.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 19 November 2013

பாபிலோன் தொங்கும் தோட்டம் பற்றிய தவகல் !!!

 

பண்டைக்கால நகரங்களுள் பாபிலோன் மிகவும் புகழ்பெற்ற நகரமாகத் திகழ்ந்தது. பாபிலோனின் வளர்ச்சிக்கும், பெருமைக்கும் காரணமாக ஹமுராபி மன்னர் இருந்தார். இவருக்குப்பின், இவரது தளபதி நெபோபலாசர் மன்னரானார். பின்பு, நெபோபலாசரின் மகன் நெபுகட்நேசர் மன்னரானார். இவரே தொங்கு தோட்டத்தை அமைத்த பெருமைக்குரியவர். காசர் குன்றுப் பகுதியில் புகழ்பெற்ற அரண்மனை ஒன்றினைக் கட்டி, அருகில் தொங்கு தோட்டத்தையும் அமைத்துள்ளார். இத்தோட்டத்தினை அமைத்ததற்குச் சுவையான கதை ஒன்று சொல்லப்படுகிறது.

மீட்ஸ் அரசர் சையாக்சரசின் மகள் அமிடிசை மன்னன் நெபு திருமணம் செய்கிறார். உலகப் புகழ்பெற்ற அழ-கு ராணியாக அமிடிஸ் திகழ்ந்தார். பாபிலோன் நகரமும், அரண்மனையும் அமிடிசின் மனதைக் கவரவில்லை. எனவே, எந்த நேரமும் சோகமாகவே இருந்தார். இதனைக் கவனித்த மன்னன் அமிடிசிடம், ராணி எப்போதும் சோகமாக இருக்கக் காரணம் என்ன? என்று கேட்டார்.

அதற்கு அமிடிஸ், அரசரே மனதில் இருப்பதைச் சொல்கிறேன். நான் மலைநாட்டு இளவரசி. என் நாட்டில் உயர்ந்த குன்றுகளும், மலைகளும், காடுகளும், நறுமண மலர்களும், கொடிகளும் சலசலத்து, கண்ணையும் மனதையும் நிறைத்துக் கொண்டிருக்கும். இத்தகைய சூழ்நிலையில் வளர்ந்ததால் என் மனம் இயற்கையையே நாடுகிறது. இங்குள்ள பரந்த வயல்வெளிகள், வெற்றிடங்களைப் பார்த்துப் பார்த்து என் மனம் சோர்வடைகிறது என்றார்.

இதனைக் கேட்ட மன்னன், கவலைப்பட வேண்டாம் ராணி, உன் நாட்டையொத்த இயற்கை எழிலை உருவாக்கிக் காட்டுகிறேன் என்றார். அரசவையினைக் கூட்டி, பாபிலோனில் மலைக் குன்றுகளை உண்டாக்க முடியுமா என விவாதித்தார். ராணியின் ஆதங்கத்தைக் கூறி, ஏதேனும் வழி உள்ளதா என்றார். பலரும் பலவிதமான யோசனைகளைக் கூறினர்.


அதில் வயதான ஒருவர், மன்னரே, பாபிலோன் நகரம் இயற்கை எழிலுடன் காட்சியளிக்கும். மாளிகையினருகில் ஏராளமான மரங்களும் வானமண்டலம் வரை உயர்ந்து வளர்ந்திருக்கும். அது உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் என்று நீண்ட காலத்திற்கு முன்பு ஒரு பெரியவர் சொல்லியிருக்கிறார் என்றார். இந்த நம்பிக்கையை அடிப்படையாக வைத்து ராணியின் விருப்பத்தை நிறைவேற்ற வேலைகளை ஆரம்பித்தார் மன்னர்.

ஒவ்வொரு அடுக்கின் மேலும் சற்று உட்புறமாக பல மாடிகளைக் கொண்ட சுவர் எழுப்பத் திட்டமிடப்பட்டது. 56 மைல் நீளத்தில், 80- அடி அகலத்தில், 320 அடி உயரத்தில் அமைத்து, இரு சுவர்களுக்குமிடையில் ஏராளமான மண் கொட்டப்பட்டது. சுவரின் உள், வெளிப்புறத்தில் மிக மெல்லிய ஓட்டைகளுடன் கூடிய அலுமினியத் தகடுகள் பொருத்தப்பட்டன. இத்தகடு, உட்புற மண் சரிந்து விழுந்துவிடாதபடி மிக கவனமாகப் பலப்படுத்தப்பட்டது.

அதற்குமேல் சற்று உட்புறம் தள்ளி இரண்டாவது மாடச்சுவர் கட்டப்பட்டது. இடைப்-பகுதியில் மண்போட்டு நிரப்பி அலுமினியத் தகடுகள் பதிக்கப்பட்டன. இப்படியே 8 மாடங்கள் ஒன்றன்மீது ஒன்றாகக் கட்டப்-பட்டன. வானத்தைத் தொடுவதற்குப் போட்டி-யிட்டது போல் அமைக்கப்பட்ட இந்தக் கட்டடச் சுவர்களின் இடையில், பல பழம் தரும் மரங்கள், செடார், பைன், பர்ச், புரூஸ் போன்ற மரங்களும், பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண மலர்ச் செடிகளும், கொடிகளும் அமைக்கப்பட்டன.

படர்ந்த கொடிகள் மேல் மாடத்திலிருந்து கீழ் மாடத்திற்குப் படர்ந்து ஒரு தொங்கும் தோட்டம்போல் காட்சியளித்தது. பூத்துக் குலுங்கிய வண்ண மலர்கள் பார்ப்பவர்களின் கண்ணிற்கும் மனதிற்கும் விருந்தளித்து நின்றன. திராட்சைக் கொடிகள் ஆங்காங்கே நடப்பட்டு, பழங்கள் பழுத்துத் தொங்கின.

உச்சி மாடத்தில் விருந்தினர் மாளிகை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாடத்திற்கும் செல்ல, உட்புறமும் வெளிப்புறமும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. அலுமினியத் தகடுகளிலிருந்து உட்புறத்திற்குத் தண்ணீர் கசிந்துவிடாதபடி கவனமாக வெளியேற்றப்பட்டது. ஒவ்வொரு மாடத்திலும் 4 வாயில்கள் இருந்தன. எட்டாவது திறந்த மாடத்திலும் மாடவெளியிலும் நந்தவனம் அமைக்கப்பட்டிருந்தது. மலர்ச் செடி-களிலும் பழ மரங்களிலும் பலவிதமான பறவைகள் சிறகடித்துப் பறந்தன; வண்ணத்துப் பூச்சிகள் வட்டமிட்டன. பறவைகளின் இனிய ஓசை மனதிற்கு இதமளித்தது. செயற்கையான முறை-யில் ஓர் இயற்கைக் காட்சி அழகாக உருவாக்கப்பட்டது.

யூப்ரடீஸ் நதியிலிருந்து ஹைட்ராலிக் என்ஜின்மூலம் நீரை மேலே ஏற்றி, தொங்கு தோட்டத்திற்கு நீர் பாய்ச்சினர். இவ்வளவு பெரிய அளவிற்கு மண்ணை ஏற்றினாலும், ஒவ்வொரு மாடமும் சரியாமல் திட்டமிட்டுக் கட்டிய பணி, அக்கால அறிஞர்களின், பொறியியல் வல்லுநரகளின் திறமையை நினைத்துப் பிரமிக்க வைத்துள்ளது. வரலாற்றின் தந்தை என்றழைக்கப்படும் ஹெரடோட்டஸ் எழுதிய தொங்கு தோட்டத்தின் வருணனை மிகவும் புகழ்-பெற்றதாகும்.

பாபிலோனின் தொங்கும் தோட்டம் எங்கே இருக்கிறது என்பதே ஒரு ரகசியம்தான். கி.மு. 400 இல் பெரோசஸ் என்பவர்தான் முதன் முதலாக பாபிலோன் தொங்கும் தோட்டம்பற்றி எழுதினார். பாக்தாத்துக்குப் பக்கத்தில் கி.மு. 600 ஆம் வருடங்களில் உருவாக்கப்பட்டது என்பது சிலருடைய கருத்து. சமீபத்தில் யூப்ரிடிஸ் நதியருகே 75 அடி அகல சுவரைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இது தொங்கும் தோட்டமாக இருக்கலாம் என்று சிலர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top