.......................................................................... ....................................................................... ......................................................................

Monday 27 May 2013

பேஸ்புக்கில் கமெண்ட் எழுதும் வைரஸ்.... எச்சரிக்கை!









                சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், தானாகவே லைக் போட்டு, கமெண்ட் எழுதும் வைரஸ் ஒன்றினை, வைரஸ் எதிர்ப்பு புரோகிராம் எழுதும் நிறுவனத்தினர் கண்டறிந்துள்ளனர்.  




                  நல்ல வேளையாக, இது பிரேசில் நாட்டு பேஸ்புக் அக்கவுண்ட்களில் மட்டுமே, தற்போதைக்கு, இயங்குகிறது. மற்ற நாடுகளிலும், குறிப்பாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளிலும் பரவும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.








                      இது ஒரு ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ். இதற்கு ‘Trojan:JS/Febipos’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. 




                    குரோம் பிரவுசர் மற்றும் பயர்பாக்ஸ் ஆட் ஆன் புரோகிராம் என்ற போர்வையில் இது கம்ப்யூட்டரின் உள்ளே நுழைகிறது. இது பாதித்த கம்ப்யூட்டரில், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர், பேஸ்புக்கில் லாக் இன் செய்துள்ளாரா எனக் கவனிக்கிறது. லாக் இன் செய்திடும் பட்சத்தில், தான் அனுப்பப்பட்டுள்ள தளத்திலிருந்து, கம்ப்யூட்டரை செட் அப் செய்திடும் பைல் ஒன்றை இறக்கிக் கொள்கிறது. 





                        இதில் பல கட்டளைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம், மற்றொரு பக்கத்திற்கான லிங்க் அமைத்தல், பதியப்பட்ட கருத்துக்களை ஷேர் செய்தல், நண்பர்கள் பக்கத்தில் கருத்துக்களை எழுதுதல், ஏற்கனவே எழுதப்பட்டுள்ளவற்றிற்கு கமெண்ட் அமைத்தல், நண்பர்களை குழுவில் சேருமாறு அழைப்பு அனுப்புதல் எனப் பல்வேறு செயல்பாடுகளுக்கான கட்டளைகள் இதில் உள்ளன.







                         இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த ட்ரோஜன் வைரஸ், தன்னை அனுப்பியவர்களை அடிக்கடி தொடர்பு கொண்டு, தன்னை அப்டேட் செய்து கொண்டு செயல்படுகிறது. 



                      மைக்ரோசாப்ட் நிறுவனம், இது போன்ற செயல்களுக்குப் பலியான, ஒரு பேஸ்புக் பக்கத்தினைத் தொடர்ந்து தன் கண்காணிப்பில் வைத்து இந்த ஆய்வினை நடத்தி, இதனைக் கண்டறிந்தது. 




                       தற்போதைக்கு இந்த ட்ரோஜன் வைரஸ் பிரச்னை, பிரேசில் நாட்டில் மட்டுமே உள்ளது. பிரேசிலியன் மொழியில் மட்டுமே இது சொற்களை அமைக்கிறது. விரைவில் ஆங்கிலத்திலும் இது செயல்படும் வகையில் மாற்றி அமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



               இதிலிருந்து தப்பிக்க, தேவையற்ற, நம்பிக்கை கொள்ள முடியாத ஆட் ஆன் புரோகிராம்களை, டவுண்லோட் செய்து அமைக்க வேண்டாம் என மைக்ரோசாப்ட் மற்றும் பிரபல ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. மேலும், பேஸ்புக் தளத்தினைப் பார்த்துப் பயன்படுத்திய பின்னர், அதிலிருந்து கட்டாயமாக லாக் அவுட் செய்திட வேண்டும் எனவும் மைக்ரோசாப்ட் அறிவுறுத்தியுள்ளது.

15 GB இலவசம் - Google அதிரடி அறிவிப்பு!!!








                 தன் ஜிமெயில் தளத்தில், அதுவரை யாரும் தராத வகையில், அதிகக் கொள்ளளவில், இலவசமாக ஹார்ட் டிஸ்க் இடம் தந்து கூகுள் பிரபலமானது. தற்போது கூகுள் இலவசமாக இதுவரை தந்து வந்த டிஸ்க் இடத்தின் அளவை 15 ஜிபியாக உயர்த்தியுள்ளது.



                   கூகுள் சந்தாதாரர்கள் அனைவரும், இனி ஜிமெயில் அக்கவுண்ட்டில் 10 ஜிபி இடமும், கூகுள் ட்ரைவ், கூகுள் ப்ளஸ் மற்றும் போட்டோக்கள் பதிந்து வைக்க, மேலும் 5 ஜிபி இடமும் பெறலாம். இந்த மூன்று சேவைக்குமாக மொத்தமாக 15 ஜிபி இடம் வழங்கப்படுகிறது. 



                  ஒரு பிரிவில் கூடுதலாகப் பயன்பாடு இருந்து, மற்றதில் குறைவாக இருந்தால், குறைவாக உள்ள பிரிவின் இடம், அதிகமாகப் பயன்படுத்தப்படும் பிரிவிற்குப் பயன்படுத்தப் படலாம். 



                  எடுத்துக் காட்டாக,    கூகுள் ட்ரைவில் அதிகமான பைல்களை வைத்து, அதில் உள்ள 5 ஜிபி இடம் அதற்குப் போதுமானதாக இல்லை எனில், ஜிமெயில் பிரிவில் இடம் இருந்தால், அதனை எடுத்துக் கொண்டு, அதில் பைல்கள் சேவ் செய்யப்படும். இவ்வாறே, கூகுள் ப்ளஸ் போட்டோ சேவையில் இடம் தேவை என்றாலும், மற்ற இரு பிரிவுகளில் இடம் இருப்பின் இடம் எடுத்துக் கொள்ளலாம்.






                


                  15 ஜிபிக்கும் மேலாக இடம் தேவைப்படுபவர்கள் என்ன செய்திட வேண்டும்? 5 டாலர் வாங்கிக் கொண்டு, 100 ஜிபி இடம் ஒரு மாதம் பயன்படுத்த கூகுள் அனுமதிக்கிறது. அப்படியானால், கட்டணம் செலுத்தினால், அதிக பட்ச இடமாகக் கூகுள் எவ்வளவு தருகிறது என்று அறிய ஆவலா? மாதத்திற்கு 800 டாலர் செலுத்தி, 16 டெரா பைட் இடத்தினை கூகுளிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். 



                   சென்ற ஆண்டில், கூகுள் அதன் கூகுள் ட்ரைவ் சேவையினைத் தொடங்கிய காலம் முதல், க்ளவுட் சேவைப் பிரிவில் இயங்கும் மற்ற பிரிவினருக்குப் போட்டியாக, இடம் வழங்குவதில் முதல் இடத்தைக் கொண்டிருந்தது. 




                        இதனால், மற்ற சேவை நிறுவனங்களும், அதே போல் தர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள். மைக்ரோசாப்ட் ஸ்கை ட்ரைவ் மற்றும் ஆப்பிள் ஐ-க்ளவ்ட் இந்த வகையில் போட்டியைச் சந்தித்தன. ஆனால், சிறிய நிறுவனங்களான ட்ராப் பாக்ஸ், பாக்ஸ், சுகர்சிங்க் மற்றும் யு சென்ட் இட் (DropBox, Box, SugarSync and YouSendIt) ஆகியவை போட்டியைச் சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. 




                  ட்ராப் பாக்ஸ் 2ஜிபி இடம் இலவசமாகத் தருகிறது. ஏறத்தாழ 10 டாலருக்கு, ஒரு மாதம் பயன்படுத்த 50 ஜிபி இடம் தருகிறது. மைக்ரோசாப்ட் ட்ரைவ் 7 ஜிபி இடம் இலவசமாகத் தருகிறது. இவை அடுத்து என்ன செய்யப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


தமிழ் வளர்க்கும் சீனர்கள்







                      பெய்ஜிங்கில் சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு 1963-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 



                 கடந்த 49 ஆண்டுகளாக சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு சிறப்புடன் நடைபெற்று வருகிறது. 



              இந்தச் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பில் தற்போது மொத்தம் 18 சீனர்கள் பணியாற்றி வருகின்றனர். 



                  இவர்கள் தமிழகம் வந்து தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அழகாக தமிழ் பேசுகிறார்கள். 



             இவர்கள் சிறப்பாகத் தமிழ் பேசுவதுடன் தங்கள் பெயர்களையும் தூய தமிழ்ப் பெயர்களாக சூட்டிக் கொண்டுள்ளனர்.










                        படத்தில் இருப்பவர்களின் பெயர்கள் வரிசையாக தொகுக்கப்பட்டுள்ளது:



                  இலக்கியா, ஈஸ்வரி, ஜெயா, கலைமகள், கலைமணி, மதியழகன், மீனா, மேகலா, மோகன், நிலானி, நிறைமதி, ஓவியா, பூங்கோதை, சரஸ்வதி, சிவகாமி, தேன்மொழி, வாணி, வான்மதி

ராஜிவ் படுகொலை: விடை தெரியாக் கேள்விகள்.. A to Z








                    வல்லரசுகளுக்கு வளைந்துகொடுக்காமல், இந்தியா, தற்சார்புடன் வளரவேண்டும் என கனவு கண்ட பிரதமர்,நேருவின் அணிசேராக்கொள்கைக்கு வலுசேர்க்கும் நோக்கத்தோடு உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டவர்,



               இவை எல்லாம் தாண்டி, புதிய இந்தியாவை வடிவமைக்க முனைந்த இளம் பிரதமர்,இத்தனை பெருமைகளுக்கும் சொந்தகாரரான, ராஜீவ்காந்தி 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி, தமிழ் மண்ணில் படுகொலை செய்யப்பட்டார். 



               காலங்கள் உருண்டோடினாலும், அந்த படுகொலை குறித்த, பல்வேறு கேள்விகள் இன்றளவும் விடைவேண்டி நிற்கின்றன.



படுகொலை தொடங்கி இன்றளவும் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள்:


                    1986 ஆம் ஆண்டு, அக்டோபர் 2 ஆம் தேதி,தேசத்தந்தை காந்தியடிகளின் பிறந்தநாள் விழாஏற்பாடுகளால், டெல்லி ராஜ்காட் கலைகட்டியிருந்தது. நாட்டின் இளம் பிரதமர் தேசப்பிதாவின் நினைவிடத்திற்கு மரியாதை செய்ய வருகின்றார். 



                   மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த அந்த சதுக்கத்தில், திடீரென கேட்ட அந்த வெடிச்சத்தத்தை முதலில், யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்த 20 நிமிடத்தில், அடுத்தடுத்து இரண்டு முறை வெடிக்கும் சத்தம் கேட்கின்றது.



                புகை வந்த திசையை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர், நாட்டு துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த ஒரு சீக்கிய இளைஞனை கைதுசெய்கின்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில், 1984 ஆம் ஆண்டு, சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தை தடுக்கத் தவறியதால் ராஜீவ்காந்தியை கொலை செய்ய முயன்றதை ஒப்புக்கொள்கின்றார். 







                      கோபத்தினால் உந்தப்பட்ட ஒரு இளைஞனின் கொலை முயற்சி, தோல்வியில் முடிவடைகின்றது. ராஜீவ்காந்தி உயிர் தப்புகின்றார்.ஆனால், இதன் பின் நான்கரை வருடம் கழித்து, நடத்தப்பட்ட மற்றுமொரு கொலை முயற்சி, எந்த வகையான தவறுக்கும் இடம்கொடுக்காமல் நடந்து முடிந்தது. காரணம், அக்கொலையின் சிக்கலான, அதேவேளையில், தெளிவான திட்டத்தை முன்வைத்த, உலக தரம்வாய்ந்த வலைபின்னலே.




                1989ஆம் ஆண்டு உலக அரசியலில் வேகமான பல மாற்றங்கள் நிகழ்கின்றன. கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிகளை பிரித்து வைத்திருந்த பெர்லின் சுவரின் வீழ்ச்சி, உலகின் முதல் சோசியலிச நாடான, சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு தொடக்க புள்ளியாக அமைகின்றது. 




                  அமெரிக்கா, சோவியத் ரஷ்யா என்ற இருபெரும் வல்லரசுகளுக்கிடையிலான பனிப்போர் முடிவுக்கு வரும் தருவாயை நெருங்குகின்றது. சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி உலக நாடுகளிடையே புதிய அரசியல் அணிச்சேர்க்கையை கோரியது. உலகின் இந்த குழப்பமான அரசியல் சூழல் இந்தியாவிலும் எதிரொலித்தது. ராஜீவ் பிரதமர் பதவியை இழக்கின்றார்.அடுத்த இரண்டே ஆண்டுகளில் இரண்டு பிரதமர்கள் ஆட்சிக்கு வருகின்றனர்.




                     1991 ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்திற்கு தேர்தல் அறிவிக்கப்படுகின்றது.தேர்தல் பிரச்சார கூட்டங்களில் ராஜீவ் கலந்துகொள்கின்றார். வடஇந்தியாவில் தேர்தல் முடிவுற்ற நிலையில், தென் மாநிலங்களில் தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றது.




1991, மே 1:  


                நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையின், ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளை விலக்கிக்கொண்டு ஒரு மோட்டர் படகு விரைந்து வருகின்றது. கடற்கரையோரம் நிறுத்தப்படும் அந்த படகிலிருந்து இலங்கையை சேர்ந்த சில ஆண்களும், பெண்களும் இறங்குகின்றனர். கோடியக்கரையில் செல்வாக்கு மிகுந்த நபரான சண்முகம் அவர்களை வரவேற்கின்றார்.



1991 மே 21:  


                அந்த விதி நிறைந்த நாளில் ராஜீவ் தனது தென் மாநில பிரச்சார பயணத்திற்கு புறப்படுகின்றார். பல்வேறு இடங்களில் நடைபெற்ற தேர்தல் கூட்டங்களில் கலந்து கொண்ட ராஜீவ், அந்த நாளின் இறுதிக் கூட்டத்திற்காக, விசாகப்பட்டினத்திலிருந்து விமானம் மூலம் சென்னையை வந்தடைகின்றார். விமானநிலையத்திலிருந்து வரும் வழியில் போரூர் மற்றும் பூந்தமல்லியில் பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் ராஜீவ், இரவு 10.10 மணிக்கு ஸ்ரீபெரும்புத்தூர் வந்தடைகின்றார்.



              மேடைக்கு சில மீட்டர்கள் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்த ராஜீவ், மேடையை நோக்கி நடக்கின்றார். தொண்டர்களின் மரியாதையை ஏற்றிக்கொண்டே நடந்து வந்த ராஜீவை, ஒரு பெண் நிற்கச்சொல்லி கேட்கின்றார். அவரருகே நின்ற ராஜீவுக்கு அந்த பெண்ணின் மகள் அவருக்காக எழுதப்பட்ட இந்தி கவிதையை வாசிக்கின்றார்


.



                         ராஜீவ் கவிதையை ரசித்துக்கொண்டிருந்த அதேவளையில், நடுத்தர வயதுடைய ஒரு பெண், கையில் சந்தனமாலையுடன் கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு ராஜீவை நெருங்குகின்றாள். நெருங்கி வந்த அந்த பெண்ணை, பெண் காவலர் ஒருவர் தடுக்கின்றார். நிகழவிருக்கும் பயங்கரத்தை சற்றும் அறியாத ராஜீவ், அந்த பெண்ணை தடுக்க வேண்டாம் என சைகை செய்கின்றார்.



                               



                  தனது இலக்கை நெருங்கிய அந்த பெண், கையில்வைத்திருந்த சந்தன மாலையை தவற விடுகின்றாள். தரையில் விழுந்த அந்த மாலையை எடுப்பதற்காக குனிகிறாள் அந்தப் பெண். பலத்த சத்தத்துடனும் பளிச்சென்ற வெளிச்சத்துடனும் குண்டு வெடிக்கின்றது. ராஜீவ் கொல்லப்படுகின்றார்.



1991 மே 24



                      ராஜீவ் படுகொலை தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக, சி.பிஐயின் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்படுகின்றது. இதற்கு மறுநாள், கோடியக்கரையில் கரையேறிய அந்த குழுவினை சேர்ந்தவர்களில் சிலர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்கின்றனர். அவர்கள் சிவராசன், சுபா மற்றும் முருகன் என்பதை பின்னர் சி.பி.ஐ கண்டுபிடிக்கின்றது. படகில் வந்திறங்கிய பெண்களில் தணு என்ற பெண்ணே, சந்தன மாலையை தவறவிட்டவள் என்பதையும் சி.பி.ஐ கண்டுபிடிக்கின்றது.



ஜீன் 11, 1991



                  கொலை நடந்த 21வது நாள், சென்னையில், பத்மா என்ற பெண்ணையும் அவரின் மகன் பாக்கியநாகனையும் சி.பி.ஐ கைதுசெய்கின்றது.
பின், நளினியும் முருகனும் கைதுசெய்யப்படுகின்றனர். ஆனால், தேடுதல் வேட்டை தொடர்கின்றது.



                              


ஜீன் 28, 1991



                     சென்னையிலிருந்து பெங்களுரு நோக்கி சென்று கொண்டிருந்து ஒரு டேங்கர் லாரியை போலிசார் தடுத்து நிறுத்துகின்றனர். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டபின் அந்த லாரி அனுப்பிவைக்கப்படுகின்றது. நாடு முழுவதும் தேடப்பட்டு வரும் இரண்டுபேர் அந்த லாரியின் சரக்கேற்றும் பகுதியில் ஒளிந்திருப்பதை அப்போது, போலீசார் கண்டுபிடிக்கவில்லை. சிவராசனும், சுபாவும் பெங்களுருக்கு தப்பிக்கின்றனர்.



ஜீலை, 1991


                   கோடியக்கரை சண்முகத்தை கைது செய்த சி.பி.ஐ, மே1 ஆம் தேதி, படகில் வந்தவர்களில் சிவராசன், சுபா மற்றும் மனிதவெடி குண்டுப்பெண் தணுவும் இருந்ததை உறுதிசெய்கின்றது. கொலைக்குழுவை வரவேற்ற சண்முகம், சி.பி.ஐயின் பலத்த பாதுகாப்பிலிருந்து ஆச்சர்யம் அளிக்கும் வகையில் தப்புகின்றார். அதற்கு மறுநாள், அவர் காவலில் வைக்கப்பட்டிருந்த விருந்தினர் மாளிகை வாளகத்தில், மர்மமான முறையில், தூக்கில் தொங்குவது கண்டுபிடிக்கப்படுகின்றது.



ஆகஸ்ட் 18, 1991



                       இந்தியா முழுவதும் சல்லடைபோட்டு தேடப்பட்டவந்த சிவராசனும், சுபாவும் பெங்களுரு புறநகர் கொனனகுண்டாவில், ஒரு வீட்டில் தங்கியிருப்பதை கர்நாடக போலீசார் உறுதிசெய்கின்றனர்.உடனடியாக, சி.பி.ஐ சிறப்பு விசாரணைக்குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த சில மணிநேரத்தில், கொனனகுண்டா மறைவிடத்தை, கர்நாடக போலீஸ் சுற்றி வளைக்கின்றது. இதுபோன்ற கடினமான சூழல்களில் திறம்படி செயல்படக் கூடிய என்.எஸ்.ஜி கமாண்டோக்களும் வரவழைக்கப்படுகின்றனர்.



ஆகஸ்ட் 19, 1991, இரவு 7மணி


                        சுற்றிவளைக்கப்பட்ட வீட்டிலிருந்து துப்பாக்கிகள் வெடிக்கின்றன. அடுத்த அரை மணிநேரத்திற்கு நீடித்த துப்பாக்கிக் சூடு, இரவு எட்டு மணியளவில் மீண்டும் தொடங்குகின்றது. இம்முறை 7 சுற்றுகள் மட்டுமே வெடித்த துப்பாக்கிகள் அத்துடன் மௌனிக்கின்றன.


ஆகஸ்ட் 20, 1991, காலை 6.30



                   48 மணிநேரம் நீடித்த நாடகம் முடிவை நெருங்கியது. கொலைக்குழுவினர் தங்கியிருந்த வீட்டை அதிரடியாக உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த கமாண்டோக்கள் சிவராசனையும், சுபாவையும் சடலங்களாகவே மீட்டனர். இந்திய வரலாற்றில் இதுவரை நடத்தப்படாத மிகப்பெரிய தேடுதல் வேட்டை, மூன்று மாதங்களுக்குப்பின் முடிவுற்றது.



                 ராஜீவ்காந்திக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் இருந்த குறைபாடுகள் குறித்து விசாரிப்பதற்காக வர்மா கமிஷனும், சதிதிட்டங்கள் குறித்து விசாரிப்பதற்காக, ஜெயின் கமிஷனும் அமைக்கப்பட்டன. இந்த இரு கமிஷன்களும் தங்கள் அறிக்கைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளன.


                 ஜெயின் கமிஷன் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் ராஜீவ் படுகொலைக்கு பின்னால் உள்ள சதியை விசாப்பதற்காக MDMA என்று அழைக்கப்படும் விசாரணை அமைப்பு 1998ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பு இன்றுவரை தனது விசாரணையை நடத்திவருவதாக கூறப்படுகின்றது.



ராஜீவ் கொலை: மர்மங்களும்..ஆராய்ச்சிகளும்



                  ராஜீவ்படுகொலைக்குப் பின்னால் பல்வேறு மர்மங்கள் ஒளிந்திருப்பதாக, தொடக்கம் முதலே பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர். இது தொடர்பாக, சி.பி.ஐ அதிகாரி ரகோத்தமனும், டெல்லியை சேர்ந்த பத்திரிக்கையாளர் ராஜீவ்சர்மா மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுச்சாமி ஆகியோர் எழுதியுள்ள புத்தகங்கள் அந்த மர்மங்களை ஆதாரத்துடன் கேள்வி எழுப்புகின்றன. 


 
              இந்நிலையில், நளினியின் வழக்கறிஞர் துரைசாமி எழுதியுள்ள ஒரு புதிய புத்தகம், ராஜீவ்கொலை வழக்கை மீண்டும் விவாத பொருளாக மாற்றியுள்ளது. இந்த புத்தகங்கள் எழுப்பும் கேள்விகளையும், பல்வேறு பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளையும் விரிவாக ஆராய்கின்றது புதிய தலைமுறை.



சிவராசனின் டைரி

               

                 டைரி என்பது ஒரு மனிதனின் மறுபக்கத்தை படம்பிடித்துகாட்டும் ஆவணம். அந்தவகையில், ஒரு கொலையாளின் டைரி, விசாரணையின் மையப்பொருளாக மாறுவதில் ஆச்சர்யமில்லை. ஆனால், கொலை நடந்து, 21 ஆண்டுகள் கடந்த நிலையில், வழக்கறிஞர் துரைசாமி தற்போது எழுதியுள்ள புத்தகம், சிவராசனுடைய டைரியை, மீண்டும் விவாதப்பொருளாக மாற்றியுள்ளது. புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக கிடைத்த அந்த டைரியின் பக்கங்கள் எழுப்பும் சந்தேகங்கள் பல.



                                    



                     கொலையாளிகள் பயன்படுத்திய மறைவிடங்களை சோதனையிட்ட சி.பி.ஐ, சிவராசனின் இரண்டு டைரிகளை கைப்பற்றியது. பின்னர் அந்த டைரிகள் தடா நீதிமன்றத்தில், ஆவண சாட்சியாகவும் தாக்கல் செய்யப்பட்டன. ரகசியங்கள் பொதிந்த அந்த டைரியின் விசாரிக்கப்படாத பக்கங்களை தனது புத்தகத்தில் சுட்டிக்காட்டுகின்றார் வழக்கறிஞர் துரைசாமி.



                   கொலை நடந்த மே21 ஆம் தேதியன்று கோராபுட், ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்துகொண்ட ராஜீவ்காந்தி இறுதியாக சென்னை வந்தடைகின்றார். அன்றையதினம் முழுவதும், ராஜீவ்காந்தியின் கூட்டம் நடைபெற்ற ஒவ்வொரு இடத்திற்கும் அவர் சரியாக எத்தனை மணிக்கு வந்தடைந்தார் என்பதை சிவராசன், தனது டைரியில் வரிசையாக குறித்துவைத்துள்ளதை சுட்டிக்காட்டுகின்றார் துரைசாமி.



1991, மே 21


                 கொலை நடைபெற்ற நாளன்று, மாலை 5.30 மணிக்கு, சிவராசன் உட்பட, கொலைக்குழுவை சேர்ந்த 5 பேர், சென்னை பாரிமுனையிலிருந்து ஸ்ரீபெரம்பத்தூருக்கு பேருந்தில் புறப்பட்டதாக, சி.பி.ஐ கூறுகின்றது. இரண்டு மணிநேர பயணத்திற்குப்பின், இரவு 7.30 மணிக்கு அவர்கள் ஸ்ரீபெரம்பத்தூர் சென்றடைந்தனர் என்பது சி.பி.ஐ தரப்பு வாதம். சி.பி.ஐ கூறும் இந்த கருத்தை வழக்கறிஞர் துரைசாமி முற்றிலும் மறுக்கின்றார்.



                    பக்கம் பக்கமாக புரண்டோடும் டைரியில் புதைந்திருக்கும் மர்மங்கள் தொடர்ந்து நீள்கின்றன. சுழன்றோடும் எழுத்துக்களினூடாக, நம் கண்கள் பயணிக்கும் போது, அதில் எழுதப்பட்டிருக்கும் சில பெயர்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. பாரேஷ் பாருலா, அரபிந்தோ ராஜ்கோலா, இவை இரண்டும், அஸ்ஸாமில் செயல்படும் உல்பா இயக்க தலைவர்களின் பெயர்கள். விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் என கூறப்படும் சிவராசனின் டைரியில்,அஸ்ஸாமில் செயல்படும், உல்பா இயக்க தலைவர்களின் பெயர்கள் ஏன் எழுதப்பட்டுள்ளன….?



சிவராசனுக்கும் உல்பாவுக்கும் என்ன தொடர்பு? 
                 அல்லது புலிகளுக்கும், உல்பாவுக்கும் என்ன உறவு?
                 இந்த கேள்விகளுக்கு விடைதேடும் முயலும்போது, பத்திரிக்கையாளர் ராஜீவ்சர்மா, எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, சில உளவுத்துறை அறிக்கைகள் நம் கவனத்தை ஈக்கின்றன.





1991 ஜனவரி, 23


                    உளவுத்துறை தனது உயர்அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்புகின்றது. அந்த அறிக்கை, அஸ்ஸாமில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்தியதற்காகவும், இயக்கத்திற்கு தடைவிதித்ததற்காகவும் ராஜீவ்காந்தியை கொலை செய்ய உல்பா இயக்கம் திட்டமிட்டிருப்பதாக கூறுகின்றது. இதற்கு பின் சில நாட்கள் கழித்து, இந்தியாவின் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும், இடைமறிக்கப்பட்ட நேரடியோ செய்தி ஒன்றை உளவுத்துறை அனுப்புகின்றது.



1991, பிப்ரவரி, 15


 
                             அதில், ராஜீவ்காந்தியை கொல்வதற்காக, உல்பா இயக்கம் 30 தற்கொலை படைகளை உருவாக்கியிருப்பதாக, அதிர்ச்சியளிக்கும் தகவலை தெரிவிக்கின்றது. உளவுத்துறையின் இந்த அறிக்கைகள், ராஜீவின் உயிருக்கு, உல்பா இயக்கமும் குறிவைத்திருந்ததை உறுதிசெய்கின்றன. மறுபுறம், சிவராசனின் டைரியில் உல்பா தலைவர்களின் பெயர்கள் எழுதப்பட்டள்ளன. இவற்றைக்கொண்டு பார்க்கும்போது, ராஜீவ் என்ற பொது எதிரியை வீழ்த்த, உல்பாவும், விடுதலைப்புலிகளும் ஒன்று சேர்ந்து செயல்பட்டார்களா என்ற சந்தேகம் எழுகின்றது. ஏனென்றால், ராஜீவின் பயணத்திட்டப்படி அவர், மே 21 ஆம் தேதி ஸ்ரீபெரம்பத்தூர் பொதுக்கூட்டத்தில் கொல்லப்படாமலிருந்தால், 24ஆம் தேதி, அசாம் மாநிலம், குவஹாத்தியில் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருப்பார்.



                         சிவராசனின் டைரி, உளவுத்துறையின் அறிக்கை ஆகியவை, உல்பாவையும், விடுதலைப்புலிகளையும் சந்தேகிக்க வைக்கும் அதேவேலையில், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த, சிரோமனி அக்காளிதல் கட்சியின் தலைவர் மகந்த் சேவா தாஸ் சிங், ஜெயின் கமிஷன் முன்பு அளித்த வாக்குமூலத்தை படிக்கும்போது நம் சந்தேகப்பார்வை மேலும் விரிவடைகின்றது.



                           அந்த வாக்குமூலத்தில், 1990 ஆம் ஆண்டின் இறுதியில், பஞ்சாப்    பிரிவினைவாத இயக்கமான காலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் ஒருவரை, தான் லண்டனில் சந்தித்ததாக மகந்த சேவா சிங் தாஸ் கூறுகின்றார். அந்த சந்திப்பின்போது, எல்.டி.டி.ஈ, ஜம்முகாஷ்மீர் விடுதலை முன்னனி உட்பட பல்வேறு இயக்கங்களின் பிரதிநிதிகளும் அவருடன் இருந்ததாக தாஸ் கூறுகின்றார்.



                          அந்த சந்திப்பில், ராஜீவ்காந்தி கொல்லப்படபோவதாகவும், ஆனால் அவர் டெல்லியில் கொல்லப்பட மாட்டார் எனவும் காலிஸ்தான் தலைவர் தன்னிடம் கூறியதாக ஒரு அதிர்ச்சியளிக்கும் தகவலை தனது வாக்குமூலத்தில் மகந்த் சேவா தாஸ் சிங் கூறியுள்ளார்.ஆகவே, முக்கியத்துவம் வாய்ந்த இந்த வாக்குமூலம், ராஜீவ் படுகொலைதொடர்பாக, உல்பா மற்றும் விடுலைப்புலிகளை தாண்டி, மேலும் பல இயக்கங்களின் மீது சந்தேகத்தை எழச்செய்கின்றது.



                     இவை அனைத்தும் வெறும் யூகங்களாவும், கற்பனைகளாகவும் கூட இருக்கலாம், ஆனால், விசாரணை அமைப்பை பொறுத்தவரை, சிறுசந்தேகங்களுக்கும் இடமளிக்காமல் குற்றத்தை நிருபிக்க வேண்டியது அதன் கடைமை என கூறுகின்றார் வழக்கறிஞர் துரைசாமி. அந்தவகையில், ராஜீவ் படுகொலை வழக்கில், விடுலைப்புலிகள் என்ற ஒற்றை இலக்கை தாண்டி, சி.பி.ஐ தனது விசாரணை வளையத்தை விரிவுபடுத்தவில்லை என குற்றம்சாட்டுகின்றார் துரைசாமி.



ராஜீவின் கொலையில் கே.பியின் பங்கு…….




 




                       சிவராசனின் டைரியும், மகந்த் சேவா தாஸ் சிங்கின் வாக்குமூலமும், ராஜீவ்படுகொலைக்கு பின்னால் ஒரு கூட்டுசதி இருப்பதை உணர்த்துகின்றன. அதேவேலையில், சிக்கலான வலைபின்னலை கொண்டு துள்ளியமாக நடத்தப்பட்ட இந்த படுகொலையில், கே.பி என்ற நிழல் மனிதன் மற்றும் சில அயல்நாட்டு உளவு நிறுவனங்களின் ரகசிய காய்நகர்த்தல்களை, பத்திரிக்கையாளர் ராஜீவ்சர்மாவின் புத்தகம் வெறிச்சம் போட்டு காண்பிக்கின்றது.



1990. ஜீலை 12, ரேடியோ உரையாடல்


 
                  கோலாலம்பூரில் தங்கியிருக்கும் கே.பி என்ற குமார பத்மநாதனுக்கும் இலங்கையின் வடபகுதியில், மறைவிடத்திலிருக்கும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் இடையே நடைபெறும் ரேடியோ உரையாடலை, இந்திய உளவுத்துறை இடைமறிக்கின்றது.



1990, ஜீலை 19,

 
                       இடைமறிக்கப்பட்ட தகவல்கள் குறித்து உளவுத்துறையின் இணை இயக்குனர், கூடுதல் இயக்குனருக்கு ஒரு கடிதம் எழுதுகின்றார். அந்த கடிதத்தில் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏவுடன், கே.பி தொடர்பு ஏற்படத்தியிருப்பதாக கூறுகின்றார். இலங்கையின் திரிகோணமலை மீது அமெரிக்காவுக்கு இருக்கும் விருப்பத்தை பயன்படுத்தி, புலிகள் தங்களுடைய ஆயுதத்தேவையை பூர்த்திசெய்துகொள்ள விரும்புவதாகவும் கூறுகின்றார். 


                       மேலும் அந்த கடிதத்தில், புலிகளின் தேவை என்ன என்பது தங்களுக்கு தெரியும் என்று சி.ஐ.ஏ கூறியுள்ளதாகவும், அந்த உதவி இருதரப்பிற்கும் பயன்படும் வகையில் செய்யப்பட வேண்டும் என்றும், சி.ஐ.ஏ, புலிகளிடம் கூறியுள்ளதாகவும் கூறுகின்றார்.


1990, செப்டம்பர் 4


                         இதன்பின் ஒரு மாதம் கழித்து புலிகளின் ரேடியோபேச்சுக்களை உளவுத்துறை இடைமறிக்கின்றது. இம்முறை, தரையிலிருந்து விண்ணுக்கு தாவும் ஏவுகணைகளை தான் எதிர்பார்ப்பதாக பிரபாகரன், கேபியிடம் தெரிவிக்கின்றார். இந்த செய்திகள் மூலம், இந்தியாவில் ஒரு மிகப்பெரிய சதிச்செயலலை நடத்த, சி.ஐ.ஏ முயன்றுவருவதை உளவுத்துறை உணர்ந்திருக்க வேண்டும்.


1991 ஜனவரி 16, இரவு 7 மணி


                      வளைகுடா போர் துவங்குகின்றது. OPERATION DESERT STORM என்று பெயரிடப்பட்ட ராணுவ நடவடிக்கையின் மூலம், ஈராக்கின் முக்கிய இலக்குகளை அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குகின்றன.



பிப்ரவரி 7, 1991



                           ஈராக்போர் பற்றி ராஜீவ் ஒரு அறிக்கையை வெளியிடுகின்றார். அதில் ஒரு பிராந்தியத்தின் பாதுகாப்பை நிலைநாட்ட, மற்றொரு பிராந்திய படைகள் முயன்றால் அது அந்த பிராந்தியத்தன் பாதுகாப்புக்கு மேலும் அச்சுறத்தலை ஏற்படுத்தும் என கூறுகின்றார்… அதுவே தற்போது அரேபிய பிராந்தியத்தில் நிகழ்வதாகவும் ராஜீவ் கூறகின்றார். ஒட்டுமொத்தத்தில் ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பை ராஜீவ் கண்டிக்கின்றார்…. இதன் பின்னர் ராஜீவ்காந்தி கொடுத்த நெருக்கடியின் காரணமாக ஈராக் போரில் ஈடுபட்ட அமெரிக்க போர் விமானங்கள், மும்பையில் எரிபொருள் நிரப்பிக்கொள்ள வழங்ககப்பட்ட அனுமதியை இந்தியா ரத்து செய்கின்றது.



1991, மார்ச் 13, புதுடெல்லி



                          இதனிடையே, பாலஸ்தீன விடுதலை இயக்கத்தலைவர் யாசர் அராபத்தின் தூதுவர் ராஜீவ்காந்தியை சந்திக்கின்றார். அச்சந்திப்பில் ராஜீவின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக அவரை எச்சரிக்கை செய்கின்றார். ஐரோப்பா மற்றும் லெபனான் நாடுகளில் உள்ள தொடர்புகள் மூலம் இந்த ரகசிய தகவல், யாசர் அராபத்துக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.






                        அராபத்தின் எச்சரிக்கை குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி ஜெயின் ஏற்கனவே, நாடுகளின் ஸ்திரத்தன்மையை குழைத்தது தொடர்பாகவும், கொலைச்சதியில் ஈடுபட்டது தொடர்பாகவும் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ மீது, பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில், அராபத்தின் எச்சரிக்கை இந்த வகையில் ஆராயப்பட்டிருக்க வேண்டும் என கூறுகின்றார். மேலும், இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாட் முலமாக, சி.ஐ.ஏ வேலை செய்திருக்க வேண்டிய சாத்தியக்கூறுகள் குறித்தும் இந்திய உளவு நிறுவனம் விசாரணை செய்திருக்க வேண்டும்  எனவும் கூறுகின்றார்.



                இதனிடையே, பி.சி.சி.ஐ என்ற சர்வதே வங்கியின் மீது எழுந்த குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக, அமெரிக்க செனட்டர் ஜான் கெரியின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுகின்றது. அந்த குழுவின் அறிக்கை, சி.ஐ.ஏ தன்னுடைய வேலைகளுக்கு பி.சி.சி.ஐ வங்கியை பயன்படுத்திக்கொண்டதாக கூறுகின்றது. அந்த பி.சி.சி.ஐ வங்கியில் கே.பி கணக்கு வைத்திருப்பதை பின்னர் சி.பி.ஐ கண்டுபிடிக்கின்றது.



                         



           பி.சி.சி.ஐ வங்கியை, அரசியல் சாமியார் என்று அழைக்கப்படும் சந்திராசாமி, ஆயுதவியாபாரியான, அட்னன் கசோக்கியின் மூலம் பயன்படுத்தி வந்துள்ளதாக ஜெயின் கமிஷன் கூறுகின்றது. மேலும், அட்னன் கசோக்கி, சி.ஐ.ஏவுடன் உறவு வைத்திருந்ததை உறுதிப்படுத்த முடிவதாகவும் நீதிபதி ஜெயின் கூறுகின்றார்.








                          மிகவும் கவனிக்கதக்கவகையில், ராஜீவ்காந்தி கொலை செய்யப்படுவதற்கு முன், 1990 மற்றும் 91க்கு இடைப்பட்ட காலத்தில், அட்னன் கசோக்கியின் பி.சி.சி.ஐ வங்கி கணக்கிற்கும், கே.பியின் வங்கி கணக்கிற்கும் இடையே பணப்பறிமாற்றம் நடைபெற்றுள்ளதை கெர்ரி குழு அறிக்கை உறுதிசெய்கின்றது.


 
                             கே.பியின் பி.சி.சி.ஐ வங்கி கணக்கை சி.பி.ஐ சோதனை செய்தபோது அதில் 858 ரூபாய் மட்டுமே மீதம் இருந்தது. 1986ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த வங்கி கணக்கில் பல மில்லியன் டாலர்கள் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதை, சி.பி.ஐ கண்டுபிடித்தது.


                          ஒரு அரசியல் சாமியார், ஒரு ஆயுத வியாபாரி ,இவர்கள் இருவரையும் இணைக்கும் ஒரு அயல்நாட்டு சக்தி இந்த முக்கோணச்சதியின் பின்னனியில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் ஏராளம்.இதை உணர்ந்ததன் காரணமாகத்தான், நீதிபதி ஜெயின் தனது இறுதி அறிக்கையில், ராஜீவ்கொலையில் வெளிநாட்டு சதி இருப்பதை முழுவதுமாக மறுக்க முடியாது என கூறுகின்றார். அதை தாண்டி மிக முக்கியமாக, கே.பி என்ற குமாரா பத்மநாதன் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் கூறுகின்றார்.


                      கடந்தகாலத்தின் எதிரியான இலங்கை அரசிடம், அறிவிக்கப்படாத அரசு விருந்தினராக, தற்போது தஞ்சமடைந்துள்ளார் கே.பி. வெகு நேர்த்தியாக நடத்தப்பட்ட ராஜீவ் படுகொலையில், சிவராசனின் டைரி எழுப்பும் கேள்விகள், சி.ஐ.ஏ மற்றும் மொசாட்டின் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் போன்ற இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர கே.பி பேசியாக வேண்டும்.இவற்றை அறிந்திருந்தும், இந்தியாவின், நட்புநாடான இலங்கையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கே.பியை, MDMA இதுவரை முறைப்படி விசாரித்ததா? என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் இல்லை.


உளவுத்தகவல்களை உதாசினப்படுத்தியதன் விளைவு…..



                         வெளிநாட்டுச்சதி, பல்வேறு தீவிரவாத இயக்கங்களின் கூட்ட முயற்சி,இவற்றையெல்லாம் தாண்டி, ராஜீவ்காந்தி படுகொலைக்கு முன்னும் பின்னும், அரசும், அரசு அதிகாரிகள் சிலரும் நடந்த கொண்ட விதங்கள், பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக, சி.பி.ஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமனும், பத்திரிக்கையாளர் ராஜீவ்சர்மாவும் கூறுகின்றனர்.


1987 ஆம் ஆண்டு ஜீன் 5 ஆம் தேதி. ரகசியம்


                       இந்திய உளவுத்துறை, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஒரு அறிக்கையை அளிக்கின்றது. அதில் இஸ்ரேலிய உளவுத்துறையாலும், மேற்கத்திய நாடுகளை சேர்ந்த சில உளவு நிறுவனங்களினாலும் இந்தியாவின் முக்கிய நபர்களுக்கு ஆபத்து காத்திருப்பதாக தெரிவிக்கின்றது.


1989, டிசம்பர் 8, ரகசியம்


                        உளவுத்துறையின் இந்த ரகசிய அறிக்கை, ராஜீவ்காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதை தெளிவுபட தெரிவிக்கின்றது. இந்த அறிக்கை அளிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கூட கழியாத நிலையில்.


1990, ஜனவரி, 23 



                     மத்திய உளவுத்துறை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள    தன்னுடைய, உயர் அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கைகையை அனுப்புகின்றது. அதில், ராஜீவின் உயிருக்கு குறிவைத்திருக்கும், இயக்கங்களின் பட்டியலை வெளியிடுகின்றது

.
                    உளவுத்துறைக்கு கிடைத்த இந்த தகவல்கள், ராஜீவ்காந்தியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து உறுதிபடுத்தி வந்துள்ளன.இந்த உளவுத்தகவல்களின் அடிப்படையில் அவருக்கு, நியாயமாக கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் உள்துறைஅமைச்சகம் எடுத்த முடிவும் அதுகுறித்து உடனடியாக கேள்வி எழுப்பாத உளவுத்துறையின் மௌனமும், நம்மை அதிர்ச்சியடையச் செய்கின்றன.


ஜீலை 19, 1990


                       அதுவரை ராஜீவ்காந்திக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி என்றழைக்கப்படும் உயர் பாதுகாப்பு, எந்தவித காரணமுமின்றி விலக்கிக்கொள்ளப்படுகின்றது. யாராலும் எளிதில் நெருங்க முடியாதபாதுகாப்பு வளையத்திற்குள் இருந்த ராஜீவ்காந்தி, தற்போது தாக்குவதற்கு எளிதான இலக்காக மாற்றப்படுகின்றார்.


மே 20, 1991 ராஜீவ்கொலைக்கு முன் தினம்

                 
                



                   எஸ்.பி.ஜி பாதுகாப்பு விலக்கப்பட்ட பின், சுமார் ஒருவருடம் வரை அதுகுறித்து, அக்கறைகொள்ளாத உளவுத்துறை, ராஜீவ் கொல்லப்படுவதற்கு சரியாக 24 மணிநேரத்திற்கு முன் விழித்துக்கொள்கின்றது.உளவுத்துறையின் இணை இயக்குனர் தாக்கூர், உள்துறை இணைச்செயலாளருக்கு ஒரு அவசர கடிதத்தை எழுதுகின்றார்.


                  அதில் ராஜீவ்காந்திக்கு உடனடியாக, என்.எஸ்.ஜி பாதுகாப்பு வழங்குங்கள் என கேட்டுக்கொள்கிறார்.தாக்கூர் இந்த கடிதத்தை தற்செயலாக எழுதினாரா? அல்லது மறுநாள் ராஜீவ் கொல்லப்படப்போகிறார் என்பதை அவர் முன்கூட்டியே அறிந்திருந்தாரா?.


                   இதுபோன்ற கேள்விகள் எழுவது, அந்த கடிதம் எழுதப்பட்ட காலத்தை வைத்து பார்க்கும் போது தவிர்க்க முடியாததாக தோன்றுகின்றது.உண்மை எதுவாக இருந்தாலும்….காலம் கடந்த அந்த வேண்டுகோளை, உள்துறை அமைச்சகம் பரிசீலினை செய்யும்போது ராஜீவ்காந்தி உயிரோடு இருக்கமாட்டார்.


மே 21, 1991, ஸ்ரீபெரம்பத்தூர்



                       ராஜாவை சூழ்ந்து நிற்கும் சிப்பாய்கள் அனைவரும் வீழ்ந்த பின்பு ஆட்டம் முடிவுக்கு வருவதை தவிர வேறு வழியில்லை.நெருங்கிவரும் ஆபத்தை தடுக்கக்கூடிய எஸ்.பி.ஜி கமாண்டோக்கள் தற்போது ராஜீவின் அருகில் இல்லை.அனைத்துவகையிலும் ஆபத்தை எதிர்நோக்கியிருந்த ராஜீவ்காந்தி, காத்திருந்த கண்ணியில் வசமா சிக்குகின்றார்.பாதுகாப்பு தளர்த்தப்பட்ட இலக்கை மனிதவெடிகுண்டு பெண் எளிதாக தாக்குகின்றாள்.ராஜீவுடன் சேர்த்து 18 பேர் கொல்லப்படுகின்றனர்.
ராஜீவுக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பு விலக்கப்பட்டதற்கு, அரசு கூறும் காரணங்கள் வலுவானதாக இல்லை என வர்மாகமிஷன் கருத்து தெரிவித்துள்ளது.


                        இதுகுறித்து, ஜெயின் கமிஷனிடம் வாக்குமூலம் அளித்த பசாக் என்ற உளவாளி, ஒரு பரபரப்பான தகவலை வெளியிடுகின்றார். எஸ்.பி.ஜி பாதுகாப்பு விலக்கப்பட்டது, ராஜீவை கொலை செய்ய தயாராகலம் என்று, வெளிநாட்டு சக்திகளுக்கு கொடுக்கப்பட்ட சமிக்ஞை என அவர் கூறுகின்றார்.



1997, நவம்பர் 24




                   1997 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி, அவுட்லுக் இதழில் ஒரு அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகின்றது. 1989க்கும் 1991க்கும் இடைப்பட்ட காலத்தில், ராஜீவ்காந்திக்கு வழங்ககப்பட்டு வந்த பாதுகாப்பு குறித்து, அதிகாரிகள் அளித்த குறிப்புகள் அடங்கிய முக்கிய ஆவணம், பிரதமர் அலுவலகத்திலிருந்து மர்மமான முறையில் காணாமல் போனதை அந்த செய்தி சுட்டிக்காட்டுகின்றது.


                   காணாமல்போன அந்த ஆவணத்திற்கு பதிலாக, அதேபோன்று, புதிதாக உருவாக்கப்பட்ட ஆவணத்தை ஜெயின் கமிஷனிடம், அரசு தாக்கல் செய்கின்றது. அந்த ஆவணம் திருத்தம் செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்த ஜெயின் கமிஷன், அதுகுறித்து கேள்வி எழுப்பிய பிறகே, அந்த ஆவணம் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட உண்மையை மத்திய அரசு ஏற்றுக்கொள்கின்றது.


                    பல்வேறு இடங்களில் தேடிபார்த்த பிறகும், உண்மையான ஆவணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும், ஆகவேதான் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட ஆவணத்தை தாக்கல் செய்ததாகவும், ஜெயின் கமிஷனிடம் மத்திய அரசு தெரிவிக்கின்றது.


                    ராஜீவுக்கு வழங்கப்பட்டிருந்த, எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது ஏன்? அதற்கான காரணம் என்ன? யார் அதை முன்மொழிந்தது? என்ற மிக முக்கியமான கேள்விகளுக்கெல்லாம் பதில்சொல்லும் அந்த ஆவணம், உயர்பாதுகாப்பு வளையத்தில் உள்ள, பிரதமர் அலுவலகத்திலிருந்து எவ்வாறு காணாமல் போனது என்பது இன்றளவும் மர்மமாகவே உள்ளது.


எம்.கே.நாராயணனின் பங்கும் வீடியோ ரகசியமும்


                    நாட்டின் முன்னாள் பிரதமர் கொல்லப்படுகின்றார். அது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் தாங்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தண்டணை பெறுகின்றனர். ஆனால், இந்த கொலையில் வெளிவராத உண்மைகள் பலவற்றை தெரிந்தவர்கள் இன்னும் ஊமையாய் இருப்பதாக கூறுகின்றார் சி.பி.ஐ முன்னால் அதிகாரி ரகோத்தமன்.






மே21, 1991



                         கொலை நடைபெற்ற இடத்தில் சிறிதும் சேதமடையாமல் கிடந்த ஒரு கேமராவை போலீசார் கைப்பற்றுகின்றனர். அதிலிருந்த புகைப்படச்சுருள் மூலமாகவே, கொலையாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர்.
ஹரிபாபுவின் நிழற்படங்கள், வெளிச்சத்திற்கு வந்தபிறகே, இந்தகொலையின் இருள்சூழ்ந்த பக்கங்கள் ஒளிபெற்றன. ஒரே பரிமாணம் கொண்ட 9 புகைப்படங்கள், மர்மத்தின் முகமூடிகளை கிழித்தெறிந்தன.ஆனால், படுகொலை நடந்த மாலைப்பொழுதின், ஒவ்வொரு அசைவையும் பதிவு செய்த வீடியோவின் மூலமாக, சி.பி.ஐ எந்தவிதமான மர்மத்தையும் கண்டுபிடிக்கவில்லை என்பது ஆச்சரியம் தரும் உண்மை.


மே 22, 1991, ரகசியம்


                   கொலைநடந்த மறுநாள் பிரதமர் சந்திரசேகருக்கு, அப்போதையை உளவுத்துறை இயக்குனரும் தற்போதைய மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநருமான, எம்.கே.நாராயணன் ஒரு கடித்தை எழுதுகின்றார். அதில், கொலைநடந்த பொதுக்கூட்டத்தை பதிவுசெய்த வீடியோகேசட் ஒன்றை உளவுத்துறை கைப்பற்றியுள்ளதாக கூறுகின்றார். அந்த வீடியோகேசட் மூலம் கொலையாளி, ராஜீவ்காந்தியை எவ்வாறு நெருங்கினார் என்பதை ஆராய்ந்துவருவதாகவும் கூறுகின்றார். 


                   ஆனால், இன்றுவரை அந்த வீடியோகேசட் எங்குள்ளது என்பது யாருக்கும் தெரியாது.ராஜீவ்கொலை குறித்து உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து விசாரணை நடத்திய சி.பி.ஐ, இந்தியாவில் இருக்கும், எம்.கே.நாராயணனிடம், அந்த கேசட் குறித்து இதுவரை விசாரணை நடத்தியதாக தகவல் இல்லை.


                          கொலைநடந்த இரவில் பதிவுசெய்யப்பட்ட மற்றொரு வீடியோ கேசட்டை வர்மா கமிஷனிடம் சி.பி.ஐ வழங்கியது. பொதுவிசாரணையின்போது அந்த வீடியோ கேசட் அனைவரின் முன்பாகவும் திரையிடப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த அந்த வீடியோவில், சில முக்கியமான காட்சிகள் மங்கலாக்கப்பட்டிருப்பதும், சில காட்சிகள் அழிக்கப்பட்டிருப்பதும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றது.
எம்.கே.நாராயணன் தன்னிடம் உள்ளதாக கூறிய வீடியோவும், சி.பி.ஐ வர்மா கமிஷனிடம் சமர்ப்பித்த வீடியோவும் ஒன்றுதானா? அவை இரண்டும் ஒன்றே என்றால், அதில் உள்ள முக்கிய காட்சிகளை அழித்தது யார்? அந்த காட்சிகளுக்குள் ஒழிந்துள்ள ரகசியம் என்ன? யாரைக்காப்பாற்ற அவை அழிக்கப்பட்டன????


ஜீன் 12 1992



                        வர்மா கமிஷன் தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கின்றது, அதில், எம்.கே.நாராயணன் உட்பட நான்கு அரசு அதிகாரிகளை விசாரிக்க வேண்டும் என்ற முக்கியமான பரிந்துரையை வழங்குகின்றது. ஆனால் அந்த பரிந்துரை கிடப்பில் போடப்படுகின்றது.


                  வர்மா கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நான்கு வருடம் கழிந்தபின்பும் அதன் பரிந்துரைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காததால், பல்வேறுதரப்பிலிருந்தும் அரசுக்கு நெருக்கடி முற்றுகின்றது.இறுதியில், உளவுத்துறை தலைவராக பணியாற்றிய, எம்.கே நாராயணன் உட்பட நான்கு முக்கிய அதிகாரிகளிடம், காலம் கடந்து விளக்கம் கேட்கப்படுகின்றது. ஆனால், சட்டத்தில் உள்ள தங்களுக்கு சாதகமான அம்சங்களை பயன்படுத்தி அந்த நாள்வரும் விசாரணையிலிருந்தே தப்புகின்றனர்.






                    நாட்டின் மிக முக்கியமான தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தனக்கு தெரிந்த உண்மையை தானே முன்வந்து தெரிவிக்க வேண்டியது, நல்ல அரசு அதிகாரியின் கடமை.பல்வேறு அரசு உயர்பொறுப்புகளை வகித்து வந்துள்ள எம்.கே.நாராயணனோ இன்றுவரை வாய்திறக்க மறுப்பது ஏன் என கேள்வி எழுப்புகின்றார் முன்னாள் சி.பி.ஐ விசாரணை அதிகாரி ரகோத்தமன்.


                      தற்போதும் கூட எம்.கே.நாராயணன், “மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநர்” என்ற மிக முக்கிய பொறுப்பை வகித்துவருகின்றார்.உளவுத்துறையின் செயல்பாடுகுறித்து கருத்துதெரிவித்துள்ள நீதிபதி வர்மா, “அரசியல் தலையீட்டின் காரணமாக.இந்திய உளவு நிறுவனங்கள்.மோசமாக உள்ளன” என்று குற்றம்சாட்டுகின்றார். மேலும் “அரசியல் சார்பில்லாமல்…..புதிய அமைப்பாக (உளவுநிறுவனங்கள்) உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார்.
பல்வேறு இயக்கங்களின் கூட்டுத்திட்டம்.அவற்றை இயக்கிய வெளிநாட்டு உளவு நிறுவனங்கள், விசாரிக்கப்படாத கருப்பு பக்கங்கள்,விசாரணைக்கு ஒத்துழைக்காத அரசு அதிகாரிகள்.என ராஜீவ் படுகொலைக்குப் பின்னால், இன்றளவும், மறைந்திருக்கும் மர்மங்கள் ஏராளம்.



                     



                  ஒருபுறம், உயர்ந்த இடத்தில் இருந்துகொண்டு, உண்மைகள் பல அறிந்திருந்தும் இன்றளவும் வாய்திறக்க மறுக்கின்றனர் பலர்.மறுபுறம் சி.பி.ஐ கட்டுப்பாட்டில் இருக்கும்போது அவர்களே முன்வந்து வழங்கியதாக கூறப்படும் வாக்குமூலத்தின் அடிப்படையில் தூக்குதண்டனையை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர் சிலர்.


காணொளி: 


ராஜீவ் படுகொலை விடை தெரியாக் கேள்விகள் பகுதி-http://puthiyathalaimurai.tv/video-gallery?video=4010
ராஜீவ் படுகொலை விடை தெரியாக் கேள்விகள் பகுதி-2 http://puthiyathalaimurai.tv/video-gallery?video=4009
ராஜீவ் படுகொலை விடை தெரியாக் கேள்விகள் பகுதி-http://puthiyathalaimurai.tv/video-gallery?video=4008

                                                                                                         Thank you....  Puthiyathalaimurai.tv

இன்னும் சில வாரங்களில் வரப் போகுது ‘ இதய வாட்ச்மேன்’!






               அமெரிக்காவின் பாஸ்டன் சயின்டிஃபிக் நிறுவனம் கண்டுபிடித்திருக்கும் இந்தப் புதிய கருவியின் பெயர் ‘வாட்ச்மேன்’.



               பெரும்பாலும் முறையற்ற இதயத் துடிப்பு பிரச்னை உள்ளவர்களுக்கு ஸ்டிரோக் தாக்கும் அபாயம் உள்ளது;அச்சமயம் ரத்தக்குழாய்களில் ரத்தம் உறைந்துவிடும் ஆபத்தும் உண்டு.








               இதனால் ஆபத்தில் உள்ளவர்கள், எந்த நேரமும் துரத்தும் மரணத்தைத் தவிர்க்க மாத்திரை சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.










                    இதற்கு பதிலாக இதயத்தில் பொருத்திக் கொள்ளும் கருவியாக இதை உருவாக்கியுள்ளனர்.










              முதற்கட்ட பரிசோதனையில், இது பாதுகாப்பானது என்று உறுதியாகிவிட்டது. எனவே இன்னும் சில வாரங்களில் இது இறுதி வடிவம் பெற்று விற்பனைக்கு வரக் கூடும்.












Watchman Device Finally Superior:-



            The Watchman device saved lives and prevented stroke in atrial fibrillation better than warfarin (Coumadin) alone, longer-term results from the PROTECT AF trial showed.

கொட்டிக்கிடக்கிறது யுரேனியம் - புது தகவல்








                கடல் நீரில் இருந்து யுரேனியம் தயாரிக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.




               அணு உற்பத்திக்கு பயன்படுத்தும் பொருட்களில் யுரேனியத்துக்கு முக்கிய பங்கு உள்ளது. 



              யுரேனியம் தாது பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது.






 
          அவை கடல்நீரில் ஆயிரம் மடங்கு கொட்டிக்கிடப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்




           எனவே, அவற்றை பிரித்தெடுக்கும் ஆய்வில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.





 
          இந்நிலையில் அமெரிக்காவின் சேப்பல் ஹில்லில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக் கழகத்தின் ரசாயன துறை பேராசிரியர் வென்பின்லின் தலைமையிலான விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.









 
           இந்த ஆய்வில் கடல் நீரில் இருந்து யுரேனியம் பிரித்தெடுக்கப்பட்டது. ஆய்வகத்தில் வைத்து நவீன தொழில் நுட்ப முறையில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top