்டியலிட முடியும். போற்றிப் பின்பற்ற மட்டுமல்ல, எவரும் பின்பற்றக் கூடாத எச்சரிக்கைகளாகவும் சில கதாபாத்திரங்கள் வார்க்கப்படுவது உண்டு.


அந்தவகையில் கோடிக்கணக்கான மக்களை ஈர்த்துக்கொண்டிருக்கும் தற்போதைய தமிழ்த் திரைப்படங்களின் பாத்திர வார்ப்புகளில் மிகப்பெரியதொரு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இன்றைய திரைப்படங்களின் கதாநாயகர்களாக படைக்கப்படுவோரில் பெரும்பாலானவர்கள் குதர்க்கவாதம் செய்கிறார்கள். கூச்சம் எதுவுமற்று குழுவாகச் சேர்ந்து மது குடிக்கிறார்கள். பேசிக்கொண்டே சிகரெட்டைப் பற்றவைத்து, புகைப்பது என்பது வாழ்வியலோடு இரண்டறக் கலந்திருக்க வேண்டிய இயல்பான நடைமுறையென்று மறைமுகமாக உணர்த்துகிறார்கள். பெற்றோருக்கும் குடும்ப உறவுகளுக்கும் எவ்வகையிலும் கட்டுப்பட மறுக்கிறார்கள். அவர்கள் கல்லூரிகளில் படிப்பதாகக் காட்டப்பட்டால், அங்கு படிப்பது ஒன்றைத்தவிர மற்ற எல்லாவற்றையும் செய்கிறார்கள். குறிப்பாக, பெண்களை விரட்டி விரட்டிக் காதலிக்கிறார்கள். தங்களது ஆசிரியர்கள் உள்பட அனைவரையும் கேலி செய்கிறார்கள்.



எதைச் செய்தேனும் “எடுபட்டு’ விடவேண்டும், “பெருவெற்றி’ பெற வேண்டும் என்கிற வணிக வலுக்கட்டாயமே தமிழ்த் திரையின் படைப்பாளிகளை இப்படியான கதாபாத்திரங்களை படைக்கும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. இளவயது ஆண்களையும், பெண்களையும், மாணவ மாணவிகளையும் ஈர்த்து, திரையரங்கில் அவர்களைக் கைதட்டவைத்துப் பெருங்குரலில் சிரிக்கவும் வைத்துவிட்டால் நமது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிடும் என்கிற படைப்பாளிகளின் மனோ நிலையே இன்றைய “திரை’யின் கதாபாத்திர வார்ப்புகள் பெருவீழ்ச்சியடைந்ததற்கான முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது.


நமது சமூகத்தில் பிள்ளைகள் பதின்மவயதை அடையும்வரை அவர்களால் பெற்றோர்களுக்கு எத்தகைய சமூக இடர்பாடுகளும் நேர்வதில்லை. அதற்குப்பிறகு அதாவது பதிமூன்று வயது தொடங்கி ஏறக்குறைய இருபத்தைந்து வயதுவரை பெற்றோர்களுக்கு ஒவ்வாதவர்களாக மாறுகின்றனர். இன்று மிக எளிதாக வசப்பட்டு விட்ட அலைபேசி, இணையம், முகநூல் போன்ற தகவல் தொடர்பு ஊடக வசதிகள் இன்றைய பிள்ளைகளை, அவர்களது பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறவுகளோடு பேச விருப்பமற்றவர்களாக மாற்றிவிட்டன. அவர்களின் எதிர்கால வாழ்க்கை நலமாக அமைய வேண்டும் என்று கவலையுற்று கருத்து தெரிவிக்கிற, அல்லது கண்டிப்பு காட்டுகிற குடும்ப உறவுகளை, தங்கள் மகிழ்ச்சிக்கு எதிரானவர்களாகக் கருதத் தொடங்கியுள்ளனர்.


இன்றைய நமது பிள்ளைகள், பெற்றோர்களின் கருத்துகளுக்கும், கண்டிப்புகளுக்கும், அதற்கு முற்றிலும் எதிரான திரைக் கதாநாயகர்களின் தூண்டுதல்களுக்கும் இடையில் அகப்பட்டு அல்லற்படுகின்றனர்.



எதை எதை எடுத்துச் சொன்னால் இளையோரும் மாணவரும் உடனடியாக கேட்டுக்கொள்வார்களோ அதை மட்டுமே சொல்ல வேண்டும் என்பதிலும்,
 எதை எதை எடுத்துக் காட்டினால் அவர்கள் பரவசப்பெருக்கடைந்து பார்ப்பார்களோ அதை மட்டுமே காட்ட வேண்டும் என்பதிலும், யார் யாரை தங்களுக்கு ஒவ்வாதவர்களாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களைக் குறிவைத்துக் கேலி செய்கிற வேலையை மட்டுமே செய்யவேண்டும் என்பதிலும் இன்றைய நமது திரைப்படைப்பாளிகள் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். போக்கிரித்தனங்கள் நிறைந்தவனாக, பொறுப்பற்றவனாக, குடிகாரனாக, உழைப்பதற்கு விருப்பமற்றவனாக, தனக்கு எவ்வகையிலும் பொருந்தாத தெருச்சண்டைகளில் பலரோடு மோதி வெல்பவனாக, வலிய வலியச் சென்று காதலிப்பவனாக சித்திரிக்கப்படுகிற ஒரு திரைப்பாத்திரம், அதுபோன்ற உணர்வுப் போக்குடைய இளைஞர்களுக்கான வலிமையான மறைமுக அங்கீகாரமின்றி, வேறு என்ன?


தங்களது பிள்ளைகள் நன்றாகப் படிக்கவேண்டும், படிப்புக்கேற்ற வேலைகளைப் பெற்று அவர்களின் வாழ்வு நலமாக அமையவேண்டும் என்பதுதான் நமது சமூகத்தில் பிள்ளைகளைப் பெற்ற அனைவரும் காண்கின்ற பெருங்கனவாகும். ஆனால், அவர்களது கனவுகளுக்கு முற்றிலும் முரணான குணக்கூறுகளைக் கொண்டவர்களைத்தான் அவர்களது பிள்ளைகள் திரையரங்குகளில் கதாநாயகன்களின் வடிவில் பார்த்து ரசித்துப் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது கசக்கின்ற ஒரு நிஜமாகும்.


குடும்பம் எனும் அமைப்பும் விதம் விதமான பணிப் பயிற்சி நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களும் சேர்ந்து பெரும் பொருள்செலவில் ஆண்டுக்கணக்கில் திட்டமிட்டு வடிவமைத்து உருவாக்கிவரும் இளைய சமுதாயச் சக்திகளை, அவர்களுக்கு வெளியே இருக்கிற ஓர் ஊடகம் ஒரே நாளில் மாற்றிவிடுகிறது. மது அருந்தக் கூடாது என்பதை எழுத்துகளின் வாயிலாகவும், வார்த்தைகளின் வாயிலாகவும் வலியுறுத்தி வாழ்நாள் முழுவதும் சொல்லிக் கொண்டிருக்கும் சமூகவியலாளர்கள், மது அருந்தும் காட்சிகளை விதம்விதமான கோணங்களில் வண்ணமயமாக ஒளி ஒலி காட்சிகளாகக் காட்டுகிறவர்களிடம் பரிதாபமாகத் தோற்று விடுகின்றனர்.



மது, புகை, வெட்டுக்குத்து வன்முறை, போக்கிரிக் கலாசாரம், பொத்தாம் பொதுவான பொறுப்பற்ற பகடித்தனங்கள் போன்ற அனைத்துக் கூறுகளுக்குமான மறைமுகமான விளம்பரப் பொதுமேடையாகவும் அவற்றையெல்லாம் உரத்த குரலில் அங்கீகரிக்கும் நிறுவனமாகவும் இன்றைய நமது தமிழ்த்திரை மாற்றப்பட்டுவிட்டது. இந்தக் கூறுகளோடு காதல் கவர்ச்சி போதையையும் போதுமான அளவுக்குக் கலந்து தந்து அது தன் வணிகத்தைப் பாதுகாத்துக் கொள்கிறது. திரைப்படங்களை வெறும் திரைப்படங்களாக மட்டுமே பார்த்துவிட்டு அவற்றில் இருந்து தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு சுயத்தோடு விளங்குகிறவர்களாக நமது பெரும்பான்மை மக்கள் இல்லை.



ஓர் இளைஞன் நல்ல தகுதிகள் ஏதுமற்றவனாக இருந்தாலும்கூட அவன் தான் சந்திக்கும் பெண்ணை விரட்டி விரட்டிக் காதலிக்கும் தகுதியை மட்டும் உடையவனாக இருக்கிறான் என்பதே கடந்த சில ஆண்டுகளாக நமது தமிழ்த்திரையுலகம் தமது கதாபாத்திரங்களின் வாயிலாக முன்வைக்கும் ஆணித்தரமான கருத்தாக இருக்கிறது.


உலகின் எந்த நாட்டுத் திரையுலகமும் காதலைப் பிடித்துக்கொண்டு இதுபோன்ற ஆட்டங்களை ஆடுவதில்லை. சில கோயில்களில் பம்பையும் உடுக்கையும் சேர்ந்து பரவசம் மிகுந்த இசையை வேகவேகமாக எழுப்பி சன்னதம் வந்து ஆடும் சாமியாடிகளை உருவாக்குவது போல, நமது தமிழ்த் திரைப்படங்கள் காதல் உடுக்கையை வேக வேகமாக அடித்து அடித்து காதல் சாமியாடிகளை உருவாக்கி அவர்களை வெறி நடனமாடி வீதி உலா வரச் செய்கின்றன. வேதனை மிகுந்த இத்தகைய போக்குகளின் விளைவுகளைத்தான் நம் சமூகம் அனுபவித்து வருகிறது. பெற்றோரும் அனுபவித்து வருகின்றனர். ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு கற்பனை செய்தால் நமது தமிழ்த் திரையுலகின் ஒளிப்பதிவுக் கருவிகள், ஒலிப்பதிவுக் கூடங்கள், பாடல் பதிவுக் கூடங்கள் என ஒவ்வொன்றும் காதல் உணர்வு ஊற்றெடுக்கப் பயன்படுத்தப்படும் உடுக்கைகளாகவே தெரிகின்றன.


சிந்திக்கிற – படிக்கிற, மக்கள் குறைவாகவும், பார்க்கிற – கேட்கிற மக்கள் பெருவாரியாகவும் இருக்கிற நமது சமூகத்தில், அதிலும் படிக்கிற மக்களே கூட பார்க்கிற – கேட்கிற கலாசாரத்திற்குத் தங்களைப் பழகிக்கொண்டுவிட்ட இன்றைய சூழலில் ஊடகங்களிலேயே பெரும் ஊடகமாக } குறிப்பாக அனைத்து ஊடகங்களுக்கும் தாய் ஊடகமாக } நிலைபெற்றுவிட்ட திரைப்படத்தின் சமூகப்பொறுப்பு எத்தகையது என்பது உள்ளார்ந்த அக்கறையோடும், தொலைநோக்கு பார்வைகளோடும் உணரப்படவில்லை. ஒரு அபத்தத்தை எழுதுவதும், பேசி நடிப்பதும், வடிவமைப்பதும் ஒரே ஒரு முறைதான் நடக்கிறது. ஆனால், அந்த அபத்தம் எத்தனை ஆயிரம் முறை மீண்டும் மீண்டும் வெளியாகி மக்கள் மனதில் திணிக்கப்பட்டு நிலைநிறுத்தப்படுகிறது என்பதை ஊடக உலகம் நினைத்துப் பார்ப்பதாகத் தெரியவில்லை.


செய்ய வேண்டியவற்றைச் செய்வதைக் காட்டிலும், செய்யக்கூடாதவற்றைச் செய்யாமல் இருப்பதுதான் மனிதகுலத்தின் உண்மையான வளர்ச்சிக்கு அடிகோலும். அந்த அடிப்படையில் பார்த்தால் இன்றைய நம் தமிழ்த் திரையுலகம் எதை எதைச் செய்து கொண்டிருக்கிறது, எதை எதைச் செய்யாமல் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். படைப்பாளிகளுக்கு இருக்கும் படைப்புரிமை என்பது சமூகத்தைப் பாழ்படுத்தும் உரிமையாக மாறலாகாது!

இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: தமிழர் கட்சி முன்னணி ஆட்சியை பிடித்தது!


இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண கவுன்சிலுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் அதிக இடங்களை கைப்பற்றி உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கு ஆட்சியை பிடித்தது.இதைத் தொடர்ந்து விக்னேஷ்வரன் வடக்கு மாகாண முதல்வர் ஆகிறார்.

sep 22 - srilanka. TAMIL

 


இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மாகாண கவுன்சிலுக்கு, 25 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக இன்று தேர்தல் நடைபெற்றது. தனித்தமிழ் ஈழ நாடு கோரி நடத்திய போரின்போது, விடுதலைப்புலிகளின் மையப்பகுதியாக வடக்கு மாகாணம் திகழ்ந்தது. இந்த மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனினா ஆகிய மாவட்டங்கள் அடங்கி உள்ளன.
வடக்கு மாகாண கவுன்சிலில் மொத்தம் 36 உறுப்பினர்களை தேர்ந்து எடுப்பதற்கு நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. தேர்ந்து எடுக்கப்படும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் உள்பட 2 ஆயிரம் பேர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர். இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. காலையில் இருந்தே மக்கள் நீண்ட வரிசையில் பொறுமையுடன் காத்திருந்து ஓட்டு போட்டனர். 


பெரும்பாலான வாக்காளர்கள் நெற்றியில் விபூதி–குங்குமம் வைத்து ஓட்டுப்போட காத்து நின்றதை பார்க்க முடிந்தது. ‘‘தமிழர்களுக்கு சுதந்திரம் வேண்டும். எங்கள் சொந்த மண்ணை எங்களிடமே திருப்பித்தர வேண்டும். இங்கு நாங்கள் சுதந்திரமாக நடமாடும் உரிமை வேண்டும்’’ நல்லூர் வாக்குச்சாவடிக்கு ஓட்டுப்போட வந்திருந்த 4 குழந்தைகளின் தாயாரான கோபால சுதந்திரன் புஷ்பவல்லி நிருபர்களிடம் கூறினார். 


இந்நிலையில் மொத்தம் உள்ள 36 ‌இடங்களில் 28ல் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. ராஜபக்சேவின் ‌ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி கட்சிக்கு 7 இடங்கள் மட்டும் தான் கிடைத்தது. இலங்கை முஸ்லீம் கட்சி 1 இடத்தை பிடித்தது. தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து விக்னேஷ்வரன் வடக்கு மாகாண முதல்வர் ஆகிறார்.


Tamil party sweeps Sri Lanka’s regional vote

****************************************


 Sri Lanka’s main Tamil party has scored a landslide victory in the first semi-autonomous council elections in the island’s north after decades of ethnic war.The Tamil National Alliance (TNA) swept all five districts in the Northern Provincial Council which went to the polls on Saturday, the department of Elections results showed on Sunday.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த ஆன்லைனில் வசதி!



வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த தமிழக தேர்தல் கமிஷன் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக, ஆன்லைன் வசதியை பெற இனி இன்டர்நெட் மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம். இந்தியாவிலேயே இந்த வசதி முதன் முறையாக தமிழகத்தில் அமல் செய்யப்படுகிறது. இப்படி ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி ஏற்கெனவே உள்ளது. அனால் சொந்தமாக இன்டர்நெட் வசதி உள்ளவர்கள் மட்டுமே இதை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கம்ப்யூட்டர் வசதி இல்லாதவர்களுக்கு இன்டர்நெட் மையங்கள் மூலம் இனி பலன் கிடைக்கும். வாக்காளர் பெயர் சேர்க்க, திருத்த ஆன்லைன் வசதியை பெற வெப்சைட் முகவரி: www.elections.tn.gov.in


sep 22 - election comision
 



இது தொடர்பாக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நிருபர்களிடம் “இந்தியாவில் முதல் முறையாக கம்ப்யூட்டர் மையங்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் செய்யும் வசதி தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 994 இன்டர்நெட் மற்றும் கம்ப்யூட்டர் மையங்களோடு தேர்தல் ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னையில் மட்டும் 86 மையங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த மையங்கள் செயல்பட துவங்கும். தங்களது வீட்டில் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் வசதி இல்லாதவர்கள் இந்த மையங்களுக்கு சென்று, வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். 



பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் ஆன்லைன் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் அரசு அதிகாரிகள் நேரடியாக வீட்டுக்கு வந்து சோதனை செய்து 40 நாளில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடை யாள அட்டை வழங்குவார்கள். கம்ப்யூட்டர் மையங்களில் வாக்காளர் பெயர் சேர்க்கும் விண்ணப்பத்தை நிரப்பி எங்களுக்கு அனுப்பி வைக்க ரூ.10 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும். வாக்காளர் பெயர் பட்டியலை பிரிண்ட் அவுட் எடுத்து கொடுக்க ரூ.3 மட்டுமே பணம் வசூலிக்கப்படும். வாக்காளர்கள் பெயரை சேர்ப்பது குறித்து விண்ணப்பம் கொடுத்தவர்கள், அதுகுறித்த சந்தேகங்களை 1950 என்ற எண்ணில் தொலைபேசி எண்ணில் பேசி தெரிந்து கொள்ளலாம். 



மேலும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக சிறப்பு முகாம் வரும் 1ம் தேதி முதல் நடைபெறும். இங்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்ற பணிகளை பொதுமக்கள் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். ஏற்காடு எப்போது?: ‘ஏற்காடு தொகுதி எம்எல்ஏ பெருமாள் மரணம் அடைந்ததையொட்டி, ஜனவரி 16ம் தேதிக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையம்தான் தேர்தல் தேதி முடிவு செய்து அறிவிக்க வேண்டும்’ என்றார்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top