.......................................................................... ....................................................................... ......................................................................

Monday 7 October 2013

மைசூர் தசரா திருவிழா – ஒரு பார்வை!

மைசூரில் 403-ஆவது தசரா விழா சனிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் சந்திர சேகரகம்பாரா இந்த விழாவைத் தொடக்கிவைத்தார்.10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி, மைசூரில் அமைந்துள்ள சாமுண்டி மலை, பாரம்பரியக் கட்டடங்கள், அரண்மனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், நினைவுச் சின்னங்கள், கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், சதுக்கங்கள், பூங்காக்கள், சாலைகள் ஆகியவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.


6 - mysore dasara
 


நவராத்திரி என்றால், மைசூர் தசரா விழாவை நினைவுக்குக் கொண்டு வராமலிருக்க முடியாது. அத்தனை உலகப் புகழ் பெற்ற பெருங் கொண்டாட்டம் இது! மைசூரில் ஆண்டுதோறும் தசரா கோலாகலமாகக் கொண்டாடப்படுவதற்கான ஆரம்பம் என்ன? 1573ம் ஆண்டு மைசூரை நான்காம் சாமராஜ உடையார் ஆட்சி செய்து கொண்டிருந்தார். ஒருநாள் இவர் தனது குல தெய்வமான சாமுண்டி தேவியை தரிசிக்கச் சென்றார். தரிசித்து முடிந்ததும் பல்லக்கில் ஏறி மைசூருக்குப் புறப்பட்டார். சிறிது தொலைவு சென்ற பின் திடீரென இடி, மின்னல், மழை என்று இயற்கை சீற ஆரம்பித்தது. 


பாதுகாப்புக்காக ஒரு பெரிய மரத்தின் அடியில் பல்லக்கை வீரர்கள் நிறுத்தினார்கள். ‘‘நாங்கள் பத்திரமாக ஊர் திரும்ப அருள்புரிவாய் அம்மா’’ என்று அந்த மரத்தடியிலிருந்தே சாமுண்டிதேவியை வேண்டியபடி அன்னை கோயில் கொண்டிருந்த மலையுச்சியைப் பார்த்தார். 


மழை ஒரு திரையாகி ஆலயம் தெரியாதபடி மறைத்தது. சரி, சற்றுத் தொலைவு சென்று பார்க்கலாம் என தன் வீரர்களுடன் சில அடி தூரம் மன்னர் நகர்ந்தபின், அவர் அதற்கு முன் பாதுகாப்புக்காக தங்கியிருந்த மரத்தில் இடி விழுந்து மரம் தீப்பற்றி எரிந்தது. தன்னைக் காப்பாற்றவே அந்த இடத்திலிருந்து தேவி கோயிலைத் தெரியாமல் செய்திருக்கிறாள் என உணர்ந்த சாமராஜ உடையார், அதற்கு நன்றிக் கடனாக மைசூரின் எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் கோயில் தெரியும் வண்ணம் சாமுண்டீஸ்வரிக்கு ஆலயம் எழுப்பினார். 


மகிஷாசுரனை வதம் செய்து மண்ணுலக மாந்தரைக் காத்த தேவி, இங்கு ஐம்பத்தோரு சக்தி பீட தேவிகளுள் ஒருவளாக காட்சிதருகிறாள். மகிஷன் வாழ்ந்தது இன்றைய மைசூரைச் சுற்றியுள்ள இடங்களில்தான். 


சாமுண்டி மலையில் அருளும் சாமுண்டீஸ்வரி விஜயதசமி அன்று அவனை வதம் செய்தாள். அதனால் மகிஷாசுர என்பது மறுவி மைசூர் ஆயிற்று. அதனால் தான் மைசூரில் தசரா பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விழாவில், நாகரஹோளே வனப்பகுதியிலிருக்கும் யானைகள் 70 கி.மீ. நடந்துவந்து பங்கேற்கும்.


 பலராமன், அபிமன்யு, கஜேந்திரா, கங்கா, அர்ஜுனா, சரளா, மேரி என்ற பெயர் கொண்ட யானைகள் வழக்கமாக தசராவில் கலந்து கொள்ளும். அந்த யானைகளுக்கு மக்கள் மகத்தான வரவேற்பளிப்பர். தசரா இந்திரவிழா போன்று கொண்டாடப்படுகிறது. எப்போதும் பொலிவிழக்காத மைசூரின் தசரா திருவிழா கர்நாடக கலைஞர்களுக்கும் கலைகளுக்கும் முக்கியத்துவம் தரும் பெருவிழாவாக போற்றப்படுகிறது.


இதன் முக்கிய அம்சமாய் இடம்பெறுவது ஜம்புசவாரி எனப்படும் யானைகளின் அணிவகுப்பும் அவற்றின் சாகசங்கள் கொண்ட விளையாட்டுகளும்தான். பலராமா எனும் மூத்த யானைக்கு தங்க முகபடாம் அணிவிக்கப்படும். 900 கிலோ எடையுள்ள தங்கக் கவசம் அணிந்து, பலராமா கம்பீரமாகக் காட்சியளிக்கும். தசரா வைபவத்திற்காக காட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட யானைகள் நகரத்தின் நெரிசல்களுக்கிடையே தினமும் 6 கி.மீ. பாகன்களின் கட்டளைக்கேற்ப நடந்துகொள்ளும். அப்போது மைசூர் வீதிகளில் ‘மைசூரு தசரா எஷ்டந்து சுந்தரா!’ (மைசூரின் தசராதான் எத்தனை அழகு!) என்ற பாடல் வீதிகளில் ஒலிக்கிறது. தசரா துவங்கும் முன் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்கிறார்கள்.



தசரா கண்காட்சி வளாகம் அருகே, தேவராஜ அர்ஸ் மல்யுத்தப் போட்டி வளாகம் உள்ளது. மாநில அளவில் இங்கு போட்டி நடக்கும். கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஆண், பெண் வீராங்கனைகள் கலந்து கொள்வர். இவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடத்தப்படும். போட்டியின் இறுதி நாளன்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. தசரா பண்டிகையின் போது மைசூர் அரண்மனையை அலங்கார விளக்குகளால் ஜொலிக்க செய்வார்கள். மொத்தம் 98,260 பல்புகள் அலங்கார ஒளி பரப்பி ஆனந்தப் பரவசப்படுகின்றன. 



இதற்காக ஒரு மணிநேரத்திற்கு 1 மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் மின் தட்டுப்பாடு நிலவுவதால், இந்த அலங்கார பல்புகளை ஒளிர செய்ய ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். 


இதன்படி டைனமோக்கள் மூலம் மின் உற்பத்தி செய்ய, 10 சைக்கிள்கள் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் இந்த சைக்கிள்களை ஓட்டி, மின்சார உற்பத்திக்கு உதவுகிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் அரண்மனையில் உள்ள எல்லா அலங்கார பல்புகளையும் ஒளிர வைக்க முடியாதுதான். 


ஆனால் குறிப்பிட்ட சில பகுதிகளை ஒளிரச் செய்ய முடியும். தினமும் அரண்மனைக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் இந்த திட்டம் சுற்றுலா பயணிகள் இடையே வரவேற்பை பெறுகிறது. தசராவின்போது மைசூர் மகாராஜா கொலுதர்பாரில் அமர்ந்து அனைவரையும் ஆசிர்வதிப்பார். இனம், மதம் கடந்து மக்கள் மகிழ்வுடன் கொண்டாடும் பண்டிகை, மைசூர் தசரா. தசரா விழாவின் கடைசிநாளான விஜயதசமியன்று கண்கவரும் யானை ஊர்வலம் நடைபெறும். இதனால், மைசூர் நகரைச் சுற்றிப் பார்ப்பதற்கும் தசரா விழாவைக் கண்டுகளிப்பதற்கும் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தசரா விழாக் குழுவினர் சிறப்பு ஏற்பாடு களைச் செய்கிறார்கள்.


0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top