.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 22 December 2013

கைபேசி நாகரீகத்தை நெறிப்படுத்தக் குறள்...?



குறள் :

1:

நோக்கக் குழையா நுண்ணலைக் கைபேசி
தாக்காதே தகவல் தரும்.

பொருளுரை: நோக்கினாலும் குழையாத நுண்ணலைக் கைபேசி, நுண்ணலைகள் தாக்காதே தகவலைத் தரும்.


2:

காணாது தொலையும் கைபேசி; கண்டபின்னும்
நாணாதே மெல்ல நகும்.

பொருளுரை: எங்கோ தொலைத்து விட்ட கைபேசி கிட்டினாலும் அதற்கென நாணாதே ஒலிக்கும்.

3:

இனிதே மொழி இயம்பினும் நெடு அண்மை
மெலிதே கொல்லும் செவி.
பொருளுரை: எத்தனை தான் இனிய மொழியினைக் கொடுப்பினும் கைபேசியை காதிற்கு அண்மையில் நெடு நேரம் கொண்டு கேட்டால், நாளடைவில் செவி கெடாமல் என்ன செய்யும்?

4:

அன்புசால் மொழியே ஆயினும்; ஓட்டலில்
இன்மை அது கைபேசி உரை.

பொருளுரை: அன்பொடு பேசும் மொழிதானே என்று ஆகினும் வண்டி ஓட்டுகையில் கைபேசி உரையாடுதலால் நன்மை என்று ஏதுமில்லை; அனைவருக்கும் இன்மையைத் தான், கேட்டைத் தான் விளைவிக்கும்.

5:

தெவிட்டும் ஒலி தீதே கைபேசி உரை
செவிட்டுக்கு வழி செயின்.

பொருளுரை: கைபேசியால் வரும் அதீத ஒலி காதைச் செவிடாக்கும் வகையில்; தெவிட்டும் அளவில் கொள்ளுதல் காதுக்குச் செவிட்டை மாத்திரம் அல்ல உடல் நலத்தையும், உள நலத்தையும் பாதித்து விடும். அளவிற்கு மீறிய அமிர்தமும் நஞ்சுதானே.

6:

வாட்டும் வருத்தம் வகை அறியான்; நலம் தருமோ
காட்டும் கைபேசிச் சினம்?

பொருளுரை: வாட்டுகின்ற உரையின் வருத்தத்தின் வகையை, காரணத்தை அறியாதவன், கைபேசியின் மேல் காட்டும் சினம்தான் நலம் தருமோ? கைபேசியும், அவன் பாலுள்ள நலமும் தான் கெடும்.

7:

இறை இல்லத்து விசை நிறுத்தாக் கைபேசி
நிறை அல்ல; வசை மிகுக்கும் குறை.

பொருளுரை: இறை இல்லமாகிய தேவாலத்தில்; கோயிலில் நிறுத்தி வைக்கப் படாத கைபேசியால் ஒருவருக்கு எந்த நிறையும் வரப்போவதில்லை; உண்மையில் அஃது பிறரின் வசையைத்தான் மிகுந்து கொடுக்கும் மிகக் குறைபாடான செயல் ஆகும்.

8:

சபையிடைச் சலனம் சதுராடும் கைபேசி
மிகை அல்ல; மேன்மைக்கு இழுக்கு.

பொருளுரை: பலர் கூடியிருக்கும் முக்கியச் சபையினில் சலனப்படுத்திச் சதுராடும் கைபேசி குழுமியவரின் முன்னே மேன்மையல்ல; உண்மையில் அஃது ஒருவரின் மேன்மைக்கு இழுக்கு என்றால் அஃது மிகையல்ல. அஃது குழுமிய நேரத்தில் பிறருக்குத் தொந்தரவாக இருப்பதுடன் குழுமிய காரணத்திற்கும் இடைஞ்சலாக அமைந்துவிடும்.

9:

சங்கத்தே சமனித்துச் சாற்றாதே; கைபேசியுள்
பங்கமிட்டே இரைவதா பண்பு?

பொருளுரை: கைபேசியில் அமைதியாகப் பேசுதலே சமூகத்தில் உயரிய சிறந்த பண்பு. இரைந்து கத்துதல் அல்ல என்பதை உணர்வீர்களாக. அவ்வாறு காட்டுக் கத்தாய் கத்திப் பேசுவதா நாகரீகம்?

10:

சந்தையின் கூவலைக் கைபேசிப் பரப்பல்
நிந்தையை நல்கும் அல்ல பிற.

பொருளுரை: சந்தைப் படுத்தும் கூப்பாட்டை; விளம்பரத்தை, அறைகூவலை கைபேசியால் அனைவருக்கும் கூப்பிட்டுப் பரப்புதல் அவர்களின் நிந்தையையே நல்கும்; வேறல்ல. பயனாளிகளுக்குக் கைபேசி வழி சந்தைப் படுத்துதல் உண்மையில் எரிச்சலூட்டும் அணுகுமுறை.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top